Thursday, November 28, 2019

பாலா


பாலாசிங் என்னில் ஒரு பகுதியாகவே இருந்தான்.

ஞாநி வீட்டில்தான் அவனை முதலில் பார்த்தேன். 1983க்குப் பின், என் வீட்டில்தான் பல நாட்கள் இருப்பான். இரவுகள் பேச்சில் கழியும். பேச்சுகள் பலவற்றைப் பற்றியும் இருக்கும். வேறு நண்பர்கள் வந்து போவார்கள் ஆனால் இவன் தான் அந்த நாட்களில் நிரந்தரமானவன். வருபவர்கள் என் சக மருத்துவ நண்பர்கள், நாடக/திரைப்பட கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், தோழர்கள், அப்போது ஈழ விடுதலைக்குப் போராடிக்கொண்டிருந்த EROS தோழர்கள், என்னிடம் படம் வேண்டுமென்று கேட்டு வருபவர்கள்.. என்று பல்வேறு வகைப்பட்டவர்கள் கூடுமிடமாக என் வீடு இருந்ததால், பேச எப்போதும் ஏதாவது புதிது புதிதாக இருந்து வந்தது. 
1984 பவித்ரா நாடகம் ஆரம்பித்தோம்.அதன் பிறகு ஔரங்கஸீப். நாசர் வந்தது அப்போது தான். 
அந்த நாடகம் முடிந்த இரவு, கோடம்பாக்கம் மேம்பாலத்தில் நடந்து வந்த போது, நாசர் தான், ’ நம்மில் யார் சினிமாவில் நுழைந்தாலும் மற்றவர்களையும் அழைத்துக் கொள்ள வேண்டும்’ என்ற ஒரு தீர்மானத்தை முன்வைத்தான்.இது நடந்தது 1984 அக்டோபர். தன் வாக்கைக் காப்பாற்றி நாசர் பாலாவை தன் படத்திற்கு அழைத்து வந்தது 1994.

நான் மனநல மருத்துவம் பயிலும் போதும், பின் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியில் இருந்த போதும், பாலா தான் என்னை குறும்படம் எடுக்கத் தூண்டினான். நாங்கள் இருவரும் சேர்ந்து மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்த குறும்படங்கள்/ ஆவணப்படங்கள் மொத்தம் ஏழு. என் எல்லா முயற்சிகளிலும் அவன் தான் நடிகன். நடிப்பதோடு நிற்காமல் தயாரிப்பையும் நிர்வகித்தவன். கையில் கொஞ்சம் காசு சேர்ந்தவுடன் அடுத்து என்ன செய்யலாம் என்று ஆரம்பித்த காலம் அது. யார் பார்ப்பார்கள், என்ன பெயர் வரும், ஏதாவது காசு கிடைக்குமா என்று எவ்வித யோசனையும் இன்றி தொடர்ந்து செயல்பட்ட காலம் அது.
அதன் பின் நான் மருத்துவமனை ஆரம்பித்தேன், அவன் திருமணம் செய்து கொண்டு ஊருக்கே போய்விட்டான்.. நாசர் அவனை மீண்டும் ஊரிலிருந்து கூட்டி வந்து திரைத்துறையில் நுழைக்கும் வரை சில ஆண்டுகள் நாங்கள் சந்திக்கவில்லை. அவதாரம் வந்தபின் முன் போல் அடிக்கடி சந்திப்பு இருந்தது. ஆனால் நாங்கள் இருவரும் அவ்வப்போது முன்போல் இரவுகளில் செய்யலாமா என்று யோசித்தோமே தவிர எதுவும் செய்யவில்லை. சென்னை தொலைக்காட்சிக்காக ஆவணப்படம் ஒன்று 96ல் செய்தோம் அதன்பின் பேசிய எல்லாமும் பேச்சாகவே நின்று விட்டன.

அவன் திருமண நிச்சயதார்த்தம், திருமணம், கட்டிய வீட்டின் புதுமனை புகுவிழா, ஒரு மாதத்திற்கு முன் அவன் மகளின் மணவிழா என்று அவன் ஊருக்கும் வீட்டுக்கும் நான்கு முறை போன நான், இன்று 5வது முறை கலியக்காவிளை செல்லவில்லை. அந்த மண்ணில் அவனை இறக்குவதைப் பார்க்குமளவு எனக்கு மனத்தில் தெம்பு இல்லை.
என் எல்லா சிக்கல்களும் , பிரச்சினைகளும், கோபங்களும் அவன் தலையீட்டால் தான் தீர்ந்திருந்தன. என் சின்னச்சின்ன வெற்றிகளும் கொண்டாட்டங்களும் அவன் பங்கேற்பில்லாமல் நடந்ததில்லை. இனி என் எதிலும் அவன் இருக்கப்போவதில்லை. நினைவை விட்டும் போகப்போவதில்லை. என்னில் ஒரு பகுதி இன்றோடு தொலைந்து விட்டது.





Thursday, August 22, 2019

சகுந்தலை





சகுந்தலை என்று தமிழிலும் நன்கு அறியப்பட்ட அழகிக்கு ஒரே கதை என்பதே நம்மிடம் பரவியுள்ள கதை. 
அவளுக்கு குறைந்தபட்சம் இரண்டு கதைகள் உண்டு. ஒன்று மகாபாரதத்தில் வியாசர் எழுதியது, 
இரண்டாவது பிரபலமாகி உண்மை என்றே அங்கீகாரம் பெற்ற காளிதாசன் எழுதியது.

அடிப்படை கதை ஒன்றுதான். அவள் காதலிக்கப்பட்டாள், கர்ப்பமுற்றாள், அவன் ஓடிவிட்டான், குழந்தையுடன் அவள் அவனை எதிர்கொள்ள அவன் மறுக்கிறான், இவளது நியாயம் வெல்கிறது. இவ்வளவுதான் சகுந்தலையின் கதை. 

இது மகாபாரத காலமான பொ.யு.மு 400லிருந்து காளிதாசன் காலமான பொ.யு 400ல் வேறு வடிவாய், வேறு விதமாய் மாறியது, காலநீட்சியில் ஏற்பட்ட கலாச்சார மாற்றங்களால் என்பது Romila Thappar எழுதிய நூலின் சாரம்.

மகாபாரத சகுந்தலை, துஷ்யந்தனிடம் ஏமாறவில்லை. தெளிவாகவே தன்னைப் பற்றி விவரித்து, தன் காதலை நிச்சயம் தன் வளர்ப்பு தந்தை ஏற்பார் என்று சொல்லி, மணமுறைகளில் ஒன்றான கந்தர்வ விவாகத்துக்கு மனப்பூர்வமாய் ஒப்புக்கொள்கிறாள்- ஒரு நிபந்தனையுடன். தனக்கு மகன் பிறந்தால் அவன் அரசனாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே அவளது ஒரே நிபந்தனை. துஷ்யந்தன் வருகிறேன் என்று சொல்லி காணாது போனபின், குழந்தை பெற்று வளர்த்து, மக்கள் முன் காட்டலாம் எனும் காலகட்டம் வந்தபின் தான் அரசவை செல்கிறாள். அவன் அவளைத் தெரியாது என்று ஏய்த்ததும் நிதானமாய் தன் சினத்தை வெளிப்படுத்தி விவாதிக்கிறாள். அசரீரி அவளுக்கு சாட்சி சொல்லி துஷ்யந்தன் தன் மகனை ஏற்றபின் வெளியேறுகிறாள். கண்ணீரை விடவும் தெளிவான தார்மிகச் சினம், வஞ்சிக்கப்பட்ட வருத்தத்தைவிட தனக்களிக்கப்பட்ட வாக்கு நிறைவேற்றப்பட வேண்டும் எனும் தீர்மான தைரியம்- இதுவே மகாபாரத சகுந்தலை.

காளிதாசன் சகுந்தலை அழகிய பேதை, வஞ்சிக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய பெண், கண்ணீரும் கவலையுமாய் கணவனை நாடும் அபலை. மகாகவியின் துஷ்யந்தனும் நாடகக்காவியத்தில் கெட்டவன் அல்ல, அவளை ஏமாற்ற நினைக்கவும் இல்லை. விதியின் சாபத்தால் மறதி பீடிக்க அவளுடன் இருந்ததை மறந்திருக்கிறான். மோதிரம், மீன் வயிறு எல்லாம் காளிதாசனின் கவிதா அத்துமீறல் நியாயம். கவியின் காலத்தில் பெண் அவ்வளவு வீரமாய் தன் நியாயத்தைப் பேச முடியாது. ராஜாவையும் வில்லனாகக் காட்ட முடியாது எனும் நிலை.

ஆரம்பகாலத்தில் இருந்த பெண்ணின் வீர்யம், சுயமதிப்பீடு கலப்போக்கில் ஆணாதிக்கப் பாதிப்பினால் கற்பு, அச்சம், மடம், நாணம், அவையடக்கம், பெண்மைக்க்கேயுரிய பொறுமை, சகிப்புத்தன்மை என்றெல்லாம் மாறியது/ மாற்றிக் காட்டப்பட்டது. டாகூர் கூட இதை முன்னிறுத்தி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ரொமிலா தாப்பர் இன்னும் ஆழ ஆய்ந்து இதை எழுதிய நூல்-  Sakuntala:Texts,Readings,Histories

இரண்டாம் சகுந்தலை கதை காலத்திற்கேற்ப பெண் நிலையை வடிவமைத்ததால் மட்டுமே பிரபலமாகிவிடவில்லை. காளிதாசனின் கவிநேர்த்தி, கதைக்கோப்பு, நாடகமாக்கலின் நுட்பம் தான் அவனது நாடகத்தை உலகெங்கும் கொண்டாட வைத்தது.