Showing posts with label மனவியல் கூறுகள். Show all posts
Showing posts with label மனவியல் கூறுகள். Show all posts

Wednesday, January 6, 2010

மனவியலும் இலக்கியமும்- கடைசியாக

மனவியலும் இலக்கியமும் பரிமாறிப் பயன்பெறும் துறைகள். இரண்டுமே கதைகேட்கும், கதை சொல்லும். இரண்டுமே மனதை உரித்துப்பார்க்கும். ஒன்றின் நோக்கம் பாதித்து யோசிக்க வைப்பது, இன்னொன்றின் நோக்கம் யோசித்து பாதிப்பிலிருந்து மீள்வது. இரண்டையும் நான் நெருக்கமாய் நேசிப்பதால்தான் அன்று பேசவும் இன்று எழுதவும் துணிகிறேன். 


மனவியல் ஓர் அறிவியல். அறிவு பூர்வமாக எதையாவது தெளிய விரும்பினால் அந்த விஷயத்தை முதலில் வரையறுக்க வேண்டும், பிறகு விவரிக்க வேண்டும், பின் விவாதிக்கவேண்டும், முடிவில் வளங்கியதை வடிகாட்ட வேண்டும், இறுதியில் வடிகட்டியவற்றையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஓரிடத்தின் முடிவுகள் அதே பரிசோதனையின் போது வேறிடத்திலும் அதே முடிவுகள் தந்தால் அப்போது தான் அது அறிவியல்ரீதியாக ஏற்கக்கூடிய உண்மை. 

மனவியல் மேதையாகவும், சிலரால் தந்தையாகவும் வர்ணிக்கப்படும் ஃப்ராய்ட் இலக்கியங்களிலிருந்தே தான் கோட்பாடுகளை உருவாக்கினார். அவரது பிரபலமான மனவியல் நூல்களின் பாதிப்பால் பல எழுத்தாளர்கள் இலக்கியங்களை உருவாக்கினார்கள். மிகவும் பிரபலமான ஈடிபஸ் நாடகமும் அதற்கு ஃப்ராய்ட் உருவாக்கிய மனவியல் விளக்கமும் பலருக்கும் அறிமுகம். ஆனால் அவர் அத்துடன் நிற்கவில்லை. அன்றிருந்த இலக்கியங்கள் பலவும் அவரது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு கருத்துக்களாக கோட்பாடுகளாக உருவாயின. 

ஒரு நாடகம் பார்க்கிறோம் (இதை இன்று திரைப்படமாக, தொலைக்காட்சி நிகழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளலாம்) உடனே அங்கிருக்கும் பாத்திரங்களுடன் ஒரு நெருக்கம், ஓர் அன்னியோனியம் தோன்றுகிறது. அப்படித் தோன்றினால்தான் அங்கே நிகழும் அந்தக் கதையில் மனம் ஒன்றுகிறது. பாத்திரங்களின் உணர்ச்சிகள் நம்முடையதாகின்றன. நாம் அழ முடியாதவற்றுக்கெல்லாம் அங்கே அந்தக் கதையின் மூலம் அழுகிறோம். நம்மை நாம் இந்தக் கதாபாத்திரங்களில்(identification )அடையாளம் காண்கிறோம், நாம் பல நிலைகளை அவர்கள் மீது (projection) பரப்பிப்பார்க்கிறோம், நாம் உள்ளே தேக்கி வைத்திருந்த உணர்ச்சிக்குப்பைகளை அந்தக் கதையில் கொட்டுகிறோம் (catharsis) , வெளி வரும்போது மனம் லேசாகிறது. இது கண்முன் பெரிதாய் விரியும் காட்சியாய் நாடகமாய் திரைப்படமாய் எப்படி அமைகிறதோ அதே போல்தான் படிக்கும்போது அமைகிறது. 

களத்தோடும் பாத்திரங்களோடும் நமக்கு அடையாளப் படுத்திக்கொள்ள முடிந்தால்தான் இலக்கியம் ரசிக்கப்படும் என்பது ஒரு கருத்து. இங்கே இரண்டு கதைகளை மிகவும் மலினப்படுத்திச் சொல்கிறேன். 
1.சின்ன வயதில் ஒரு பையன் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அதற்காக அடித்து விரட்டப்படுகிறான். வேறூர் ஒன்றில் வளர்ந்து, சம்பாதித்து, வயதானபின் தான் பழைய காதலியைப் பார்க்கப் போகிறான். அவளைப்போலவே உருவ ஒற்றுமை உள்ள அவளது மகளைக் கண்டதும் அவள் மீதும் மையல் கொள்கிறான். 
2. அந்தப் பையன் படிக்க தான் தந்தையின் நண்பர் வீட்டில் தங்கியிருக்கிறான். அவர்களும் அவனை ஒரு மகனாகவே நடத்துகின்றனர். ஒரு நாள் உணர்ச்சிவசப்பட்டு தந்தையின் நண்பரின் மனைவியை, தன்னிடம் ஒரு தாயாகப் பழகிய அவளிடம் பாலுணர்வுத்தூண்டுதலால் நெருக்கமாகிறான். 

மேலே சொன்ன இரு கதைகளும் இவ்வளவு கொச்சையானவை அல்ல. அவை அடர்த்தியாக உள் கிளப்பும் அதிர்வுகள் வேறு பல. ஆனால் இவற்றை ரசிப்பவன் இதில் எந்தப் பாத்திரத்தோடு தன்னை அடையாளம் காண்கிறான்? தன்னை, தன் சூழலை அடையாளம் கண்டு கொள்ள முடியாத இவை எப்படி இலக்கியமாகப் போற்றப்படுகின்றன? இவ்விடத்தில் தான் நினைக்கமுடியாததும், பேச முடியாததும், ஆனாலும் நிஜம் என்று தோன்றுவதும் இலக்கியமாக ரசிப்புத்தன்மையைத் தூண்டிவிடும். 

இதன் இன்னொரு நீட்சியாகத்தான் சமுதாய-பகுதிநேரப் பொறுப்புணர்வு! கதை சொல்லப்படுகிறது. அதைக் கேட்க ஆவல் ஏன் வருகிறது?  அதில் ஒரு மர்மம் இருப்பதால். இது கொலை, கொள்ளை துப்பறியும் வகைகளில் மட்டுமல்ல எல்லா கதைகளிலும் உள்ளது. மார்க்ஸீய நூலிலும் விவரிக்கப்பட்ட வேதனைகளுக்கு என்ன விடிவு என்றொரு மர்மக் கேள்வி தொக்கி நிற்பதால்தான் விடை கண்டு அதைப் பரிசீலிக்கவும் பயன்படுத்தவும் மனம் தொடர்ந்து படிக்கிறது. 

வருத்தமான ஒன்று சொல்லப்பட்டால், காட்டப்பட்டால், பரிதாப உணர்வோடு, அப்படி ஒன்றிற்கு யார் அல்லது எது காரணமோ அங்கே ஒரு கோபமும் வரும். நடுத்தர வர்க்கத்தின் கோபம் ஒரு பகுதிநேரக் கோபம். முழுமையாய் அந்த உணர்வுகள் மனத்துள் மீட்டப்பட்டாலும் அவற்றின் விளைவாக வினையாக ஒரு காரியத்தில் இறங்கினால், பல கனவுகள் நிறைவேறாது எனும் நிதர்சனம் தெரியும். சமுதாயத்திற்காக உழைக்க சுய தேவைகளும் சுயநலத்தோடு விழையும் வசதிகளும் கணவாகவே கைவராமலே போய்விடும் என்பதால் தான் நடுத்தர வர்க்கம், உண்டியலில் காசு போட்டுவிட்டு தவணையில் வசீகரங்களை வாங்கப் புறப்படும்.

இதன் நீட்சி நெருடும் எழுத்துக்களைத்தவிர்த்து அந்த நேரம் பொழுது போக்க, அந்த நேரம் கனவுகளை நிகழ்த்திக்காட்ட என்று எழுதப்படும் எழுத்துக்களை இலக்கியமாகப் போற்றித் தொடரத் துவங்கும். 
எழுத்து மட்டுமல்ல, செயலும் இலக்கியம். சமூகம் சார்ந்ததால். 


கீழ்வெண்மணி இந்திரா பார்த்தசாரதிக்கு ஒரு சுவையான நாவலுக்குரிய விஷயம். கிருஷ்ணம்மாளுக்கு அது ஒரு முழு வாழ்க்கைக்கான பணி. படிப்பதும் பார்ப்பதும் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்காது. அந்தப்பாதிப்பின் விளைவாக அவர்கள் என்ன வினையாற்றுகிறார்கள் என்பதே இலக்கியம் மனத்துள் ஏற்படுத்தும் தாக்கம், ஊக்கம். 

பேசும்போது தெரியவில்லை;
எழுதும்போது இது இன்னும் மிகவும் விரிவாக எழுதப்பட வேண்டியது என்று தோன்றுகிறது. 
இப்பதிவு இதற்கான தளம் அல்ல என்றும் தெரிகிறது.

Monday, January 4, 2010

மனமும் இலக்கியமும் -பகுதி இரண்டு

வாசிப்பு வளர்ச்சி தரும், வளர்ச்சியும் வாசிப்பை நிர்ணயிக்கும். இதில் எது முதல் என்றில்லை, இரண்டும் ஒரு சுழலாகவே அமையும். 


ஒரு கட்டத்தில் நாம் கொண்டிருந்த அல்லது கொண்டிருந்ததாய்ச் சொல்லிக்கொள்ளப் பிடித்திருந்த கொள்கைகளின் வெளிப்பாடுகளை உள்ளடக்கிய நூல்கள் நமக்குப்பிடிக்கும்.
காலமும், கவலைகளும், வாழ்வில் நாம் ஏற்றுக்கொண்ட நிர்ப்பந்தங்களும் கொள்கைகளை மானப்பரணில் போட்டு விடுவதால் அத்தகைய புத்தகங்களை ஒரு கண்காட்சியிலோ கடையிலோ பார்த்தால் கைகள் அவற்றை வாஞ்சையுடன் வருடும். முதல் காதலி போல அந்த முன்னாள் கொள்கைச் சார்புகள் மனத்தின் மூலையில் என்றும் கிடக்கும். இங்கே தான் வாசிப்பும் வாழ்க்கையும் முரணாக பலருக்கு மாறும். 

சம்பாதித்துத் தன்னைப்பேணிக்கொள்வதா இல்லை வருமானம் பற்றிய கவலையில்லாமல் சமூகம் சார்ந்த சிந்தனையுடன் செயல்பட்டுக்கொண்டிருப்பதா எனும் கேள்வி 25ல் வராவிட்டாலும் 30 வயதில் வரும். எமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல் என்றும் இருக்கலாம், ஆனால் நாடும் மக்களும் பரிதாபத்தினாலோ பாசத்தினாலோ யாரையும் பார்த்துக்கொள்வதில்லை. இந்தக்கட்டத்தில், மனம் இலக்கியத்தை ஒரு கனவின் மீதியை மீட்டெடுப்பதற்காகவே சிலருக்கு அமைந்துவிடும். 
நான் செய்ய முடியாத, வலிதாங்கிக்கொள்ள முடியாத புரட்சியை யாராவது செய்யும் போது நூறு ரூபாய் நன்கொடை கொடுப்பது போல. 

இப்போதுதான் இலக்கியம் நம் இயலாமையின் வடிகாலாக அமைகிறது. நான் உயர்வாக நினைத்த கொள்கை, நான் வாழ விரும்பிய வகை, நான் கற்பனையில் மட்டுமே புரிந்து கொள்ளும் வாழ்நிலை ஆகிய எல்லாமும் யாரோ எழுதிய புத்தகங்கள் வாயிலாக எனக்கு ஒரு சமாதானம் தரும். இன்னும் இம்மாதிரி சிந்தனைகள் மனித மனங்களிலிருந்து போய்விடவில்லை எனும் ஆறுதலான ஆதங்கத்திற்கு வருடலாகவே இவை அமையும். 

இதுவும் ஒரு விரக்தியை உருவாக்கும். இவ்வகை இலக்கியங்கள் என் இயலாமையை நான் சுயநலத்திற்காகச் செய்துகொண்ட சமாதானங்களை எனக்கு அடிக்கடி படிக்கும்போது சுட்டிக்காட்டுவதால், மனம் தன்னைத் தற்காத்துக்கொள்ள, மெதுவாக இவற்றை தவிர்க்க ஆரம்பிக்கும். இந்தக்கட்டத்தில் தான், மீண்டும் ஒரு தேர்வு நடக்கும். திரும்பத்திரும்ப, இதையெல்லாம் படித்து நாம் ஒன்றுமே பங்களிக்கவில்லையே எனும் வெட்கம், இதையெல்லாம் விட்டு விட்டு வேறெதையாவது படிக்கலாமே என்று ஒரு தூண்டுதலை உருவாக்கும். 

அப்போதுதான், அப்போது, பொழுதுபோக்க எந்தச் சிந்தனையையும் கிளராத கதைகளைப் படிப்பதா இல்லை நமக்கு இருப்பதாய் நினைத்துக்கொண்டிருக்கும் கொம்பிற்கு புதுவண்ணம் அடிப்பது போல் வேறுவகையான புத்தகங்களைப் படிப்பதா என்று மனம் தேடும். படிப்பது ஒரு பழக்கமாகிவிட்டால் அது விடாது. 

இவ்வகை மனக்கிளர்ச்சியில் உள்ளவர்களுக்கு இந்த நேரத்தில் கைகொடுப்பவை ஆன்மீக நூல்கள். அதிலும் இரண்டு வகை உண்டு. புரிதலை ஆழமாக உள்ளே கேள்விகளை எழுப்பி விடைகளை உருவாக்கவும் சில நூல்கள் உண்டு என்பதைப்போல், போலியாக வியாபாரத்தின் இந்த விற்பனைச் சாத்தியங்கள் நிறைந்த காலியிடத்தை இட்டு நிரப்பும் குப்பைகளின் குவியலாகவும் சில நூல்கள் உண்டு. 

படித்தவுடன் இதனால் பயன் உண்டு அல்லது நேரம் வீணாயிற்று என்பது மனதுக்குத் தெரியும், ஆனால், பொய்களை வாங்க முடிவுசெய்தபின், அவையே நிஜம் என்று நினைக்கவே மன விரும்பும். வாழ்க்கை வேறு இன்னும் ஆசைகளை அதிகரித்துக்கொண்டு செல்வதால், போலியான்மிக வியாபாரிகளின் பேச்சுகளும் எழுத்துக்களும் அவை தர விரும்பிய மாயசுகத்தைத் தரும். 
அதன் பிறகு ஹ்ம் நீ என்ன ராஜேஷ் குமார் படிக்கிறாயா என்று பிறரை நக்கலாகப்பார்க்கும் மனம், அது போலல்லாமல் பாசாங்குகள் நிறைந்த போலி தத்துவங்களைச் சிலாகிக்கும். ஒரு கட்டத்தில் இதிலிருந்து மீள முடியாது. படிப்பதே நிற்கும், அல்லது படிப்பது இது மட்டுமே என்றாகும். வாசிப்புக்கும் வளர்ச்சிக்கும் அப்போது எவ்விதத்தொடர்பும் இருக்காது. 

இலக்கியமும் மனமும் வளரும் சூழலின் ஒரு கோணத்திய விவரிப்பு இது. மனவியலுக்கும் இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பை அடுத்து எழுதுகிறேன்.

Sunday, January 3, 2010

மனமும் இலக்கியமும்- முதல் பகுதி


ஒருவாரம் தினமும் எழுதத்தூண்டி அதற்கான பயிற்சியாக எழுத ஆரம்பித்தது இன்று ஒரு பழக்கமாக ஆகிவிட்டது. நன்றிகள் தமிழ்மணத்திற்கு.
நேற்று மாலை புத்தக விழாவில் பேசியபோது பல விஷயங்கள் பேச வேண்டும் என்றுதான் போனேன். என்னவோ பேச இயலவில்லை, காரணங்களும் தேவையில்லை. நேற்று பேச நினைத்ததை இன்று பதிவாக ஆக்குகிறேன்.


 மனமும் இலக்கியமும் 
மனதார வெளிவராத மனத்துள் புகாத எந்த எழுத்தும் இலக்கியமல்ல, எனக்கு.
என்னைப் பொறுத்தவரை உள் புகுவதும் வெளிவருவதிலும் ஏற்படுத்தும் பாதிப்பைப் பதிவு செய்வதே இலக்கியம். இப்படி ஒரு சிக்கலான வரையறையுடன் மனவியலும் இலக்கியமும் எனும் தலைப்பில் பேசலாம் என்றுதான் பேச ஒப்புக்கொண்டேன்.
மனம் இலக்கியத்தின் ரசனையை வளர்த்துக்கொள்வது அதன் வளர்ச்சியைப் பொருத்தே அமைகிறது. குழந்தைகள் அதிசயங்களில் ஈர்க்கப்படுவதில் ஆரம்பிக்கிறது இலக்கியப் பரிச்சயம். Fantasy எனும் அதிசயக் கதைகளில் சிங்கம் ஆடும் யானை சிரிக்கும் குரங்கு பேசும்.. குழந்தை வளரும் போது தேவைப்படும் இந்த அதிசயங்களின் விவரிப்புகள் பின்னாளில் தேவைப்படுவதில்லை. அதே குழந்தை அடுத்து அதிசயத்தின் நீட்சியாக அதிமனிதனின் கதைகளை நாடும். ஸ்பைடர்மென் சூப்பர்மேன்  போன்ற அதிமனிதர்கள் அந்தக் குழந்தையின் பிரமிப்புக்கு ஏற்ப இயல்பிலிருந்து பெரிதாக அமைந்து, அசாத்தியமான காரியங்களை மிகச் சாதாரணமாகச் செய்வார்கள். குழந்தைக்கு இந்த கற்பனை பிடிக்கிறது. நிஜத்தின் கோணங்கள் இன்னும் சரியாக அமையாத வயதில் இந்த ஈர்ப்பு சரிதான், ஆனால் பெரியவர்களும் இத்தகைய விஷயங்களில் ஈடுபாடும் ஆர்வமும் காட்டுவது என்? குழந்தைகள் வளர்ந்த மனிதர்களிடம் அதிசயத்தக்க ஆற்றல் இருப்பதை நம்புகிறார்கள், தாமும் வளர்ந்து அப்படி ஆகிவிடுவோம் என்று. பெரியவர்கள் தாங்கள் தொலைத்த குழந்தை மனத்தை அந்த்க் கொஞ்ச நேரமாவது மீண்டும் அனுபவிக்கும் ஆசையால் இவற்றை நேசிக்கிறார்கள். வளர்ந்த பிறகு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் புதிதாய் பெரிதாய் சாதிக்கலாம் எனும் நப்பாசையின் ஒருவித வெளிப்பாடுதான் தான் வளர்ந்து தொலைத்துவிட்ட குழந்தை நிலையை மீட்க முயல்வது. இதற்கு இவ்வகை அதிமனிதர்களின் அதிசயக் கதைகள் உதவுகின்றன.
குழந்தை சற்று வளர்ந்தவுடன் ஆவலோடு படிப்பது தங்களைப்போன்ற குழந்தைகளின் சாதனைக் கதைகளை. எனக்கு அப்படித்தான் enid blyton மீது படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. இன்று இளஞ்சிறுவர்கள் என்ன கதைகள் படிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அடுத்து, வீரம், காதல், அறிவு என்று ஏதாவது ஒரு கோணத்தில் நாயகத்தன்மையுள்ள பாத்திரங்களின் கதைகளை மனம் விரும்பும். பதின் வயதுகளின் இயல்பான மனோமாற்றங்களால் காதலும் வீரமும் கொஞ்ச காலத்திக்கு நல்ல கதைக்களன்களாக தெரியும். பதின்வயதுகளின் இறுதியில் இது மாறும். சமூகம் குறித்தும் எழுதப்படும் கதைகளின்பால் கவனம் செல்லும். இங்கேதான் இலக்கியம் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பிக்கும்.சுஜாதாவா ரமணிசந்திரனா என்பது மெல்ல இன்னும் ஆழமான விஷயங்களை நோக்கி ஈர்க்கப்படும். கதை சொல்லாமல் வாழ்க்கை பற்றி விவாதிக்கும் இலக்கியங்களின் அறிமுகம் இந்த வயதில் ஏற்பட்டால், 25 வயதுக்குள் ரசனையின் தன்மை ஒரு திசைநோக்கிப்பயணிக்கத் துவங்கும். 

இது எல்லாருக்கும் ஏற்படுவதில்லை. இலக்கிய அறிமுகம் யதேச்சையாக நடப்பதில்லை. அதற்குரிய படிக்கும் வழக்கமும், பலரது பழக்கமும் இருந்தால்தான் புத்தகங்கள் பரிந்துரைக்கப்படும், மனதால் தேர்ந்தெடுக்கப்படும்.
25 வயது என்பது ஒரு முக்கிய கட்டம். அதுவரை மாணவனாக இருந்துவிடலாம். படித்து முடித்துவிட்டும் சரியான வேலை கிடைக்கவில்லை என்று சும்மா இருந்துவிடலாம். அதன் பிறகு, சூழல் கேட்கிறதோ இல்லையோ, மனம் தன்னைத்தானே ஏளனம் செய்துகொள்ளும். வலிக்கும்.இந்தக் கட்டத்தில் ஒருவன் (ஒருவளாகவும் இருக்கலாம், வசதிக்காக ஆண்பால்), தன் பாதையைத் தேர்ந்தெடுக்கும் நிர்ப்பந்தத்தை காலம் உருவாகும். எல்லாரும் சொல்லும் இயல்பு வாழ்க்கை என்று செல்வம் தேடுவதா, அதற்கான சமாதானங்களைச் செய்துகொள்வதா இல்லை தான் மனத்தின் இயல்பான நாட்டத்தின்பால் கவனம் செலுத்தி சுயநேர்மைக்கும் சுயநியாயத்திற்கும் முதலிடம் கொடுத்து வசதிகள் கிடைக்கச் சாத்தியங்கள் குறைந்த வருங்காலத்தைத் தேர்ந்தெடுப்பதா என்று ஒரு முடிவெடுத்தல் அவசியமாகி விடும். மற்றவர் ஆசைபடும்படியல்ல என் ஆசைக்கேற்பவே என் வாழ்க்கை என்றுதான் மனம் இயல்பாகத் தீர்மானிக்கும். 

இதன் அடுத்த கட்டத்தில், தன் முடிவு எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்றானால் வாழ்க்கை கேள்விகளின்றி தொடரும். மாறாக தான் தேர்ந்தெடுத்த சுயநியாயத்தின் பாதையில் செல்லும் போது, சமூக ஏளனம், கண்டனம் இவை மீறி தன் வயதொத்தவர்களின் வாழ்வின் வசதிகள் மனத்துள் ஒரு நெருடலை உருவாக்கும்.
சமூகம் அங்கீகரித்த வெற்றியா தன் மனமும் தன்மானமும் நிர்ணயித்துக்கொண்ட வெற்றியா எனும் தேர்வைப் பொறுத்தே இலக்கியத்தேடலும் அமையும். இந்தக் கட்டத்தில் இலக்கியம் ஒரு நிரந்தரத்துணையாக நாளும் கூட இருக்கலாம் அல்லது அவசியம் நேரும்போதோ அரிப்பு எடுக்கும் போதோ எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும் விஷயமாகவும் ஆகலாம். இந்தக் கட்டதில் இலக்கியம் எது என்பதையும் மனம் அனிச்சையாகத் தேர்வு செய்யும். யோசிக்க வைக்கும் நூல்களை விட பொழுது போக்க உதவும் நூல்களையே மனம் தன் தற்காப்பிற்காகத்தேடும். இந்த இடத்தில் மேலுக்கு ஆழம் போல் ஒப்பனையிட்டுக்கொண்ட புத்தகங்கள் ஒரு நாகரீக நிர்ப்பந்தமாகவோ, ஒரு நாடகத்திற்கான அவசியமாகவோ கைகளில் கிடக்கும்.
நீளம் கருதி, இதன் மீதி நாளை எழுதுகிறேன்.

Thursday, December 31, 2009

உடல்மொழி, உரைமொழி



இது நான் எழுத ஆரம்பித்த நூலின் அறிமுகப்பகுதியின் ஒரு பகுதி. இன்றைய பதிவு இனிதான் எழுதவேண்டும் என்பதால் இதைப் பதிவேற்றம் செய்கிறேன்.
  
எனக்கு தார்மீகக்கோபம் என்று தோன்றுவது சிலருக்குத் திமிர் என்றும் தோன்றலாம். நான் அமைதி காப்பது சிலருக்கு அடிபணிந்துவிட்டதுபோல் தோன்றலாம். இப்படித்தான் உள்ளத்தின் மொழி உடல்வழி பலநேரங்களில் வேறாக அர்த்தம் காட்டுகிறது. 

சிலநேரங்களில் சாமர்த்தியமான நடிப்பின் மூலம் நான் கோபத்தை மறைத்துக்கொண்டு புன்னகைத்திருக்கிறேன். சில நேரங்களில் நடிக்கமுயன்றும் என் உணர்ச்சிகள் வெளித்தெரிந்திருக்கின்றன.
உலகில் இசைவோடு வாழ்வது உத்தமம். ஆனால் உள் ஒன்று இருக்கும்போது புறத்தே அதைக்காட்டாமல் வாழ்வது ஒரு கயமை இல்லையா? சத்தியமும் சாமர்த்தியமும் இயல்பு வாழ்வில் ஒன்றாக வெளிப்படுவது எவ்வளவு தூரம் சாத்தியம்? 
இங்கேதான் மனவியலின் ஒரு பகுதியான உடல்மொழி குறித்தும் உரையிடை மொழி குறித்தும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

உடல் மொழி ஒன்றும் புதிய மனவியல் கண்டுபிடிப்போ கோட்பாடோ அல்ல. அது பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னமேயே இந்தியாவின் இரு பெரும் நூல்களில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவ்விரு இந்திய நூல்களும் மனவியல் கற்பிக்க எழுதப்படவில்லை!
நடன முறைப்பாட்டிற்காக பரதமுனிவர் எழுதிய நாட்டியஸாஸ்திரமும் தொல்காப்பியர் எழுதிய  இலக்கண நூலான தொல்காப்பியமும்தான் அவ்விரு நூல்கள். தொல்காப்பியம் வெறும் இலக்கண நூல் மட்டுமல்ல, அதன் மூலம் அந்த காலகட்டத்தின் வாழ்க்கைமுறை, அன்று நிலவிய வாழ்வு மற்றும் நீதிநெறி குறித்தும் நாம் தெரிந்துகொள்ளலாம்.


உணர்ச்சிகள் இயல்பானவைதான். ஆனால் அவற்றின் வெளிப்பாடுகள் சூழல் சார்ந்தவை. இந்த அடிப்படையைக்கொண்டே பரதமுனிவரின் நாட்டியஸாஸ்திரம் அங்கங்களின் மூலம், அசைவுகள்மூலம்,முகபாவங்களின்மூலம் எப்படி உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படுகின்றன என்பதை மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் விவரிக்கிறது. தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் எனும் அதிகாரத்தில் இதையே வேறு கோணத்தில் விளக்குகிறது. இலக்கியநுணுக்கத்திலோ நாட்டியச்செறிவிலோ நாட்டம் இல்லாவிட்டாலும் இவற்றைப் பரிச்சயம் செய்துகொள்வதன் மூலம், வாழ்வில் தினசரி சந்திக்கநேரும் சூழ்நிலைகளில், அவரவர் உடல்மொழிமூலம் அவர்களின் உள்ளத்தில் ஒலிக்கவிரும்பும் மொழி குறித்து புரிந்துகொள்ளலாம். 

இதன்மூலம் ஒரு சுயபரிசீலனையும் மேற்கொள்ளலாம். நாம் நினைத்ததைத்தான் பேசுகிறோமா என்று பார்த்துக்கொள்ளலாம், அதைவிட, எதிர் உள்ளவர் பேச நினைப்பதைத்தான் பேசுகிறாரா என்றும் ஒரளவிற்குக் கணிக்கலாம். அதைக்கொண்டு நாம் எதிர்வினை குறித்தும் தெளிவாக இருக்கலாம்.


நம் தொல்காப்பியரையும் பரதமுனிவரையும் படிக்காமலேயே டார்வின் இதை எழுதியிருக்கிறார். அவரைப் பொருத்தவரை அடிப்படை உணர்ச்சிகள் ஆறு தான். தொல்காப்பியத்திலும், நாட்டியஸாஸ்திரத்திலும் அவை எட்டு. நவரசம் என்பது, பரதமுனியின் நூலுக்கு விளக்கம் எழுதிய அபிநவகுப்தரின் தீர்மானம். அவரது கூற்றுப்படி, எட்டு அடிப்படை உணர்ச்சிகளையும் கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடிந்தால் ஒன்பதாவது நிலையான சாந்தி தோன்றும்.
உணர்ச்சிகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ளவேண்டும். உணர்ச்சிகளின் தன்மை குறித்து ஓர் அறிவார்ந்த தெரிதல் இருப்பது கூட உதவும். தினசரி வாழ்வில் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டினை உணர்ந்து தெளிவாக இருப்பது, நம் செயல்திறனையும் மேம்படுத்தும்.
பல நேரங்களில் என் உரைமொழியின் கனிவு என் உடல் மொழியின் வேறுபாட்டைத்தாங்கி வெளிவரும். அப்போது இருவேறு செய்திகள் எதிர் இருப்பவருக்குச் சொல்லப்படும். எது அவரது மனநிலைக்கும், நம்மைப்பற்றிய அவரது முன்கணிப்பிற்கும் ஒத்து உள்ளதோ அதையே அவர் எடுத்துக்கொள்வார்.

வெறும் உடல்மொழியின் வெளிப்பாடுகளை அறிவது மட்டும் உதவாது, ஏனெனில் நாம் எல்லாருமே எதைப்பார்த்தாலும் நாம் மனத்தில் ஏற்கனவே வைத்துக்கொண்டிருக்கும் கோணங்களின் ஊடாகத்தான் பார்க்கிறோம். முதலில் நம் மனதில் என்னென்ன முன்கணிப்புகள் உள்ளன என்பதை ஆராய்ந்தறிய வேண்டும்.
உடல்மொழி குறித்து தொடர்ந்து எழுதலாம் என்று ஓர் எண்ணம்; அதற்கு முன் நாம் செய்துகொள்ளும் முன்மதிப்பீடுகளின் பின்னணி பற்றியும் சிந்திக்கவேண்டும்.

பொதுவாகவே ஒருவரது முகத்தைப்பார்த்தவுடன் அவரது உணர்ச்சி என்ன, மனநிலை என்று நாம் அனிச்சையாகக் கணிக்கிறோம். இது எவ்வளவு தூரம் சரியாக அமைகிறது? ஒரு பரிசோதனை செய்ய நடிகர் பாலாசிங் சில உணர்ச்சிகளைக் காட்டுவதைப்படம் பிடித்தோம். அதைப் பார்த்தவர்களில் எத்தனை பேர் உணர்ச்சிகளை முகபாவங்களின் மூலம் கண்டுபிடிக்கிறார்கள் என்பதே எங்கள் சோதனையின் குறிக்கோள். சில நேரங்களில் இம்மாதிரி பரிசோதனைகளில், நான் ஒரு முகபாவம் சரியாக இருப்பதாய் ஓகே சொன்னால், பார்ப்பவர்களில் சிலர் நான் ஓகே செய்யாத படத்தில்தான் உணர்ச்சி சரியாக அமைந்ததாய்க் கூறுவார்கள். மேலைநாடுகளில் இம்மாதிரி ஆய்வுகள் நிறைய உண்டு, இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இம்மாதிரி சோதனைகள் குறைவு. எடுத்த எல்லா படங்களையும் பரிசோதனைக்குப் பயன்படுத்த விரும்பும் மனவியல் மாணவர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டால் அனுப்பி வைக்கிறேன்.  இது ஒரு பரிசோதனையின் ஆரம்பக்கட்டம்தான். நாடக உத்திகளைக்கொண்டு மனவியல் பயிற்சி தர முடியுமா எனும் வேறொரு சோதனையின் நீட்சி.
உங்கள் எதிர் இருப்பவர் அல்லது பத்திரிகைகளில் இருப்பவரின் படத்தை வைத்துக்கொண்டு அவரது மனநிலை குறித்துச் சிந்தித்துப் பார்த்தால் இது இன்னும் விளங்கும்.


இங்கே உதாரணத்திற்காக படங்கள்:

படங்களை எடுத்தவர் அண்ணாதுரை, ஆண்டு 2005



                       


Thursday, December 17, 2009

யோகம், தியானம், மருத்துவம் பற்றி


மனநல மருத்துவம் மட்டுமல்ல, மருத்துவத்தின் பல்வேறு துறைகளிலும் இன்னும் 'எல்லா' நோய்களுக்கும் தீர்வுகள் காணப்படவில்லை. இது உண்மை. இன்னும் தீர்வுகள் வரவில்லை என்றாலும் அதை நோக்கிய பயணமே அறிவியல்.

என் பதிவில் குறைகண்டு, கோபம் கொண்டு சிலர் பின்னூட்டம் இட்டதன் பின்னணி பற்றி எனக்கு அதிகம் கவலையில்லை. யோகத்யான முறைகளைக் கற்றுக்கொடுக்கும் அரைவேக்காடுகளைப் பற்றியும் அவர்களது வணிகக்குயுக்தியால் பலர் திசைகுழம்புவது குறித்துமே என் அக்கறை, கவலை. வணிகபுத்தி, குயுக்தி என்று சொன்னாலேயே சிலருக்குத் தங்களை நான் தாக்குவதாகத் தோன்றுவது அவர்களது குற்ற உணர்வாகவும் இருக்கலாம். இப்பதிவு அவர்களைப் பற்றியல்ல, யோக, த்யானம் ஆகியவை மனநோய்களுக்கு உதவுமா என்பதே என் கேள்வி, இல்லை என்பதே என் பதில். நோய் என்பதைப் புரிந்துகொண்டால் தான் என் இந்த தீர்மானம் விளங்கும்.


சோர்வு, சோகம்,கவலை, வருத்தம் என்று நாம் எல்லாரும் வாழ்வில் அனுபவித்திருக்கக்கூடிய உணர்ச்சி நிலைகளை DEPRESSION என்னும் நோயோடு ஒன்றாக நினைத்துக்கொண்டு சிலர் குழம்புவதால் தான் இந்தச் சிக்கல் உருவாகிறது. சில அறிகுறிகளோடு ஒரு பாதிப்பு தொடர்ந்து சிலகாலம் நீடித்தால், அதன் விளைவாக வாழ்வின் இயக்கம் சீர்கெட ஆரம்பித்தால், அப்போது அது ஒரு நோய்.
நோய்க்கு சிகிச்சை அவசியம். தானாகச் சரியாகிவிடும் என்றால் அது மிதமான பாதிப்புதான். மழையில் நனைந்தபின் வரக்கூடிய லேசான இருமலைப்போல். ஆனாலும், இருமல் மிதமானதா பின்னால் தாக்கக்கூடிய ஒரு பெருநோயின் அறிகுறியா என்பதை அறிய அறிவியல் சார்ந்த அணுகுமுறை மட்டுமே உதவும். அறிவியல் அடிப்படையில் இயங்குவதே 'நவீன' எனும் அடைமொழியோடு இன்று பரவலாகப் பயனபடும் மருத்துவமுறை.
இது மேல்நாடு சிகிச்சை முறை, எனக்கு நம் நாட்டுப் பாரம்பரியமிக்க மருத்துவ முறைகளில்தான் நம்பிக்கை என்று ஜீன்ஸ் அணிந்து இணையத்தில் கருத்துத் தெரிவிக்கும் நபர்களிடம் விவாதிக்க அல்ல இப்பதிவு. நோய்க்கு ஏன் நிரூபணமான மருந்துகள் அவசியம் என்பதை விளக்கவே இம்முயற்சி.
ஒரு சின்ன உதாரணம்: வலிப்பு நோய்க்கு மிகவும் சரியான முறையில் உதவக்கூடிய ஒரு மருந்து C. இதற்கு சில எதிர்விளைவுகள் உண்டு. கல்லீரலைத்தாக்கி எனும் பாதிப்பை உர்வாக்கலாம், ஒவ்வாமையால் தோலில் தடிமன்களும் அரிப்பும் வரலாம், ரத்த அணுக்கள் அளவு மாறுபடலாம்.இந்த மருந்தைத் தரலாமா? எனும் மருந்திற்குப் பதிலாக V எனும் மருந்து உண்டு. இதன் எதிர்விளைவுகள் C அளவுக்கு மோசமானதாக இல்லை.இப்போது, எல்லாருக்கும் Cயைவிட Vதான் உகந்தது என்று தோன்றும். பள்ளியிலோ கல்லூரியிலோ முக்கியமான பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருக்கும் மாணவருக்கு வலிப்பு நோய் இருப்பதால், மருந்து தர வேண்டும்; V  உட்கொண்டால் நினவுத்திறனில் பாதிப்பு வரலாம், C அப்படிச் செய்யாது. இப்போது இரண்டில் எது தேர்வாகும்?
இங்கே தான் அறிவியல், அனுபவம், விளைவுகளைப்பற்றிய தெளிவு, சிக்கல்களுக்கு மாற்று என்று முழுமையான சிகிச்சை முறையாக மருத்துவத்தை முன்வைக்கிறேன். "யோகா & மெடிடேஷன் டீச் பண்ணும் மாஸ்டர்ஸ்" மீது இதற்குத்தான் விமர்சனங்களை வைக்கிறேன்.
"கோபம்,  அளவுக்குமீறி சட்டென்று வருகிறது, அடக்க முடியவில்லை" என்று ஒருவர் முறையிட்டால், என்ன ஆசனம், என்ன தியான முறை சொல்லித் தரப்படும்? இன்று பிரபலமாகவும் பெரிய தத்துவார்த்த ஞானிகளாகவும் நிழலெழுத்தாளர்கள் உதவியுடன் பாவனை செய்து திரியும் 'குருமார்கள்' கூட இதற்கு ஏதாவது ஒரு "மெடிடேஷன்" வைத்திருப்பார்கள். அவர்களை நேரில் (அருகில்) சென்று பார்த்துப் பேசி கற்றுக்கொள்ள அனுமதியில்லாத நடுத்தரவர்க்கத்தினரிலிருந்து தான் நிறைய "டீச்சர்ஸ், மாஸ்டர்ஸ்" கிளம்புகிறார்கள். "கோபம்.." என்று முறையிடும் நபரிடம் ஏதாவது கேட்கப்படுமேயானால் அது "இந்த வர்க்ஷாப்புக்கு இவ்வளவு ஃபீஸ், இருக்கிறதா?" என்பது தான் பல இடங்களில்!
முறையான தீர்வு வேண்டுமானால், கேட்கப்பட வேண்டிய கேள்விகளில் ஒரு சில: 1.அந்த நபர் பிறந்தது இயல்பானமுறையிலா இல்லை Forceps பயன்படுத்தியா? 2.கண்களில் எப்போதாவது மின்னலடிப்பது போல் தோன்றுகிறதா? 3.உறக்கத்தில் பற்களை நறநற என்று கடிக்கும் பழக்கம் உள்ளதா?..  இது போல் இன்னும் பலகேள்விகளுக்குப்பின் தான் அவருக்கு மூளையில் ஏதாவது சிறிய பாதிப்பு உள்ளதா என்று புரியும். அப்படி இருந்தால், மருந்துகள் மட்டுமே உதவும். இந்த அடிப்படை அணுகுமுறை இல்லாமல் "வா, உடம்பை வளை, மூச்சை இத்தனை முறை இழுத்து விடு" என்றெல்லாம் ஆரம்பித்தால் எப்படி சரியாகும்? இதனால் தான் நோய்களுக்கு யோகத்யான முறைகள் உதவாது என்று கூறுகிறேன்.
யோகப்பயிற்சிகளும் தியான முறைகளும் உதவுமா? நிச்சயமாக உதவும், ஆனால் நோய்களுக்கு மருந்தாக அல்ல, உடலிலும் மனத்திலும் ஒரு நிதானம் வருவதற்காக. ஒரு தேர்சிபெற்ற GYM மாஸ்டர், அரைவேக்காட்டு யோகா மாஸ்டரை விட உதவுவார் என்று இதனால்தன் நான் நம்புகிறேன். மெடிடேஷன் என்று ஸ்டைலாகிவிட்ட த்யானம் ஒரு மிகப்பெரிய சாதனம். அதைப்பயன் படுத்தவே ஒரு பக்குவம் வேண்டும்.'டென்ஷன்' குறைய என்று பலர் 'மெடிடேஷன்' செய்வதாகச் சொல்வது ஏமாற்று. அவர்களின் அந்த டென்ஷன் இல்லாதபோது தான் த்யானப்பயிற்சியின் ஆரம்பமே சாத்தியம்.
மனநல மருத்துவத்தில் எல்லாவற்றிற்கும் தீர்வு உள்ளதா என்றால் இல்லைதான். மூளைவளர்ச்சியில் பாதிப்படைந்த குழந்தைகளுக்கு ஒன்றுமே செய்ய முடிவதில்லை, ஆளுமையின் சில கூறுகளில் கோளாறு உள்ளவர்களைச் சரிசெய்ய எந்த மருந்துமே கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுவாக மனநல மருத்துவம் என்றால் பேசிபேசியே சரிசெய்வார்கள் என்ற தவறான கருத்து நிலவுவதால்தான் மனவியல் நிபுணர்கள் பேசுவதை விட ஒரு சாமியாரோ அவரது சிஷ்யன் என்று சொல்லிக்கொள்பவரோ பேசுவதைக் கேட்கலாமே என்று பலர் உளறிவருகிறார்கள்.

இன்னும் கேள்விகள் வரும், அப்போது விளக்க முடியுமா என்று பார்க்கிறேன். ஒருவர் குற்றம் சாட்டியதைப்போல் என்னிடம் 'ரெடிமேட்' பதில்கள் கிடையாது,ஆனால் என்னிடம் பதில்கள் 'ரெடி'யாக உள்ளன. என்பதில்களில் ஒன்று "தெரியாது" என்பதாகவும் இருக்கும் என்பதால்.

Thursday, November 26, 2009

ஈடிபஸ்

நாடக ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, மனவியல் ஆர்வலர்களுக்கும் மிகவும் பரிச்சயமான பெயர் ஈடிபஸ். ஸோஃபக்ள்ஸ் எழுதிய கிரேக்க துன்பியல் நாடகங்களில் சிறந்த இந்நாடகம், மனவியலை அறிவியலாக நிறுவ முதல் முயற்சியெடுத்த ஸிக்மண்ட் ஃப்ராய்ட் அவர்களையும் மிகவும் பாதித்த ஒரு நாடகம்.

ஒரு மாலை நேரம் இந்நாடகத்தைப் பார்க்கநேர்ந்த ஃப்ராய்ட் நாடகக்கருவைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் எனும் மனவியல் கோட்பாடு ஒன்றினை முன் வைத்தார். பலத்த சர்ச்சையைக் கிளப்பிய அவரது அந்த சித்தாந்தம், அறிவியல் முறைப்படி தொடர் பரிசோதனைகளால் இன்றளவும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் அதில் ஓர் அடிப்படை இழை நிஜம் என்று பலரின் அனுபவங்களும் கூறிவந்துள்ளன.

ஃப்ராய்ட் சொன்னது: எல்லா ஆண் குழந்தைகளும் தங்கள் தாயிடம் காதலைப்போல் ஓர் ஈர்ப்பு கொள்கின்றன, அதன் காரணமாகவே தந்தையிடம் கிட்டத்தட்ட வெறுப்பும் கொள்கின்றன. அந்த ஆண் குழந்தை தன் தந்தையால் காயடிக்கப்படுவோம் என்ற அச்சத்திலேயே வாழ்க்கையை ஆரம்பிக்கிறது.

இதை அப்படியே எடுத்துக்கொள்வது கூடாது. எதிர்பாலினத்தின் மீதான கவர்ச்சி மட்டுமல்லாமல், தாயின் தொப்புள்கொடியிலிருந்து தொடரும் பிணைப்பின் நீட்சியாகவும்,அவள் பாலூட்டுவதால் இயல்பாய் ஏற்படும் ஒட்டுதல் என்றும் பார்க்கவேண்டும். மேலும் எல்லா ஆண் குழந்தைகளும் தந்தையை வெறுப்பதில்லை. பின் ஏன் ஃப்ராய்ட் அப்படிச் சொன்னார்?

ஃப்ராய்ட் மிகப்பெரிய மேதை, ஆனாலும் பரபரப்பிற்கும் புக‌ழுக்கும் ஆசைப்படும் அவசரக்காரரும் கூட! இன்னும் கொஞ்சம் யோசித்து இந்த ஈர்ப்பு பாலுணர்வின் அடிப்படையில் வருவதல்ல பாசம் எனும் அன்பின் அடிப்படையில் வரும் இயல்பான ஒட்டுதல் என்று முடிவெடுக்கும் முன்பேயே இந்தக்கருத்தை வெளியிட்டு விட்டார். சில அறிவாளிகள் தங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்துகொள்ள மறுப்பது போல்தான் ஃப்ராய்டும் தன் கருத்தில் அடம் பிடித்தார். மானுட வளர்ச்சி, மனத்தின் வளர்ச்சி எல்லாமே பாலுணர்வின் அடிப்படையில்தான் என்று வாதிடும் அளவும் முரண்பிடித்தார்.

ஃப்ராய்ட் பற்றி பிறகு பார்ப்போம், இப்போது ஈடிபஸ் கதை....
கிரேக்க நாட்டில் மிகவும் பழைய காலத்தில்..ஓர் அரசனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது நாட்டின் சோதிடர்களூம் பூஜாரிகளும்,' இந்தக் குழந்தை தந்தையைக் கொன்றுவிட்டு, தாயை மணந்து கொள்ளும்' என்று ஆரூடம் சொன்னார்கள். அரசனும் அதை நம்பி அந்தக்குழந்தையைக் கொன்றுவிடச் சொன்னான். குழந்தையை கொல்ல மனமில்லாத சேவகன் அதை ஒரு மலையடிவாரத்தில் விட்டுச்சென்றான்..பல ஆண்டுகளுக்குப்பின், அரசன் வேட்டைக்குப் போகும்போது வழியில் ஓர் இளைஞனிடம் சண்டைபோட அரசனை இளைஞன் கொன்று விடுகிறான்..பிறகு நாட்டிற்குள் நுழைந்து காவல் தெய்வத்தின் கேள்விகளுக்குப்பதில் சொல்லியதால், அந்த நாட்டின் வழக்கப்படி ராணியை மணக்கிறான்..அவன் தான் ஈடிபஸ், இறந்த அரசன் அவன் தந்தை, அவன் மணந்தது தன் தாயை..பிறகு பல ஆண்டுகளுக்குப்பின் நாட்டில் பஞ்சம். அது தீர்க்க ஆரூடம் கேட்கும்போது தான் உண்மை அவனுக்குத்தெரிகிறது..ராணி தற்கொலை செய்துகொள்கிறாள், ஈடிபஸ் தன்னைக் குருடாக்கிக்கொள்கிறான். 
இதை முத்ரா நாடகக்குழு தமிழில் 1988ல் அரங்கேற்றியது. அந்த நாடகத்திற்கு அரங்கு நிறைந்தது மட்டுமல்லாமல் ஆனந்தவிகடனில் வண்ணப்படத்துடன் ஒரு முழுப்பக்கப் பாராட்டும் கிடைத்தது. (அந்த நாடக அனுபவங்கள் நீளம் கருதி இன்னொரு பதிவில்).
இப்போது ஈடிபஸ் பற்றி..
கதை தான் ஆனாலும் அதிலும் சேதிகள் இருக்கின்றன.விதி வலியது அதை வெல்ல முடியாது என்பதே கதையின் மைய இழை. இது அன்றுமட்டுமல்ல, இன்றும் மக்களிடையே நிலவும் ஒரு பயன் தராத நம்பிக்கை. பயனேதும் இல்லாததால் மூட நம்பிக்கை.

தன்னை ஒருவன் கொல்வான் என்ற அச்சம் வந்தால் மனித குணம் அதற்குமுன் அவனை அழித்துவிடவேண்டுமென்றே இருக்கும். அச்சம் வந்துவிட்டால் சுயபாதுகாப்பு முக்கியமாகிவிட்டால் பாசம் மனத்தில் முதலிடம் வகிக்காது..
அம்மாவைப்போல் ஒரு மனைவி வேண்டும் என்ற ஆழ்மனத்தின் எதிர்பார்ப்பும் நிறைய ஆண்களிடம் உண்டு. தன்னைப்போல் என்றும் தனக்குப்பதிலாக என்றும் பல மாமியார்கள் பொறாமையால் வம்பு செய்வதும் இதனால் தான் என்ற நோக்கில் பார்க்கலாம்.
ஃப்ராய்ட் சொன்னது போல் தந்தை தாயிடமிருந்து பிரித்துவிடுவான் என்ற நேரடி எண்ணம் இல்லாவிட்டாலும், புரியாத வயதில் பல குழந்தைகள் தந்தையும் தாயும் இணைந்திருப்பது தங்களைத் தள்ளிவைக்கவே என்று  கருதலாம்..

இங்கே நம் புராணக்கதை ஒன்றையும் இணைத்துப்பார்ப்போம்..
தேவி குளிக்கப்போகும் போது தன் உடலிலிருந்து ஒரு குழந்தையை உருவாக்கி யாரும் வராமல் காவல் இரு என்கிறாள். அவள் கணவன் ஈசன் வருகிறான், யாராயிருந்தாலும் அனுமதி இல்லை என்று அந்தக்குழந்தை சண்டக்குப்போக, தன் மனைவியின் குழந்தை என்று தெரியாத ஈசன் அதன் தலையை வெட்டிவீசுகிறான். பிறகு உண்மை தெரிய அதற்கு வேறொரு தலையைப்பொருத்திவிடுகிறான்.

இந்தக்கதையில் ஃப்ராய்ட் சொன்ன கூறுகள் உள்ளன. தாய்க்காக தந்தையை எதிர்க்கும் குழந்தை, காயடிக்கப்படுவது போல் தலை வெட்டப்படுகிறது..!! இந்தக்கதையில் இன்னொரு விஷயம்: அந்தக்குழந்தை மிகமுக்கியமான தெய்வமாக ஆனபோதும் தன் தாயைப்போல் ஒருத்தி கிடைக்காததால் கல்யாணமே செய்துகொள்ளாமல் இருக்கிறது!!

இதுபோல் கதைகளையெல்லாம் இன்னும் கொஞ்ச‌ம் உற்றுப்பார்த்தால் வாழ்வில் பல அர்த்தங்கள் விரிவாகும்..