Wednesday, December 2, 2009

கூர்மையான மொக்கை- பவித்ரா

தினமும் எழுதவேண்டுமாமே என்ன எழுதுவது என்று என் நண்பரிடம் கேட்டபோது மொக்கைப்பதிவுகள் எழுதலாம் என்று சொன்னார்! மொக்கை எது? என் வாழ்வை, என் கனவை, என் பொய்யை நான் எழுதினால், அதனால் யாருக்கும் எந்தவிதமான பயனும் இல்லாது போகலாம்...(இங்கேயும் 'லாம்' என்னும் ஒரு நப்பாசை!) 
மொக்கை எது என்று எனக்கு இன்னும் சரியாகப் பிடிபடவில்லை. 
ஆனால் மொக்கைகளின்மீது எனக்கு ஒரு ஆச்சரியம் கலந்த ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.. என் மொக்கையாகிப்போன கனவுகள் பல..அவற்றுள் சில பற்றி எழுதினால் என்ன என்று யோசித்தபோது, கனவுகளே மொக்கைகளா என்றும் தோன்றியது.. கனவுகள் வேறு ஆசைகள் வேறு. ஆசைகள் மொக்கையாக இருந்தால், மனம் அவற்றை ஏற்றுக்கொள்ளாது.மனதுக்கு எப்போதும் தான் ஒரு கூர்மையான கத்திபோல்தான் பிரமை..(உபநிஷத் ஒன்றில் கத்தி தன்னையே அறுத்துக்கொள்ள முடியாது என்று வரும்). 

 மொக்கையோ கூர்மையோ, என் சில கனவுகளை நான் நிஜமாக்க முயன்றிருக்கிறேன். அவற்றுள் கனவும் நினைவும் ஒரு சுக‌ஸ்ருதியில் பாடலாகி, இன்றும் ஞாபகத்தில் ஆடலாகி மகிழ்வித்துக்கொண்டிருப்பது என் நாடகக் கால அனுபவங்கள் தான். அவற்றை எழுத முயல்கிறேன். 'என் கூர்மை உமக்கு மொக்கையாகத்தோன்றிடின், அது யாரது பிழை என இனிவருங்காலம் கூறட்டும்' இந்த வசனத்தை எழுதும்பொழுது மனத்தில் எனக்கு ஒரு கதாபாதிரம் தோன்றியது..இது வசனம் தான், ஆனால் வசனங்கள் வானத்திலிருந்து குதிப்பதில்லை, வாழ்க்கையிலிருந்துதான் பிறக்கின்றன.

மீண்டும் நாடகமேடைக்குச்செல்கிறேன். நான் எழுதி இயக்கி என் மொத்த வருமானத்தை முதலில் தொலைத்த நாடகம் லாசராவின் அபிதா.அந்த அடியிலிருந்து மீள இரண்டு வருடங்கள் ஆனது. 1984, மீண்டும் ஒரு நாடக ஆசை..அபிதாவைப்போல் அல்லாமல் என் மனத்துள் உருவானபடியே நாடகம் அமையவேண்டும் என்று ஒரு வெறி. அப்போதுதான் பவித்ரா என்றொருநாடகம் எழுதினேன். 
இதன் ஆரம்பம் ஒரு டீக்கடையில் அரவிந்த் தான் சமீபத்தில் ஒரு படம் பார்த்தாகச் சொன்னபோதுதான்..1984ல். 
எளிமையான கதை. 
ஒரு ராஜாவுக்கு ஒரு மிகமிக அழகான ராணி. அவளைவிட அந்த ராஜாவுக்கு அழகான குதிரைகளைத்தான் பிடிக்கும்.அந்த ஊருக்கு, ஒரு புதியவன் வருகிறான், அவனிடம் உலகிலேயே (கதைக்காக) அழகான குதிரை இருந்தது. குதிரை உனக்கு வேண்டுமென்றால், அதனுடன் ஒரு மணிநேரம் நீ இருக்கலாம், ஆனால் அந்த ஒருமணிநேரமும் நான் உன் ராணியுடன் தனிமையில் இருக்கவேண்டும் என்று புதியவன் சொல்ல, ராஜா சம்மதிக்கிறான். ராணியுடன் இருக்கும்நேரம் புதியவன் அவளை மயக்கப்பார்க்கிறான். அவள் மெளனமாக இருக்கிறாள்.ஒரு மணி நேரம் முடிந்தவுடன், ராஜா குதிரையைத் திருப்பித்தருகிறான்..புதியவன் குதிரையில்  ஏறிப்போகும் போது அரண்மனையைத் திரும்பிப் பார்க்கிறான்...ராணியின் ஜன்னலில் அவள் இல்லை... இன்னும் பார்த்துக்கொண்டே போகும்போது, ஜன்னலின் திரை விலகுகிறது, ராணி அவனை எட்டிப்பார்க்கிறாள். கதை முடிகிறது.........
.என்ன தோன்றுகிறது? 
அதே நேரத்தில் தான் ஷா எழுதிய கான்டிடா நாடகத்தையும் நான் பார்த்தேன். கான்டிடா பவித்ராவானாள்! 
அப்போதெல்லாம் நாடகத்திற்கு நடிகைகள் கிடைப்பது மிகமிகச்சிரமம். ஏதோ என்னிடம் காய்ச்சல் என்று வந்த ஒரு உபரிநடிகையிடம் பேசி அதில் நடிக்க சம்மதிக்கவைத்தேன்..அவள் கிடைத்தபிறகுதான் நாடகத்தை எழுதினேன்..
என் கதை.. 

ஒரு மிகச்சிறந்த ஓவியசிற்பக்கலைஞனுக்கு ஒரு மிக அழகான மனைவி. அவனுக்கு விருதுவழங்கும் விழாவிற்கு வழக்கமான ஆணவத்தினால் அவன் போகாமல் தன் மனைவியை அனுப்புகிறான்..அவளை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அரவிந்த் பார்த்து மயங்கி..அவர்கள் வீட்டிற்கு வந்து, அந்த ஓவியசிற்பிக்கு ஒரு மிகப்பெரிய சிற்பவேலை ஏற்பாடு செய்கிறான்..
வழக்கம்போல் ஓவியன் வேலையில் மூழ்க, பழக்கத்தைப் பயன்படுத்தி, அர்விந்த் ஓவியனின் மனைவியுடன் நெருக்கமாகிறான்.புன்னகை சீண்டலாகி, தொடுதலாகி, நேரத்தையும் நினைவுகளையும் மட்டுமல்லாமல், உள்ளத்தையும் உடலையும் அவர்கள் பரிமாறிக்கொள்கிறார்கள்...
தன் மிகச்சிறந்த சிற்பம் முடிந்தவுடன், முதலில் தன் மனைவிக்குக் காட்டவேண்டும் என்று வேகமாக உள்ளே வரும்போது அந்தக்கலைஞன் அவர்களின் நெருக்கத்தைப் பார்க்கிறான்..உடனே தன் மிகச்சிறந்த சிற்பத்தை அவனே உடைத்தும் விடுகிறான்..
அப்போது அவள் .. 
"நான் உங்களுக்கு ஒரு குழந்தை, ஒரு வேலைக்காரி, ஒரு ரசிகை..இன்னும் நிறைய..ஆனால்..நான் உங்களுக்கு மனைவியா? மனைவி என்றால் என்ன..மிதியடியா இல்லை ஒரு பூஜைக்கான விக்ரகமா..பவித்ரா என்ற என் பெயருக்கேற்ப நான் தூய்மையானவளாக இருந்தால்..உங்களை விட்டுப்போக வேண்டிய நேரம் வந்து விட்டது"...என்று சொல்லிவிட்டுப்போகிறாள்... lights off..end music! 

முதல் நாடகத்திலிருந்தே ஒரு வழக்கத்தை எங்கள் குழு வைத்திருந்தது..நாடகம் முடிந்தவுடன் கைதட்டிவிட்டுப்போகக் கூடாது..என்ன நினைக்கிறீர்கள் என்று மேடையில் வந்து சொல்லவேண்டும்..பவித்ரா நாடகம் 52 நிமிடங்கள், பிறகு எல்லாரும் பேசியது 140 நிமிடங்கள்.."போதும் சார், தியேட்டர் க்லோசிங் டைம்" என்று எங்களை விரட்டுமளவு  நிறைய பேர், நிறைய பேசினார்கள்.. அப்போது என்னவெல்லாம் பேசப்பட்டது என்று நினைவிலில்லை..முத்துசாமி நாடகத்திற்கும் சினிமாவிற்கும் வித்தியாசம் தெரியாமல் போடுவதாய் குற்றம் சாட்டியது மட்டும் நினைவிருக்கிறது.. இன்று பேசுவதாயிருந்தால்..என்ன பேசப்படும்? பேச உதவியாய் சில கேள்விகள்.. 

1.மிதியடியாகவோ மகாதேவியாகவோ அவன் அவளை நடத்தியிருந்தால் அதற்கு அவள் எவ்வள‌வு தூரம் காரணம்? 
2.தன் நிலை சரியில்லையென்று தெரிந்தபின் அதைச்சரிசெய்ய அவள் என்னவெல்லாம் செய்திருக்கலாம்? 
3.உடல் கிடக்கட்டும், மனம் இன்னொருவனிடம் சென்றுசேர்ந்த பின், எதற்காக அவனுடன் அவள் தொடர்ந்தாள்? 
4.தாயாகவும் குழந்தையாகவும், தெய்வமாகவும் தொண்டுசெய்யும் அடிமையாகவும் நடத்திய அவன் அப்படி இருப்பத்றகான நிலைமை எப்படி ஏற்பட்டது? 
5.இறுக்கத்திலிருந்து தப்பிக்க அவள் இன்னொருவனைத் தேர்ந்தெடுத்தபின்..அது நிரந்தரம் என்று நம்பியா விலகுகிறாள்? அது சரியா? 

இப்படி நிறைய வினவக்கூடிய சாத்தியங்களை உள்ளடக்கியது இந்நாடகம்.இதில் கலைஞனாக மிகவும் சிறப்பாக நடித்தவன் என் நண்பன் பாலாசிங். அர்விந்தாக நடித்தவன் அதே பெயரில் பிரபலமாகிவிட்ட தியாகராஜன் எனும் நடிகன்..பிறகு பவித்ராவாக நடித்தவள் பெயர் தேவி.. அபிதாவைப்போலல்லாமல் இதில் நான் என்ன visualize செய்திருந்தேனோ அன்று அது அப்படியே வந்தது..அதன் பின், அடுத்த நாடகம்.. 

இதைவிட மொக்கையாக இன்னும் முயன்று பார்க்கிறேன்..no! this is not a fishing expedition to bait for compliments. சில நாடகங்களுக்கு மட்டுமே என்னிடம் புகைப்படங்களும் வீடியோக்களும் உள்ளன, யாராவது உதவி செய்தால் அவை இங்கே எல்லாருக்கும் காட்டப்படலாம்..

19 comments:

ரவி said...

கலக்கல்.....

அன்புடன் அருணா said...

மொக்கை என நினைத்து எழுதினாலும் மொக்கையல்ல!

eniasang said...

இது வாழ்வியில் களம். நான் எதிர்பார்த்திருந்ததும் இதுவே.ஒரு பயிலரங்கம் (workshop)ஏன் நீங்கள் நடத்த கூடாது? உங்களுக்கு இது மொக்கையானாலும் நான் வரவேற்கிறேன் மேலும் எதிர்பார்க்கிறேன்

thamizhparavai said...

உண்மையிலேயே கூர் மொக்கைதான்...
நன்றாக இருந்தது நாடக அனுபவங்கள் டாக்டர்...
//ஏதோ என்னிடம் காய்ச்சல் என்று வந்த ஒரு உபரிநடிகையிடம் பேசி அதில் நடிக்க சம்மதிக்கவைத்தேன்.//
நல்ல டாக்டர்... காய்ச்சல்ன்னு போனா கால்ஷீட் கேட்பீங்க போல...
நாடகங்களின் ஸ்கிரிப்ட் இருக்கிறதா டாக்டர் சார்...?

வால்பையன் said...

//மொக்கை எது என்று எனக்கு இன்னும் சரியாகப் பிடிபடவில்லை. //

என்ன சார் இப்படி சொல்லிபுட்டிங்க!
இந்த பதிவுக்கு மொத கமெண்டே மொக்கை மன்னர் போட்டது தானே!

குப்பன்.யாஹூ said...

this is not mokkai. Mokkai means reader can not read beyond 1st sentence

Happy heart said...

Such a lovely account doctor...your writeups almost make me wish i was born several years earlier!! In anycase, why don't you restart your theater? Or, do you still continue? The Tamil productions that I have seen of late haven't really been this good...

வினவு said...

80களில் துவங்கிய நாடக முயற்சியில் எத்தனை நாடகம் போட்டீர்கள் டாக்டர்? அப்போதிருந்த உங்கள் இலக்கிய ஆளுமைக்கும் இப்போதைக்கும் வேறுபாடு உள்ளதா என்று அறிய விரும்புகிறோம்.

Anonymous said...

'பவித்ரா' பற்றிப் படிக்கிற போது ஒரு தாக்கம் ஏற்படுகிறது.

நிராகரிக்கப் பட்டதாக உணர்கிற மனைவிகள் பல ரகம். தன்னிடம் கணவன் கோபமாகவோ, உரத்தோ பேசுவதில்லை என்று குறைபட்டுக் கொள்கிற மனைவிகளை எனக்குத் தெரியும்.

http://kgjawarlal.wordpress.com

Dr.Rudhran said...

vinvau, அப்போதெல்லாம் ஆரம்பத்தில் கதைக்கும் பாத்திரத்திற்குமே என்மனம் மயங்கும்..மெல்ல மயக்கம் குறைந்து பார்வை கூர்மையானதாய் நான் நினைத்துக்கொள்கிறேன்.கடுமையாகிவிட்டதாய்ச் சிலர் நினைக்கிறார்கள்..

Thekkikattan|தெகா said...

enjoyed reading, doctor.

எனக்கு இங்கு ஒரு கேள்வி. நம் சமூகத்தில் திருமணமான உடனேயே ஒரு ஆணும், பெண்ணும் ஏன் பரஸ்பரமான நண்பர்கள் நிலையிலும் நன்கு புரிந்துணர்ந்து வாழ்வின் அனைத்து பகுதிகளையும் சுவைத்து, வாழ்க்கையை கொண்டாடி மகிழ்ந்து வாழ முடியும் என்ற 'ஸ்போர்டிவான' நிலையிலிருந்து நழுவி கணவன்/மனைவி என்ற official இறுக்க சூழ்நிலைக்குள் விழுந்து விடுகிறார்கள்?

Dr.Rudhran said...

theki, that is because marriage is a legal necessity and a social obligation..when you HAVE to do something, stress is inevitable...like me writing blogs now!

Thekkikattan|தெகா said...

stress is inevitable...like me writing blogs now!//

ஹா ஹா ஹா... you are so funny :))

அமுதா கிருஷ்ணா said...

இது மொக்கை மாதிரி தெரியவில்லையே....

Anonymous said...

hi
ennavoru arumai.
pavithra kathai manathil nirkirathu.
doctor,nan ungal eluthukkalin rasigai.
vazhkai ungal konam azhagaga irukku.
innum niraya mokkaigalai ethirparkiraen.
nalla kathai karu.
abarnashankar from usa

சுரேகா.. said...

நீங்கள் எழுதுவது எல்லாமே கூர்மைதான் சார்!

தமிழ்ப்பறை said...

நான் கொஞ்சம் லேட்-ரொம்பவேவோ-
இதுதான் மொக்கைன்னா,அப்ப மொக்கைய
என்னானு சொல்றது,டாக்டர்.

மஞ்சரி said...

நல்ல பதிவு டாக்டர் :-))
உங்கள் எல்லா பதிவுகளுமே அருமை, என்னை போன்றவர்களுக்கு பாடம் :-)

//இறுக்கத்திலிருந்து தப்பிக்க அவள் இன்னொருவனைத் தேர்ந்தெடுத்தபின்..அது நிரந்தரம் என்று நம்பியா விலகுகிறாள்? அது சரியா?//

பல நேரங்களில் முடிவுகளை நாம் தொலைநோக்கு பார்வையில் எடுபதில்லை.
"I will cross the bridge when I come to it" என்கிற மனப்பான்மையே இப்படி பட்ட முடிவுகளுக்கு காரணம் என்று நினைகிறேன்.

butterfly Surya said...

டாக்டர், உங்களை விட மொக்கை மன்னர்கள் இங்கு நிறைய உண்டு. போட்டிக்கு வந்தாலும் ஜெயிக்க முடியாது.

நீங்க எழுதுங்க.

Post a Comment