குருபெயர்ச்சி எனும் ஜோஸ்ய ஜாலம் பற்றி எனக்குத்தெரியாது.
எனக்கு குரு எனும் தேடலில் கிடைத்த ஒவ்வொரு பிம்பமும் பெயர்ந்தது பற்றித்தான் தெரியும்.
என் முதல் குரு என்று பார்த்தால், ஆசிரியர்களையும், பூஜையறையில் மாட்டியிருந்த படங்களிலிருந்த தெய்வங்களையும் தவிர்த்தால், நானே மயங்கி விரும்பி ஏற்றுக்கொண்டது முதலில் விவேகானந்தரைத்தான்.
அவரது ஆன்மஞானம் பற்றியோ அறிவியல் சார்பு பற்றியோ ஏதும் தெரியாத வயதில், வீட்டிற்கு வரும் கல்கி பத்திரிகையில், ரா.கணபதி எழுதிய அறிவுக்கனலே அருட்புனலே படித்தும், அதற்கு ஓவியர் வினு வரைந்த படங்கள் பார்த்தும் தான் பிரமிப்பு, ஈர்ப்பு, பக்தி எல்லாம்.அவர் முகம் பிடித்ததால் தான் அவர் என் குரு என்று நினைத்துக்கொண்டேன். "சகோதர சகோதரிகளே", "எல்லா நதிகளும் கடலில் கலப்பதுபோல் எல்லா மதங்களும்" எனும் இரு வாசகங்கள் தவிர அவரது படத்தின் கீழ் வழக்கமாக எழுதப்படும், "எழுமின்'விழுமின்" மட்டுமே நான் அவரைப் பற்றி அப்போது அறிந்தது, படித்தது.
அந்த ஆரம்ப மோகம், பத்து வயதில் ஆரம்பித்து பல பத்தாண்டுகள் நீடித்தது. இன்று அவர் என் குருவாக மனதுக்குத் தோன்றவில்லை.மரியாதை குறையவில்லை, பக்தி குறைந்து விட்டது.
பதின்வயதுகளின் ஆரம்பத்தில் ஒரு பெரியவர் உபதேசம் செய்கிறேன் என்று வள்ளலாரின் வாக்கியத்தைச் சொன்னார்.நாடி, மூச்சு ஆகியவைபற்றியும் சொல்லிக்கொடுத்தார்.அந்த பாதிப்பில், பயிற்சியில் கொஞ்சகாலம் வள்ளலார் என் குரு என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
பள்ளி முடிந்ததும் டாகூர் என்னை வசியம் செய்தார். அவரை குருதேவ் என்று அழைப்பார்கள் என்பதால் அவர் என் குரு என்று கொஞ்சகாலம் ஓடியது.
பிறகு, படிப்பதனாலும் பிறர் புகழக்கேட்டதனாலும் Henry Miller, Sartre, Marx என்று ஒரு குரு பிம்பம் தேடியது நிகழ்ந்தது.
என்றுமே நாத்திகனாக இருந்ததில்லை என்றாலும் உருவவழிபாடு குறித்தும், கோவில் செல்வதன் அவசியம் குறித்தும் கேள்விகள் என்னை கிட்டத்தட்ட ஒரு agnostic நிலைக்குக்கொண்டு போனபின்.. வறட்டுத்தனமும் பிடிவாதமும் குறைந்தபின், எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும் அறிமுகப்படுத்திக் கொள்ளவாவது வேண்டும் என்ற நிலையில் தான் மதம் சார்ந்த நூல்களையும் மதவழி வெளிப்படுத்தப்பட்ட சித்தாந்தங்களையும் படித்துப் பரிச்சயம் செய்து கொள்ள நேர்ந்தது.
அந்த இடத்தில்தான் ஞானம் அடைய ஒரு குரு தேவை என்ற கருத்து, மனத்துள் ஊட்டப்பட்டு வளர்ந்தது. அந்த குருவாக ரமணர் இருப்பாரா, சாய்பாபா (original) இருப்பாரா என்றெல்லாம் மனம் விசாரித்துக் கொண்டிருந்தது.
அதே நேரம் புட்டபர்த்தி சாய்பாபாவும் கண்ணுக்கு கேலியாக தென்பட்டதால், உண்மையான குரு கிடைக்கும் வரை தேடலாம் என்றே தொடர்ந்து மனம் அலைந்து கொண்டிருந்தது.
குரு என்று சொல்லிக்கொண்ட எவர்மீதும் நம்பிக்கை வரவில்லை. குரு என்று சிலர் குறிப்பிட்டச் சிலர்மீதும் ஈர்ப்பு ஏற்படவில்லை. அந்த காலகட்டத்தில் இரு பெரும் மேதைகள் வாழ்ந்திருந்தார்கள்.
ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ ரஜ்னீஷ் இருவருமே பார்க்க மிகவும் வசீகரமாகத் தோன்றினார்கள், அறிவுபூர்வமாகவும் அவர்களை குரு என்று சொல்வது நாகரிகமாகத்தான் தெரிந்தது. அவர்களது எழுத்துக்களும் மனதுக்கு இதமாகவே இருந்தது. ஆனாலும் குரு என்று சொல்லிவிட முடியவில்லை.
குரு யார்? எனும் கேள்விக்கு அவ்வப்போது மனம் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவரைச் சொல்லிக்கொண்டது. ஓவியத்தில் நீர்க்கலவைச் சித்திரம் வரையக்கற்றுக்கொடுத்த ஜோசஃப், தமிழின் இலக்கணத்தை எனக்குக் கற்றுகொடுக்க ஆரம்பித்த பண்டித நடேசனார் மட்டுமல்லாமல், அச்சகத்தில் எழுத்துக்கோக்கவும் ட்ரெடில்மெஷின் ஓட்டவும் கற்றுத்தந்த ஆறுமுகம்,மருத்துவக்கல்லூரியில் ஆசிரியராக இருந்த எல்லாரும், அதில் குறிப்பாக டாக்டர் வீரபத்ரன், மனநல மருத்துவத்தின் ஆரம்பப் பாடங்களைச் சொல்லிக்கொடுத்த டாக்டர் தேவர், டாக்டர் மாத்ருபூதம்.. என்று ஒரு பெரிய பட்டியலே உள்ளது.
இவர்களையெல்லாம்கூட நான் குரு என்று குறிப்பிட்டிருக்கிறேன், ஆனால் குரு என்பது இன்னும் வேறு எதோ என்பது மட்டும் நெஞ்சில் நெருடிக்கொண்டே இருந்தது.
இவர்கள் வடிவிலெல்லாம் குரு வந்திருக்கக்கூடும் என்று ஒரு திருப்புகழை மனம் சமாதானத்திற்காக அவ்வப்போது கூறிக்கொள்ளும்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்,மருவாய் மலராய் மணியாய் ஒளியாய், கருவாய் உயிராய் கதியாய் விதியாய், குரு வருவாராம். வரட்டும் என்று காத்திருந்தேன். எங்கோ படித்த 'உனக்கு தகுதி வரும்போது குரு உன்முன் தோன்றுவார்' என்பதை மட்டும் என் சுயாபிமானம் ஒப்புக்கொள்ளவில்லை. எனக்குத் தகுதி இருப்பதாய் நினைத்துக்கொண்டுதானே தேடல்!
மனம் நேர்நிலையில் இருக்கும்போது கவனமாகத் தேடிய குருவை மயக்கநிலையில் இருட்டிலெல்லாம் பார்த்ததாக நினைத்துக்கொள்ளும் என்பதையும் அனுபவித்திருக்கிறேன்.
அப்படியொரு மாலை நேரத்தில், மயங்கியநிலையில் ஜெயகாந்தனிடம் நீங்கள்தான் என் குரு என்று கூறிவிட்டேன். "உயிரோடிருப்பவனை எல்லாம் குரு என்று சொல்லிவிடாதே, அவன் சாகுமுன் என்னவெல்லாம் அசிங்கம் செய்து உன்னை அவமானப்படுத்துவான் என்று தெரியாது..செத்துப்போன யாரையாவது குரு என்று சொல்லிக்கொள் அது தான் நல்லது" என்றார். மயக்கம் தெளிந்தது, ஆசை தெளியவில்லை.
குருவுக்குக் கூட ஒரு குரு இருக்கவேண்டுமே அந்த ஆதி குரு யார் என்று யோசித்தால், அது கடவுள் என்ற விடையைத் தருகிறது.
கடவுள் என்பது மனிதன் தன் கற்பனையில் உருவாக்கிய அதிசக்திவாய்ந்த பிம்பமாக அல்ல, அறிவின் உச்சமாக, உணர்தலின் முழுமையாக இருக்கும் ஒரு தத்துவத்திற்கு வசதியான ஒரு பெயராக.
அந்தக்கடவுளை எங்கே தேடினால் கிடைக்கும் என்று வெளியே தேடும் வீணான முயற்சியின் முடிவில்,
தானே தன்னை தரிசிப்பதே ஞானம்; தன்னையறிய முற்படுதலே தவம், அதற்கு வழிகாட்டும் குருவும் அந்த உள்ளிருக்கும் மனோசக்திதான் என்பதெல்லாம் வார்த்தைகளாகப் புரிகிறது, இன்னும் அனுபவமாக மாறவில்லை.
அதுவரை, குரு என்ற மாயப்பிம்பம் தன்னைத்தானே பெயர்த்துக்கொண்டே இருக்கும்.