Wednesday, December 9, 2009

சாரதாமேனன் சொற்படி


நேற்று மாலை டாக்டர்.சாரதாமேனனைச் சந்தித்தேன். ஏதாவது எழுது, எங்கேயாவது எழுது என்றார், இங்கே எழுதுகிறேன்.
சென்னை அரசு மனநலக்காப்பகத்தின் நிலைமை பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தார்.
கேட்ககேட்க எனக்கு இரு விஷயங்கள் வியப்பையும் வருத்தத்தையும் தந்தன.
வருத்தம் முதலில்:அங்கிருக்கும் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து உள்ளனவாம். உள் நோ யாளிகள் நிலைமை சரியில்லையாம். செவிலியர்களும், சேவகர்களும் தங்கள் பணிகளைச்சரியாகச் செய்ய முடியவில்லையாம். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சமூகப்பணியாளர்கள் பலரது பணியிடங்கள் நிரப்பப்படாமல், ஆள்பற்றாக்குறை உள்ளதாம். இதையெல்லாம் கவனிக்கவேண்டிய இயக்குநருக்கு, காப்பகத்தின்மீது 'சிலர்' தொடுத்துள்ள வழக்குகளைச் சந்திக்க நீதிமன்றத்துக்கு அலைவதில் பெரும் நேரம் செலவாகிறதாம்.நோயுற்றவர்களில் சிலர், குணமடைந்திருந்தாலும் அவர்களை வீட்டிற்கு அனுப்ப முடியவில்லையாம். (இன்றும் சிலர் நோயாளியை அனுமதிக்கும் போது பொய்யான முகவரி தந்துவிட்டு காணாமல் போய்விடுவதால் இந்த அவல நிலை). இன்னும் பலப்பல விஷயங்களை அவர் புலம்பிக்கொண்டிருக்கும் போதுதான் இன்னொரு வருத்தம் வந்தது.

80+வயதில் அவருக்கு இருக்கும் ஆதங்கம் எனக்கு ஏன் இல்லை? எனக்குத்தெரிந்த வரையில் இந்நிலை மோசமாக இருந்தாலும், இது ஒன்றும் திடீரென்று ஏற்பட்ட ஒரு சரிவு அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக ஒருவித மெத்தனமும் அக்கறையின்மையும் அங்கே வெகுவருடங்களாக ஊடுருவி வளர்ந்து வந்திருந்தன..

அப்படியென்ன வழக்கு, நோயாளிகளையும் நிர்வாகத்தையும் முழுமையாக இயக்குநருக்கு கவனிக்கமுடியாமல்? இது ஒரு விநோதமான நிலைமை. வழக்கு தொடுத்தவர்கள் அதே மருத்துவமனையின் பல வசதிகளை பல ஆண்டுகளாகப்பயன்படுத்திவந்தவர்கள் தான். அவர்கள் தங்கள் நோயாளிகளை இதே மருத்துவமனையில் அனுமதித்த காலத்திலும் இந்த நிலைமை தான் இருந்தது.அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம், 'அவர்கள்' இந்த மருத்துவமனையின் சேவைகளைப்பயன்படுத்தி, தங்கள் சொந்த நிறுவனத்திற்குப் புகழும் பணமும் சேர்த்துக்கொள்வதை மருத்துவ நிர்வாகம் எதிர்த்தது! அரசின் நிர்வாகம் 'அவர்களுக்கு' ஆரம்பத்தில் துணைநின்றது!
போடப்பட்டது பொதுநலவழக்காம்! பாவம் மனநோயாளிகளை இந்த மருத்துவமனை சரியாகக் கவனிக்கவில்லையே என்ற தார்மீகக்கோபமாம்!! இதே 'அவர்கள்', தங்களுக்கு நாளும் கூடும் அரசியல், வர்த்தக, செல்வந்தர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரே ஒரு கட்டிடத்திற்குக்கூட ஒரே ஒரு குழாய் ரிப்பேர் கூட‌ச் செய்ததில்லை! பிறகு என்ன பொதுநல அக்கறை? 'அவர்களின்' தலையீட்டில் மட்டுமல்ல தம்பட்டத்திலும் மருத்துவமனையின் மனம் சுணங்கியது, அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். வெளியேறியவர்கள் தாங்கள் செய்து வருவதாகப் பீற்றிக் கொள்ளும் சேவை செய்ய முடியவில்லை! அதற்கு ஒரு மருத்துவமனை அவசியம். அப்படியொரு மருத்துவமனை கட்டுவது அவர்கள் வைத்துள்ளதிலோ அல்லது வேண்டுகோள் விடுத்து சேர்க்கக்கூடிய பணத்திலோ பெரிய விஷயமுமல்ல! அப்படிச் செய்தால் கடைத்தேங்காய்+வழிப்பிள்ளையார் என்னும் அவர்களின் வர்த்தகக் கணக்குக்கு ஒத்துவராது!! (இதில் ஒரு சொந்தப்புலம்பலும் அவசியமாகிறது: 'அவர்கள்' சேவை செய்து பெயர் வாங்க, நானும் வங்க்கிகடன் கட்டமுடியாமல் நஷ்டத்தில் நடத்திக்கொண்டிருந்த மருத்துவமனையில் 'அவர்கள்' கூட்டி வருபவர்களை இலவசமாகப் பார்த்துக்கொண்டிருருந்தேன். இதைவிடக் கொடுமை, அவர்கள் ஆரம்பிக்கும்போது, மிகுந்த நம்பிக்கையோடு அவர்களின் நிறுவனத்திற்கான இலச்சினையையும் நான்தான் வரைந்து கொடுத்தேன்!).
'அவர்கள்' சரியில்லை என்பது ரொம்பகாலத்திற்கு முன்பே எனக்குத்தெரியும், அதற்குக் கொஞ்ச காலத்திற்குமுன் 'இவர்களும்' ச‌ரியாக இல்லை என்பதும் எனக்குத்தெரியும். பிறகென்ன எனக்கு திடிரென்று பொத்தி வைத்த பொறுமல் வெடிக்கவேண்டும்? எல்லாம் என்னெதிரில் பேசிக்கொண்டிருந்த அந்த அம்மையாரினால்தான். அவர், டாக்டர்.சாரதா மேனன்.

அவர், தமிழ்நாட்டின் முதல் பெண் மனநலமருத்துவர் (இந்தியாவில் இரண்டாவது)! இந்த சென்னை மனநல மருத்துவமனையின் இயக்குநராக, தலைவியாக 17 ஆண்டுகள் பதவி வகித்தவர். அவரது காலத்தில் தான் மனநல மருத்துவ முதுகலை படிப்பு உருவானது, அவரது முயற்சியால்! அவரது காலத்தில் அப்போதிருந்த மருந்துகளின் உதவியுடன் பலர் பயனடைந்தார்கள். (இன்றைய மருந்துகள் இன்னும் துல்லியமாகவும் விரைவாகவும் நோய்க்குறியீடுகளைச் சரிசெய்கின்றன). ஓய்வு பெற்றபின், தன் சொந்த முயற்சியால் மனச்சிதைவு ஆய்வு மையத்தை அவர் நிறுவினார். அது ஆரம்பித்த ஒரு வருடத்தில் அங்கே அவர்கீழ் நான் பணிக்குச்சேர்ந்தேன்.
நிறுவன நடவடிக்கைகள் ஒத்துவராதால் மூன்றாண்டுகளில் விலகினாலும் இன்றும் அவர் அழைத்தால், தொலைபேசியில் கூட எழுந்து நின்று பேசுவேன்..நேரில் அவரிடம் வாதமும் சண்டையும் போட்டாலும்!(அவரே தான் நிறுவிய அமைப்பிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன் வெளியேறிவிட்டார்)

" நீ தான் தழிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுவாயே, இதைப்பற்றியெல்லாம் எழுது" என்றார். சரியென்று நான் சொன்னபோது, " மனநோய் பற்றி எழுது, மனநோயாளிகளை அவர்களது குடும்பமும் சமூகமும் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் பற்றி எழுது" என்றார். சரி என்றேன்."எழுதும்போது யாரையும் திட்டாதே, கோபமாய் எழுதாதே, தனிப்பட்டவர்களின் குறைகளைவிட சமுதாயத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டுவது தான் முக்கியம்" என்றார்.  சரியென்றேன்.  
அவர் சொன்னபடி தான் எழுத முயன்றேன்.

14 comments:

மீன்துள்ளியான் said...

/ "எழுதும்போது யாரையும் திட்டாதே, கோபமாய் எழுதாதே, தனிப்பட்டவர்களின் குறைக"எழுதும்போது யாரையும் திட்டாதே, கோபமாய் எழுதாதே, தனிப்பட்டவர்களின் குறைகளைவிட சமுதாயத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டுவது தான் முக்கியம்" என்றார்//

என்ன ஒரு நல்ல மனசு
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

Unknown said...

கெட்டகுணம்,குற்றம் நாடும் சீர்கெட்ட சமுதாயத்தில்
மனம் நாடும்,அதன் நலன் நாடும் அம்மா,

அய்யா ருத்திரன் சொல்வார்,ஒரு நாள் அது கேட்கப்படும்

சந்தனமுல்லை said...

ஹ்ம்ம்...நீங்கள் சொன்னது போல சரிவு மெல்ல மெல்லதான் ஆக்கிரமித்திருக்கும்! மனநிலை சரியானவர்களை அழைத்து செல்ல யாரும் வரவில்லையென்பது - நினைத்துப்பார்க்கவே முடியாததாய் இருக்கிறது!!

நல்ல இடுகை, சார்! சாரதா அம்மாவுக்கு ஒரு சல்யூட்!

Anonymous said...

Neere oru mental

அமிர்தவர்ஷினி அம்மா said...

எல்லாவற்றிலும் ஊழல், இடுகையை படிக்க மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது, என்ன ஏது என்ற நிலமையை புரிந்துகொள்ளாமல் அந்த ஹாஸ்பிட்டலில் இருக்கும் மனிதர்களை நினைத்தால் இன்னும் மனதுக்கு பாரம்.


பகிர்ந்தமைக்கு நன்றி சார்

மஞ்சரி said...

இதை படிக்கும் போது மனசுக்கு ரொம்ப பாரமா இருக்கு அய்யா

//இன்றும் சிலர் நோயாளியை அனுமதிக்கும் போது பொய்யான முகவரி தந்துவிட்டு காணாமல் போய்விடுவதால் இந்த அவல நிலை//

சமீபத்தில் ஒரு பத்திரிகையில் ஒரு செய்தி படித்தேன்.
சமீபகாலமாக வெளியூர்களில் இருந்து வந்து மனநிலை தவறியவர்களை பழநி கோவில் அருகே (அவர்கள் குடும்பத்தினரே) விட்டு விட்டு போய் விடுவது அதிகரித்து உள்ளதாம். இப்படி தவிக்க விடப்பட்ட மனநோயாளிகள் பலர் பிச்சை எடுத்து வாழ்கிறார்கள். அதிலும் இரவு நேரங்களில் சில மனித மிருகங்கள் பெண் மனநோயாளிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிறார்கள் என்பது உச்சகட்ட கொடுமை.

அமுதா கிருஷ்ணா said...

சமீபத்தில் கேரளா சோட்டாணிகரா கோயில் சென்றிருந்த போது அங்கு பேய் பிடித்த பெண்கள் சிலர் ஆடி கொண்டு இருந்தனர். பார்க்கவே மனதிற்கு மிக கஷ்டமாய் இருந்தது. அவர்கள் மனநோயாளிகள் என்று அறியாமல் பேய் அது இது என்று சொல்லி.. இந்த சமூகம் கோயிலில் விட்டு விட்டு செல்கிறது..

uthamanarayanan said...

சமுதாயத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டுவது தான் முக்கியம்----- Good to hear from your mentor and senior.My salute to Madam.Regards,

eniasang said...

எத்தனையோ செய்ய வேண்டியுள்ளது.செய்யவும் முடியும்.வெறுமனே பேசி ஒரு நொடி ஆதங்கப்பட்டு பின் வழக்கம் போல ..........எனக்கு தெரிந்து உங்களிடம் வரும் நோயாளிகளை அழைத்து வருபவர்களில் சிலர் அவர்களை நடத்தும் விதம் ,இவ்ர்கள் படுத்தும் விதம்......இது இங்கு நடக்க கூடாது என நான் நினைப்பதுண்டு.
விழிப்புணர்வு மக்களை தெளிவுப்படுத்தும் விதமாக MV DIABETIC மையத்தில் செய்வது போல் do's and dont's உங்கள் clinicல் செய்யலாமே. உதவ நான் தயார் அதற்குரிய தகுதி எனக்கிருக்கிறது என நீங்கள் நினைத்தால்.

குப்பன்.யாஹூ said...

இலவச தொலைக்காட்சி பெட்டிக்கும் , திரைப் பட தொழிளார்களுக்கு இலவச வீடு, திரைப்பட நகரம் உருவாக்க செலவு செய்ய இருக்கும் பணத்தில் ஒரு சிறிய பகுதியை மன நல காப்பகத்திர்க்க் அரசு செலவழிக்க வேண்டுவோம்.

Anandi said...

good post., with regards

JP said...

A recent Ad from 'Apple Inc' :

Here’s to the crazy ones. The misfits. The rebels. The ones who see things differently. You can quote them, disagree with them, glorify or vilify them. About the only thing you can’t do is ignore them. Because they change things. They push the human race forward. While some may see them as the crazy ones, we see genius.... Because the people who are crazy enough to think they can change the world, are the ones who do...

butterfly Surya said...

welcome back Dr. முதலில் அந்த அம்மையாருக்கு நன்றி.

எழுதுங்கள் டாக்டர். சொல்ல வ்ந்ததை துணிச்சலுடன் எழுதுவதில் வெகு சிலரே.

பகிர்விற்கும் நன்றி.

malar said...

அரசாங்கமும் அரசியல் வாதிகளும் நினைத்தால் எல்லாம் நடக்கும் .செய்வார்களா ?

Post a Comment