Friday, September 9, 2011

சும்மா கொஞ்சம் பின்னோக்கி..


அழுதது நினைவிருக்கிறது.
எதற்காக என்பது நினைவில்லை என்றாலும் அப்படி நான் அழுததாய் நினைவுக்கு வேறெதுவும் வரவில்லை. அதற்கு முன்னும் கூட அழுதிருப்பேன். அப்புறமும் அழுதிருப்பேன். ஆனால் அந்த அழுகை அப்படி இருந்தது. பொது இடத்தில், தெரியாதவர்கள் முன், விக்கி, விம்மி, கண்கள் பொங்கி, வாய் பொத்தி, சத்தமில்லாமல் உடல் குலுங்கி...
அழுகை என்றாலே எனக்கு அந்த அனுபவத்தின் உணர்வுதான் தோன்றுகிறது.


அது 1970களின் முற்பாதி என்று நினைக்கிறேன். அந்த இடம் நினைவிருக்கிறது –வடபழனி முருகன் கோவில். சன்னதிக்கு நேரே கம்பிகளின் முடிவில், உண்டியலுக்கு முன்னால் ஒரு சின்ன இடம் -அங்கிருந்து முருகன் கொஞ்சம் out of focusஆகத் தெரிந்ததாய் இப்போது நினைவில் ஒரு பழுப்பு பிம்பம். அவ்வப்போது தாடி வளர்த்து மழித்துக் கொண்டிருந்த காலம். அழும்போது தாடி இருந்ததா என்றும் நினைவில்லை. சோகத்துக்கும் என் தாடிக்கும் எப்போதும் தொடர்பு இருந்ததில்லை. அந்த அழுகை...அது ஏன் இன்று நினைவுக்கு வரவேண்டும்?

காலை, வெகுநாள் கழித்து என் நண்பன் பாலாசிங் வந்திருந்தான். பழங்கதைகள் அசைபோட்டுக் கொண்டிருந்தோம். நிகழ்ந்த அன்று நெருடிய, கோபமூட்டிய, வெறுப்படைய வைத்த பல நிகழ்ச்சிகள் இன்று நினைவூட்டிக்கொண்டு பேசும் போது சிரிக்கவே வைத்தன. கோபம், வெட்கம் என்று அன்று அனுபவித்திருக்கக் கூடிய அனைத்துமே இன்று நகைச்சுவையாகத் தெரிகின்றன. சில துரோகங்களைத் தவிர்த்து, பழைய நினைவுகள் எதுவுமே நெருடவில்லை. அப்போது திடீரென்று அவனிடம், “இதெல்லாம் சரி பாலா, நாம எப்பவாவது ரொம்ப வருத்தப்பட்டிருக்கோமா?என்று கேட்க, “ ஞாபகம் இல்லையே... சீரியஸா நாம் எதுக்கும் வருத்தப்படலேன்னு நினைக்கிறேன்... வருத்தப்பட நமக்கு எங்கே டைம் இருந்துச்சு?என்றான். அப்படி என்ன முக்கியமான வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தோம் என்று பட்டியலிடப் பார்த்தோம். நாடகம், ஆவணப்படம் என்பவையெல்லாம் அத்தனை வருடங்களை ஆக்கிரமிக்கவில்லை. வேறென்ன செய்து கொண்டிருந்தோம்? அவன் திரைப்படங்களில் நடிக்க முயன்று கொண்டிருந்தான், நான் மருத்துவம் மூலம் சம்பாதிக்க முயன்று கொண்டிருந்தேன்.இரவெல்லாம் பாட்டு கேட்டு, இலக்கியம் பேசி, நண்பர்கள் சூழ அரட்டையுடன் அடுத்த காரியத்திற்கான கனவுகளுக்கு வரைபடம் போட்டுக் கொண்டிருந்தோம். மதுவும் புகையும் எங்களை ஊக்கவுமில்லை, தாக்கவுமில்லை. வசதிகள் குறைவான அந்தக் காலத்தில் வருத்தப்பட நேரமும் இல்லை. இப்போது? சௌகரியமாக வாழ்க்கை அமைந்தபின், அன்றைய சிரமங்கள் புன்னகையை வரவழைக்கின்றன.

அவன் போனபின் எதற்காகவாவது அழும் அளவு வருத்தப்பட்டிருக்கிறேனா என்று யோசித்தால் எதுவும் நினைவுக்கு வரவில்லை. மனதுக்கு நெருக்கமானவர்கள் மரணத்திற்கெல்லாம் நான் அழுததில்லை, தோல்விகளுக்கும் அழுததில்லை. இன்னும் கொஞ்சம் யோசித்தால், வெட்கப்பட்டு அழுதிருக்கிறேன் – அதுவும் கொஞ்சமாக! அடக்க முடியாத அழுகை வந்திருக்கிறதா என்று நினைவுகளில் தேடும்போதுதான் 1970களின் வடபழனி அழுகை நினைவுக்கு வருகிறது. இப்போது எழுதும்போது கூட எதற்காக என்று தெரியவில்லை –அந்த காலகட்டத்தில் அழவேண்டிய அளவுக்கு அடிபட்டதெல்லாம் நினைவுக்கு வருகிறது. வாழ்வில் விழுந்த ஒவ்வோர் அடியும் அடுத்த அடியின் முன் மிகச் சாதாரணமாகியிருந்த காலம் அது.

அழுகை சுகம்தான், நிச்சயமாக வலிக்கும் மனதுக்கு ஒரு நல்ல ஆறுதல்தான். ஆனால் நான் சுகப்பட அழுத ஞாபகமும் இல்லை. சில அற்புதமான பாடல்களைக் கேட்கும் போது கண்கள் கலங்குவது இப்போதும் உண்டு, ஆனல் வருத்தம் தவிர்க்கவும் வலி குறைக்கவும் அழுவது இல்லை.

அன்று என்ன நடந்தது என்பது நினைவுக்கு வரவே இல்லை. அழுத அந்த நேரம் முன்பின் தெரியாத சிலர் ஆறுதல் கூறியது நினைவுக்கு வருகிறது. “என்னப்பா கஷ்டம்?என்று சிலர் கேட்டிருக்கக் கூடும், நினைவில்லை. ஆனால் முருகன் கேட்டதாய் நினவில்லை. அவன் கேட்க வேண்டுமா என்ன? அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே! அன்றைய அழுகை முருகனிடம் முறையிட்டதாகவும் தோன்றவில்லை, அதன் பின்னும் பல தோல்விகளை அனுபவித்திருக்கிறேன். அந்த அழுகைக்குப் பின் அடுத்த முறை கோவிலுக்குப் போனதும் சில வருடங்கள் கழித்துத்தான் என்று தோன்றுகிறது. அப்புறம் கோவிலுக்குப் போனதெல்லாம் ரசிக்கவும் சுகிக்கவுமே... முறையிட என்று எங்கேயும் போனதேயில்லை.

அப்புறம் அப்படி அழவில்லை. அன்று அழுதது தோல்வியால் இருந்திருக்காது, பெரும் வெட்கமாகவே இருந்திருக்கும். அப்படி எதற்கு வெட்கப்பட்டேனோ நினைவில்லை, அதற்கப்புறம் அப்படி வெட்கப்படும் அளவு வாழ்வில் எதுவும் நிகழவில்லை.
தோல்வியினால் வெட்கம் வராது. தன்னைப் பற்றிய கணிப்பை மீறி தானே தடுமாறும் போதும், தான் செய்ததும் செய்யத் தவறியதும் தன்னையே பரிகசிக்கும் போதும் பழிக்கும் போதுமே வெட்கம் வரும். வெட்கினால் அழுகை நிச்சயம் வரும். நான் அழுவதில்லை/ அழ மறந்துவிட்டேன்.