Monday, December 14, 2009

யோகாவும் தியானமும் உதவும்


மனநோய்களுக்கு யோகாவும் தியானமும் உதவும் என்பது இப்போது பரவலாக விளம்பரப்படுத்தி விற்கப்படும் ஒரு பொய்.
நோய் என்றாலே அதற்கு மருந்து அவசியம். மருந்தே வேண்டாம், யோகா செய், 'மெடிடேஷன் பண்ணு" என்று கூறுவது இப்போதெல்லாம் மிகவும் பிரபலம்.

அப்படியே செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், என்ன/எதைச் செய்யப் போகிறார்கள்? நான் என் சக்திக்குப் படித்ததில், 100க்குமேற்பட்ட யோகமுறைகள் உள்ளன. ஆர்வமுள்ளவர்களுக்காக மூன்று நூல்கள்- 1 Vignyana bhairava tantra,  2.Sivasutras, 3.SpandaKarika. என்னைப்போல் ஸம்ஸ்க்ருதம் தெரியாமல் ஆங்கிலம் தெரிந்தவர்கள்  Jayadev Singh எழுதிய உரைகளைப் படிக்கலாம். "பார் நான் இதையெல்லாம் படித்திருக்கிறேன்" என்று காட்ட அல்ல இந்தப் பட்டியல்,  இதையெல்லாம் படித்துவிட்டுத் தான் இவை குறித்துப்பேசுகிறேன் என்பதற்காகத்தான்.
ஒரு நோய்க்கு ஒரு மருத்துவன் ஒரு மருந்து தருமுன் அதேபோல் உள்ள பல மருந்துகள் அந்தக்கணநேரத்தில் மனச்சல்லடையில் விழுந்து ஒன்று மட்டும் தேர்வாகிறது. யோகா "டீச்சர்ஸ்" இப்படி யோசித்து இத்தனை சாத்தியங்களை எண்ணிப்பார்த்துவிட்டுத்தான் சொல்லித்தருகிறார்களா? ஆம் என்றால் மிக்க மகிழ்ச்சி!

தெருவுக்குதெரு மலிந்து விரைந்து பரவி வரும் "டீச்சிங்" மையங்களில் உள்ள "மாஸ்டர்"  பதஞ்சலி பெயரைத் தெரிந்து வைத்திருப்பார், (என்னிடம் கூட பதஞ்ச‌லியின் சிலை ஒன்று இருக்கிறது). படமோ சிலையோ வைத்திருக்கவும் கூடும். வியாக்ரபாதர் பதஞ்ச‌லி உறவு பற்றியும் தெரிந்துவைத்துப் பேசக்கூடும்...பதஞ்ச‌லியின் யோக சூத்திரங்களைப் படித்திருப்பாரா? (புரிந்து கொண்டிருப்பாரா என்பது உபகேள்வி). எனக்கு அந்த ஞானம் கிடையாது, இருப்பதாய் சொல்லிக்கொள்வதும் கிடையாது.இப்போது மூன்று நூல்களைப்பற்றிச்சொன்னேனே அவற்றைப் படித்திருக்கிறேன் புரிந்து கொண்டதில்லை. எனக்குத் தொடர்பில்லாத தொழில்குறித்து மூன்று பெயர்களை நானே சொல்ல முடியும் போது, "மாஸ்டர்" இன்னும் கூடச் சொல்லலாம். பெயர்களை உதிர்க்க படிக்கவேண்டும் என்றில்லை.
 "மாஸ்டர்", "டீச்சர்" ஆகியோர்தான் schizophrenia என்பதற்கும் depression என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் உளறுவது அதிகம். இரண்டுமே ஒன்று என்று உளறுவதும் அதிகம், இவற்றுக்கு மருந்துகள் வேண்டாம், சில ஆசனங்கள், சில மூச்சுப்பயிற்சிகள் போதும் என்றும் தங்கள் "சென்டர்"களைப் பற்றிச்சொல்லிக்கொள்வதும் அதிகம். "மாஸ்டர்", "டீச்சர்" என்று நான் சொல்வது, இவர்களது "ஃபேஷன்" என்பதால் மட்டுமல்ல, "ஃபேஷன்"னுக்காக இவர்களிடம் செல்பவர்களுக்கு எளிதாக இருக்குமே என்பதற்காக.
மருந்துகள் தேவையில்லை என்பதும் இப்போது பரவி வரும் ஒரு "ஃபேஷன்"தான்.
ஆனால், மருந்துகள் இன்றைய இவர்களுக்கு ஒவ்வாத 'அலோபதி' மருந்துகள் மட்டுமா? சரகரும் ஸுஷ்ருதரும் ரிஷிகள்தானே, யோகத்யான முறைகளை முற்றும் தெரிந்தவர்கள் தானே அவர்கள் ஏன் மருந்துகளைத் தந்தார்கள்?
அகத்தியர் முனிவர் தானே? பரமசிவனோடு நேரடியாய் தொடர்பு வைத்திருந்தவராமே, அவர் எதற்கு யோகா செய், தியானம் செய் போதும் என்று விட்டுவிடவில்லை? பல மருத்துவக்குறிப்புகளுக்கு ஆதியாசானாக அவரை இன்னும் சிலர் சொல்வதில்லையா? நம் சித்தர்கள்மருந்துகள் பற்றி எழுதவில்லையா?

அவர்கள் மேதைகள், எதற்கு எது அவசியம் என்று தெரிந்தவர்கள், இன்றைய அரைவேக்காட்டு வியாபாரிகளைப்போல், சகலரோகநிவாரணி விற்காதவர்கள்.
இன்னும் பேசலாம், பின்னால்.

37 comments:

Rajan said...

//பரமசிவனோடு நேரடியாய் தொடர்பு வைத்திருந்தவராமே,//

இதென்ன டாக்டர் புதுக் கதை !

malarvizhi said...

உங்கள் பகிர்வு நன்றாக உள்ளது. நானே மனநோய்க்கு யோகாவும் , தியானமும் சிறந்த மருந்து என்று தான் இவ்வளவு நாட்களாக நினைத்திருந்தேன். உங்கள் பகிர்வை படித்தவுடன் தான் தெரிந்து கொண்டேன். நன்றி.

ஸ்ரீநி said...

காலத்தார் செய் நன்றி - இதுதான்
சரியான நேரத்தில் சரியான பதிவு
தெருவுக்கு ஒரு பிள்ளையார் கோயில் இல்லேன்னா கூட
ஒரு பெண்கள் அழகு நிலையம் இருக்கு
அதுக்கு போட்டியா இப்போ யோகா நிலையங்கள்

மேற்கூறிய இரண்டும் சேர்ந்தும் கூட இருக்கு
உள்ள போன கடவுளுக்கு கூட டோக்கென் உண்டு

துளசி கோபால் said...

நானும் டாக்டர் அகத்தியர் பற்றி பதிவு ஒன்னு பாதி எழுதி இருக்கேன். அதுக்குள்ளெ டிப்ரஷென் வந்துருச்சு. கொஞ்சம் தியானம் செஞ்சுட்டு எழுதி முடிக்கணும்.
வரட்டா?

தமிழினியன் said...

john nash மருந்துகளை பயண்படுத்தாமலே schizophreniaவைக் கட்டுப்படுத்தினாராமே? அவருக்கு வந்த delusionகளை அவர் புரிந்து கொண்டு அவ்ற்றை புறக்கணித்தாராமே. இது எல்லோருக்குமே சாத்தியமா?

Dr.Rudhran said...

subavii, delusion cannot be dissmissed with rational thinking because it is by nature beyond rational thinking

Dr.Rudhran said...

பிறழ்நம்பிக்கை ஆழமாக மனத்துள் ஊடுருவி நிற்கும், அறிவுசார்ந்த முயற்சிகளால் அதைப் புறக்கணிக்க முடியாது. இது ஒரு நல்ல கதைக்களன் அவ்வளவு தான் i am not even able to type my own comment-reply in tamil. so please excuse me.

கண்ணா.. said...

//இன்றைய அரைவேக்காட்டு வியாபாரிகளைப்போல், சகலரோகநிவாரணி விற்காதவர்கள்//

ரசித்தேன்.... :)

இன்னும் பேசுங்க டாக்டர்

Unknown said...

How is your health Dr. Today I very clear about your yesterday statement " DONT GO BEHIND OF LIVING SAMIYARS'. Thank you Dr. Now also I search God to pray for your health. Where to go?

Anonymous said...

மருந்துகள் எதற்குத் தேவை, எதற்கு தேவையில்லை என்பதுதானே சரியான கேள்வியாக இருக்க முடியும்.யோகாவும்,தியானமும் சிலருக்கு உதவலாம்.துவக்க கட்டத்திலேயே மருந்துகளை கொடுத்துதான் குணமாக்க வேண்டுமா இல்லையா என்பதை மருத்துவர்தானே முடிவு செய்ய வேண்டும்.
இல்லை சகட்டு மேனிக்கு மனச்சோர்வா இதை தினம் இத்தனை முறை விழுங்கு, தூக்கம் வரவில்லையா இதை இத்தனை முறை விழுங்கு என்று சொல்லிவிட முடியுமா. மருந்து தேவைப்படும் போது மருந்து; மருந்து தேவையில்லை, இதற்கு உடல்/மனப் பயிற்சி(கள்)
போதும் என்று மருத்துவர் சொல்லக் கூடாது என்கிறீர்களா. ராம் தேவ் தொலைக்காட்சியில் நடத்தும் யோகா நிகழ்ச்சிகளை பார்த்து பலர் யோகா செய்கிறார்கள்.அதற்காக அவர்கள் அவர் சொல்வதையெல்லாம் நம்புகிறார்கள் என்று அர்த்தமில்லை. உங்களுக்கு சில சார்புகள், நிலைப்பாடுகள் இருப்பதால் உங்களுக்கு சிலவற்றில்
குறைகளே தென்படுகிறது. நவீன மருத்துவத்தில், மன நோய் மருத்துவத்தில் மருந்துகள் தேவையில்லாத போதும் தரப்படுவது குறித்தும்,
medicalization of society குறித்தும் ஏராளமாக
எழுதப்பட்டுள்ளது. Sociology of medicine/health
குறித்த நூல்களில் இது பற்றி படிக்கலாம். இன்னும் சொல்வதென்றால் புரோஸாக் போன்றவை எந்தளவிற்கு அவசியமற்ற வகையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்பதைப் பற்றி எத்தனையோ ஆய்வுகளை காட்ட முடியும்.
சாமியார்களையும், யோகா பயிற்சி நிலையங்களையும் விமர்சிக்கும் நீங்கள் நவீன மன நல மருத்துவம் குறித்து விமர்சிக்காமல் இருப்பது தொழில் சார்ந்த ஒன்றாக எடுத்துக் கொள்கிறேன்.
உங்களுக்கு உங்கள் சரக்கை விற்க வேண்டும்,
அவர்களுக்கு அவர்கள் சரக்கை விற்க வேண்டும்
அதனால் நீங்கள் அவர்களை மட்டும் குறை கூறுவீர்கள் என்றுதான் எடுத்துக் கொள்கிறேன்.
நவீன மருத்துவம்/மன நல மருத்துவம் எந்த அளவிற்கு வணிகமயமாகியுள்ளது, அதன் விளைவுகள் என்ன என்பதையெல்லாம் விவாதிக்காமல் சாமியார்கள்/யோகா/தியான பயிற்சியாளர்களை மட்டும் விமர்சிப்பதில் அர்த்தமில்லை. நீங்கள் அதைப் பற்றி ஒரு பதிவு கூட எழுதவில்லையே, ஆனால் போலி சாமியார்கள்/ஆன்மிகம் குறித்து எதிர்மறையாக
இத்தனை பதிவுகளை எழுதுகிறீர்கள்.ஏன்?.

Anonymous said...

அகத்தியர்,ஒளவையார் என்ற பெயர்களில் பலர் இருந்துள்ளனர் என்ற கருத்தும் உள்ளது. பதஞ்சலி யோகம், ஆயுர்வேதத்தினை மறுக்கவில்லை. ஆயுர்வேதம் பதஞ்சலியை நிராகரிக்கவில்லை.
சித்த மருத்துவம் பிராணாயாமம் தேவையில்லை என்று கூறவில்லை. பிழை உங்கள் புரிதலில்.
depression, schizophernia போன்றவற்றிற்கு நவீன மருத்துவம் உதவும்.ஆனால் மருந்தின்றி
depression லிருந்து மீள முடியுமா, முடியாதா?
schizopherniaவிற்கு 100% குணம் நவீன மன நல
மருத்துவத்தில் இருக்கிறதா?. யோகா, தியானம்
அனைத்திற்கும் தீர்வல்ல என்றால் அது உங்கள்
தொழில்ரீதியான நவீன மன நல மருத்துவத்திற்கும்
பொருந்தாதா என்ன?.

Dr.Rudhran said...

பெயர் கூறி விவாதியுங்கள் விமர்சியுங்கள் அப்போது தான் உங்களுடன் விவாதிக்க முடியும்.
இதோ ஒரு அறிவாளி தொலைகாட்சி பார்த்து யோகா செய்யலாம் என்கிறார்! படிப்போர்க்குப் புரியட்டும்!! ஒரு ஆசாமியை நம்பாமலேயே அவன் சொல்வதைப்போல் உடம்பை வளைத்துக் கொள்கிறேன் என்றால், நான் வருத்தப்படத்தான் முடியும்.
மனநல மருத்துவர்கள் மட்டுமல்ல, பல்துறை சார்ந்த மருத்துவர்களிலும் சிலர் தேவையின்றி மருந்து கொடுப்பது அவ்வப்போது சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.
சரி இதுவும் வணிகமயமாக்கப்பட்டது தான் என்று வைத்துக்கொண்டாலும் இதன் அடிப்படையில் அறிவியல் இருக்கிறதே..ராம்தேவ் கம்பெனியில் உள்ளதா?
தீவிரமனச்சோர்வுக்கும் மனச்சிதைவுக்கும் மருந்தின்றி மருத்துவம் சாத்தியம் இல்லை.
அப்படி ஒரு முயற்சி காலவிரயம் மட்டுமல்ல, சிகிச்சைக் காலத்தையும் நீட்டிக்கும்.

Dr.Rudhran said...

இதில் இன்னொரு சிக்கலும் உண்டு. பக்கத்துத்தெருவில் ஒரு மாமி இந்த மருந்து வாங்கிச்சாப்பிடு என்றால் யாரும் உடனே அதைச்செய்வதில்லை, ஆனால் உடனே அப்படிச்சொல்லப்படும் யோகமையத்திற்குப் போகத்துடிப்பார்கள்.
ஆய்வுகளின் அடிப்படையில் மட்டுமல்ல, அனுபவத்தின் அடிப்படையிலும் கூறுகிறேன், இன்றைக்கு காசு வாங்கிக்கொண்டு நடத்தும் எந்தப்பயிலரங்கத்திலும் யோக‌த்யான முறைகளை வாழ்வில் நலம் கூட்டக் கற்றுக்கொள்ள முடிவதில்லை. நடத்துபவர் யாராக இருந்தாலும்.

Raju said...

நலல் கண் திறக்கும் பதிவு. நான் நியூ யார்க்கில் ராமராஜ் என்பவரை சந்தித்தேன். யோகா மாஸ்டர். திடகாத்திரமாக உடலை வைத்திருக்கிறார். திருப்பூரை சேர்ந்தவராம். மணமாகி மனைவியை பிரிந்து இருப்பவர். இரண்டு வருடம் முன் டூரிஸ்ட் விசாவில் அமெரிக்க வந்தவர், இப்போது யோகா குருவாகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். விசா ஸ்டேடஸ் எல்லாம் கிடையாது. அங்கு யோகாவில் மதி மயங்கி இருக்கிறார்கள்... ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் ஒரு மணி நேரம் சொல்லித்தர நூற்றி ஐம்பது டாலர்கள், ஆக ஒருவருக்கு ஆறு மாதம் என்ற கணக்கு... சிலருக்கு வாழ்க்கை. :-)

Chitra said...

well-said, Dr.Rudhran

குப்பன்.யாஹூ said...

what is the benefit of yoha & meditation (pls dont tell that yoga & meditation teacher will earn money)

நிகழ்காலத்தில்... said...

ஆச்சரியமாக இருக்கிறது..

நீங்கள் எப்போதாவது மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறீர்களா? ஏன் ?

தமிழநம்பி said...

மருத்துவர்க்கு வணக்கம்.

ஊழ்கம் (தியானம்) பற்றிய அறிஞர் ஆபிரகாம் கோவூர் கட்டுரையை மொழிபெயர்த்து முன்பே வெளியிட்டேன். தமிழ்மணத்திலும் 'திண்ணை' மின் இதழிலும் வந்தது. கீழே தரப்பட்டுள்ள முகவரியிலும் படிக்கலாம்.

http://thamizhanambi.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%28%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29

உங்கள் பணி தொடரட்டும். தெளிவும் விழிப்பும் பெற உதவுங்கள்.
நன்றி.

பெருங்காயம் said...

சில யோக மையங்களில் அவ்வபொழுது லைட்டை டிம் ஆக்கி விடுகிறhரர்கள். ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப பேசுகிறhரர்கள். இதுதான் முறை என்கிறhரர்கள். இதற்கு 750 கட்டணம். சிலருக்கு தியானத்தில் தொடர்ந்த இருக்க முடியாது. சிலருக்கு இதுவே மனநோயை மேலும் அதிகமாக்குகிறது. ஆங்கில மருந்தை எடுத்துக்கொண்டாலும் அதுவும் அதிக பின்விளைவுகளை கொடுக்கிறது. மனநோயை முற்றிலுமாக குணமாக்க வேறு வழி என்ன?

Chittoor Murugesan said...

டாக்டர் ருத்ரன் அவர்களே,
காதல் புனிதமானது
காதலர்கள் மட்டுமே பிரிகிறார்கள்
நட்பு புனிதமானது
நண்பர்களே துரோகிகளாகிறார்கள்
யோகா நல்லது
அதை கற்பிப்பவர்களும், கற்பவர்களும் மட்டுமே
அதை மலினப்படுத்துகிறார்கள்
எனக்கு தெரிந்தவரை
மனிதனின் எண்ணங்களை
உடலை கட்டுப்படுத்துபவை
நாளமில்லா சுரப்பிகள் ரத்தத்தில் கலக்கும்
இரசாயணங்களே
நாளமில்லா சுரப்பிகளின்
தலைவன் ஹைப்போதலாமஸ்
அதை கட்டுப்படுத்துவது எண்ணம்
இதைத்தான் பெரியோர்
எண்ணம் போல் மனம்
மனம் போல் வாழ்வு என்றார்கள் போலும்

யோகா இத்யாதி உடல் , உள்ள ரீதியில்
ஆரோக்கியமாக உள்ள மனிதனை
மேலும் ஆரோக்கியமாக்கலாமே தவிர‌
நோயுற்ற உடலை சற்றே ரெஃப்ரெஷ் செய்யலாமே தவிர‌
நோயுற்ற மனதை மராமத்து செய்யும் என்பதை
நான் ஏற்கமாட்டேன்

போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஏரியா லிமிட் இருப்பது போல்
அனைத்துக்கும் ஏரியா லிமிட் உண்டு
சகல ரோக நிவாரணி ஒன்றுதான் அது மரணம்.

எண்ணற்ற எண் கொண்ட நெட்டுகளை கழட்ட‌
எண்ணுள்ள ஸ்பேனர்கள் இருப்பது போல்
பிரச்சினையை பொருத்து ஸ்பேனர் மாறும்
மல்ட்டி ஸ்பேனர் எல்லாம்
மெக்கானிக் கடையில் தான் கிட்டும்

Dr.Rudhran said...

csmurugesan, i agree with you.
vijai, in the beginning medicines are essential, later going to a gym and intensely listening to music will help you to be comfortable

malar said...

ரொம்ப சரியாக எழுதி இருக்கிறீர்கள் .இதே கருத்தை பலரும் சொல்லி கேட்டிருக்கிறேன் .

பகல் முழுதும் நன்றாக இந்தாலும் இரவில் தான் அணைத்து எண்ணங்களும் மனதில் முட்டுகிறது .இதனால் தூக்கம் பாதிக்கிறது இதற்கும் மருந்து தான் தீர்வா ?

உங்கள் பதிலை எதிர்பார்கிறேன்

Anonymous said...

சரி இதுவும் வணிகமயமாக்கப்பட்டது தான் என்று வைத்துக்கொண்டாலும் இதன் அடிப்படையில் அறிவியல் இருக்கிறதே..ராம்தேவ் கம்பெனியில் உள்ளதா?

Commercialization of medicine and overuse of medicine helps some vested interests including doctors.Since it is done in the name of science that is fine with you.Is yoga scientific- good question but what is scientific and how to differentiate non-science from science. If yoga and meditation have nothing to do with science then many doctors including congnitive scientists would not be wasting their time and energy in conducting experiments on those who practise these and would not be discussing with Dalai Lama.Perhaps you have not updated yourself with recent developments or perhaps you dont need them in your day to day practice.
You discount yoga and meditative pratices but many experts in congnitive science and psychologists are unwilling to do so.You can debunk those who sell yoga and meditation as
quick fixes.But to dismiss them as a whole is a sign of your arrogance and ignorance.
I can give my name but that is not important.
Opinions matter not the name of the person who voiced that opinion. I think you and those who sell yoga as a quick fix are sides of the same
coin and both are made for each other.

Dr.Rudhran said...

one needs courage to say one is convinced of a comment. cowards do not deserve a discussion

Dr.Rudhran said...

malar, if you had given your mail id i would have personally responded, anyway for your question the first step is medication and then mediation not meditation in the proper way

Anonymous said...

doctor,
i feel "if there is a problem then there must be a solution.if there is no solution then it is not at all a problem"
i think our mind is strong enough to find solution.to make it to think we need meditation.
by meditation i mean thinking calmly without any disturbance.is it correct?
abarnashankar

abarnashankar,usa said...

doctor,
i feel "if there is a problem then there must be a solution.if there is no solution then it is not at all a problem"
i think our mind is strong enough to find solution.to make it to think we need meditation.
by meditation i mean thinking calmly without any disturbance.is it correct?
by
abarnashankar

Dr.Rudhran said...

meditation is focussed, detached, emotionless involvememnt in any activity over a period of time, after which you feel more relaxed and pleased than before. it can be even your work. it happens to an artist while painting.
now if you are sick, then you will not be able to do this, so step one would be to treat the illness.
sickness is a problem too but for that the only solution is medicine.

Dr.Rudhran said...

http://shajiwriter.blogspot.com/2009/07/art-of-living-business.html

http://www.tehelka.com/story_main31.asp?filename=Ne300607Business_Of_the.asp

Dr.Rudhran said...

http://www.tehelka.com/story_main31.asp?filename=Ne300607A_mirror_of.asp

tamil said...

வலைப்பதிவுகளில் அனானி கருத்துகளுக்கும் சிலர் பதில் சொல்வர்,சிலர் சொல்வதில்லை.
அவரவர் தெரிவு அவ்வளவுதான்.
எத்தனையோ எழுத்தாளர்கள் புனைபெயரில் எழுதியிருக்கிறார்கள்.
அதுவும் அனானி போல்தான்.புதுமைப்பித்தன்,கல்கி எல்லாமே புனைபெயர்தான். எழுதத்துவங்கும் போதே சொ.விருத்தாசலம் என் இயற்பெயர், புதுமைப்பித்தன் என் புனை பெயர் என்று அறிவித்துக் கொண்டு எழுதவில்லை. நேரு, பெரியார்,அண்ணா உட்பட பலர்
புனைபெயர்களில் எழுதியிருக்கிறார்கள்.
உங்களுக்கு புத்திசாலித்தனமான
கேள்விகள் எரிச்சலூட்டுகின்றன. அதற்கு கேள்வி கேட்பவர் ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு உங்களிடம் விவாதித்துத்தான் அறிய வேண்டும் என்றில்லை.உங்களுக்கும் எனக்கு விளக்கமளித்துத்தான் உங்களை நிருபீக்க வேண்டும் என்றில்லை.
ஏனெனில் உலகில் உள்ள கோடிக்கணக்கான அனானிகளில் நான் ஒருவர் என்றால் மருத்துவர்களில் நீங்கள் ஒருவர். நாம் என்றேனும் சந்திக்க நேர்ந்தால் கூட நான்தான் இந்த அனானி இடுகைகளை இட்டேன் என்று சொல்ல மாட்டேன். ஆனால்
ஒலிவர் சாக்ஸும், அஷுஸ் நந்தியும்,
காக்கரும் எழுதியதையும், ஜென்-உளவியல் குறித்த ஆய்வுகளையும், வி.எஸ்.ராமச்சந்திரனையும் இன்னும் பலவற்றையும் படிக்கிற
எனக்கு உங்களிடம் விவாதிக்க முடியும் அல்லது உரையாட முடியும் என்ற நம்பிக்கை இல்லை. ஏனெனில் நீங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்களை ரெடியாக வைத்திருப்பது போல் எழுதுகிறீர்கள். மருத்துவத்தின் வரையரைகளைக் கூட ஒத்துக் கொள்ள மறுக்கும் அடிப்படைவாத பார்வையே உங்க்ளிடம் இருப்பதாக புரிந்து கொள்கிறேன்.நவீன மன நல மருததுவத்தின் போதாமைகளை, அதன் எல்லைகளை சொல்லாமல் அதை விற்பனைச்சரக்காகக்கும் போக்குதான் உங்கள் பதில்களில் தெரிகிறது.
குட் பை

Dr.Rudhran said...

ok tamil, atleast i can give an answer to a person with a pseudonym. i am happy you are reading all these books.keep reading. thank you for not discussing with me in future.

நிகழ்காலத்தில்... said...

\\sickness is a problem too but for that the only solution is medicine.\\

ஏற்றுக்கொள்கிறேன் டாக்டர்,

ஆனால் நமது வாழ்க்கை முறையில் உணவு பழக்கம், உழைப்பு, உறக்கம் போன்றவற்றில் திருத்தம் செய்தால் அன்றி நோய் வருவதை பெரும்பாலும் தடுக்க முடியாது.

ஆனால் யோகம் குறித்தான ஒரு விழிப்புணர்வு மக்களிடையே இருந்தால் அது வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டு வருமல்லவா?

நோயின்றி வாழ யோகம் உதவும். தவிரவும் வந்த நோயை குறைக்கும், கூடவே சிகிச்சை எடுத்தால் பலன் நிச்சயம்.

நோயுக்கும் யோகத்திற்கும் தொடர்பே இல்லை என சொல்வது தங்களின் கருத்து உள்ளது. அப்படியா !!

மனநோயுக்கும், உறக்கத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டுதானே?

யோகம் குறைந்தபட்சம் தூக்கத்தை கூட தராது என்கிறீர்களா ?

eniasang said...

இன்றைக்கும் மக்கள் மத்தியில் உள்ள அறியாமையை நீக்க என்ன செய்ய?மருத்துவர்கள் அனைவரும் பணம் மட்டுமே குறியாக இருப்பதில்லை அதிலும் மன நல மருத்துவர்கள்........... நோயை தீவிரப்படுத்தி விட்டு ம்ருத்துவமனையில் சேர்த்து ஒரு பெரிய மருந்து பட்டியல் கொடுத்து அனுப்ப்பிய ஒரு மருத்துவரையும் எனக்கு தெரியும் அதே நோயாளியை hospitalisation வேண்டாம் ஓரிரு மருந்து கொடுத்து இது ஒன்றுமேயில்லை எனச் சொல்லி ம்ருத்துவம் பார்த்து ச்ரி செய்த Dr.Rudhran யும் தெரியும்.
எப்பொருள் யார் யார்.......மெய்பொருள் காண்பது அறிவு.
நாலு என்ன ப்த்து பேரிடமாவது மன நலம் குறித்து விவரம் (உண்மையாகவே விவரம் தெரிந்தவர்கள் சொல்லனும் என நினைக்கிறேன் .Dr. நீங்கள் தோலுரிக்க முடியாதா இத்தகைய பிரபல மனநோய் கொண்ட மருத்துவர்களை.

அனானி said...

//thank you for not discussing with me in future.//

உங்க கிட்ட வைத்தியம் பாக்கரவன் பாவம் டாக்டர்(?) ,

ஆனா முன்ன மாதிரி தொழில் வெளங்கறதில்லையாமே , அதான் பிளாகிலயே நிறய நேரம் இருக்கீங்களா ?

இன்னொரு அப்பாவி அனானி

Dr.Rudhran said...

அனானி. அனாதைகள் அநாமதேயங்கள் ஆகிய எல்லாவற்றையும் புறம்போக்கு என்று சொல்லமுடியாது..நீ மணியானவனா என்று கூட அக்கறையில்லை, ஆனால் உங்கள் திசைதிருப்பிக் குளிர்காயும் கூட்டத்திற்காகவே பின்னூட்டங்க்களை மட்டுப்ப்டுத்த வேண்டுமா.. நண்பர்கள் சொல்வது உதவும்.

Thekkikattan|தெகா said...

டாக்டர், அநாமதேய காமெண்ட்களை உள்ளே விடுங்கள், அவர்களின் ஒரு சில அணுகுமுறைகளின் மூலமே நீங்கள் வலியுறுத்தி கூற வந்த விசயம் சில சமயங்களில் நல்ல அழுத்தமாக பதியப்படுகிறது.

இமேஜ் டேமேஜ் பற்றிய கவலை உங்களைப் பற்றி அறிந்தவர்களுக்குத் தேவையில்லை. தேர்ந்தெடுக்கப்படும் வார்த்தைகளைக் கொண்டே மனித வளர் நிலை அறிந்து கொள்ள முடியுமென்ற conceptல...

Post a Comment