Thursday, May 27, 2010

முகம் மூடி..




சின்ன வயதில் முகமூடி அணிந்த நாயகனாய் ஆங்கிலத்தில் அறிமுகமாகி பின்னர் குமுதத்தில் வேதாளமாக(?)’ என்னைக் கவர்ந்த ஒரு சித்திரக்கதையின் பாத்திரம் பற்றியல்ல இது.
யதார்த்த வாழ்வில் எல்லாருமே அவ்வப்போது முகத்தைக் காட்டாமல் பற்பல ஒப்பனைகளோடு வாழ்ந்து வருகிறோம். அப்படி அவ்வப்போது முகம் மூடி, உணர்வுகளை ஒப்பனையில் மறைக்கும் பலர் பற்றியும் அல்ல இது.
மெய்நிகர் உலகில் முகத்தை மூடிக்கொண்டு வருவோர் பற்றியே இப்போது இந்த எண்ண ஓட்டம்.. 
இங்கே நேருக்கு நேர் நின்று யாரும் சிரித்துக் கொள்வதுமில்லை, அடித்துக் கொள்வதுமில்லை. இரண்டையும் செய்யும் துணிவுள்ளவர்கள்கூட இங்கே முகம் காட்ட விரும்புவதில்லை.
மெய்நிகர் உலகில் நட்பும் அன்பும், எதிர்ப்பும் வெறுப்பும் கூட மெய்நிகர்தான். என்னை வேண்டுமென்றே சீண்டியும் அவமதித்தும் எழுதுபவர்களில் சிலரைத்தெரியும் என்பதால் சொல்கிறேன். இங்கேயும் வெளியே மெய்யான உலகிலும் பலர் ஒன்றாக இருப்பதில்லை. இங்கே வீரம் போல முழங்குவோரின் முகம் என்னை நேரில் பார்க்கும்போது எவ்வளவு மாறுகிறது, (பம்முகிறது!) என்பதை அனுபவத்தில் பார்ப்பவன் நான். அப்படி அவர்களைச் சந்திக்கும்போது, இவர்களின் மெய்நிகர் அவதாரத்தைப் பற்றி எதுவும் பேசாமலேயே வேடிக்கை பார்ப்பது எனக்கு சுவையான பொழுதுபோக்காகவும் ஆகிவிட்டது! அவதாரங்களில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. எந்தெந்த நேரத்தில் என்னென்ன பொய்களும் நிஜங்களும் விலை போகின்றனவோ அவற்றையே ஒரு பண்டமாற்றாக விளையாடுபவர்களைப் பற்றியல்ல இது. இது முகங்களுக்கு மூடி தேவைப்படுவது பற்றிய ஒரு சிந்தனை.
பொய்க்காக அல்ல ஒரு புனைபெயர் என்பது எனக்குப் புரிகிறது. கல்கி, சாண்டில்யன், சுஜாதா போல புனைப்பெயரால் நிஜப்பெயரை மக்கள் மறக்கும் அளவு சாதித்தவர்களும் உண்டுதான். ஆனால் பொய் கூறவும், புறம்பேசவும் மட்டுமே புனைப்பெயர்களைத் தொடர்ந்து பயன்படுத்துவோர் இங்கே நம் பதிவுலகில்தான் அதிகம் பார்க்கிறேன். முதலில் தன் பெயர் எனும் தன் அடையாளத்தை மறுக்கவும் மறைக்கவும் அவசியம் என்ன? சில இயக்கங்களைச் சார்ந்து செயல்படுவோருக்கு இத்தகைய தற்காலிக முகம்-காட்டாதிருத்தல் அவர்களின் கொள்கைகளுக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் அவசியம் தான் என்று உணர்ந்தே இதை எழுதுகிறேன்.
வீரத்தின் விளைவுக்காகவோ, விளையாடிப் பார்க்கவோ இங்கே சிலர் முகம் எனும் பெயர் காட்டாது எழுதுகிறார்கள்.அதே நேரம் வக்கிரத்துடன் பிதற்றவும், வெறியைத் தணித்துக்கொள்ளவும் சிலர் பெயரிலாதும், பொய்ப்பெயருடனும் திரிவது நாம் எல்லாரும் அறிந்த ஒன்றுதான்.  இவ்விரண்டு வகையும் அவரவரது தனிப்பட்ட அவசியத்தின் அடிப்படையிலான செயல்பாடு என்று ஒப்புக்கொண்டாலும், நான் இது தான், என் நிலைப்பாடு இதுதான் என்று சொல்லாமல் கொள்கை போல ஒன்றிற்காக வெட்டியாய் ஊளையிடும் சிலரை நாம் கவனிப்போம்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு வாக்கியத்தைக் கூட ஒழுங்காய் எழுத முடியாதவர்களை எனக்குத் தெரியும், ஆனால் அவர்கள் பதிவு எழுதுவதில்லை. இங்கே எல்லாருக்கும் மொழி லகுவாக அமைந்துள்ளது. மொழி நாம் நம்மைக் காட்டிக்கொள்ளும் ஒரு கருவி. அது ஒரு கண்ணாடி, அதில் நாம் நம் பிம்பத்தையும் பார்க்கலாம் எனும்போதே பிறரும் நம்முள் பார்க்கலாம் என்பதும் நிஜம். மொழி காற்றில் மிதக்கும் ஓர் அடையாள அட்டை.
நாட்டிய சாஸ்திரத்தில் மௌனம் கூட பேசும் என்பதை பல்விதங்களில் பரதமுனி விளக்கியிருப்பார். மௌனம் ஒரு மொழிச் சுரபி. அது பேசும். அது புரிந்துகொள்ளப்படும். மௌனம் சம்மதம் மட்டுமல்ல எதிர்ப்பும் ஆகும். மௌனத்தில் முகம் மூடுவது அச்சத்தினால், ஆசையைக் காட்டத் தயங்கும் நாணத்தினால், அருவெறுப்பினால், பிறகு விளையாட்டினால் என்று எளிதாய் மேலோட்டமாய்க் கணிக்கலாம். மௌனம் தாக்குதலிலிருந்து ஒரு தற்காப்பு. தாக்குவது உயிரக் குறி வைத்தாலும் உணர்ச்சியைக் குறி வைத்தாலும். பதிவுலகில் மௌனம் ஒரு தற்காப்பாக இருந்தாலும், முகம் மூடி வருவது இல்லாத வீரத்தை இருப்பதாய்க் காட்டிக்கொள்வதாகவே அமைகிறது.
முகம் எப்போதெல்லாம் மூடப்படும்? உயிர்போனால் பிணத்தின் முகம் மூடப்படும். மானம் போகும்போது உயிருள்ளவரின் முகம் மூடப்படும். ஒரு நாடகத்துக்கு அவசியமாகும்போது மூடப்படும். சில சம்பிரதாயங்களுக்காகவும் சில விதிகளுக்காகவும் மூடப்படும். இப்படியெல்லாம் மூடப்படுவோரின் முகத்தின் மூடியை மீறி அவர்களின் நிஜ முகமும் நமக்குத்தெரியும். இங்கே இப்படி எதுவுமே இல்லாமல் முகத்தை மூடிக் கொண்டு வருவதாய் நினைத்து எழுதுபவர்கள் முகம் தெரிகிறது என்பதை உணராதவர்கள். இவர்களை விட்டு விடலாமா? கோழைகள் என்று ஒதுக்கி விடலாமா? முடியாது, கூடாது.
அவரவர் தம் முகத்தைக் காட்டுவதும் மூடிக்கொள்வதும் அவர்களது விருப்பம்தான்; முகத்தை மட்டுமே மறைத்து வாய் ஓயாமல் பிதற்றுவோரைத்தான் நாம் கவனிக்க வேண்டும். முகமல்ல இங்கே முக்கியம். மொழியும் அதன் உள்ளர்த்தமும், தொனியும் அதன் பின்புலமும் அவர்களது மாயையான இல்லாத தைரியத்தையும், உருப்படாத வீர்யத்தையும் காட்டிவிடும்.
கவனியுங்கள். யார் தமக்கு வந்த அரிப்பைச் சொறிந்து கொள்ள எழுதுகிறார்கள், யார் சமூகத்தின் சிரங்குக்கு மருந்து தரப் பார்க்கிறார்கள் என்பது எளிதாய் சுலபமாய் புலப்படும். புதர்களை அப்புறப்படுத்தினால்தான் புதைந்துள்ள பொக்கிஷம் கிடைக்கும், இல்லையென்றால் நம் அலட்சியம் சில லட்சியங்களை அடையாளம் காண விடாமல் இருட்டடிக்கும்.



எங்கிருந்தோ எங்கள் வீட்டுக்கு வந்தஆந்தை!
இதன் பெயர் masked owl!   jan.2009.

Tuesday, May 25, 2010

தேர்வுகளும் தேர்ச்சியும்


பொதுவாக என்னிடம் படம் வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்போர் இப்போது கொஞ்ச காலமாய் மட்டுமே என் விருப்பத்திற்கு விட்டு விடுகிறார்கள்.. இதற்கு முன் அவர்களுக்கு என்ன தேவையோ அதை வரைந்து கொடுத்துவிட்டு, அவர்கள் என் படத்தை என்ன செய்கிறார்கள் என்று நினைத்துக்கூடப் பார்க்காமல் வரைந்து கொடுத்துவிட்டு காசு பார்த்திருக்கிறேன். இதனாலேயே “இதுதான் உன் பாணி” என்று எதுவுமில்லாமல் என் படங்கள் ஒவ்வொன்றும் ஒருவிதமாய் வந்திருக்கின்றன.
நான் சரியென்று நினைத்து வரைவது என் வாடிக்கையாளருக்குப் பிடிக்காமல் போனது பலமுறை. முன்பெல்லாம் அவர்கள் சொன்னபடி கேட்டு மீண்டும் அவரவர் விருப்புக்கு வரைந்து கொடுத்திருக்கிறேன். வசதிதானே திமிர்; இப்போதெல்லாம் வரைந்தது பிடிக்காவிட்டால் “ஓகே, விட்டுடுங்க” என்று என் படத்தை, என் வீட்டின் மூலையில் வைத்துக் கொள்கிறேன். வித்யாதர்மம் என்பது பணம் எவ்வளவு அவசியமாக அவசரமாக வேண்டும் என்பதா? லக்ஷ்மியை கைப்பிடித்துவிட்டால் ஸரஸ்வதியை “ பொத்திக்கிட்டு, சும்மா வா” என்று அதட்டலாமா? என் வரை அப்படித்தான் நடந்திருக்கிறது.
திமிர் என்பது ஒருவித தைரியம்தான். அதன் விளைவே அதைக் கொண்டவன் புத்திசாலியா முட்டாளா என்று தீர்மானிக்கிறது. வெற்றியே ஒரு குணத்தின் பண்புகளைத் தீர்மானிப்பது என்றால், அந்த வெற்றியை ஆராய வேண்டியதும் அவசியம்.இங்கே சில படங்களை இதற்காகவே பதிப்பிக்கிறேன். முதலில் என் ஜெயகாந்தனின் நூலுக்கான முகப்பு. நான் வரைந்து கொடுத்தவை இவை.

இது அட்டைப்படத்தில் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.
ஆனாலும் இன்னும் சில அவர்கள் தேர்ந்தெடுக்க உதவும் என்று  தந்தவை-

 
 
.


தேர்வானது இது-







இதேபோல் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் தன் புத்தகத்துக்கு வேண்டுமென்று கேட்டபோது நான் தந்த படங்கள் இவை-







தேர்வானது-


இதேபோல் இன்னும் பல உதாரணங்கள் உண்டு, அவற்றைக் காட்ட படங்கள் என்னிடம் இல்லை.

எது எப்படி தேர்வாகிறது என்பதை இன்னும் என்னால் நிர்ணயிக்க முடியவில்லை. காசுக்கு வேலை செய்தபின், உபரிமதிப்பில் பங்கு கேட்க எனக்குத் தோன்றியதில்லை. இப்போதெல்லாம் காசுக்காக மட்டுமின்றி, பெருமைக்காகவும் அன்பிற்காகவும் வரைந்து கொடுக்கிறேன். என் தேர்வு என் வாடிக்கையாளரின் தேர்வாக இன்னும் அமையவில்லை. 
முன்பெல்லாம் முறுக்கிக் கொள்வேன்- காசுக்காக வரைந்த காலத்திலும். இப்போதெல்லாம் சமரசம் செய்து கொள்கிறேன்- காசுக்காக மட்டுமே வரையாத போதிலும் !
ஏன்? இனியும் கைதட்டல்களும் காசும் அவசியம் என்று இல்லாத போது, மற்றவரின் மனநிலை கண்டு சகிப்பு வருகிறது. என்னுள் ஒருவித நிறைவு வந்தபின் மற்றவரது குறைவுகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடிகிறது. முன்பெல்லாம் என் வறுமை, என் அவசரம், என் மனோவித்யாதர்மம்  என்றெல்லாம் சிணுங்கியதும் சீறியதும் இப்போதெல்லாம் விளையாட்டாகவே தெரிகிறது.
நான் மாறிவிட்டேனா?
என் தேர்வுகள் எப்போதும் வெகுஜனத் தேர்வாக இருந்ததில்லை. அன்னக்கிளி படம் பார்த்துவிட்டு வந்தவுடன் என் நண்பனிடம் சொன்னது, “ம்யூசிக் நல்லாருக்கு, பாவம் அந்த  ம்யூசிக் டைரக்டர்... படம் ஓடாது. அவனும் காணாம போய்டுவான்!”  இரண்டுமே நடக்கவில்லை.
வெகுஜன மனவோட்டத்திற்கேற்ப எப்போது நான் மாறுவேன்? நான் வித்தியாசமானவனோ விகிதாசாரத்தில் சிறப்பு பெறுபவனோ அல்ல, நானும் எல்லார் மாதிரியும்தான் என்று சொல்லும் போதே, நிறைய பேர் சரியா இல்லையே என்றும் நினைப்பது எனக்கு ஒரு பாதுகாப்புக் கவசம்-
நாளை என் கண்ணாடி என்னைப் பரிகசிக்காமல் இருக்க. இதன் விலை அதிகம்தான், இப்போதெல்லாம் இது செலவுக்குள் கட்டுப்படியாகிறது!
Arrogance of affordability, portrayed as the tolerance of a superiority!

என்பது மட்டுமல்லாமல் இப்போது தொழில்நுட்பம் வேலையை ரொம்பவும் சுலபமாக்கிவிட்டது.





இது தூரிகையால் வந்தது.




இது மௌஸ் கொண்டு வரைந்தது.

இரண்டையும் ஒரே கை வரைந்தாலும், ஒன்று சிரத்தையில் கவனம் அவசியமானதாக்கி மற்றது அசிரத்தையைக் கூட சரிசெய்யும் சௌகரியத்தில் வந்தது... அப்புறம் என்ன-

வாழ்க்கையில் காரியங்கள் சுலபமாகும்போது கோபங்களும் கொஞ்சம் தணிந்துதான் போகின்றன.

Friday, May 21, 2010

பாதிப்பும் படிப்பும்


இப்போதெல்லாம் படிக்க முடியவில்லை; நேரமில்லை என்பதாலோ படிக்குமளவு முக்கியமானவை இல்லை என்பதாலோ இல்லை, மனத்தளவில் படிப்பதில் ஈடுபாடு குறைந்திருக்கிறது. இது அவ்வப்போது நேரும் என்றாலும் ஓராண்டுக்கும் மேலாக இப்படி இருக்கிறது. இந்த நிலை ஆரம்பமாகும் முந்தைய வாரம் என் நண்பர் ஒரு மாதத்தில் எவ்வளவு படிப்பீர்கள் என்று கேட்டதற்கு, சுமாராகப் பத்து நூல்கள் என்று சொல்லியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் என் மனைவி, இந்த மாதிரி படித்துக் கொண்டிருந்தால்புத்தகங்கள் வாங்கிக் கட்டுப்படியாகாது' என்று சொல்லியிருக்கிறாள். சுவாசத்திற்கு அடுத்து நான் உயிருடன் இருக்க, படிப்பது எனக்கு அவ்வளவு அவசியமான ஒன்று.
இன்றும் தினமும் பத்திரிகைகளைப் பார்க்கிறேன். படிப்பதில்லை, மேய்கிறேன். பதிவுகளை தினமும் பார்க்கிறேன், சிலவற்றைப் படிக்கிறேன், பலவற்றை பக்கங்களை வேகமாகக் கீழிறக்கியவாறு மேய்ந்து முடிக்கிறேன். உறக்கம் குறையவில்லை, உணவும் குறையவில்லை. செய்யும் வேலையில் சிரத்தையும் குறையவில்லை. உறவு வட்டமோ வருமானமோ குறைந்து விடவில்லை, அடைய விரும்பும் எதுவுமே தொடுவானுக்கு அப்பால் தொலைந்திருக்கவில்லை.
எழுத முடியாமலில்லை, எழுதுவதற்கு விஷயம் இல்லாமலும் இல்லை; பதிவெழுதுவது என்பது நிர்ப்பந்தமாகி விடவும் இல்லை. ஓவியம் வரைய முடியாமலில்லை, வரைந்து கொடுக்கவும் அவசரமான நிமித்தங்களும் இல்லை.
ஏன் இந்த மாற்றம்? இது தளர்ச்சியா இல்லை மலையேறும்போது எதிர்படும் சமதளமா? எந்தக் கேள்விக்கும் மனம் உடனே எடுத்து வைக்கும் பதில் அந்தந்த நேரத்துக்கான சௌகரியமே தவிர சத்தியம் அல்ல.  இப்போது மனம் சொல்லிக் கொள்ளும் பொய், இது ஒரு தற்காலிக ஓய்வு என்பதே. எதிலிருந்து ஓய்வு? வாழ்வின் இதுவரை உயிர்ப்பித்துக் கொண்டிருந்த ஆதார இயக்கத்திலிருந்தா?
தேர்வுக்காகப் படித்த காலத்திலேயே தேர்ந்தெடுத்துத்தான் படித்திருக்கிறேன். மருத்துவக் கல்லூரியில் விடுதியில் சக மாணவர்கள் தடிமனான புத்தகங்களில் உடலியங்கியல் படிக்கும் நேரத்தில் அதைவிடவும் உள்வாங்கிக்கொள்ளச் சிரமமான சார்த்தரின் நாசியா படித்துக் கொண்டிருந்திருக்கிறேன்-  பரீட்சைக்குத் தேவையான அளவு படித்து விட்டதால் மட்டுமல்ல, அறிவுஜீவியாகக் காட்டிக் கொள்ளும் ஒரு பாசாங்கிற்காக. அவசியம் கருதிப் படிக்கவில்லை ஆசைப்பட்டுத்தான் படித்தேன் என்பது கூட உறுத்தலாக இருக்கிறது. ஆசையல்லவா அவசியங்களை உருவாக்கி விடுகிறது!
பாடம் என்பது ஒரு நிர்ப்பந்தமான படிப்பு என்றாலும், நிர்ப்பந்திக்கப் படும்போதெல்லாம் நான் எளிதாய்க் கடமைகளை முடித்துக்கொள்ளவே முயன்றிருக்கிறேன். இது சோம்பலாகவும் இருந்திருக்கலாம், திமிராகவும் இருந்திருக்கலாம். மொழி எனக்குச் சுலபமாகக் கைவந்ததால், படித்தை எல்லாமும் சுருக்கி நினைவில் வைத்துக் கொண்டு பரீட்சையில் விரிவாக எழுதித் தப்பித்திருக்கிறேன். படித்துத் தேர்ச்சி பெற்றதாய் அறிவிக்கப்பட்ட பாடங்களில்கூட நான் மதிப்பெண்களுக்காக என்பதைவிடவும் மனோசுகத்திற்காகப் படித்ததுதான் அதிகம்.
பாடம், படிப்பு என்று என் சிந்தனை இப்போது அலைவது நேற்று என் மனைவி வினவு ஆரம்பித்த ஒரு தொடர்பதிவிற்காக எழுதியதைப் (பதிவின் சுட்டி) படித்ததால்தான்.  இதுவல்ல நான் எழுத ஆரம்பித்த விஷயம். “நான் படிப்பதில்லை என்பதா படிக்க என்னால் முடியவில்லை என்பதா” என்ற கேள்வியே இத்தனை வார்த்தைகளுக்கும் காரணம்.
அது எப்படி தினமும் சாப்பிடும்போதும், தூங்குமுன்னும், தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போதும் படித்துக் கொண்டேயிருந்தவனுக்கு இப்போது படிக்க முடியாமல் போகும்? இதேபோல் இதை ஒரு பிரச்சினை என்று என்னிடம் யாராவது சொல்லும்போது நான் சொல்லிக் கொடுப்பது இதுதான்- முதலில் ராஜேஷ்குமார் படியுங்கள், படிப்பது பழக்கமாகிவிடும், பிறகு ரஷ்ய மொழிபெயர்ப்புகள் படிப்பதும் சுலபாமாகிவிடும்’. மற்றவர்க்கு சொல்லிக்கொடுப்பதைத் தன்  வாழ்விலும் முயல வேண்டும் என்று நினைப்பவன் என்பதால் நானும் இதை முயன்று பார்த்தேன் முடியவில்லை. மிகுந்த சுவாரஸ்யத்துடன் அந்த நாவல் விறுவிறுப்பாகப் போகும்போதே மனம் சீ.. இந்த நேரத்தில் பின் நவீனத்துவக் கோட்பாடுகளின் நுண்ணரசியல் பற்றி புத்தகம் படிக்கவில்லையே என்று ஒரு குற்ற உணர்வைக் கிளப்பும். முடியாததைச் செய்ய முயல்வது முயற்சி, முடிந்ததைச் செய்வது பயிற்சி என்று தெரிந்தாலும் மனம் முடிந்தததைக் கூடச் செய்யாவிடாமல் முரண்பிடித்து மனம் வருந்தவே விரும்பும்.
இது நிஜம். வருத்தம் வலி மட்டுமல்ல, ஒரு சுகம். அழுதால்தான் பால் கிடைக்கும் என்று கற்றுக்கொண்ட குழந்தை  பசியால் கூட அழுவதில்லை, யாரும் தன்னைக் கொஞ்சவில்லையே என்றும் அழும். இந்த அனிச்சை கவனஈர்ப்பு காலந்தோறும் வெவ்வேறு விதங்களில் வெளிப்படும். மௌன அழுகைகூட ஒரு நிழல் விரல் துடைக்காதா என்றுதான். இதன் முதல் கட்டம் மனம், என்னால் முடியாது என்று தன்னிடமே சொல்லிக்கொள்வது. இந்த அவலம் அசிங்கமானதோ அருவருப்பானதோ அல்ல, இயல்பானது. உன் கண்ணீரைத் துடைக்க உன் விரல்கள் மட்டுமே உள்ளன என்று எப்போது மனம் தீர்மானிக்கிறதோ அப்போது அழுகை நிற்கும்.
இப்போது நான் படிக்க முடியவில்லை என்று புலம்புவதும் இப்படித்தான். யாராவது இனி இப்படிப் படியேன் என்று சொல்ல வரமாட்டார்கள் என்று முடிவானால், ஒன்று படிக்க ஆரம்பிப்பேன் அல்லது புலம்பாமல் இருப்பேன். 

Wednesday, May 19, 2010

செல்லக் குழந்தை பிறந்தநாள்.


நாளை எங்கள் வீட்டுச் செல்லக் குழந்தைக்குப் பிறந்தநாள். குழந்தைக்கு மூன்று வயதாகிறது. ஒவ்வொரு வீட்டிற்கும், அந்த வீட்டுக்குழந்தை செல்லம்தான். அதன் பிறந்தநாள் விசேஷம்தான். அப்படி எங்கள் வீட்டில் முதலில் பிறந்து தவழ்ந்த குழந்தை பற்றி யோசிக்கும்போது வேறு சில விஷயங்களும் தோன்றுவதால்தான் இந்தப்பதிவு.
நானும்கூட எங்கள் வீட்டுக்கு அந்த வயதில் ஒரு செல்லக் குழந்தைதான். அன்று ஒரே குழந்தை என்பதால் இதேபோல ரொம்பச்செல்லக் குழந்தைதான். ஆனால் அதே செல்லக்குழந்தையான நான், சிடுசிடுக்கும் விடலையாகவும், சுயமாய் முடிவெடுக்கும் இளைஞனாகவும், என் முந்தைய தலைமுறையின் கணிப்பின்படி சொல்பேச்சு கேட்காதவனாகவும் மாறும்போது செல்லமானவனாக இருந்திருப்பேனா?
எனக்கு அடுத்த தலைமுறையும் இந்தக்குழந்தைக்குத் தாயாகவும் இருக்கும் பெண்ணும் ஒரு காலத்தில் எனக்குச் செல்லமான குழந்தையாகவே இருந்தாள். அவள் பாடப்புத்தகத்தில் படம் வரைந்து கொடுக்கும்படி கேட்ட சிறுமியாகவும், என்னிடம் சண்டைபோடவே தயாராக இருந்த கல்லூரி மாணவியாகவும், வேலை பார்க்கும் போது சண்டையிட்டு உடனே சமாதானமாகிவிடும் இளம் பெண்ணாகவும், காதலுக்கு என் துணை தேவைப்பட்ட புத்திசாலியாகவும், குழந்தை பிறக்கும் முந்தைய இரவு பயத்துடன் என் கையைப் பிடித்துக் கொண்டிருந்த இன்னொரு குழந்தையாகவும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமாய் ஆனால் குழந்தையாய்த்தான் இருந்திருக்கிறாள். ஆனாலும் ஆரம்பத்தில் அவளிடமிருந்த செல்லம் இப்போது இல்லை. வயதுதான் காரணமென்றால் யாருடைய வயது? குழந்தை வளர்வது செல்லமான சுகம், வளர்ந்துவிட்டால் ஏன் அதே குழந்தைதானே என்று விடுவதில்லை? குழந்தை என்பது பார்வையிலா மனத்திலா?  
நான் குழந்தையாக இருந்தபோது கிடைக்காத பல விளையாட்டுப் பொருட்கள் இப்போது கிடைக்கின்றன. இந்தக் குழந்தைக்கு நானும் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் நான் வாங்குவதெல்லாம் எனக்காகவா இல்லை உண்மையிலேயே குழந்தைக்காகவா? தொடுதிரை வசதியுடன் ஒரு கணினி வாங்கிக் கொடுக்கலாம், ஆனால் அதைவிட ஒரு குப்பை லாரி பொம்மை குழந்தைக்கு மிகவும் பிடித்து விடுகிறது!
இப்படி விளையாட்டுப்பொருட்களில் ஆரம்பமாகும் நம் திணிப்பு, நம் ஆசைகளின் திரையோட்டம், குழந்தை வளர வளர அதன் கல்வி, அதன் நட்பு, அதன் தொழில் அதன் மணவாழ்வு என்று தொடர்ந்து கொண்டே போகிறது. குழந்தை வளரும், நாம்தான் பெரியவர்களாக வளர்வதில்லை.
இந்தக் குழந்தையும் நாளை தன் விருப்பத்தைச் சொல்லும். அது என்னுடைய தேர்வுக்கு மாறாகவும் இருக்கும். அன்று நான் பக்குவமாக இருந்தால் அதுதான் உண்மையான செல்லம்.
செல்லம் என்பது கொஞ்சல் மட்டுமல்ல, கூட இருப்பது. விழாமல் நடக்க அதன் கையைப் பிடித்துக்கொள்வதல்ல, அந்தப் பிடி இறுக்கமாய் ஆகாமல், வலி தருவதாய் ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வதே.
இன்று இந்தக் குழந்தை செல்லம், நாளையும் என்றும் இப்படி நானும் இதனுடன் செல்லமாக இருக்கவே விரும்புகிறேன்- இன்ஷா அல்லாஹ்.
வலையில் சேமிக்க 




நாளை மூன்று வயதாகும் குழந்தை
மூன்று மாத வயதில்.

Friday, May 14, 2010

இதுவும் கசந்து, கடந்து போகுமா?

இவனெல்லாம் ஒரு ஜன்மம், இதுவெல்லாம் ஒரு தொழில்!


http://www.breakingnewsonline.net/newswatch/2050-muthalik-caught-on-camera-demanding-bribe-to-stage-riot.html

எனக்கு ம.க.இ.க பாடல்கள் இரண்டு நினைவுக்கு வருகின்றன-

1. மசூதியை இடித்து விட்டான் இது சரிதானா, ஹிண்டு மக்கள் விருப்பம் என்றான் உன்னைக் கேட்டானா? 


2. எச்சரிக்கை எச்சரிக்க எச்சரிக்க, கையில் தீப்பெட்டியை எடுத்து வரான் பத்தவைக்க.  
 பாடல் கேட்க இதில் முதல் ஒரு நிமிடம் அறிமுக உரை, அப்புறம்தான் பாடல்.


ம.க.இ.க பெயர் சொல்வதாலேயே இதுவெல்லாம் வேண்டாம் என்று நினைப்போர், வேடிக்கை பார்த்துக் கொண்டிருங்கள். விரைவில் ஜிம்பாப்வே உடன் கிரிக்கெட் நடைபெறும், கைதட்டலாம்.


எதிரிகள் விவரமாகவே இருக்கிறார்கள், நாம்தான் எதிர்ப்புகளை முணுமுணுக்கிறோம்.

Thursday, May 13, 2010

எனக்கெதற்கு ஒரு கடவுள்?



 உண்டு இல்லை என்பதெல்லாம் உண்மைகளா விருப்பங்களா?
கடவுள் ஒரு சௌகரியம். வருந்தினால் புலம்ப, அஞ்சினால் அடைக்கலம் தேட, அனுதினம் ஒரு கட்டுப்பாட்டுக்கு உதவ... என்று பலவிதங்களில் பயன்பட்டாலும் கடவுள் ஒரு சௌகரியம் மட்டுமே. சௌகரியங்கள் யாவும் சத்தியமும் கிடையாது சரியென்றும் ஆகாது.
பிறந்த குடும்பத்தின் பழக்கங்களுக்கு உட்பட்டோ, கேட்கும் கதைகளால் வசீகரிக்கப்பட்டோ இல்லை எதிர்பாராதும் புரிபடாதுமான அனுபவத்தால் உந்தப்பட்டோதான் கடவுள் நமக்கெல்லாம் அறிமுகம். சூழலாக இருந்தாலும் சரி, சுகமானதென்றாலும் சரி, கடவுள் ஒரு சௌகரியம் தான். உலகம் தட்டை, ஆப்பிள் கடித்ததால்தான் மனிதன் பல்லாண்டுகளாகக் கஷ்டப்படுகிறான், நாளும் கோளும் எல்லாம் செய்யும், நாளை நன்றாய்ப் பிறப்பாய் அல்லது பிறக்க மாட்டாய்...இப்படியே சொல்லக்கற்றுக்கொண்டவை யாவுமே அந்தந்த காலத்தின் சௌகரியம்தான். அறிவியல் சௌகரியமாக அறிமுகமாவதில்லை ஆனால் அறிவு சௌகரியம். அது இருட்டில் ஒரு விளக்கை ஒளி கூட்ட உதவும். ஆனால் கடவுள் பொதுவாகவே அறிவை விட மனதுக்கே நெருக்கம். இந்த நெருக்கம் அவசியம். இந்த நெருக்கம்தான் சௌகரியம்.
கடவுள் அவனா அவளா? ஹனுமானும் ராவும் மனித உருவில் இல்லாவிட்டாலும் கடவுள், ஆனால் மனித உருவில் உள்ள கடவுளர்க்கே இங்கே அங்கீகாரம் அதிகம். மனித உரு என்று வந்துவிட்டால் அப்படியே அச்சாக ஆக்குவதைவிட அதீதங்களை அடுக்குவதில்தான் பிம்பங்கள் பிரகாசம் அடைகின்றன, அதனாலேயே நான்கிலிருந்து ஆயிரம் கைகள், பல தலைகள். இடுப்பிற்குக் கீழே ஏன் அதீதங்கள் இல்லை என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார்! மூன்றாவது கால்  வைத்தால் கூட அது மனிதனாய் நிற்காது என்பதால் தான். மச்சமும் வராகமும் அவதாரம் என்றே சொன்னாலும் அவை நிற்கும் வடிவில்தான் காட்டப்படுகின்றன. மனிதனின் கடவுளுக்கு மனிதனைப்போல் நிற்க இரண்டு கால்கள் அவசியம்!
மனிதனைப்போலவே உருவாக்கப்பட்ட கடவுளுக்கு மனிதனைப்போலவே கோபம் க்ரோதம் எல்லாமும் இருக்கும். கடவுள் படைத்ததாய்ச் சொல்லப்படும் மனிதன் படைத்த கடவுள், அவனைப்போலவே இருப்பதுதான் அவனுக்கும் சௌகரியம். அப்போதுதான் அதனிடம் கெஞ்சவும் முடியும், லஞ்சம் பேசவும் முடியும்!  
இப்படியொரு கற்பனை எதற்கு என்று அறிவு கேட்டவுடன், அந்த அறிவை ஏற்று அதன்வழியே தன்னையே அமைத்துக்கொள்ளப் பழகிவிட்ட மனம், இதில் தர்க்க ரீதியான தனக்கு சௌகரியமான முடிவைத் தேடியதின் விளைவுதான்-
"1 எனும் அத்வைதம், 1+ எனும் த்வைதம்,1-0+x எனும் விஸிஷ்தாத்வைதம்.   இதில் எந்தக் கணக்கும் ஒத்துவராதவர்களுக்கு இரண்டு விடைகளுள் தேர்வு செய்யும் சௌகரியம் உண்டு. 0 தான் விடை என்று சொல்லிவிடலாம். 0 என்பது நாத்திகம் எனும் மறுப்பா இல்லை சூன்யம் எனும் புரிதலா?"
“பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பானே” அவனா தெய்வம்? இல்லை, அவன் பூஜ்யம் எனும் இல்லாத ஒன்றா? பூஜ்யம் என்றால் இல்லை என்றுதான் அர்த்தம்; பூஜ்யம் இல்லாமல் போய்விடுமா?
பூஜ்யம், சூன்யம் என்பதையெல்லாம் விட ஓம் என்பதற்கு மிகப்பெரிய வியப்புமதிப்பீடு ( ஓவர் பில்டப்?!) உண்டு. இந்த ஓம் பற்றி ஒரு கதை.
முருகன் சிவனின் மகன். சிவன் பெரிய கடவுள். சிவனுக்குச் சமம் என்றாலும் பிரம்மா சமம் இல்லை- தற்கால அரசியல் போல. (அன்பழகனும் ஸ்டாலினும் ஒன்றா?). முருகன் பிரம்மாவிடம்  “ஹலோ நீர்தான் ஞானஸ்தராமே சொல்லும், பிரணவத்தின் பொருள் என்ன?” என்றானாம். அந்த மக்குக்கு விடை தெரியவில்லையாம். உடனே அதைச் சிறையில் வைத்துவிட்டானாம். எல்லா வல்லுனர்களும் நல்லவர்களும் (இன்றும் நடக்கும் சமாதானத் தூது(?) போல் சென்றும் வேலை ஆகவில்லை! சிவன் தானே தான் மகனுடன் பேச முடிவெடுத்தார், மகன் “நீ என் சிஷ்யனாய் வந்தால்தான் பிரணவத்திற்குப் பொருள் சொல்வேன்” என்றானாம். தலைவர் மகனுடன் விவாதிக்க முடியுமா, போனார், கேட்டார்- “ ஆமா, அந்த ஓம் என்பதற்கு என்னப்பா அர்த்தம்?”
மகன் சொன்ன பதில்- “ அது ஒன்னும்மில்லைப்பா!”
இந்த ஓம் கதையை என்னிடம் சொன்னவர் என் ஆசான், ஜெயகாந்தன்.



இந்தப் படம் 2007 வரைந்தது, ஒருவேளை இதைப்போடத்தான் இதை எழுதினேனோ என்று இப்போது தோன்றுகிறது! 


 இதை எழுதத் தூண்டிய நூல் 
 Daniel  Quinn எழுதிய Providence.

Sunday, May 9, 2010

மா

இது
என்றோ வரைந்தது

2007 என்பது
மூன்று வருடங்களுக்கு முன் தானா ?


அவள் இல்லாமல் அவன் இல்லை
அவன் நான் அவள் என்றெல்லாம் வேறில்லை

அவளை எழுத முடியவில்லை.



அவள் அப்படி ஓர் அழகு

அப்படியா என்று கேட்போர்க்கு
என் கண் இல்லை.

என் பார்வையைநான் பதியாமல்உங்கள் பார்வைக்காகப் பொய் பதிந்தால்

அவளும் நானும்
என்னுள் காணாமல் போய் விடுவோம்.