Showing posts with label இருத்தல். Show all posts
Showing posts with label இருத்தல். Show all posts

Friday, December 11, 2009

ஆன்மிக வெங்காயத்தை உரிக்கலாமா?


இன்று ஒரு பதிவைப்படிக்க நேரிட்டது, அதில், சாமியார்களும் சைக்யாட்ரிஸ்ட்களும் ஒன்றுதான், இரண்டில் எங்குபோனாலும் பரவாயில்லை, வாழ்வுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று எழுதியிருந்தது.இரண்டு நாட்களுக்கு முன்தான் யாரையும் திட்டாமல், கோபப்படாமல் பதிவு எழுத வேண்டும் என்று தீர்மானித்தேன், அதற்குள் இது கண்ணில் பட்டுவிட்டது!
பதிவுலகம் தனியொரு பிரசுரப்பெட்டகம். யார் வேண்டுமானாலும் அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆசிரியர்க்குக் கடிதம் என்ற பாவனையில் ஆஹா பேஷ் பேஷ் என்று எழுதினால்கூடப் பிரசுரம் ஆகாத எழுத்துத்திறன் கொண்டவர்கள் கூட கருத்துக்களை அள்ளித்தெறிக்கலாம்.
மக்கள்முன் தன் கருத்துக்களைச்சொல்ல தைரியம் இல்லாதவர்கள் கூட அநாமதேயங்களாக வந்து கருத்து சொல்லலாம்..கருத்துச்சுதந்திரம் நிச்சயம் வரவேற்று வள‌ர்க்கப்படவேண்டியது தான், ஆனால், கருத்துக்கள் சரியோ தவறோ சில மன‌ங்களைச் சென்றடையும். படிக்கும் நேரத்தில், வாழ்வின் நிர்ப்பந்தத்தில் தவிக்கும் மனங்கள் தவறா சரியா என்று பார்க்காமல், திசைதவறிப் போகும். இதற்காகத்தான், குறையுள்ள கருத்தோ முரணான கருத்தோ பதிவு செய்யப்பட்டால் அதற்கு மாற்றாக நம் கருத்துக்களையும் பதிவு செய்வது அவசியமாகிறது.

சாமியார்கள் எனப்படுபவர்கள் சிலநேரங்களில் சரியான விஷயங்களைச் சொல்வது போல் தோன்றும். அடிப்படையில் அனைவருக்கும் உள்ள சுயபுத்தி என்பது சொல்லாத விஷயத்தை அவர்கள் கூறிவிடுவதில்லை, ஆனால் அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்களைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் அற்புதவிளம்பர வர்ணஜோடனை, அவர்கள் சொல்வதாய் காசு வாங்கிக்கொண்டு விவரிக்கும் நிழலெழுத்தாளர்கள் மனநல நிபுணர்களுக்குக் கிடையாது. ஆனால் மனநல மருத்துவர்களிடம் அடிப்படையாக அறிவியல் இயங்குகிறது.
பூஜ்யத்திலிருந்து பூஜ்யம் போனால் மீதி ஒரு பூஜ்யம் இருக்கும் என்பதை நிரூபிக்க எதை நம்புவீர்கள்? உபநிஷத்தையா algebraவையா? சாமியார்களைப்பற்றி விட்டுவிடுவோம் எங்கள் அறிவுக்கொம்புகள் நன்கு முளைத்துக் கூராக இருக்கின்றன என்று சிலர் சொல்லிக்கொள்ளலாம், அவர்கள் சாமியார் என்பதை வெட்டி அங்கே குரு என்பதை cut and replace மாற்றிவைத்துப் பேசுவார்கள். அறிவுஜீவித்வ நிறத்திலொரு கண்ணாடி அணிந்து பார்த்தால் இதுவும் சரியென்றே தோன்றும். 'சாமி கும்பிடு" என்று நேரடியாகச் சொல்லாத சாமியார்கள் பலர்' தாங்களே சாமி'  என்று ஆகிவிடுவதை உற்று அல்ல, மேலோட்டமாகப் பார்த்தால் கூடத் தெரியும்.
"இவர்களை சந்தித்த பின்பு தற்கொலை எண்ணங்களிலிருந்து மீண்டவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். தனது கர்வம், பேராசை மற்றும் தீய பழக்கங்களால் தனது வாழ்க்கையை தானே அழித்துக்கொண்டவர்கள் எல்லாம் இது போன்ற குருக்களிடம் சென்று மீண்டு வந்திருக்கிறார்கள்." என்று அந்தப்பதிவில் எழுதப்பட்டுள்ளது!
அப்படியா? எத்தனைபேர்? என்ன சதவிகிதம்? மேலும் இந்தக்கதைகளைச் சொன்னது யார்? பாதிக்கப்பட்டவரா அல்லது பாதிப்பின் மூலம் ஏதோ ஒரு லாபத்தைப் பார்த்தவரா? இந்தக் கதைகள் எந்த அறிவியல் தொகுப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளன? ஒரு திறமையான விளம்பர நிறுவனம் என் கைவசம் இருந்தால் நான் கூட ஒபமாவைத் தற்கொலை செய்துகொள்வதிலிருந்து மீட்டு அமெரிக்க அதிபர் ஆக்கினேன் என்று மக்களிடையே கதை பரப்பமுடியும். இப்படிச் சொன்னால் என் மீது வழக்கு வரும் நான் சிறைக்குப்போவேன், ஆனால் இப்படி சாமியார்கள் கூறிகொண்டு திரிவதை யாரும் கேள்வி கேட்பதில்லை!
எனவே எதையும் அறிவியல்ரீதியாக சிந்திப்பவன் என்று கூறிக்கொண்டு மட்டையடியாக, ஆன்மிக குருக்களிடம் செல்பவர்களை கிண்டலடிக்க வேண்டியதில்லை. மூட நம்பிக்கைகளை வலியுறுத்தாமல், நெருக்கடி மிக்க மனித மனத்திற்கு ஒரு அமைதியை தந்தால், தனி மனித வாழ்க்கையில் ஆக்கபூர்வமான மாற்றங்களை கொண்டுவந்தால், அது ஒரு ஞானத் தேடல் என்ற அளவோடு நின்றுவிட்டால், இன்றைய உலகத்தில் ஆன்மிக குருக்களுக்கும் ஒரு பெரும் தேவை இருக்கத்தான் செய்கிறது.  இதுவும் அந்தக்கட்டுரையிலிருந்துதான்!
இந்த ஆன்மிகத்தேடல் ஒரு சிக்கலான வியாபாரம். வாங்க முடிவு செய்துவிட்டால் வாங்கிவிடவேண்டும், கேள்விகள் இங்கு தடை செய்யப்பட்டுள்ளன. பேரங்களும் சாத்தியமில்லை! வாங்கியதைப் பரிசோத்தித்துப் பார்த்துவிட்டுத் திரும்பத்தரவும் அனுமதியில்லை! இந்தப் பொருளை நான் வாங்கினேன் அது வேலை செய்யவில்லை என்று பிறரிடம் கூறுவதும் சாத்தியமில்லை. ஒரு மருத்துவரிடம் சென்று சரியாகவில்லை என்றால் இன்னொரு மருத்துவரை நாடலாம், அல்லது தெரிந்தவர்களிடம் 'அவனிடம்போகாதே' என்று அறிவுறுத்தலாம். சாமியார்/குரு விஷயத்தில் வாங்கிக்கொண்ட சமாச்சாரம் வேலை செய்யவில்லை என்றால், உனக்கு அதைப் பயன் படுத்தும் தகுதி இல்லை என்றே மீதி முட்டாள்கள் அனுமானிப்பார்கள்.
ஒரு மனநல மருத்துவன் உருவாக பள்ளியிறுதி தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்று முதலில் MBBS பெறவேண்டும், பிறகு நான்கரை ஆண்டுகள் படித்துப் பட்டம் பேற்று முதுகலை படிப்பில் நுழைய வேண்டும். அதன்பிறகு ஒழுங்காகப் படித்தால் தான் அதிலும் தேர்வாகி ஒரு மனநல மருத்துவனாக வெளியில் சொல்லிக்கொள்ளவே முடியும். இதைவிடச் சுலபமாகவும் விரைவாகவும் ஒரு குருவாகக் காட்டிக்கொள்ள முடியும். காட்டிக்கொள்ள என்று குறிப்பிடக்காரணம் உண்மையான நேர்மையான‌ குரு தன்னைக் காட்டிக்கொள்வதில்லை.

சாமியார்கள், ஆன்மிக குருமார்கள் ஆகியோர் சாதாரணமாகப்பேசும் போது பெரிய தவறுகள் வெளிப்படையாகத் தோன்றுவதில்லை, ஆனால் அவர்களே மனவியல் பற்றிப்பேசும் போது நிறைய‌ உளறுவார்கள். ஓஷோ ஜேகே போன்ற மேதைகளானாலும்! சுருக்கமாக சொல்வதென்றால் மனநல நிபுணர்கள் செய்வது ஒரு அறிவியல் சார்ந்த தொழில், சாமி/ குரு செய்வது நேர்மையில்லாத வியாபாரம். ஆரம்பத்தில் இலவசமாக உரைகளை வழங்கிய குருமார்களின் இன்றைய நிதிநிலையைச் சிந்தியுங்கள்.  

ஒருமுறை 1986ல் நான் அசல் (அவர் விட்டுச்சென்ற நிறுவனத்தில் இப்போதிருப்பவை அவரது நகல்கள்)குரு என் முதுகைத்தொட்டு ஒரு மணியடித்தார். குண்டலினி எழும்பும் என்றார். முதுகின் மேல் தோல் அவர் தொட்டதால் குறுகுறுப்படைந்ததைத்தவிர வேறெதுவும் நடக்கவில்லை. 
இன்னொரு (இன்று பிரபலமாக பல நிழலெழுத்தாளர்கள் உதவியுடன் வசீகரமாக வியாபாரம் செய்யும்) 'குரு' 1996ல் அப்போது நான் தொலைகாட்சியில் சற்று பிரபலமாக இருந்ததால் இரண்டு மணிநேரம் என்னிடம் தன் ஆன்மிகச்சக்தியைக் காட்ட முயன்றார்.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால் சந்திக்காமலோ சிந்திக்காமலோ நம்மிடையே ஆன்மிடம் விற்கும் 'குரு'மார்களை நான் சாடவில்லை. நம்பிக்கை தவறில்லை, நம்புமுன்னோ நம்பும்போதோ கேள்விகளைக் கேட்காமல் இருந்தால் அது தவறாக முடியும். இங்கே நான் குறிப்பிட்டப் பதிவின் எழுத்தாளரைப்போல.

அவர் குறிப்பிட்டதைப்போல் 'அவர்களும்' தேவை என்று எப்படி எடுத்துக்கொள்வது? கரப்பான்பூச்சி கூடத்தான் சுழலில் ஒரு தேவைக்காக இருக்கிறது, அதைச் செல்லப்பிராணியாக வளர்த்துக் கொஞ்சலாமா?
சுட்டிவேறு கொடுத்து மதில்மேல் இருப்பவர்களைக் குழப்பவேண்டாமென்றுதான் தரவில்லை. இது குறித்து மேலும் இன்னும் விரிவாக நிதானமாக இன்னொரு நாள்

.

Thursday, December 10, 2009

சுயப‌ரிசீலனையின் ஆரம்பம்



வாழ்வின் மத்தியில் முடிந்தபாதியினைப் பார்த்து புளகாங்கிதம் அடைவதும், புல்லரிப்பதும், பரிதாபம் கொள்வதும், பொய் சொல்லிக்கொள்வதும், உண்மைகளை இந்த நேரத்து சௌகரியத்திற்கேற்ப புரிந்து கொள்வதும்  வாடிக்கையாகிவிட்டபின், இனி இருக்கும் மீதியைப்பற்றிய சிந்தனையே இப்பதிவு. 
ப்போதும் தனிமைதான் நிரந்தரம், நிஜம். கூட்டம், கூட்டு என்பதெல்லாம் அந்தந்த நேரத்து விருப்பத்திற்கும் வசதிக்கும் மனம் ஏற்றுக்கொண்டவை மட்டுமே. எல்லா மனிதர்களையும் போல்தான் நானும்தனி! எல்லா மனிதர்களையும்போல்தான் நானும் நான் தனி என்பதைச் சிறப்பு எனும் அர்த்தத்தில் புரிந்துகொள்ளப் பழகிவிட்டேன். உண்மை என்று நம்பிவிட்டேன், பொய் என்பதை நம்ப மறுத்துவிட்டேன்.


உறவுகளைப்பற்றி எல்லாருக்கும் எப்போதும் கவலையோ அக்கறையோ நிச்சயம் உண்டு.  
எது உறவு? நம் சூழலில் தென்படுவதா, நம் மனத்தில் நினைத்துக்கொள்வதா, நாம் ஏமாறியதா ஏமாற்றியதா, நம்மை ஈர்த்ததா நிராகரித்ததா, நாம் தேடியதா அடைந்ததா, அடைந்ததாய் நினைத்ததா, விரும்பியதா வெறுத்ததா, தற்செயலா தலையெழுத்து எனும் தப்பித்தலா, உறவு எதுவானால் என்ன, அது உண்மையா? உண்மையில் நாம் என்று நான் சொல்வது நாம்தானா இல்லை நான் மட்டுமா? நான்தான் என்றால் ஏன் நாம் என்று சொல்கிறேன்? பயமா?
எதுகுறித்து பயம்? நான் என்று திரிந்தால் நாம் என்று எதிர்கொள்ளும் சமூகம் நிராகரித்துவிடும் என்ற பயமா? நான் தனியாய் எது செய்யவும் சமூகம் தேவை என்னும் மனதோரத்தின் சத்தியச்சிணுங்கலா?
சமூகம் எவ்வள‌வு தேவை? எனக்குத் தேவையான உணவு என்னால் உற்பத்திசெய்ய முடியாதபோது அதை விலைக்கேனும் தர ஒரு சமூகம் தேவை. உடையும் அப்படித்தான். விலைதந்து வேண்டியதைப்பெற உத்தியோகம் என்பதற்கும் சமூகம் தேவைதான். ஊதியத்திற்கு அர்த்தம் கூட்டவும் சமூகம் தேவைதான். சமூகம் என்னும் வழக்கில் கணக்கெடுத்த அந்த நான்குபேர் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் தனித்திருப்பேன், என் தனித்தன்மையை நிலைநாட்டிக் கொண்டிருப்பேன் என்றெல்லாம் என் நிர்வாணக்கனவுகளிலும் பொய் சொல்லக் கற்றுக்கொடுத்தது யார்?  
அந்த நான்குபேரா?அவர்கள் உள்ளேயா வெளியேயா? அவர்கள் எவ்வளவு காலம் எனக்கு முன்னாலேயே இருந்தார்கள், எவ்வளவு தூரம் என்னால் உருவாக்கி வளர்க்கப்பட்டார்கள்? இப்போது நான் எழுதுவதும் எனக்காகவா அவர்களுக்காகவா? அவர்களையும் சேர்த்துத்தான் நான் என்றால், நான் என்பதென்ன?
அவ்வப்போது இந்தக்கேள்வி வந்தாலும் மனம் தன் சமூகநாடகத்தின் பாத்திரத்திற்கேற்ற ஒப்பனையில் இது இப்போது தேவையில்லாத வசனம் என்று ஒதுக்கிவிடும். ஒரு நாடகத்திற்கும் மறுநாடகத்திற்கும் உள்ள இடைவேளையில்தான் இந்தப்பரிசீலனை. இது மந்தமான மத்தியானத்தின் ஓய்வுநேரப் பொழுதுபோக்காக, வழக்கம்போல் வாழ்வின் நெருக்கடிகளில் மறைந்துவிடாதிருக்கவே இப்போது எழுத்துகளில் இப்பதிவு. வார்த்தைகள் நிமிடங்களில் மறைந்து மறந்து போகலாம், ஆனால் எழுத்துகள் குப்பைக்கூடைகளிலாவது இருக்கும் என்பதாலேயே இந்தப்பகல் நேரது மன அலைச்சல்.
என் பெயர் என்று குழந்தைப்பருவத்தில் அடையாள‌ம் கண்டு திரும்பிப்பார்த்ததும், என் முகம் என்று அடுத்த கட்டத்தில் கண்ணாடியில் அடையாளம் கண்டு கொண்டதும்,நிழற்படமாக கையெழுத்தாக, பணிபுரியும் பட்டமாக, உறவுகளால் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட பிம்பமாக, பல்விதங்களில் எனக்கே அறிமுகமான நான்.. யார் தான்?
நான் யார் என்று தெரிந்தால் என் வரம்புகள் என்னால் வரையறுத்துக்கொள்ளப்படும், அப்போது சமுதாய வீதியில் போடப்பட்டிருக்கும் கலாச்சாரக் கோடுகளினூடே என் பயணம் கண்டனங்களின்றிச் சுலபமாகும்.நிர்ப்பந்த்தங்கள் கூட நிமித்தங்களாகிவிடும்; மனம் சுணங்காது.
ஒவ்வொரு நாளையும் இரவுநோக்கி இழுத்துச்செல்லும். இரவின் கனவுகளில் மனவீட்டில் இன்றைய வருத்தக்குப்பைகளை மூடிவைத்து, நாளைய விருப்பப்பூக்களால் அலங்கரித்துக்கொண்டு, விடைதெரியாத கேள்விகளையெல்லாம் ஓரத்தில் வீசியெறிந்துவிட்டு, தன்னைத்தானே தற்காலிகமாக ஏமாற்றிக்கொள்ளும்.அல்பெருனியின் அல்ஹிந்த் படித்தாலும் தான் ஹிண்டு என்ற அடையாளத்திற்காக மறந்துகொள்ள முயலும்.
இதையெல்லாம் மீறி ஒருநாள் எனக்கு நான் யார் என்பது புலப்படும். அதுவரை அரிப்பை நானே சொறிந்து கொண்டு 
ஆஹா பார் எவ்வளவு அழகாகச் சொறிந்துவிட்டிருக்கிறேன் என்று முதுகை இன்னும் சிலர் சொறிவார்களா என்று காட்ட,என்னில் அடங்காத என் மனம் முயன்றுகொண்டேயிருக்கும்
இன்னும் புலம்புவதோ புரிந்துகொள்வதோ பின்னாளுக்காக..

Friday, November 20, 2009

வலிகளை அழகாக்கிய கவிஞர்


வலிகள் எப்போதும் கண்களில் கலங்கும்..வலிகளின் நினைவுகள் அப்படியல்ல.
இங்கே கணிணிமுன் உட்கார்ந்து மெதுவாக எழுத்துக்களைத் தட்டித்தட்டி உருவாகிக்கொண்டிருக்கும்போது, வழக்கத்தை விடவும் வேகம் குறைவாக இருக்கிறது. பிற்பகல் தபாலில் இரண்டு புத்தகங்கள் வந்தன. பிரித்துப்பார்த்து, அங்கங்கே மேய்ந்து விட்டு, இதோ என் மேஜையின்மீது தான் வைத்திருக்கிறேன். கணிணியின் திரையிலிருந்து அடிக்கடி கண்கள் அந்த புத்தகங்களை ஆசையோடு பார்க்கின்றன.
Anne Sexton ன் இரண்டு புத்தகங்கள். ஒன்று அவரது கவிதைகளின் முழுத்தொகுப்பு, மற்றது அவர் பலருக்கு எழுதிய கடிதங்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட சுயசரிதை. அவரது கவிதைகள் 36 ஆண்டுகளாகப்பரிச்சயம்.
அவை கல்லூரி நாட்கள். பகலிலேயே கல்லூரியை விட்டு கிளம்பி விடுவேன்..அமெரிக்க நூலகம், குளிரூட்டப்பட்டு இதமாக இருக்கும். அங்கே தான் Langston Hughes, Joyce Carol Oates, Sylvia Plath..ஆகியோரை முதலில் படித்தேன்.. ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தால் woodlands drive-in. மூலையாகப்பார்த்து ஒரு மேஜையில் அமர்ந்துவிட்டால் யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள். சாப்பிட எதையும் வாங்கவேண்டியதுமில்லை..மாலையில் யாராவது நண்பர்கள் வந்து காபி வாங்கிக்கொடுக்கும் வரை கவிதைகளைப்படித்துக்கொண்டிருக்கலாம். வரும் நண்பர்களிடம் பேசவும் அது உதவும்.. அந்த எழுத்துக்கள் பசியைப்போக்கின..
எவ்வளவு வீம்புடன் எழுதுவதுதான் முக்கியம் என்று முயன்றாலும் Anne Sexton மீதுதான் மனம் தாவுகிறது.
 Anne Sexton  வலிகளை அழகாக்கிய கவிஞர். இன்று பலவருடத்தேடலுக்குப்பின் அவரது புத்தகங்கள் அவரது அழகான எழுத்துகளை மட்டுமல்ல..என் இளமையை அதன் தேடலை, சந்தித்த வலிகளை சிந்தித்த விஷயங்களை..செய்துகொண்ட சபதங்களை, சகித்துகொண்ட பொய்களை, சுமந்துகொண்ட கனவுகளை..ஓர் இனிதான இதமான நினவுமீட்டலின் சுகராகமாக உருவாக்கும்போது...வலிகள் யாவும் வெறும் வார்த்தைகளாகிப்போகின்றன..
எதிரே கவிதை இருக்கும்போது, கட்டுரை எப்படி வரும்? கவித்துவ விதைகள் உள்ளே திமிறியெழக்காத்திருக்கும்போது.. கண்கள் கொஞ்சம் நீரூற்றிக் காத்திருக்கவேண்டும்

Tuesday, November 17, 2009

ஏதோ ஒரு காரணத்திற்காக‌

சும்மாதான்..எழுதப்பழகிகொள்கிறேன்...அன்பர்கள்...மன்னிக்க‌.....
உங்கள் அன்பிற்கும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி என்னும் சாதாரண வார்த்தையைமட்டுமே கற்றுவைத்திருக்கிறேன்.

மீண்டும் எழுத மட்டுமல்ல மீண்டுமீண்டும் எழுதவே ஆவல்;
எழுதுகோல் இருந்தாலென்ன, எழுத்தல்லவா வேண்டும்!
எழுத என்ன தடை? படிக்க, படைத்த கண்களையுமீறி இன்னும் அன்புடன் சிலகண்கள் இருந்தும், எழுத என்ன தடை?

கர்வத்தை கூட தக்கவைத்துக்கொள்ள காரியங்கள் தேவை. பின்னால் எழுதலாம், அப்போதும் படிக்க எல்லாரும் காத்திருப்பார்கள் என்ற நிலை அன்று கம்பனுக்கோ இன்று ஜெயகாந்தனுக்கோ கூட இல்லை எனும்போது நிச்சயம் எழுதாமல் இருந்தது திமிரினால் இல்லை. எழுதவேண்டிய எல்லாவற்றையும் எழுதிமுடித்துவிட்டதாக ஓர் இறுமாப்பும் இல்லை.

மொழியற்ற மெளனம் சாத்தியமா என்று தெரியவில்லை; அதன் அருகே வரக்கூடியது மனச்சோர்வின் வெறுமை.
கடவுள் என்னும் கம்பீரக்குரல் செவிடர்களுக்கு மட்டுமே கேட்கட்டும்,(Anne Sexton எழுதியது போல‌) எனக்கு என்னவோ மானுட மொழியின் சப்தம் தேவைப்படுகிறது- எந்தமொழியாக இருந்தாலும்...சப்தமாக மட்டுமே இருந்தாலும்.

இருத்தலின் இயலாமை ஒரு தத்துவ விசாரணையாக இருந்தாலும், அது எல்லோர்க்கும் அவ்வப்போது அனுபவமாகவும் இருந்துவந்திருக்கிறது. அது மெளனத்தின் இடைவெளிகளை உற்றுப்பார்க்க வைக்கும் ஒரு மனநிலை. அதில் மெளனம், ஒரு பிரத்யேக பிரக்ஞை.
ஒரு அசாத்தியமான அசதி மெதுவாக மேலே படரும்போது, வலியும் சுகமாவதுபோல் மெத்தனமும் இயக்கமாகிவிடுகிறது.

சும்மாதான்..எழுதப்பழகிகொள்கிறேன்...அன்பர்கள்...மன்னிக்க‌