Thursday, December 3, 2009

ஞாபகமேடை நவில்தரும் நடிப்பு


ஔரங்கசீப் காட்சிகள், முதல் படத்தில் நானும் பாலாசிங்கும், இரண்டாவது படத்தில் கதாநாயகனும் ப்ரீதமும்

என் நாடக அனுபவங்களை எழுதுவது என்ன பதிவு எழுதலாம் என்று யோசிக்க மறுக்கும் சோம்பேறித்தனத்தினால் மட்டுமல்ல. எங்கள் குழு பல சார்புநிலையாளர்களால் புறக்கணிக்கப்பட்டது, அதனாலேயே பல நல்ல நடிகர்கள், நாடகத்தை நிஜமாக நேசித்தவர்களின் பெயர்கள் தமிழ் நாடக வரலாற்றில் பதிவாகாமல் போய்விட்டது.இப்படியாவது, அவர்கள் பெயர்களையும் பங்களிப்புகளையும் பதிவு செய்வதும் தான் என் நோக்கம்.

அபிதாவுக்குப்பின் பவித்ரா, உடனே இன்னொரு நாடகம் போடலாம் என்று என் நண்பர் (ஒரு சம்பிரதாயத்திற்காக சொல்லவில்லை, அவர் எனக்கு இடர் வந்த போதும் தடைவந்தபோதும் துணை நின்ற நண்பர்), வைத்யநாதன்அடுத்ததாய் சரித்திர நாடகம் போடலாமே என்று ஆசைப்பட்டார். அவர் ஒரு கட்டிடக்கலை வல்லுநர், மனத்துள் பொன்னியின்செல்வனை நாடகமாக்கவேண்டும் என்ற கனவோடு இருந்தவர்..(அரங்கங்கள் நிர்மாணிக்கும் ஆசையால்).

எதைப்போடலாம் என்று பேச்சு வந்தபோது, இந்திராபார்த்தசாரதியின் ஔரங்கசீப் நாடகம் போடலாமென்று முடிவு செய்தோம். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஸ்க்ரிப்ட் புத்தகமாகவே இருக்கிறது .இரண்டாவது, இலக்கியவாதியாக அறியப்பட்டவரின் பெயரை வைத்துக்கொண்டு நம் குழுவையும் பிரபலமாக ஆக்கிவிடலாமே என்ற கேவலமான எண்ணம். .ஞாநி வேறு அவன் முதல் நாடகமாக இந்திராபார்த்தசாரதியின் போர்வை போர்த்திய உடல்களை நாடகமாகப் போட்டுவிட்டதால், அறிவுஜீவிகள் கோபத்திற்கும் ஆளாகிவிடமாட்டோம் என்றொரு மூட நம்பிக்கை. அந்த காலத்தில் அறிவுஜீவிகள் என்ன என்பதை விடவும் எவர் என்பதில் தான் கவனம் செலுத்தினார்கள்.இதைப்புரிந்துகொள்ள பல வருடங்கள் ஆயின..

ஓல்ட்மாங்க்குகள், சார்மினார்கள், கோல்ட்ஃப்ளேக்குகள் பலவும் செலவானபின்பு திடீரென்று யார் ஔரங்கசீப்? என்ற கேள்வி எழுந்தது. எங்களின் எந்தமூஞ்சியும் ராஜகம்பீரத்துடன் இல்லை என்பது மட்டுமல்ல, எங்கள் நிறத்தை மாற்றவும் ஒப்பனைச்செலவு அதிகமாகும் என்றும் திடீரென்று புரிந்துகொண்டோம்!
நியாயமாக எங்கள் குழுவின் சிறந்த நடிகனான பாலாசிங்கிற்குத்தான் கதாநாயகன் வேடம் தரப்பட்டிருக்கவேண்டும்! ஆனால் எங்களுக்குள் இருந்த போலி சமதர்ம‍'ஜனநாயக மரபு, ஒரு நாடகத்தில் முதன்மைப் பாத்திரம் ஒருவன் ஏற்றுவிட்டால் அடுத்தநாடகத்தில் வேறு யாரவது தான் முதன்மைப்பாத்திரம் ஏற்பார்கள் என்று இருந்து தொலைத்து விட்டது! அபிதாவில் அர்விந்த், பவித்ராவில் பாலாசிங் ஔரங்கசீப்பில் யார்? போலி ஜனநாயகத்திலுள்ளதைப்போல் குழுவின் தலைவனாக நான் இருந்ததால் என்னையே ஏற்கச்சொன்னார்கள்..நான் எழுதிய வசனத்தையே ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது என்று தெரிந்து அதை மறுத்துவிட்டு, குழுவினர் கேட்டுக்கொண்டதற்காகவென்று  ஒப்புக்கு ஒப்புக்கொண்டதால் ஒத்திகைகளும் ஆரம்பமாகியபோது...

எங்கள் குழுவிற்கு கிடைத்த நன்றாக நடிக்கக்கூடிய ப்ரீதம் (இன்று அவரே தனியாக தமிழ் நாடகங்களைச் சிரமத்துடனும் சிறப்புடனும் நடத்தி, நடித்து வருகிறார்), "எங்க வீட்டுக்கு ஒரு பையன் வரான்..அவனைப்போடலாமா" என்று என்னிடம் கேட்க, சரியென்ற ஒரே பதிலை நானும் சொல்ல, அடுத்த‌ ஒத்திகைக்கு முன், என்னைத்தனியே அந்த நடிகன் சந்தித்தான்.உடனே எனக்குச் சம்மதம் என்றாலும் 'தான் ஃபில்ம் இன்ஸ்டியூட் 'என்று தன் பிரதாபங்களையும் அவன் கூறியதையெல்லாம் கேட்பதுபோல் நடித்து விட்டு சரி ஒத்திகைக்கு வா என்று சொன்னேன்.

அவன்தான் ஔரங்கசீப் ஆனான், நாடகம் தான் வேறானது! அவனிடம் ஒரு குறை, வசனங்களை மறந்துவிடுவான். அதற்காக அவனை விட்டுவிட்டால்? உடனே அன்றிரவே, நாடகத்தின் பல பகுதிகள் வெட்டியெடுக்கப்பட்டன.. முக்கியமாக அவன் பேசவேண்டியிருந்த பக்கங்கள் நீக்கப்பட்டன! இடையில் அவனுக்கு ஒரு தொலைகாட்சிக்கான படவாய்ப்பு கிடைத்து, பல ஒத்திகைகளுக்கு வரமுடியாமல் போனது.

ஏற்கனவே லாசராவிடம் எங்கள் குழு மாட்டிக்கொண்டிருந்த அனுபவத்தால் (அவர் திடீரென்று ஒத்திகை நடக்கும்போது, "ஆமா, அந்த எண்ணைக்குளீயல் எப்படிக்காட்டப்போறே" என்று இம்சைப்படுத்தியிருந்தார். அதை வசதியாக அப்போது நீக்கிவிட்டிருந்தேன்), இம்முறை ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க, இந்திரா பார்த்தசாரதியிடம் அனுமதியே கேட்கவில்லை.அப்படி மாட்டிக்கொண்டால், டைரக்டர் தான் தப்பு என்று வைத்யநாதனும், ப்ரொட்யூசர் தான் தப்பு என்று நானும் மாற்றிச் சொல்வதாகவும் முடிவு!

நாடகம் ஒருவழியாக முடித்தோம்..அன்று கதாநாயகன் ஒரு காட்சியில் இரண்டுபக்க வசனங்களை மறந்துவிட்டான்..எதிரில் நல்லவேளை பாலாசிங் இருந்ததால் அந்தக் காட்சி தப்பியது..உடனே எங்கள் குழு சோர்ந்து விட்டது.. அடுத்த இரண்டு ஆண்டுகள் சும்மா இருந்தோம். ஆனால் என்னசெய்யலாம் என்று எதுவும் செய்யாமல் பேசிக்கழித்தோம்

1987 ஒரு ப்ரச்சார நாடகமாக, 'இனி' என்றொரு நாடகம் எழுதினேன்..பாலாசிங் தான் கதாநாயகன்.ப்ரீதம், சாமி, மீனாட்சிசுந்தரம், ரமேஷ்,வைத்யநாதனுடன் நடித்தார்கள். தேவையிருந்ததால் தொழில்முறை நாடக நடிகையான ஷோபாவையும் சேர்த்துக் கொண்டோம்..இந்த நாடகத்தில் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை, அங்கீகாரம் எல்லாம்...திரு.பூர்ணம் விஸ்வநாதன் எனக்காக, (அபிதா பாதிப்பில்) அப்பா வேடத்தில் நடித்தார் என்பதுதான்.  அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது ஏராளம். ஒலிபெருக்கியில்லாமல் கமறிய குரலில் அரங்கு முழுவதும் கேட்குமாறு பேசுவது உட்பட. ..
எங்கள் குழுவினர் தான் ஒத்திகைக்கு தாமதமாக வருவார்கள், அவர் முன்னமேயே வந்து இந்த வசனத்தை இப்படிச்சொல்லலாமா என்றெல்லாம் என்னுடன் பேசிக்கொண்டிருப்பார். இந்த நாடகத்தில் நானும் நடிப்பேன் என்று எங்கள் குழுவில் ஒருவன் அடம்பிடித்தான்..அவனுக்கு வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்ததால் அவனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அப்போதும் அவன் இம்சை தாங்காமல் ஒரு டாக்டர் வேடம் தந்தோம்..ஒத்திகையே தேவையில்லை, ஸ்க்ரிப்ட் ஒரு ஃபைலிலிருக்கும் அதைப்பார்த்து அவன் கேட்டால், பிற பாத்திரங்கள் பதில் சொல்வார்கள்.. .அவன் இன்று பிரபலமாகிவிட்ட நடிகர் நாசர்.
இதற்கப்புறம், நானும் பாலாசிங்கும் சில குறும்படங்கள், செய்திப்படங்கள் என்றெல்லாம் செய்துகொண்டிருந்தோம்...

அப்புறம் தான் ஈடிபஸ்! 1988 !!அதற்கு முன்னாலேயே மொகாலயர்களாக நடித்துவிட்ட திமிரில், எங்கள் மூஞ்சி கிரேக்க நாடகத்திற்கும் பொருந்தும் என்று அதில் இறங்கினோம். அந்த வெற்றியின் மமதையில் அடுத்து ஒரு 'சமூகப்ப்ரக்ஞையுள்ள'  நாடகம் என்று முடிவெடுத்தோம். அசோகமித்ரனின் காத்திருத்தல் எனும் சிறுகதையைத் தேர்ந்தெடுத்தோம். அவரிடம் அனுமதி கிடைக்கும் என்ற தைரியத்தில் கேட்டபோது தன் வழக்கமான நக்கலுடன், "அந்தக் கதையைத் தானே போடுவேள்?" என்றார்.ஔரங்கசீப்பிற்கு அவர் கணையாழியில் விமர்சனம் எழுதும்போது, இயக்குநர் பாதி நாடகத்தையும் நடிகர்கள் பாதி வசனங்களையும் முழுங்கிவிட்டது நன்றாக இருந்தது என்று எழுதியவர்!!


நாடகம் முடிந்தவுடன் என்னிடம்" ருத்ரன், இந்த நாடகத்துல central character, hero இல்லையே. அப்புறம் எதுக்கு அவ்வளோ கத்தினான்" என்று கேட்டார். அத்துடன் இனி தமிழ் இலக்கியகர்த்தாக்கள் வேண்டாம் என்று முடிவெடுத்தோம்.அதே வேகத்தில் அதே ஆண்டு 1988, ஷேக்ஸ்பியரின் மாக்பெத், காஃப்காவின் விசாரணை இரண்டையும் தமிழ் நாடகமாக்கினேன்..இவை பற்றி பின்னாள்....





வைத்தியநாதன்,  காத்திருத்தலில்


காத்திருத்தல், ஒளியமைப்பு ஒத்திகை



ஈடிபஸ் காட்சிகள்







மேலே இருப்பது ஈடிபஸ்நாடகத்தின் இறுதிக்காட்சி

அரங்கம் அதிர்ந்த காட்சி,  ரமேஷ் ஈடிபஸாகவே அன்று வாழ்ந்தான்...
அவன் இறந்து விட்டான்..அவனுக்கு இது இன்னொரு அஞ்சலி





நாடக ஓளி ஒலி அமைப்பு



பொதுவாக நாடகம் துவங்குமுன்------




                            







பவித்ராவில் பாலாசிங், தேவி   




காத்திருத்தலில் சாமிக்கு சில வார்த்தைகள்












எங்கள் ரமேஷ்

4 comments:

Anandi said...

pugaippadangal arumai.

Dr.Rudhran said...

ok'amrutha'..that's how things were in 1980s it will not happen again

Thekkikattan|தெகா said...

thanks for sharing the pictures... it looks like you had lots of fun!

eniasang said...

உங்களின் கதைகளை இப்ப நாடகமாக்க முடியுமா? மேடையின்றி நாடகமாக்கி வலைதளத்தில் போட முடியாதா?(நான் குறிப்பிடுவது நிஜங்கள் கதைகளை)
எனக்கு நடிக்க விருப்பம்.

Post a Comment