Showing posts with label ருத்ரன். Show all posts
Showing posts with label ருத்ரன். Show all posts

Thursday, May 19, 2016

2016 மே மாத எரிச்சல்

டிசம்பர் 2015, சென்னை தத்தளித்தது. வயது,வசதி பேதமில்லாமல் எல்லார்க்கும் அவதி. அரசு ஏரி திறந்துவிட்டது அதனால் பலர் வாழ்நாள் சேமிப்புகளும் பொக்கிஷங்களும் நீரோடொழிந்தன. இணைய இணைப்பிருந்தோர் பொங்கினர்.  ஆட்சியை ஆள்பவரை வசை பாடினர்.. அவர்களை ஒழிப்போம் என சூளுரைத்தனர்.

வெள்ளம் வடிந்த ஒரு மாதம் கழித்து நான் பேசிய பலதரப்பட்டவர் சொன்னது, ஏரி திறந்தது தப்பு தான் ... முதல் நாள் தான் அரசு செயல்படவில்லை ..அப்புறம் சிறப்பாக எல்லாவற்றையும் சமாளித்தார்கள்>. எனும் தொனியிலேயே இருந்தது.
ஆட்சியின் மீது கோபம் யாருக்கும் - நான் பார்த்த வெகுஜனங்கள் யாருக்கும் பெரிதாய் இல்லை.

மே 2016, ஆட்சி மாறும் என்றார்கள், மாறவில்லை. ஏன்?
முதல்வர் சிறையிலிருந்தால் எதுவும் நடக்காது எனும் ஸ்தம்பித்த ஆட்சி, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட முதல்வர் மீண்டும் பதவியேற்புமதுவிலக்கு கோரியவர் சிறையடைப்பு, எதிலும் ஒரு மெத்தனம் என பலவகையிலும் மக்கள் வெறுப்படைய வைக்கக்கூடிய செயல்பாடுகள். இவை யாவும் மீறி தேர்தலில் அதே கட்சி அதே முதல்வர். இது எப்படி நடந்தது?
மக்களுக்கு ஆட்சியின் மீது மிகப்பெரிய அதிருப்தி இல்லை எனும் போது, ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி விழிப்புணர்வேற்றி மாற்றம் உருவாக்க உந்துவதே எதிர்கட்சியினர் கடமை. ஆனால்,
 எவ்வித கணக்கில் எவ்வித லாபம் எனும் ஒரே நோக்கில் கூட்டணி அமைக்கவே எதிர்கட்சிகள் முனைந்தன. சதவிகித வாக்கு எனும் மாய தோற்றத்தின் பின்னேயே அலைந்தன. ஊடக பிம்பங்களையே நம்பின.
திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது ஒரு தெருவோர டீக்கடையில் நின்றாலேயே புரிந்திருக்கும். அவர்கள் தம் மீது படர்ந்திருக்கும் அதிருப்தியை அறிந்து களையாமல், அடுத்த கட்சியில் யார் வந்தால் லாபம், யார் போனால் லாபம் என்றே இருந்தார்கள். பழம் கனியும் நழுவும் என்றெல்லாம் பேசி இன்னமும் தம்மையே கேவலப்படுத்தி ஏற்கனவே மக்கள் மத்தியில் தம் மீதிருந்த நம்பிக்கையின்மையை வலுவூட்டினார்கள். காங்கிரஸ் எப்போதோ செல்லா காசாகியிருந்தும் அதனுடன் கூட்டு வைத்து சில வெல்லக்கூடிய தொகுதிகளையும் தாரை வார்த்தார்கள். ஸ்டாலின் முதல்வர் என அறிவித்திருந்தாலும் ஏதோ சில கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கும்.  எம்ஜியார் மறைந்தபின் கலைஞருக்காக யாரும் திமுகவை வெற்றி பெற வைக்கவில்லை, முந்தைய ஆட்சி வேண்டாம் என்றே அவர் ஜெயித்தார். தவிர அவரது குடும்பம் தான் திமுக எனும் எண்ணம் சாமான்யனுக்கு ஆழப்பதிந்துவிட்ட்து.  இந்நிலையில் தேறாத திமுக, உருப்படாத அதிமுக எனும் நிலையில் சலிப்படைந்த மக்களிடம் மாற்றம் குறித்து நிச்சயமாய் ஒரு விருப்பம் இருந்த்து.

அந்த மாற்றம் நான் என அன்புமணி வந்தது வரவேற்பை விடவும் வேடிக்கை நிகழ்வாகவே ஆனது. ஜாதி மீதான அவர்களது தீவிரம் எவ்வித தீவிர ஒப்பனையாலும் மறைக்கமுடியாத ஒன்று. ஜாதி பற்றி பார்க்க வேண்டாம் அன்புமணியை மட்டும் பார்ப்போம் என்றால், மருத்துவக்கல்லூரி ஊழல் முதல் மாமல்லபுரம் கோவில் மீதாடிய அநாகரிகம் யாவும் மக்கள் மறந்து விடவில்லை.
பாஜகவுக்கும் காங்கிரஸ்க்கும் இங்கே அர்த்தமே இல்லை. ஆகவே விஜயகாந்த்! இதுதான் ஜெ ஜெயிக்க முக்கிய காரணம்.
மநகூ எனும் சாத்தியம் விஜயகாந்த் வாசன் எனும் காரணங்களாலேயே வீணாய்ப்போனது. இவ்விரு கட்சியுமே பேரங்கள் சரியாய் படியாததாலேயே இக்கூட்டணிக்கு வந்தன. திருமதி விஜயகாந்த் பேசியதெல்லாம், கைதட்டல் பெற்றிருக்கும், வடிவேலுவுக்கு வரும் கைதட்டல் போல. ஆனால் அறிவு பூர்வமாய் மக்களை அணுகுவார்கள் என மக்களே நினைத்த கம்யுனிஸ்ட்களும் இந்த கட் அவுட் நிஜமான ஆசாமி என நம்பி பின் சென்று வாய் பொத்தி நின்ற நேரமே நிராகரிக்கப்பட்டார்கள், சில தோழர்களாலேயே. வைகோ எனும் பொய்யின் வாய்ஜாலம் தானே நிற்க முடியாது கழன்றவுடன், ப்ரேமலதா சதீஷ் என்போரெல்லாம் ஆடிய உடன் மநகூ வெறும் ஒரு ஹீரோவோடு நின்று அடிவாங்கும் காமெடியனானது.
திருமாவுக்கென ஒரு வாக்கு வங்கி நிஜம், அதேபோல்தான் கம்யுனிஸ்ட்களுக்கும். இவர்களின் கூட்டுத்தொகை வெல்லுமளவு இல்லை என்றாலும் இம்முறை வாக்கு கூடியிருக்கும். அவசரம் ஆத்திரம் பேராசையோடு விஜய்காந்த் முதல்வர் என அறிவித்தபோதே இவ்விருவரும் இருப்பதையும் இழப்பர் என எனக்குத் தோன்றியது. வாசுகி நின்றிருந்தால் கூட நான் வாக்களித்திருக்க மாட்டேன் எனும் அளவு இவர்கள் தம் மரியாதை இழந்த நிலை உருவாகியது.
இந்நிலையில் அதிமுக அல்லது திமுக எனும் போது, ஏன் திமுக எனும் கேள்வி தான் முன்னின்றது, அதுவே ஏன் அதிமுக வேண்டாம் என்பதை உள்ளடக்கியது. தாங்கள் மேல் என சொல்லும் திராணி யாருக்கும் இல்லாத்தால், இப்படியே இருக்கட்டுமே என மக்கள் நினைத்துவிட்டனர்.
வெள்ளம்  வந்து அதிமுகவை அழிக்கவில்லை. மக்கள் மனநிலை புரியா எதிர்கட்சிகள்  தான் அதிமுகவை ஜெயிக்க விட்டார்கள்.
காசு கொடுக்கப்பட்ட்து என என்னிடமே பலர் சொன்னாலும், காசு அந்த 90+ தொகுதிகளுக்கும் தானே போயிருக்கும்.
என் நோக்கில் இத்தேர்தல் முடிவு அதிமுகவை சகித்துக்கொள்வது திமுகவை நம்புவதை விட மேல் என மக்கள் எடுத்த முடிவாய்த் தெரிகிறது



Sunday, October 19, 2014

மெட்ராஸ்

மெட்ராஸ் அற்புதமான சினிமா இல்லை தான், மதுபான(க்?)கடை கூட குறைகளே இல்லாத சினிமா இல்லைதான். ஆனாலும் இவை இரண்டும் நெஞ்சில் நெருடி என்னை யாரிடமாவது பேசேன் என்று கெஞ்ச வைத்தவை. சமீபத்தில் நான் பார்த்த படங்களில்..in reverse viewing not order..சரபம், சதுரங்க ஆட்டம். ஜீவா, பண்ணையாரும் பத்மினியும், இதற்கு தானே ஆசைப்பட்டாய்.., சூதுகவ்வும், ..என்று நிறைய படங்களைப் பற்றி நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். வேலையில்லா பட்ட்தாரி, சிகரம் தொடு என்பவை கூட பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன, அவை நெருங்கக்கூடிய சிலருக்கு..  ஆனாலும் மெட்ராஸ்…. மெட்ராஸ் தெரியாத சென்னைக்கார்களுக்கு நான் பரிந்துரைக்கிறேன். மனிதர்களைத் தெரிந்து கொள்ள மட்டுமல்ல ஒரு மொழியின் இன்னொரு பரிமாணத்தை அறிந்து கொள்ள.
மெட்ராஸ் என் சொந்த ஊர்! ஒருமுறை ஒரு பத்திரிக்கையில் உங்க ஊர், உங்க சாமி பத்தி சொல்லுங்க என்றதும் சிந்தாதிரிப்பேட்டை அங்காளம்மன் பற்றிச் சொன்னதும் முதலில் அவர்கள் நம்பவில்லை. நான் மெட்ராஸ்காரன்.   மெட்ராஸிலும் மேல்தட்டிலிருந்து குதிக்கவில்லை, கீழ்-நடு-மையத்திலிருந்து சில ஆண்டுகளுக்குமுன் தான் மேல் வருமானத்திற்கு நிகராக செலவு செய்யும் திமிர் வந்தவன். ( செலவு செய்யத்தான், சேமிக்க அல்ல). இது என்னைப்பற்றிய பதிவு அல்ல.. சினிமா பற்றி, சென்னை பற்றி…)
சென்னை:சினிமா  என்றெல்லாம் வேறுபடுத்திப்பார்க்காத தலைமுறையிலிருந்து வந்தவன், அதைத் தவிர்க்கமுடியாது.
மீண்டும் சொல்கிறேன். மெட்ராஸ் சர்வதேச சாகசம் அல்ல.ஆனால் ஒரு கண்ணுக்குப் படாதவாறு வைக்கப்பட்டிருக்கும் சமூகத்தின் யதார்த்தமான சித்தரிப்பு. வியாபார நிர்ப்பந்தம் எனும் தவிர்க்க இயலாத தமிழ்சினிமாத்தனமான கதையில் இதை இழைத்ததே ஒரு சாகசம் தான். அதற்குத் தான் பாராட்டு.
‘ஆமா என்னாங்கடா’ என்று ஒளிந்து கொண்டிருப்பவரும் கூட முணுமுணுப்பாய் கூட தலை சிலுப்ப வைக்கிறது என்பதே இதன் வெற்றி. இது ஒரு சமூக மாற்றம்/புரட்சி என்று எந்த வெங்காயமும் உரிக்கப்போவதில்லை. ஆனால், தம் அடையாளம் மறைப்பவர் கூட புன்னகையுடன் அங்கீகரிக்க வைத்தது இன்னொரு வெற்றி.
எனக்கு இதில் சில பாத்திரங்கள் பேசும் பாஷை புரிந்து கொள்ள உற்று கவனிக்க வேண்டியிருந்தது. இத்தனைக்கும் இவர்கள் என் மக்கள். எப்படி சேட்டுகளின் தமிழ் என்றொரு பிம்பம் தமிழ் சினிமாவில் ஆழ விழுந்துவிட்ட்தோ அப்படித்தான் சேரிவாழ் மெட்ராஸ் பாஷையும் சினிமா பிம்பத்தில் அடைபட்டு பலருக்கு அதன் பரிணாமம் புரியாது போய்விட்டது. இதை உடைக்க வந்ததற்காகவே இப்படத்துக்கு பாராட்டு.

என் அடையாளதை நான் மறுத்ததில்லை, மறந்ததுமில்லை, ஆனால் நினைவிலேயே நிலைநிறுத்திக் கொண்டதுமில்லை. நான் இங்கேயே இருந்திருக்க வேண்டிய ஒருவன், உழைப்பும் முனைப்பும் தன்னம்பிக்கையும் தெய்வநம்பிக்கையும் என்னை இவர்களின் ‘விளிம்பு’ என்று வர்ணிக்கப்படும் நிலை தாண்டி வரவைத்திருக்கிறது.. இப்படத்தில் தெரியும் பாத்திரங்கள், மனிதர்கள், குறிப்பாக இளைஞர்கள் இப்படி மீறி வரக்கூடிய சாத்தியத்தையும் இப்படம் முன்வைக்கிறது..ஆகவே, மனப்பூர்வமாய், best wishes for more Ranjith.

Thursday, May 19, 2011

மாறும் ரசனை....



மீசையும் கொஞ்சமாய் தாடியும் வளர்த்து, தோளில் ஒரு ஜோல்னா பையுடன் ருஷ்ய-ஃப்ரென்ச் எழுத்தாளர்களை மட்டுமே படிப்பதாய் ஒரு பாவ்லா/ பாவனை காட்டிக் கொண்டிருந்த வயதுகளில் எனக்கு எம்ஜியார் பிடிக்கவில்லை – நடிகராக மட்டுமல்ல, அரசியல் தலைவராகவும். 

அது ஒரு சிக்கலான வயதின் கட்டம். ஸ்ரீதர் தானே நல்ல இயக்குநர் என்று மனம் கேள்வி எழுப்பினாலும் பாலசந்தரைப் பற்றிப் பேச வைத்த வயதுகளின் காலம். 
சிவாஜியின் மிகையையும் சகித்துக் கொண்ட காலம், டிஎம்எஸ் குறைந்து கொண்டிருந்த காலம், சார்மினார் தினமும் மூன்று பாக்கெட் ஆன காலம். 

ஆனால் அப்புறம் எனக்கு எம்ஜியார் பிடித்தது...ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, ஐந்திலிருந்து பத்து வயது வரை பிடித்த அளவுக்கு. நான் படிக்க வீட்டிலிருந்த சின்ன மேஜையின் மேல் எம்ஜியார் படம் மாட்டி வைத்திருந்தவன் நான். எம்ஜியார்  ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,பிடிக்கும்என்று மட்டுமே பதில் தெரிந்திருந்த அறுபதுகளின் முற்பகுதி அது. எழுபதுகளில் அறிவுஜீவித்வ ஒப்பனை. பிறகு ஒவ்வொரு வேடமாய் மாறி நடிப்பு மட்டுமல்ல நாடகங்களும் சலித்தபின், என் ரசனை எளிமையான நேர்மையான ஒன்றாய் மாறியிருக்கிறது (என்று இப்போது கருதுகிறேன்).

இப்போதெல்லாம் எனக்கு எம்ஜியார் பாடல்களைக் கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடித்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கூட இதை நான் இப்படி வெளிப்பையாகச் சொல்லாமல் டிஎம்எஸ்க்காக, கண்ணதாசனுக்காக, விஸ்வநாதனுக்காக என்றெல்லாம் என்னிடமேயும் காரணம் சொல்லித்தான் எம்ஜியார் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் சொல்லிக்கொண்டிருந்த காரணங்களுக்காகக் கேட்கலாம் பார்க்க முடியாது, பார்ப்பது எம்ஜியாருக்காகத்தான்!

பதின்வயதுகளுக்கு முன் ஏனென்று தெரியாமல் எனக்குப் பிடித்த எம்ஜியார் முகம், ஐம்பதுகளின் பிற்பகுதியில் அடிக்கடி தொலைகாட்சியில் தென்பட்டதாலோ மீண்டும் பிடித்திருக்கிறது. என் வயதில் எம்ஜியார் ஆடிய ஆட்டங்கள் என்னுள் வியப்பை மேலிட வைக்கின்றன.. ஒரு வேளை அது வயிற்றெரிச்சலோ என்றும் யோசிக்க விருப்பமில்லை1

இப்போது ஏன், எது பிடிக்கிறது? “தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும்என்ற டூயட்டானாலும், “உன்னையறிந்தால்..எனும் ஸோலோவானாலும், எம்ஜியாருக்கென்று ஒரு பாணி புரிகிறது. பல் தெரியச் சிரித்துக்கொண்டே பாடுவதாய் வாயசைப்பதும், க்ளோஸப் காட்சிகளில் காமெரா நோக்கி உற்றுப்பார்த்து, கண்கள் குறுக்கிச் சிரிப்பதும்  அந்த நேரத்து ஸென் ZEN. அப்போது டிஎம்எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் மட்டுமல்ல, உடன் ஒலிக்கும் சுசீலா குரலும் உடன் நடிக்கும் நாயகியின் முகமும்கூட மனத்துள் வந்து விடாது. முழுமையாய் அந்தக் கணத்தை ஆக்ரமிப்பதே எம்ஜியாரின் சாகசம்.

எம்ஜியாருக்கு நடிப்பு வராது, சும்மா கதாநாயகியாக இளம் வயதுப் பெண்களை வைத்து ஒப்பேற்றினார், அழத்தெரியாது, வெவ்வேறு பாத்திரங்களிலும் வெவ்வேறு ஒப்பனைகளிலும் தோன்ற மாட்டார், தன் வயதைக் காட்டும்படி காட்சி வைக்க மாட்டார் என்றெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தவன்தான், இன்று புரிகிறது எம்ஜியாரின் வெற்றி எது, எப்படியென்று.

கண்களை நேரே பார்க்கவும், அப்போது மனத்திலும் முகத்திலும் இருக்கும் புன்னகையை விழியிலும் கொண்டு வந்ததுமே அவரது வெற்றி. இதைத் திட்டமிட்டுச் செய்திருந்தாலும் அது ப்ரம்மாண்டம்தான்!

அறிவாளிக்கு எம்ஜியார் பிடிக்காது எனும் அடிப்படையில்லா ஒன்றினாலேயே முகவின் முரசொலியை தினமும் படித்தவன் நான். இன்று, கருணாநிதியைச் சகிக்க முடியாமல் (அதற்காக ஜெவைப் பாராட்டவும் முடியாமல்) எம்ஜியாரை ரசிக்கிறேனா என்றும் யோசித்து விட்டேன். 
ஒன்று பிடிக்காததால் இன்னொன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை அல்ல இது, ஒன்று பிடித்திருக்கிறது என்றால் அதை வெளிப்படையாய்ச் சப்தமாய் அறிவிக்கும் நேர்மை இது. வயதும் வசதியும் தரும் சௌகரியம்.

ரசனைக்கெல்லாம் காரணம் தேடி, அதைச் சொல்லித்திரிய வேண்டிய நிலை கஷ்டம்தான் ஆனால் இன்னும் முப்பதாண்டுகள் கழித்து, இன்று ரஜினி என்ன வெங்காயம், நடிப்பும் இல்லை ஒன்றும் இல்லை, வெறும் ஃப்லூக் என்று சொல்லிக்கொண்டிருப்போருக்கு, ஒரு சின்ன ரெஃபெரென்ஸ் போலத்தான் இதை எழுதுகிறேன்.

ரசனை மாறும் ஆனால் அதை நியாயப்படுத்துவதில் நியாயம் இருக்காது. 
நாம் செய்வன/ சொல்வன எல்லாமுமா, எல்லாம் மட்டுமா நியாயம்!






Tuesday, February 8, 2011

சாய்ந்தாடி சாய்ந்தாடி..


சாய்ந்து ஆடும்நாற்காலியில் ஓய்ந்த தருணங்கள் பற்பல எண்ணங்களைப் ப்ரசவிக்கும், வளர்க்கும், விரட்டி விடும் அல்லது இறுகப் பற்றிக்கொள்ளும். அதில் சில கவிதைகளும் ஆகியிருக்கலாம், சில கவிதைகளாகவே பிறந்திருக்கலாம்...

காணாமல் போன எண்ணங்கள் எல்லாமும் காகிதங்களில் தகனமாயிருந்தால் ஒரு காடு கூட மிஞ்சியிருக்காது. தகனம்? எழுத்தே அக்னிப்ரவேசம் தானே..தன்னைத் தன் கண்ணுக்கே முதலில் நிரூபித்துக்கொள்ள.

என்ன எழுத வந்தேன் எனும் ப்ரக்ஞையில்லாமல் எழுதிக்கொண்டிருப்பது மனவோடையாகாது, அது பிறழ்பதிவாகவும் கூடும். ஆனாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன். எனக்காகவே என்று சொல்லிக்கொண்டே பிறருக்காக- ஏமாறவோ ஏமாற்றவோ அல்லாமலேயே இருத்தலை நினைவூட்டும் ஒரு முயற்சியாக.

இது சுயதம்பட்டமாகவும் ஒலிக்கலாம். தம்பட்டமோ ட்ரம்பெட்(trumpet)டோ இருந்தால்தான் ஒலிக்கும். இல்லாத கருவி கற்பனையில் இசைத்தாலும் கைதட்டல் வாங்காது. கைதட்டலை எதிர்பார்த்தே வாழ்க்கை.  
அம்மா கண்ணாலேயே கைதட்டவே குழந்தையின் குறும்பு, கடவுள் கைதட்டவே முனிவரின் தவம். இடையே கைதட்டல்களுக்கெல்லாம் நாகரிக அடையாளங்களை ஒட்டுவது சமூக அவசியம், சுயசௌகரியம்.

இதையெல்லாம் இப்போது ஏன் எழுதுகிறேன்? நினைப்பதால்! ஏன் நினைக்கிறேன்? நேரம் இருப்பதால்! நேரம் நிறைய ஒரு நாளில் மீதமிருந்தால் வருவது சோம்பல் மட்டுமல்ல, திமிர் கூடத்தான். 
நான் திமிருடன் இருக்கலாமா? யாருக்கு வேண்டுமானாலும் திமிர் இருக்கலாம்! காட்டிக்கொண்டால்தான் அது தவறாகத்தெரியும் திமிர், காட்டாமல் உள்பதுக்கி வெளிநடித்தால் அது நயமான கர்வம்! வித்யாகர்வம் கூட தன்வீட்டுக்குள்ளேயே சாதகம் செய்வதில் வராது, ஒரு சபையில்- அரங்கில்- கைதட்டலில்தான் வரும். எனக்கென்ன கர்வம்? எனக்கென்ன திமிர்?

பணபலமோ பின்புலமோ இல்லாமல் சாதித்தேன் என்பது நான் கொண்டுள்ள திமிர். இதை வெளிச்சொன்னால்தான் திமிர்! என்ன சாதித்தேன் என்று சிந்தித்து ஆய்ந்து அளந்து வரும் விடையைக் கூட வெளிச்சொன்னால்தான் திமிர். வெளியிடாத கர்வம் ஒரு சமூக ஒப்பனைதான். 
கர்வமோ திமிரோ வருமளவு என்ன சாதித்தாய் என்று என்னையே நான் கேட்க முயன்றபோது கிடைத்தாற்போல் தோன்றியது இதுதான்..- பயிற்சி இல்லாமல் படம் வரைந்து பணம் சம்பாதித்தேன், பெருமுயற்சி இல்லாமல் எழுதி புத்தகங்கள் விற்கவைத்தேன், 
கேவலம் என்று என் சமூகம் கருதியதை அறிவியல் கொண்டு அணுகினால் வேறு என்று விளக்கினேன், மனநோய் என்பதை மனநலம் என ஆக்கிவைத்தேன், 
விலை போகாதிருந்திருக்கிறேன், யாரையும் விலைக்கு வாங்கவும் நினைக்காமல் இருக்கிறேன்.. இதற்கெல்லாம் எனக்கு ஒரு கர்வம் வரலாம் என்றே என் மனம் அனுமதிக்கிறது. என் மனமே ஒன்றை அனுமதித்தபின் உங்கள் ஒப்புதலுக்காகக் காத்திருப்பது ஒரு சமூக நாடகம்தான்!

என்னவெல்லாம் செய்தேன் எனும் இறுமாப்பு மிகுந்த பட்டியலோடு, என்ன செய்ய முடியவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று வலிய எதிலெல்லாம் தோற்றேன் என்றும் ஒரு கணக்கு மனத்துள் போட்டால், முதலிலும் முக்கியமாகவும் வருவது- காசு சம்பாதித்துச் சேர்த்து வைக்காமல் திரிந்திருக்கிறேன், அன்பு நட்பு என்றெல்லாம் எதிர்பார்த்து அடிபடும்வரை ஏமாந்து கிடந்திருக்கிறேன்,  


நன்றி பரஸ்பரம் என்றும், பாசம் நிரந்தரம் என்றும் என்னையே ஏமாற்றிக்கொண்டு வந்திருக்கிறேன்...

ஆனால் இவையெல்லாம் தெரிந்தும் வெட்கப்படாமல் இருக்கிறேன். வெட்கமோ வருத்தமோ இல்லாமல் ஒரு மாறுதலும் செயல்பாட்டில் வராது என்று தெரிந்தும் அவ்விரு உணர்ச்சிகளையும் தவிர்த்து வருகிறேன்.


வென்றேன் ஆயினும் வாகை சூடவில்லை. வாழ்கிறேன் ஆயினும் நிறைநிலை அடையவில்லை. இதன் அடிப்படையாய் அடிநாதமாய் ஓடும் எண்ணம்-காசு சம்பாதிக்கத் துப்பில்லை என்று என்னையே துப்பிக்கொள்ளாமல் நிறைய வார்த்தைகளை விரயம் செய்கிறேன்.

காசு சம்பாதிக்க முடியாததால் கைதட்டல் சம்பாதித்தேன்!
இதைப் பற்றி யோசிக்கும் பொழுதில் தோன்றியது-
குட்டி அறை
தொட்டி மீனுக்கு இடமில்லை
குளத்துக்குப் பொரி.




Sunday, December 19, 2010

சுளுக்கெடுத்தல் சுகம்!


நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை என்  கழுத்தைச் சுளுக்க,
திரும்பிப்பார்க்கிறேன், இன்னும் நேராகவும் திமிராகவும் மீதி பாதை பயணிக்க.
என் முன் வருபவர்க்கும் நிற்பவர்க்கும் என் விழியின் மேல்நோக்கிய கூர்மை வியப்பையும் ரசிப்பையும் உருவாக்கக்கூடும் என்றாலும், அது பின்னாலிருக்கும் வாசனையிலிருந்து வேகமாய் வெளியேறி வான்புகும் ஆசைதான்.
Small Memories by Jose Saramago படித்ததால் வந்த பதிவு இது!

கோடம்பாகம் நெடுஞ்சாலை..இப்போது அதுதான் எம்.ஜி.ஆர் சாலை என்று நினக்கிறேன். நாற்பத்தைந்து காலம் அதே சாலையில் அடையாளம் காணப்பட்டவன் நான். பிறந்தது முதல், வேறு விலாசம் மாறும் வரை. 

நான் பிறந்ததென்னவோ எழும்பூரில் என்றாலும் வாழ்ந்த்தும் வளர்ந்ததும் இதே கோடம்பாகம் நெடுஞ்சாலையில்தான்! எழும்பூர் ஒன்றும் மூதாதையர் வாழிடம் இல்லை- அங்கேதான் அரசு மகப்பேறு மருத்துவமனை- என் மயக்கநிலையில் நான் சொல்லத்துணியும் என் அவதாரஸ்தலம். 
தொட்டிலிடப்பட்ட்தும், கொஞ்சி வளர்க்கப்பட்டதும், கல்விச்சாலை சென்றதும், படித்ததும், திரிந்ததும், திமிருடன் இருந்ததும், உழைத்ததும்.. உயர்ந்ததும் இதே சாலையில்தான்.

அதே கோடம்பாகம் நெடுஞ்சாலையில் வெவ்வேறு இலக்கங்கள் என் விலாசமாயின. 1/10, 2/6, 163...பிறகு 43, கடைசியில் 73!

இன்று நின்று யோசித்தால் அந்த நெடுஞ்சாலை அன்று மிகமிக வேறாய் இருந்தது தெரிகிறது. இன்றைய வார்த்தைகள் அன்றைய ஞாபகங்களை மீட்க முயலும் போது..சில மிகையாகும், சில பிறழ்வாகும், சில பிழையாகவும் மாறும். வயதுகள் மட்டுமல்ல, வார்த்தைகள் வளர்ந்ததும் அந்த இடத்தில்தான்.

முதல் ஐந்து வருடங்கள் ரொம்பவும் மங்கலாகவே இருக்கின்றன. என் அப்பாவின் நண்பரின் மோட்டார்பைக்கில் வரும் பெட்ரோல் நெடி, வீட்டைக் கடந்து செக்யுலராகப் போகும் குட்டித்தேர் மாதா ஊர்வலம், ஹஸெந்ஹுஸென் என்று ஏதோ சொல்லிக்கொண்டு கை போல ஒரு விஷயத்தை ஊர்வலம் கொண்டு போகும் (எனக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட) அல்லாசாமியின் ஊர்வலம், அப்புறம் அந்த இடத்தில் இருந்த தெருவீதி (திருவீதியாகவும் இருக்கலாம்) அம்மன் விழாவின் கரகம், அலங்கார ஊர்வலம், அப்புறம் தாத்தா எனும் மறையும் பழுப்பாய் ஓர் உருவம், மூன்று சாவுகள், ஒருமுறை எதற்கென்று தெரியாமல் எங்கள் வீட்டில் நடந்த குருபூஜை 
(இந்த குரு பற்றி யாரும் எதுவும் அதன் பிறகு என்னிடம் சொன்னதில்லை, பதினெட்டு வயதில் பழைய காகிதங்களை மேயும்போதுதான் தெரியும் அவர் பெயர் சாங்குசித்தசிவலிங்க நாயனார்இவரைப்பற்றி, கல்கி/ஜக்கி/ரவிஷங்கர் மாதிரி இல்லையென்றால் அன்புடன் எனக்குத் தகவல் சொல்லுங்கள்), வீட்டின் பின்னிருந்த கொய்யா, வேப்பமரங்கள், ஞாயிற்றுக்கிழமைகளுக்கே உரித்தான ஒரு அசைவ-நறுமணம்....
இன்னும் நிறைய, சின்னச்சின்ன ஞாபக மினுமினுப்புகள்...

இதையெல்லாம் இப்போது மீள்பரீசீலித்தாலும் பதிவிட முயன்றாலும் முன்னம் அப்படியே வந்து விடாது. இது ப்ளுமேட்/ பேக்ப்ரொஜெக்‌ஷன் சமாச்சாராம் இல்லை...... திரும்பவும் ரசிக்கவோ, ஐயையோ விட்டுட்டோமா என்று பதைத்தும், உண்மையில் என்னதான் நடந்த்து எனும் ஆர்வமோ முயலும் rewind தான்.

நான் போகிறேன் மேலே மேலே, பூலோகமே காலின்கீழே எனும் கனவில் மூழ்காதவரை இப்படியான பழங்கதை பேசுதல் உத்வேகமும் தரலாம்.

Friday, October 22, 2010

காஃப்காவின் பிம்பம்.



காலையில் எழுந்திருக்கும் போது ஒரு மனிதன் பூச்சியாக மாறிவிடுகிறான். இன்னொரு கதையில் நாயகன் எழுந்தவுடன் அவனை கைது செய்வதாக மூவர் சொல்கிறார்கள், ஆனால் வழக்கும் கைதும் இயல்பு வாழ்க்கையில் அவனைத் தொடரவைக்கிறது. இந்த இரண்டுமே காஃப்கா எழுதியவை. படித்தவுடன் பிரமித்து, ஒரு வெறியில் இரண்டையுமே நாடகமாகத் தமிழில் எழுதி அரங்கேற்றியிருக்கிறேன். அது 1989,1993. இந்த ஆண்டு அது நினைவுக்கு வரவும் இப்போது எழுதவும் காரணம் சமீபத்தில் நான் வாசித்த நூல்.


“Why you should read kafka before you waste your life” எனும் இந்நூலை எழுதியவர் James Hawes. 2008ல் வெளிவந்த நூலை 2010எல் தான் படிக்க நேர்ந்தது. மலிவு விலையிலும் தள்ளுபடியிலும் நடந்த ஒரு விற்பனையில் இதைப் பார்த்ததும் வாங்கினேன். இதைப் பற்றி அப்போது தெரியாது. விலை மலிவாகவும் இருக்கிறது, காஃப்காவைப் பற்றியும் இருக்கிறதே என்று தான் வாங்கினேன்.

விபரீதமான வித்தியாசத்தை Kafkaesque என்று சொல்வதுண்டு. இப்படி ஓர் எழுத்தாளனின் பெயரில் ஒரு விஷயம் வர்ணிக்கப்படுவது அபூர்வம். இத்தகைய வெற்றிதான் காஃப்காவினுடையது. அவனைப் பற்றிப் பல கதைகளை அங்குமிங்கும் படித்திருக்கிறேன். அவனது எல்லா எழுத்துகளையும் படித்திருக்கிறேன். அவனைப் பற்றி என் மனத்துள் ஒரு பிம்பமும் உருவாக்கி வைத்திருந்திருக்கிறேன்.

 Orson Welles எடுத்த The Trial படத்தில் Anthony Perkins பார்த்தவுடன் இது காஃப்காவேதான் என்றும் மயங்கியிருக்கிறேன். அந்த அளவுக்கு என்னுள் காஃப்கா பற்றிய ஒரு பிம்பம் இருந்திருக்கிறது. அவனை கூகுளில் தேடினால் கிடைக்கும் படமும் அந்த பிம்பத்திற்கு நன்றாகப் பொருந்தி வருகிறது.
காஃப்காவை நாடகமாக்கியபின் வேறெவரது எழுத்துக்கும் நான் காட்சியமைப்பும் வசனமும் எழுதியதில்லை என்று இப்போதுதான் உரைக்கிறது. நான் கடைசியாக எழுதிய ஆங்கில நாடகமும் காஃப்காவின் ப்ரொமேதியஸ் படித்துத் தான்! இது என் எழுத்து பற்றியல்ல, என்னை அவ்வளவு தூரம் பாதித்த ஓர் இலக்கிய ஆளுமை குறித்துதான்.

அவனது எழுத்துக்களில் ஒரு தீவிரம் இருக்கும், ஒரு தீர்க்கமான பார்வை இருக்கும்,விபரீதங்கள் இயல்பு போல் சித்தரிக்கப்படும். அவனைப் படித்ததெல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்புகளில்தான் என்பதால் அவனது மொழியாளுமை குறித்து நான் பேச முடியாது.இப்போது எழுத நினைப்பது அவனது பிம்பத்தைப் பற்றித்தான்.

எல்லாவற்றுக்கும் பிம்பங்கள் இருக்கின்றன. வார்த்தைகளைச் சுருக்கி, உணர்ச்சிகளைச் சுருக்கி, செய்திகளைச் சுருக்கி மனத்துள் பதித்துக்கொள்ள பிம்பங்கள் தேவைப்படுகின்றன. பிம்பங்கள் உருவாக்கப்பட்டவை- பல நேரங்களில் சமூகத்தின் அவசியத்தால், சில நேரங்களில் நம்முடைய அவசரத்தால்.

முண்டாசும் மீசையுமாய் பாரதியின் பிம்பம் அவன் பயத்தை மறைத்து வீரத்தை மட்டுமே காட்டுவது போல, பிம்பங்கள் தட்டையானவை. அவற்றின் பின்னே இருக்கும் பரிமாணம் தெரிய வருவதில்லை, தெரியப்பட விடுவதில்லை. ஜெயகாந்தனை ஒரு முசுடு முரடு என்று நான் உருவாக்கிக்கொண்ட பிம்பத்தால் தான் அவரை பல ஆண்டுகள் தவிர்த்திருக்கிறேன். நெருங்கிக் கூர்ந்து பார்த்தால் பிம்பங்கள் நிஜம் போல் இருப்பதில்லை. ஜெயகாந்தனைப் போல் அன்புடனும் வாஞ்சையுடனும் லாசரா கூட என்னிடம் பழகியதில்லை. இத்தனைக்கும் எனக்கும் அவருக்கும் ஒரு பிரத்யேகப் பிணைப்பு இருந்தது.


காஃப்காவின் பிம்பமாக என் மனத்துள்ளும் பலரது மனங்களிலும் இருந்த பிம்பம்- ஒரு மகிழ்ச்சியில்லாத இளைஞனின் பிம்பம்தான். மகிழ்ச்சி இல்லாமை மட்டுமல்ல அவனது படத்தில் அழக்கூடாத ஒரு வெறுமையின் வருத்தம் தெரியும். ஏதோ ஒரு மான்ஷனில் இருந்த பிர்மீள் போல வசதியில்லாத வாழ்முறையுடையவன் போலத் தோன்றும். அவனது ஒல்லிய தோற்றமும் அதற்கு கூடுதல் ஒப்பனை கலந்தது. 




தன் சாவுக்குப் பின் தன் எல்லா எழுத்துகளையும் அழித்துவிட வேண்டும் என்று தன் நண்பனிடம் சொல்லிய கதையும் (அது கதை தான் இல்லாவிட்டால் அந்த அற்புதமான இலக்கியம் நமக்குக் கிடைத்திருக்காது என்று இந்தப் புத்தகம் சொல்கிறது), அவன் தனிமையில் இருந்தது பற்றிய கதையும், காதலில் நிம்மதியும் வெற்றியும் பெற முடியாமல் எழுதிய கடிதங்களும், இன்னும் எவ்வளவோ செய்திருப்பானே என்று ஏங்க வைக்கும் அவனது நாட்குறிப்புகளும்...அவனை ஒரு சோகமான அறிவுஜீவியாகவே என்னுள் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

அவன் அப்படியல்ல, வசதியாகத்தான் இருந்தான், காதலிக்காமல் ஒரு பெண்ணை ஏமாற்றிக்கொண்டிருந்தான், எழுதிய கதைக்கு வாழ்நாளிலேயே பரிசு வாங்கினான்... அப்புறம் அவனது அரசியல் சந்தர்ப்பவாதம், பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் இருந்த ஒட்டுண்ணி உறவு இவை பற்றியெல்லாம் இந்தப் புத்தகம் விவரிக்கிறது. சே, காஃப்கா ஒரு ஃப்ராட் என்று நினைக்குமளவு சரளமாகவும் விரிவாகவும் எழுதப்பட்ட நூல் இது.

அவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தால் என்ன, அவனது எழுத்துதானே முக்கியம் என்பது அறிவு வைக்கும் வாதம். மனம் அந்த எழுத்துகளைப் படித்து உருவாக்கிக் கொண்ட பிம்பம் தகரும் போது வலிக்கும்- வெட்கமாக, கோபமாக, வேதனையாக.

அதனால் அவனை மீண்டும் படித்தேன். இந்தப் புத்தகத்தினால் அவன் இன்னும் உயர்ந்தவனாகினான்.தான் அனுபவிக்காத துயரை எழுதுவது இலக்கியத்தில் ஓர் அற்புத சாதனை. பிறகு ஏன் இந்தப் புத்தகம் பாதித்தது? நான் ஏமாறியதை எனக்கு உணர்த்தியதால்.
பிம்பங்கள் தேவைப்படுகின்றன. சிலவற்றைச் சொல்வதற்கு, சிலவற்றை ஏமாற்றி விற்பதற்கு.

Wednesday, March 17, 2010

ஸரஸ்வதீ மீண்டும் நமஸ்துப்யம்.


எனக்கு முதன்முதலாய் சொல்லிக்கொடுக்கப்பட்ட ஸ்லோகம், ஸரஸ்வதி நம்ஸ்துப்யம் என்று ஆரம்பிக்கும். ஸித்திர்பவது மேஸதா, என்று எந்த வேளையில் அன்றைய மழலைக் குரல் வேண்டியதோ, இன்றும் அருகிருக்கிறாள்.

அறியாத வயதில் அறிவு தா என்று வேண்ட வைத்த தெய்வமாகவும், பின் அறிவால் தேட முற்பட்ட தத்துவமாகவும், இன்று அறிவே தெய்வம் எனும் உணர்தலாகவும். ஒரு கட்டத்தில் அவளை அம்மா என்றே பார்த்தேன், பின்னர் அவளே என் காதலி, இன்று அவள் என் சகல பயணத்திற்கும் ஒரு சகி.
தெரியாத விஷயங்களை நான் பேசுவதில்லை, கேட்டுக் கொள்வேன். ஸரஸ்வதி பற்றிப் பேசுகிறேன். நெருக்கமாய்த் தெரியும் என்பதாலும், முழுமையாய் உணர்ந்ததாலும்.
காதலையும் காமமாக மட்டுமே உணர்பவர்களுக்கு நிர்வாணம் ஆபாசம்தான், என்று எனக்குப் புரிய வைத்ததும் சரஸ்வதிதான். என் ஸரஸ்வதி நிர்வாணமாகவும் இருப்பாள், அன்றைய கேரளா நாகரீக அடையாளமாக ஒரு புடவையும் உடுத்தி இருப்பாள், பெரியாரின் புத்தகமாகவும் தெரிவாள். எல்லாவற்றிலும் தெரியும் அவளை எவனோ வரைந்த படத்தின் அச்சிட்டப் பிரதியில் சட்டம் போட்டுக் கண்ணாடியில் நான் அடைக்க முடியாது. மூச்சு முட்டுபவர்களுக்குத்தான் ஆக்ஸிஜன் தனியாகக் கொடுக்க வேண்டும், இயல்பாய் உயிருடன் இருப்பவர்களுக்கு அல்ல.
பேச்சியம்மன் என்று அழைக்கப்படும் கிராம தேவதையும் அவள்தான், வாக் என்று ரிக்வேதம் கூறுவதும் அவளைத் தான். வேதங்களைப் படிக்காமலேயே அதன் மரபைத் தங்களுடையதாகச் சொல்லிக்கொள்பவர்களை விட, பேச்சியம்மனைக் கும்பிடும் பாமரர்களுக்கு பக்தி அதிகம். பேச்சி மட்டுமல்ல, முனியையும் மாரியையும் கும்பிடும் அவர்கள், தங்கள் சாமியை எவனாவது அவமானப்படுத்தினான் என்று நினைக்க மாட்டார்கள்.  அவர்கள் கும்பிடும் சாமி எந்த மனிதனாலும் அவமானப் படுத்தப்பட முடியாத அளவுக்கு வீர்யமானது. நம்மையே பார்த்துக் கொள்ளும் சாமி தன்னை இன்னும் சரியாகப் பார்த்துக் கொள்ளும் எனும் அவர்களது நம்பிக்கை, ஒரு முழுமையான சரணடைந்த பக்தி.
பக்தி காதல் மட்டுமல்ல முழுமையான ஓர் அர்ப்பணிப்பு. கணினி தட்டும், அதில் மேலோட்டமாய்ப் படிக்கும் மனிதர்களை விடவும் அவர்களது பக்தி இன்னும் நெருக்கமானது. அவர்களையும் கவரத்தான் கடவுள் இல்லை என்ற கோஷம், ஒருவனே தேவன் என்று மாறியது. இதெல்லாம் சரித்திரம், வலைப்பதிவு எழுத எதற்கு மெனக்கேட்டு இதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று என்னால் மேம்போக்காக மேட்டிமைத்தனத்தோடு இருக்க முடியாததால் இதை எழுதுகிறேன். யாராவது இனியாவது தெரிந்து கொள்ளட்டுமே என்று. 
நம்பிக்கையோடு அல்ல, நப்பாசையோடு.
மீண்டும் சரஸ்வதிக்கு வருகிறேன், இப்படி ஒன்றை எழுத ஆரம்பித்து வேறெங்கோ போவதும் அவளால்தான் என்று ஹிண்டு மதம் சொல்கிறது! அதனால்தான் அவள் சித்சக்தி!

ஸரஸ்வதி எப்படி இருந்தாலும் எனக்குப் பிடிக்கும். அவளது உருவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது, கங்கைகொண்ட சோழபுரத்தில் இருக்கும் ஞானசரஸ்வதி சிற்பம். . இவளைத்தான் பிரம்மவித்யாம்பிகை என்று திருவெண்காட்டில் காட்டுகிறார்கள். கூத்தனூர் கோவிலில் அவள் முகம் கொஞ்சம் மொக்கையாக இருக்கும்.

இதைவிட அழகு ஹோய்ஸாலா நர்த்தன ஸரஸ்வதி. நீல தாரா என்பதும், க்வாஞின் என்பது அவளது உருவம்தானாம். இவையெல்லாமுமே கதை கேட்டு கலைஞர்கள் வடித்த உருவங்கள். சோழ சாம்ராஜ்யத்தில் யவனர்கள் தெருவில் திரிந்தார்கள் என்றால், அன்றைய மங்கையர் திறந்த மார்போடு இருந்திருக்க முடியாது (இன்றைய கலாச்சாரக் காவலர்களும் இதையாவது ஒப்புக்கொள்ள வேண்டும்). அதனால் கடவுளை நீங்கள் தினம் பார்க்கும் மங்கையரைப்போல் உடுத்திக் காட்ட முடியாது என்று தான் சோழ காலச் சிற்பிகள், தெய்வங்களைத் திறந்த மார்போடு படைத்தார்கள். (கச்சை கட்டியதெல்லாம் பின்னர் கும்பகோணத்து நவீன சிற்பிகள் கைங்கரியம்).
இதனால்தான் என் முந்தைய ஒரு பதிவில் சரஸ்வதிக்கு ஸிலீவ்லெஸ் போட்டு வரையலாமா என்பது தவறாகிறது. (எழுதாமல் இருக்க முடியவில்லை: ஏன் இன்னும் 'கலாச்சாரம்' சரஸ்வதியை புடவையிலிருந்து ஸிலீவ்லெஸ் டாப்ஸ் வர விடாமல் தடுக்கிறது? இன்னும் எல்லாரும் அப்படி மாறவில்லை என்பதால். எல்லாரும் டாப்லெஸ் ஆகும்போது அவள் ஸிலீவ்லெஸ் ஆகலாம் போலிருக்கிறது. (நாம்தான் கலாச்சாரம் என்பதை நெறி என்பதை விட பழமை என்று நினைத்துக் கொள்பவர்களாயிற்றே!)
பிரம்மாவும் ஸரஸ்வதியும்

மேலே உள்ள படத்தை நான் பார்க்கும்போது அது அறிவும் படைப்பும் இணையும் அற்புத நிலையாகத் தோன்றுகிறது. ஒன்றில்லாமல் ஒன்று இருந்தால் இந்தச் சிற்பம் இருக்கும் கால அளவு கூட நிலைக்காது,  படைப்புக்கு அறிவு தேவையில்லை, இருந்தால் இன்னும் பிரகாசமாகும்.
ரஞ்சி-நித்தி போல் தெரிந்தால் அபச்சாரம். ஜாக்ரதை!
ஸரஸ்வதி, என்னை ஏன் வீணர்களுக்கு விளங்க வைக்க முயல்கிறாய்?அறிவின் அற்புதம் பற்றி எழுதத் தவறிவிட்டேன்.

மஹாலக்ஷ்மி செல்வம் தருவாளாம். அவளை யாரும் உதாசீனப் படுத்த முடியாதாம். அவள் எவ்வளவு முக்கியமானாலும், வைணவ ஸம்ப்ரதாயத்தில், அவளுக்கு இரண்டாம் இடம்தான். எனக்குத்தெரிந்து பத்மாவதி தாயாரைத் தவிர அவளுக்கென்று பிரத்யேகக் கோவில் கிடையாது. சென்னை பெசன்ட் நகர் கோவிலைப் பற்றிக் கூவ வேண்டாம் அது இந்தக்காலம், நீங்கள் ஒத்துக்கொள்ளாத காலம்.
 

பராசக்தி பலம் பொருந்தியவளாதலால், அவளுக்கு அவளது நாயகனுடன் சரிபங்கு. வீரமாதா மட்டுமல்ல காருண்யா. என்பதனால் அவளுக்கு அவ்வப்போது தனிக் கோவில். நாயகனோடு இருக்கும் சில கோவில்களிலும் அவளுக்கு முக்கியத்துவம் (மதுரை போல). அவளுக்கென்றே பிரத்யேக வழிபாட்டு முறையும் ஸ்தலங்களும் உண்டு( காஞ்சி போல).
 
 
இந்த மூன்று நாயகர்களில் குறைந்த மதிப்பீடு வாங்குபவன், சரஸ்வதியின் நாயகன் பிரம்மன்! அவனுக்குத் தனியாக ஒரே ஒரு கோவில் தான் இந்த ஹிந்து சாம்ராஜ்யத்தில்! ஆனால் அவனை வணங்காதவர்களும் அவளை வணங்குவார்கள். இன்று குழந்தையை வைத்திருப்பவர்களும்,  என் அனுபவத்தில் கண்ட அறிவாளிகளைப் போல், நாளை அவளை வேண்டி நிற்பார்கள்.

இதிலிருந்து எனக்குப் புரிவது, செல்வம் ஒரு நாயகனை செல்வாக்கால் வாங்கலாம், வீரம் ஒரு நாயகனை மிரட்டியாவது சம உரிமை வாங்கலாம், ஆனால் கல்விதான் நாயகியாகத் தனித்தன்மையோடு விளங்க உதவும். கல்வி, ஆழ்ந்து அறிவது, அலட்டல் இல்லாதது, தவறுகளை ஒப்புக் கொள்வது.
மீண்டும் ஸரஸ்வதீ, நமஸ்துப்யம். உன்னிடம் வரம் தா  என்று இன்னுமா கேட்பது? இதைப் படிக்கும் ஹிண்டூஸிடம் கருணை கொண்டு புரிய வை.