Friday, January 8, 2010

தன்னையழித்தல்



ராகுல்ஜியின் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்த என்  மனைவி தற்கொலை பற்றி அவர் எழுதியிருப்பதைச் சொன்னாள். சாவது என்று முடிவெடுத்தபின் அதற்கப்புறம் நீ வாழ்வதே உனக்காக இல்லையே பின் ஏன் பிறருக்காக வாழக்கூடாது, என்று சொன்னதாய் நான் புரிந்து கொண்டேன். அரைத்தூக்கத்தில் இப்படிப் புரிந்து கொண்டிருக்கலாம். நான்கு நாட்களுக்கு முன் நான் தூங்க ஆரம்பித்தபோது அவள் படித்துக் கொண்டிருந்ததால் அவள் சொன்னது ஒரு மிதமான லயத்தோடு என் காது வழி மனம் புகுந்திருக்க வேண்டும், அதனால் தான் இப்பதிவு.
நேற்று என்னிடம் சில இளைஞர்கள் வந்து முத்துக்குமார் பற்றிய ஆவணப்படம் எடுக்கிறோம் என்று பேட்டி எடுத்தார்கள். (முத்துக்குமார் என்று எல்லாருக்கும் ஞாபகமிருப்பதைப்போல் சொல்கிறேன், ஈழக்கேவலத்திற்காகத் தன்னுயிரை மாய்த்துக் கொண்டவன் அவன்.)  அது தற்கொலையா என்று எனக்கும் அந்த ஆவணப்படம் எடுக்கும் இளைஞனுக்கும் இடையே ஒரு சிறிய தர்க்கம் நேர்ந்தது. என்னைப் பொறுத்தவரை அதுவும் தற்கொலை தான், தற்கொலைக்கு தியாகம் என்றும், கொலைக்கு வீரம் என்றும் ஒப்பனை போடுவதெல்லாம் ஒருவித நாயக வழிபாடுதான்.
தற்கொலை என்றால் என்ன? தன்னுயிர் அழித்துக் கொள்ளுதல் தற்கொலை. உயிர் என்பது எது? சிந்தையா செயலா? இரண்டிலும் இனி எந்தவித சுகத்திற்கும் சாத்தியமில்லை என்ற பின் தானே கொலையும் தற்கொலையும்? கொலை செய்யுமளவு கோபம் வந்தும் இன்று வரை நான் எந்த மனிதனையும் கொன்றதில்லை- என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
ஒருவனது உணர்ச்சிகளை அவனது தன்மானத்தை அவனது ஒப்பனையென்றாலும் காட்டிக்கொள்ளும் உருவத்தைக் காலில் போட்டு மிதித்து கந்தலாக்கி காறி உமிழ்வது ஒரு கொலை என்றால், அதை நிறையவே செய்திருக்கிறேன்.
தன் உணர்ச்சிகளை சந்தர்ப்பச் சூழ்நிலைகளுக்காக சமாதானம் செய்து, விட்டுக் கொடுப்பதும் வளைந்து கொடுப்பதும் ஒரு விதத் தற்கொலை என்றால் பல முறை அப்படி நான் செத்திருக்கிறேன். இங்கே எழுத நினைப்பது  கொலை பற்றியல்ல, தற்கொலை பற்றி,  என்று எழுதும்போதே தற்கொலையும் ஒரு கொலை தானே என்று தோன்றுகிறது. தனதென்று நினைத்துக்கொள்வதால்தானே தற்கொலை! உயிர் யாருடையது? பெற்றவருடையதா/ வளர்த்த சமூகத்திற்கு உடையதா/ சர்வக்ஞான மாயையில் தன்னுடையதா?
நானும் தற்கொலைக்கு முயன்றவன் தான். அன்றைய சோகம் இன்றைய நகைச்சுவையாக இருப்பதும் இயற்கையின் இயல்புதான்.
முத்துக்குமார் போல ஒரு கொள்கைக்காக நான் சாக முடிவெடுக்கவில்லை. (இவனுக்கு முன் இப்படி இனமொழிப்பற்றுடன் செத்தவன் பெயரில் ஒரு பாலம் சென்னையில் இருக்கிறது. அதில் பயணிக்கும் பெரும்பான்மையோருக்கு அந்தப் பாலத்திற்கு அந்தப் பெயர் வைத்திருக்கிறார்களே அவன் யார் என்று தெரிந்து கொள்ளும் ஒரு சோம்பலான ஆர்வம் கூட இல்லை)! 

எனக்கு அந்தக் காலகட்டம் சிக்கலானது. இன்று யோசித்தால் அதுரொம்பச் சாதாரணமான ஒரு விஷயம். நான் அப்போது மனநலப் படிப்பின் தேர்வில் ஃபெயில் ஆகிவிட்டிருந்தேன்! ( ஃபெயில் என்பது தோற்றது அல்ல) இன்றைவிட அன்று அதிகம் தெரிந்திருக்கவில்லை!!! ச்சீ இது நான் விரும்பி ஏற்றுப் படித்த ஒன்று இதிலேயே நான் தேர்வாகாது போனால் நான் எதற்குத்தான் லாயக்கு? இது தான் அப்போதிருந்த எண்ணம். சாவதிலும் ஒரு ஸ்டைல் வேண்டி மர்லின் மன்ரோ போல தூக்க மாத்திரைகளையும் மதுவையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம் என்று முயன்றேன். 

சாகவில்லை!! செத்திருந்தால் இன்று எழுதவும், கிட்டத்தட்ட இருபதாயிரம் பேரையும் குணப்படுத்தியிருக்கவும் மாட்டேன்!! 
அன்று செத்தேனா.இனிதான் சாவேனா? சாவு என்றுமே ஒரு தீர்வாகாது. 

சாவு ஒரு முடிவின் தொடக்கம் என்று கூறும் புராணப் புரட்டுகளின் மீது எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் சாவு திரும்பி வந்து யாரும் சொல்லி விளக்காத ஒரு மர்மம் என்றே புரிந்து கொள்கிறேன். ஆவி வியாபாரம் செய்பவர்களைப் பற்றி இப்போது எழுதுவதாயில்லை. 

சாகவில்லை வாழ்ந்தேன்! வாழும் போது சாவை விரும்பியவர்களையும் சிந்திக்க வைத்தேன் என்பது தான் உண்மை.
முத்துக்குமார் சாவு பற்றி ...
எதற்காகச் செத்தான்? யாருக்காக? வாழ்வது யாருக்காக, எதற்காக என்று   எவ்வளவு கற்பனைக்கதை சொன்னாலும் எப்படி ஒருவன் வாழ்வது தனக்காகத்தானோ அப்படித்தான் சாவும். 
தனக்காவே ஒருவன் சாகிறான். அப்படித்தான் வாழ்கிறான் என்பதால்.
இனி எதுவும் முயலக்கூட முடியாது எனும் நேரத்தில், தான் சாவதாவது முடியுமே என்று சாகிறான். அவன் தியாகியுமல்ல, வீரனுமல்ல. கோழையுமல்ல ஒரு கோணலான பார்வையுள்ள புத்திசாலி. இயலாது என்பதை முயலாமலேயே விட்டுவிடலாம் என்று தீர்மானிக்கும் ஒரு நம்பிக்கையிழந்த ஜன்மம்.
மீண்டும் ஆரம்பத்தில் சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன். சாகலாம் என்று தீர்மானித்தபின், உன் உயிர் உனதில்லையே, அதை ஏன் மூட்டை தூக்கியோ வண்டியோட்டியோ பிறருக்காகச் செலவழிக்கக்கூடாது?
இன்னும் தோன்றும், அப்போது மீதி.

50 comments:

உண்மைத்தமிழன் said...

ஐயா..

முத்துக்குமார் இறக்க வேண்டும் என்று நினைத்தது தனிப்பட்ட வாழ்க்கை மீது ஏற்பட்ட விரக்தியினாலோ.. அல்லது தான் இவ்வுலகத்தில் வாழ முடியாது என்ற தப்பான அபிப்ராயத்திலோ அல்ல..

ஈழப் பிரச்சினைக்காக பல்வேறு தரப்பினரையும் கவர்ந்திழுக்க வேண்டும். அவர்களுக்கு அந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர வைக்க வேண்டும்.. மக்களை ஒன்றுபட வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

பொதுவாக தன்னைத்தானே மாய்த்துக் கொள்வது முட்டாள்தனம்தான் என்றாலும், அந்த கடைசி நிமிடத்தில் கடைசி நொடியில் அவன் அல்லது அவளுக்குள் ஏற்படுகின்ற அந்த உணர்வை யாரால் கட்டுப்படுத்த முடியும்..? சொல்லுங்கள்..!

Dr.Rudhran said...

பொதுவாக நன்றியென்று நினைத்தால் கூட அப்படியொரு பின்னூட்டம் நான் போடுவதில்லை. இது வேறு என்பதால் சொல்கிறேன்.
இன்னொரு தலைமை வரும் என்றும் அதற்குரிய ஓர் ஆயுதமாகத் தான் மரணம் இருக்குமென்றும் எழுதிச் செத்த அவன், நம்பிக்கையுடனா செத்தான்/
அந்த நேரத்து உணர்ச்சியில்தான் வன்புணர்ச்சி செய்தேன் என்று சொல்பவனும் இப்படித்தானே சொல்வான்/ சாவது யாருடைய உரிமை? அப்பனும் ஆத்தாளும் பேத்தபோது வராத உரிமைக்குரல் சாக்கும்போது எப்படி வரலாம்?

uthamanarayanan said...

தான் தனக்கு தேவை இல்லை என்று முடிவுக்கு வந்த பிறகு பிறர்க்காக வாழ்வது தானே இயல்பான வொன்று. நீங்கள் எழுதியதில் முத்துகுமார் வந்ததால் வேறு தளத்தில் விவாதம் போகுமென்று நினைக்கிறேன்.உணர்ச்சி சார்ந்த கேள்விகள் நிறைய எழும்பும் என நினைக்கிறேன்.பரவாயில்லை நீங்களும் அதற்க்கு தயார் தான்.
நன்றி

ராஜவம்சம் said...

தற்கொலை என்பது கோழைகள் செய்யும் முட்டால் தனமான வீரச்செயல் என்பது என் கருத்து
நோக்கம் எதுவாக இருந்தாலும்

இஸ்லாமிய மார்க்கநம்பிக்கைப்படி (மதம் அல்ல)தற்கொலை செய்துக்கொல்லும் யாருக்கும் சொர்க்கம் இல்லை அது ஜிஹாத் என்ற பெயரில் செய்தாலும் நரகம் தான்!

Starjan (ஸ்டார்ஜன்) said...
This comment has been removed by the author.
Starjan (ஸ்டார்ஜன்) said...

உயிரோட மதிப்பு தெரியாதவங்க தான் தற்கொலை / கொலை செய்வாங்க .

தற்கொலை என்பது நம்மை பார்த்து , நாமே புறமுதுகிட்டு ஓடுவதுக்கு சமம் ...

Thekkikattan|தெகா said...

இந்தக் கட்டுரைக்கு பின்னூட்டம் விட மனசில்லை. ஏனெனில், தர்க்க ரீதியாக நீங்கள் கூறுவது முற்றிலும் சரியாகப் பட்டாலும்...

...//தன் உணர்ச்சிகளை சந்தர்ப்பச் சூழ்நிலைகளுக்காக சமாதானம் செய்து, விட்டுக் கொடுப்பதும் வளைந்து கொடுப்பதும் ஒரு விதத் தற்கொலை என்றால் பல முறை அப்படி நான் செத்திருக்கிறேன்.//.... <=== இந்தப் பத்தியில் குறிப்பிட்டதினைப் போன்று வாழக் கற்று கொள்வதிலேயே ஒரு தனி மனிதனின் 'தப்பிக் கிடத்தலும்' as a species, a successful survival strategyயாகவும் இருக்க முடியும்.

நம் போன்று இன்றைய அரசியல் சமூகத்தில் எல்லா நிலையிலும் ஊழல் மலிந்து, சுயநலம் பெருக்கெடுத்துப் போன ஓரிடத்தில், ஒரு நாள் விடியும், யாராவது வந்து காப்பாற்றுவார்கள் என்று எந்த நம்பிக்கையில் - முத்துகுமார்கள் அந்த survival strategyயின் மீதே நம்பிக்கை இழந்த பட்சத்தில் எது போன்ற ஆரோக்கியமான, நேர் மறையான எண்ணங்களை கொண்டு சிந்தித்திருக்க முடியும்? வேறு எதுமாதிரியான மாற்று போராட்டங்களை முன் வைத்திருக்க முடியும்?

மனம் ஒரே நீள் வட்டப் பாதையில் சுழல ஆரம்பித்து, அதிகப்படியான உணர்ச்சியின் வாய்ப்பட்டிருந்தால், அதுவும் கையறு நிலையில் எல்லாமே தன்னைச் சுற்றி சூன்யமாகப் காட்சியளித்துக் கொண்டிருக்கும் ஒரு சூழலில்... அதற்காக தற்கொலை ஒரு prescribed medicationஆகிவிட முடியாது .

...//கோழையுமல்ல ஒரு கோணலான பார்வையுள்ள புத்திசாலி. இயலாது என்பதை முயலாமலேயே//...

அதே... இல்லையெனில் தீவிரவாதியாகிப்(?) போய்விடலாமா ;) ?

நீண்டுப் போச்சு, பின்னூட்டம். உண்மைதான், டாக், in stead, he could have used up his intellect in waking up many others.

சிங்கக்குட்டி said...

தற்கொலை எப்படி வீரமாகும் :-) வேடிக்கை...

இன்று "தற்கொலை" செய்பவர்களைவிட, "தற்கொலை" செய்யப்படுபவர்களே அதிகம் :-)

வீரம் என்பது,

கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நெப்போலியன் தப்பி வந்து, தன் நம்பிக்கைக்குரிய வீரர்களுடன் சேர்ந்து மீண்டும் போராட வேண்டும் என்று சொல்லும் போது, அவரை சுற்றி நூற்றி சொச்ச வீரர்களே உள்ளனர்.

அவர்கள அனைவரையும் தடுத்து ஓரிடத்தில் நிறுத்தி விட்டு, பல நாட்டு எதிரி படைகள் இருக்கும் இடத்தை தேடி தனியாக தன் குதிரையில் சென்ற அவரை பார்த்த எதிரி படைகள் அனைத்தும் ஆச்சரிய பட்டன! (அவர்களில் பலர் நெப்போலிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள்).

சற்றும் தளராத நெப்போலியன், அவர்கள் அனைவரையும் பார்த்து சொன்னது, " நான் உங்கள் பேரரசன் வந்துள்ளேன் என்னை நம்பி வருபவர்களை காப்பாற்றுவேன், வெற்றி நமதே, வாருங்கள் மீண்டும் ஒரு புரச்சிக்கு தயாராகுவோம்!, என்று சொன்னவுடன் அத்தனை படைகளும் அவர் பின்னால் வந்தது, அந்த போரில் வென்று மீண்டும் அவர் பேரரசர் ஆனார்.

இது வீரனின் கதை.

இங்கு மீண்டும் கேட்கிறேன் தற்கொலை எப்படி வீரமாகும்?

எப்படியோ, உங்கள் பதிவுக்கு சமந்தமான பின்னூட்டம் "புத்திசாலியுமல்ல" என்பதுதான் உண்மை :-), இது உங்களுக்கும் புரியும்.

குட்டிபிசாசு said...

எதிர்ப்பைக் காட்டத் தற்கொலை என்பது ஒரு தவறான எடுத்துக்காட்டாக இருக்கும்.

தற்கொலையைத் தியாகமாக, வீரமாக பேசுபவர்கள் அதே தியாகத்தைச் செய்யத் துணிவார்களா? குடும்பம் இருக்கு, குழந்தை இருக்கு என்று தான் சொல்வார்கள். செத்தவன் மட்டும் என்ன அனாதையா?

மனிதவெடிகுண்டுத் தாக்குதல் கூட தற்கொலை தானே. இழப்பைச் சந்தித்தவன் வெறித்தனம் என்பான். பார்த்து ரசிப்பவன் தியாகம், வீரம் என்கிறான்.

குப்பன்.யாஹூ said...

உண்மை தமிழன் சொன்னது போல, அரசு மற்றும் பொது மக்களின் கவனத்தை தயுர்ப்ப வேறு வழி தெரியாததால் முத்துகுமார் தன உயிர் இழப்பு நடந்தால் தான் இந்த மக்களும் அரசும் திரும்புவார்கள் என்று தன உயிரை மாய்த்து கொண்டான்.


இன்று நாம் நடத்தும் இந்த உபதேசங்கள், கருத்து வாதங்களை அன்று முத்துகுமாரிடம் சொல்லி இருந்தால் அவர் தற்கொலைக்கு முயன்று இருக்காமல் வேறு மாற்று வழி கவன ஈர்ப்பிற்கு முயன்று இருப்பார்.

தற்கொலை தவிர்த்தல் பற்றி கூட நம் பள்ளிகூடங்களில், கல்லூரிகளில் அலுவலகங்களில் பாடம் நடத்த வேண்டும்.

-/பெயரிலி. said...

ஈழக்கேவலத்திற்காக ??

குட்டிபிசாசு said...

//ஈழக்கேவலத்திற்காக ??//

I suppose that he says
ஈழக்கேவலம் = ஈழத்தில் நடந்த கேவலம்

(கண்ணுகட்டுது!! வரும்போது பூதக்கண்ணாடியோட வருவாங்க போல!)

Thenammai Lakshmanan said...

//தற்கொலைக்கு தியாகம் என்றும், கொலைக்கு வீரம் என்றும் ஒப்பனை போடுவதெல்லாம் ஒருவித நாயக வழிபாடுதான். //

well said Dr. RUDHRAN

Thenammai Lakshmanan said...

//உயிர் யாருடையது? பெற்றவருடையதா/ வளர்த்த சமூகத்திற்கு உடையதா/ சர்வக்ஞான மாயையில் தன்னுடையதா?//

arumaiyaa solli irukiingka doctor

Thenammai Lakshmanan said...

//சாகலாம் என்று தீர்மானித்தபின், உன் உயிர் உனதில்லையே, அதை ஏன் மூட்டை தூக்கியோ வண்டியோட்டியோ பிறருக்காகச் செலவழிக்கக்கூடாது//

ithukkaagavee moral science clasess in schools innum active aa seyal padanum doctor

Thenammai Lakshmanan said...

//அப்பனும் ஆத்தாளும் பேத்தபோது வராத உரிமைக்குரல் சாக்கும்போது எப்படி வரலாம்/

definite aa ..

u said it in a correc way doctor..

i like this issue fuly ...
each and everyword inspires me...

Rettaival's Blog said...

Exactly Doctor! தற்கொலை போன்ற அபத்தங்களையும், கொள்ளையடிப்பவனின் சாமர்த்தியத்தை (வீரப்பன்) ஹீரோயிஸம் என்றும் போதிக்கும் அல்லது விற்றுக் காசாக்கும் மீடியா தான் கண்டனத்துகுரியது. மீடியா அடிக்கும் கூத்துக்களில் இன்னும் சில வருஷங்களில் வீரப்பன் காட்டு தெய்வமானாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. அதே போல் தான் முத்துக்குமாரும். தற்கொலை செய்வதனால் ஆள்வோர் கவனம் திரும்பும் என்று நினைப்பவர்களால் சமூகத்துக்கு என்ன பிரயோசனம்? நாம் என்ன 1967 லா இருக்கிறோம் ? அன்றைக்கு வேறு எங்காவது ஸ்கூப் இருந்திருந்தால் மீடியாவின் கவனம் சிதறியிருக்கும். அரசாங்கங்கள் நடத்தும் பரமபத விளையாட்டில் இந்த மாதிரி விட்டில்கள் சமயங்களில் மாட்டி விடுவதுண்டு.

Anonymous said...

கப்பல் உட்டு செயிலுக்குப் போவமுன்னே தெரிஞ்சே செஞ்சா உப்பை கூட்டி கட்டினா ஒரு நாளு செயிலுன்னு தெரிஞ்சே செஞ்சா வீரமா விவேகமா? அடிக்கடி கொழம்பிடுரேன்

போபர்சு டாங்கில துட்டு தின்னவுங்க நாட்டுக்கு உத்தமனுங்கன்னா வீரப்பனும் உத்தமனேதான். கிஷ்ணனும் ராமனும் சாமிங்க ஆவலாம் காத்தவராயனும் அய்யனாரும் வீரப்பனும் ஆவக்கூடாதா?

-/பெயரிலி. said...

குட்டிபிசாசு
Thank you for your proposal :-)

கண்ணு தானா கட்டாது. நாங்கதான் கட்டிக்கணும். அவுத்துடுங்க

Chitra said...

அன்றைய சோகம் இன்றைய நகைச்சுவையாக இருப்பதும் இயற்கையின் இயல்புதான். ...............I have felt many times in my life. Thank you for a nice article.

M.S.R. கோபிநாத் said...

நல்லதொரு பதிவு டாக்டர்.

ulagappan said...

Doctor,
அம்மா, படித்த திரு. இராகுல்ஜியின் புத்தகத்தின் பெயரினைத் தெரிவித்தால் நன்றியுடயவேன், ஆவேன். மேலும், மற்ற புதிய வாசகர்களுக்கும் திரு. இராகுல்ஜியினைப் பற்றிய ஆர்வத்தையும் தூண்டும் என நம்புகிறேன்.

நன்றி.

Anonymous said...

Doctor I beg you please do not waste your precious time to give an interview regarding the Idiot Muthukumaran.

Time can be spent for hundreds of patients...(as you know)

I can fully understand the inner core of the article's intention.

But, people like unmai thamilan etc.. are emotionally attached to this issue and they can't come out or adamantly stick to this issue forever for some reason (?!!)

Prabhu
Sorry for English comment (No Tamil Font).

Dr.Rudhran said...

ராகுல்ஜி "ஊர் சுற்றிப் புராணத்"தில் தற்கொலை செய்து கொள்பவர்களைப் பற்றிச் சொன்னது "ஒருவன் தன் வாழ்க்கை வீணாகி விட்டது என்று கருதியிருந்தால் மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் அதைக் கழித்திருக்கலாம் இல்லையா? தன் சட்டையை வீசி எறிய வேண்டுமென்று எண்ணினால் அதை நெருப்பில் வீசி எறியாமல், அது மிகவும் தேவைப்படும் ஏழைகளுக்குக் கொடுக்கலாம் அல்லவா!"
வேறு அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும் இதுதான் "செத்தாரைப் போலத் திரி"வதா?

செல்லதுரை said...

டாக்டர்

என்ன சொல்ல வர்றீங்க... முத்துக்குமாரின் மரணம் முடிந்து போன ஒன்று...

வருங்கால சந்ததிக்கு பயன்படும் பல விஷயங்கள் இருக்கிறதே...அது பற்றி விவாதிப்போமே...

இந்த கலவர பின்னூட்டங்களூடே... விவேக் ஒரு படத்தில் சொன்னதும் ஞாபகத்திற்கு வந்தது....

டாக்டர் நீங்க இப்போதான் +2 பாஸ் பண்ணினீங்களா??

R.Gopi said...

இன்றைய மீடியாவிற்கு தீனி போடுபவர்கள் அனைவருமே இங்கு ஹீரோதான்...

இதில், யாரை நொந்து என்ன பயன்?

இன்னும் யார் யார் எல்லாம், இந்த நாட்டுல ஹீரோ ஆக போறாங்களோ?? நினைத்தாலே பயமாய் இருக்கிறது....

நேரமிருப்பின், இங்கேயும் வருகை தாருங்கள் திரு.ருத்ரன் அவர்களே... உங்களின் மேலான கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்...

www.jokkiri.blogspot.com

www.edakumadaku.blogspot.com

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நீங்கள் சொல்லியிருப்பது போன்று மனத் தெளிவு எல்லாருக்கும் இருந்தால் (சாவதற்க்கு பதில் வேறு யாருக்காவது வாழ்க்கையைக் கொடுப்பது என்று) யாரும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்களே.. என்னைக் கேட்டால் - உங்களின் இந்தப் பதிவு இன்னும் நிறைய பேரை ரீச் செய்ய வேண்டும்.. குறிப்பாக இளைஞர்கள்.. நீங்கள் சொல்லியிருந்ததைப் போன்று இன்னும் பலரும் முயலக்கூடும்.. பரீட்சையில், காதலில் மற்றும் இன்னும் பிற இத்யாதிகளில் - பாஸாகாமல் போனதற்க்காக.. எனக்கு வானமே எல்லை படம் நினைவுக்கு வருகிறது :)

ஆனாலும், முத்துக்குமார் விஷயத்தில் உங்கள் கருத்தை ஆமோதிப்பதில் எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது.. உயிர் போகும் என்று தெரிந்தே ஒரு போராளி போருக்கு போகிறான்.. தற்கொலைத் தாக்குதல் தொடுப்பவனும்.. அவர்களுக்கும் இவனுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் ஒரு நோக்கத்துக்காக உயிர் விடுகிறார்கள் எனக் கொண்டாலும், இவனும் ஈழத்தை நோக்கின கவனயீர்ப்புக்காக விட்டான் என எடுத்துக் கொண்டால் - இதிலும் ஒரு நோக்கம் உள்ளது தானே.. உண்ணாவிரதம் (உண்மையான, நேர்மையான) கூட ஒரு மாதிரியான ஸ்லோ சூசைட் தானே?

மற்றபடிக்கு நீங்கள் சொல்லியிருந்த கருத்தினில் உடன்படுகின்றேன்.. உயிரை நீத்ததற்க்கு பதிலாக ஆக்கப்பூர்வமான வழியினில் தன் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கலாம்.. அகதிக் குழந்தையர் சிலரை தத்தெடுத்து வளர்ப்பது போன்று..

Sai Ram said...

தற்கொலை என்பது கோழைத்தனம் என பலர் நினைக்கிறார்கள். அப்படியெனில் கிழக்கு பார்த்து உட்கார்ந்து உண்ணா நோன்பு இருந்து இறந்த தமிழ் அரசர்கள் எல்லாம் கோழைகளா? முதிய வயதில் தானாக உணவை மறுத்து இறந்து போகும் ஜைனர்கள் எல்லாம் தவறிழைத்தவர்களா? தன் நிலையில் இருந்து கெட்டதாய் நினைக்கும் ஒவ்வொரு சாமுராயும் வாளால் தன்னை தானே குத்தி கொன்று கொண்டது எல்லாம் தவறா? போராட்டத்தில் தீக்குளித்த புத்த பிட்சுக்கள் கோணலான புத்திசாலிகளா? உண்ணாநோன்பு இருந்தால் இறந்து தான் போவோம் என்று தெரிந்தும் உண்ணாநோன்பு இருக்கிறார்கள். அன்றைக்கு காந்தி தொடங்கி இன்றைக்கு அரசியல்வாதி வரை. இவர்கள் எல்லாம் தப்பான போராட்ட முறையை கொண்டவர்களா?

அன்பு ருத்ரன், இது என்னுடைய புரிதல். தீக்குளித்தல் என்பதும் ஓர் ஆயுதமாகவே போராட்டமாகவே பார்க்கபடுகிறது.

Dr.Rudhran said...
This comment has been removed by the author.
Dr.Rudhran said...

சாய்ராமுக்கும் எல்லாருக்கும்,
புத்தனே செய்தாலும் ஒரு தவறு சரியாகிவிடாது. இவன் தற்கொலைக்கு கொள்கைப் பிடிப்பு எனும் வீரத் திரைக்கதை அமைப்பவர்களுக்கு, இந்த வீரத்தின் விளைவு என்ன? இவனுக்கே தெரியும் தன் பின் ஒரு கூட்டம் இல்லையென்று,
பின் அவன் செய்தது ஒரு கவன ஈர்ப்பு மட்டுமே என்றால் விடலைப் பெண் தன் தாவனியில் சுடருக்கு மாட்டிக்கொள்வது என்ன ஒரு ஆர்வக்கோகொளாரினாளாலா? அவளுக்கு முதிர்ச்சியில்லை என்று நாம் சொன்னாலும் அவளிடம் ஒரு தீவிரம் இல்லையா? இரண்டும் உள்ளே எப்படி வேறு?
அப்புறம் காந்தி! அந்த மனிதன் செய்தது ஒரு மிரட்டல். அப்படி மிரட்டப் பார்க்கும் பலர் ஆழம் தெரியாமல் காலை வீட்டுத்தான் சாகிறார்கள்.
மீண்டும் என் கருத்து இது தான்.
தற்கொலை தியாகம் அல்ல. அப்படிச்சொல்லி வாழ்க்கையில் சாத்தியங்களைக் காண மறுப்பவர்களை, முடியாது என்று நொந்து கிடப்பவர்களை, வா நாளைக்கு நீ செத்தால் ஒரு சிலை என்று தூண்டிவிடாதீர்கள். அடுத்த பாலத்தின் போது அந்தச் சிலை கூட இருக்காது.

Dr.Rudhran said...

sorry for the typos.. i am using a new key board..however no apologies can undo a mistake.

Dr.Rudhran said...

சொல்ல வந்த விஷயம், இயலாமையில் சொந்த இயலாமை சமூக இயலாமை என்று பேதம் இல்லை.
முடியாது, இனி எதுவும் நடக்காது எனும் போது தான் சாக்கலாம் என்று முடிவு வரும். தான் சாவு பெற்றோரின் ஜாதிப்பற்றை மாற்றும் என்று ஏமாந்து சாகும் பெண் போலத்தான் இவநௌம். தான் பிணத்தை வைத்தும் அரசியல செய்யச் சில முயல்வார்கள், தையும் சகித்துக்கொண்டு இந்த மக்கள் இருப்பார்கள் என்று நினைக்காமல் ஒரு பெரிய புரட்சிக்கு வித்து என்று தான் வாழ்வை முடித்துக்கொண்டான்.
நான் முதலிலேயே அவனைப்பற்றி எழுத நினைக்கவில்லை, அந்த நேரம் என்னிடம் பேசிய இளைஞர்களின் மனநிலையில் சாவது ஒரு சாகசம் எனும் தவறான எண்ணம் இருந்ததால் இப்பதிவு,

தருமி said...

//அப்புறம் காந்தி! அந்த மனிதன் செய்தது ஒரு மிரட்டல். //
காந்தி படம் பார்த்ததும் என்னிடம் வெள்ளைத் தோல் பெண்மணி 'சிரித்துக் கொண்டே' சொன்னது: உங்கள் காந்தி மொத்தம் 64 தடவை உண்ணா நோன்பு கொண்டார்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//தன் சாவு பெற்றோரின் ஜாதிப்பற்றை மாற்றும் என்று ஏமாந்து சாகும் பெண் போலத்தான் இவனெல்லாம். தன் பிணத்தை வைத்தும் அரசியல செய்யச் சில முயல்வார்கள், எதையும் சகித்துக்கொண்டு இந்த மக்கள் இருப்பார்கள் என்று நினைக்காமல் ஒரு பெரிய புரட்சிக்கு வித்து என்று தான் வாழ்வை முடித்துக்கொண்டான்.//

அருமை ருத்ரன் சார்.. தங்களுடன் உடன்படுகின்றேன்..

Thenammai Lakshmanan said...

//புத்தனே செய்தாலும் ஒரு தவறு சரியாகிவிடாது. இவன் தற்கொலைக்கு கொள்கைப் பிடிப்பு எனும் வீரத் திரைக்கதை அமைப்பவர்களுக்கு, இந்த வீரத்தின் விளைவு என்ன? இவனுக்கே தெரியும் தன் பின் ஒரு கூட்டம் இல்லையென்று,
பின் அவன் செய்தது ஒரு கவன ஈர்ப்பு மட்டுமே//

//தற்கொலை தியாகம் அல்ல. அப்படிச்சொல்லி வாழ்க்கையில் சாத்தியங்களைக் காண மறுப்பவர்களை, முடியாது என்று நொந்து கிடப்பவர்களை, வா நாளைக்கு நீ செத்தால் ஒரு சிலை என்று தூண்டிவிடாதீர்கள்//


I AGREE WITH THESE TWO POINTS OF U DOCTOR

? said...

நான் மணி

தான் தூக்குமேடை ஏறுவோம் என்று தெரிந்த பின்னரும் மன்னிப்பு கேட்க மறுத்த பகத்சிங் ஒரு கோழை. தான் தோற்று விடுவோம் எனத் தெரிந்த பின்னரும் நான்காவது மைசூர் போரில் வெள்ளையருடன் போரிட்டு மடிந்த திப்பு ஒரு மடையன். இந்தியாவின் அடிமைச் சிப்பாய்களால் தூக்கி நிறுத்தப்படும் தான் ஒரு பகதூர்ஷா ஆக முடியாது எனத் தெரிந்த பின்னும் அவர்களுக்கு தலைமையேற்ற இரண்டாம் பகதூர்ஷா ஒரு கோழை. இதெல்லாம் சொல்லித் தெரிந்துகொள்ள உங்களைப் போன்றவர்கள் அன்று இல்லாமல் போய் விட்டார்கள்.

தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்த முனைபவனை கொலை செய்யும் பெண்ணின் செயலை வெறும் கொலை என்று எனக்குத் தெரி போலீசு மட்டும்தான் சொல்ல முடியும் எந்த சமூக மதிப்பீடும் இல்லாமல். தற்கொலை என்று நீங்கள் படிப்பில் தவறியதையும் முத்துக்குமாரின் தியாகத்தையும் ஒன்றுபடுத்தியபோதே உங்களது நோக்கம் வெளிப்பட்டு விட்டது. முத்துக்குமார் தவறிழைக்கவில்லை என நான் சொல்லவில்லை. ஆனால் அவனது தவறு அரசியல் சித்தாந்த்துறையில்தான் உள்ளதே தவிர, கோழைத்தனமா அல்லது வீரமா என்பதில் இல்லை. தனது தற்கொலை பேசாமல் மவுனமாக இருக்கும் ஒரு ஜனநாயக கோரிக்கைக்கு ஆதவராக பேச மறுக்கும் சமூகத்தை பேச வைக்கும் எனபது தெரிந்தே தேர்வு செய்யும் ஒருவன் கோழையாக இருக்க முடியாது. அவ்வளவு ஏன் இரட்டைக் கோபுரத்தை தாக்கி அழிக்கும் தனது செயல் அமெரிக்காவை அழிக்க முடியாது என்றாலும் அதனது விளைவுகளை அதிர்வுகளை புரிந்து கொண்டு தற்கோலைக்கு தன்னை தயார் செய்ய அல் கோய்தா காரனுக்கும் கோழைத்தனம் இருந்திருக்க முடியாது.

புரட்சி அல்லது மாற்றத்தை விரும்புபவர்கள் கொலை அல்லது தற்கோலை என அதனை தனிநபர்கள் மீதான தீர்ப்பாக இன்னும் சரியாகச் சொன்னால் தனிநபர் மீதான மதிப்பீடாக மாற்றாமல் இன்னும் சரியாகச் சொன்னால் தனிநபர் வழிபாடு அல்லது துவேசமாக மாற்றாமல் அதன் சமூக விளைவுகளில் இருந்தே அளவிடுவர். அந்த முறையில் நீங்களும் அளவிடவில்லை. வந்த இளைஞர்களும் மதிப்பிடவில்லை.

இதற்கு அடிப்படை உயிர் எனத் தாங்கள் புரிந்த விசயத்தில் உள்ளது. சிந்தையில் மகிழ்ச்சி இருந்தால் மாத்திரம் உயிர் நிலைக்குமா.. ஆர் யூ எ மெட்டிரியலிஸ்டு.. ஆர் நாட்... உயிர் செயல் என்றால் அது சமூக செயலா அல்லது செல்களின் செயலா... தற்கோலை யும் ஒரு கொலைதான். தானே கொலை செய்வது என்ற அர்த்தம்தான் அதில் உள்ளதே தவிர தனது சொத்தை உடைப்பது என்ற பொருளில் அல்ல என நினைக்கிறேன். உயிரை யாருக்கும் சொந்தமாக்க முடியாது. ஏனெனில் உயிர் என்பது பவுதீகமான பொருள் அல்ல• அது ஒரு இடையறாத செயலின் விளைவுதான் உயிர். ஒரு செயலை யாருக்கு சொந்தமாக்க முடியும். கடவுளா தேவியா என்று கூட நீங்கள் முடிவு எடுக்க கூடும்.

த‌னக்காக பிறக்கிறான் அல்லது இறக்கிறான் என்பது உங்களது அகநிலையான கருத்து. புறவயமான உலகின் உண்மை அது இல்லை.எதுவுமே முடியாத போது பலரும் அறிவாளிகள் மற்றும் நீங்கள் குறிப்பிடுவது போன்ற கோணலான புத்திசாலிகள் கூட டாஸ்மாக் தானே போகின்றார்கள். அதுதானே தன்னுடைய பிரச்சினையை தனக்குள்ளே தீர்க்கும் நாயக வழிபாட்டாளர்களின் நிலைமை. முத்துக்குமார் ஏன் தற்கொலையை தேர்வு செய்தான். அதற்கு ஒரு சமூக விளைவு இருக்கும் எனக் கணக்கிட்டதில் அவனது தவறு இருக்கலாம் அது சமூக விஞ்ஞானம் என்ற பாடத்தில் அவன் படிக்கத் தவறிய பக்கங்கள்.

தன்னுடைய சாவின் மூலம் சமூகத்தை பேச வைக்க முடியும் என நன்றாக சிந்தித்து முடிவெடுக்கும் தற்கொலைப் போராளிகளை கேவலப்படுத்தும் முயற்சி இது... தங்களது தொழில் மூலம் இதனை நியாயப்படுத்த முயற்சி செய்கின்றீர்கள்

Dr.Rudhran said...

பகத்சிங் செய்ததும் கொலைதான். அதைச் செய்வது அவனைப் பொறுத்தவரை ஒரு தண்டனை தரும் செயல். ஆனால் ஒரு தூக்குமேடை தொழிலாளியோ ராணுவ வீரனோ தவிர யார் இன்னொரு உயிரைப் பறித்தாலும் அதன் பெயர் கொலை தான். தற்கொலையும் அப்படித்தான்.
சரி உங்கள் தியாகியின் தீக்குளிப்பு என்ன செய்தது? அதற்குமுன் மழையில் கருணாநிதியை நம்பி சங்கிலியாய் நிறவர்கள் அத்தனை பெரும் திறந்திருந்தாலு கூட அரசு ஒப்புக்காவது எயதாவது செய்வதாகச் சொல்லியிருக்கும். இந்தச் சமுதாயத்தின் மனநிலை அவனுக்குத்தெரியாமல் இல்லை. அவன் கடிதமே அதைச் சுட்டிக்காட்டுகிறது.என்ன மாற்றம் வரும் என்று செத்தான்? அதில் ஏதாவது ஒரு சதவிகிதமாவது நடந்ததா?
உணர்வுகளைக் கொச்சைப்படுத்துமளவு நான் இன்னும் மழுங்கிவிடவில்லை, ஆனால், நாயக ஆராதனையில் அடிப்படைகளை மறுப்பதை விட்டால்தான் அடுத்தகட்டம், புரட்சி என்பது தெளிவின் விழிப்பு, உணர்ச்சியின் கொந்தளிப்பு மட்டுமல்ல.

? said...

நான் மணி

ப‌கத் செய்த்து கொலை என்றும் ராணுவ வீரன் செய்த்து கொலை அல்ல என்றும் அன்றைக்கே பேசிய துரோகி காந்தி எனது ஞாபகத்தில் வந்து போனது தற்செயல் ஆனது அல்ல• போரில் ஈடுபடும் போராளியும் ராணுவ வீரனும் ஒன்று அல்ல என்ற உங்களது புரிதல் வியப்புக்கும் பக்கச் சார்பான குறிப்பாக அரசு வழிபாட்டுக்கும் உரியது.

முத்துக்குமார் செய்த்து தியாகம்தான். மாற்றம் என்ற மாபெரும் இயக்கத்தின் மீது மனிதர்கள் வைக்கும் நம்பிக்கை அவனிடம் இருந்த்து. மாறவே மாட்டார்கள் நோயாளிகள் என நீங்களும் கருத மாட்டீர்கள் எனக் கருதுகிறேன். என்ன மாற்றம் வரும் என்பதற்கு மருந்து ஒற்றைத்தீர்வு மட்டும் கிடையாது என்பதும் தங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். அதுவும் முத்துக்குமார் போன்ற சமூக மருத்துவமான போராட்டங்களில் சரியான அரசியல் தெளிவு இல்லாதவர்கள் எதிர்காலத்தை சரியாக கணிக்க முடியாது என்பதும் தங்களுக்கு தெரிந்து இருக்கும். இந்த கேள்வியை நீங்கள் முத்துக்குமாரை மாத்திரமல்ல திப்பு, பகத், நக்சல்பாரியில் அன்று போராடி உயிர்நீத்த 9 ஏழை விவசாயிகள், தெலுங்கானா போராட்டத்தில் பங்கு பெற்றோர், பாலாதீனத்தில் டாங்கிகளை கல் எறிந்து விரட்ட முடியும் எனத் தப்புக்கணக்கு போடும் சிறுவர்கள் என அனைவரிடமும் கேட்க முடியும்.

ஏதாவது செய்ய நினைப்பவர்கள் நிரந்தரமான தீர்வை முன்வைக்கும் புரட்சிக்கு எதிரானவர்கள். இதுதான் செய்ய வேண்டும் என்ற திட்டமும் அந்த திட்டம் நிறைவேறாத போது அதன் அக மற்றும் புறக்காரணிகளை பரிசீலித்து மாற்றுபவர்கள்தான் சமூக விஞ்ஞானிகளாகிய கம்யூனிஸ்டுகள். தோற்றுப்போவதால் மாத்திரமே திட்டமிட்ட முயற்சி அபத்தமாகி விடுவதில்லை. ஆனால் ஒரு சதவீதம் வெற்றிபெற முடிந்தால் கூட லாபம் என நினைப்பது அதற்காக யாருடன் வேண்டுமானாலும் கூட்டுச் சேர்வது தன்னை முற்போக்காளர் என நினைத்துக் கொள்பவர்களுக்கு அழகல்ல•.

கூர்மைப்பட்டிருப்பதாக தாங்கள் கருதும் சில விசயங்களில் உங்களது கூர்மையின்மை தெளிவாக தெரிகின்றது. கூர்மைப்பட்டு பிறகு மழுங்கியவர் என நான் உங்களை சொல்லவில்லை. தனிநபர் பற்றி தெளிவாக உள்ள தங்களுக்கு சமூகம் பற்றி மங்கலாக தெரிந்திருப்பது வியப்பாக இருந்த்து. ஒருவேளை மக்கள்திரளில் நடக்கும் போராட்டங்கள் இன்னும் அறிவுஜீவிகளின் வாசலை இன்னும் தட்டவில்லையா எனத் தெரியவில்லை.

யார் நினைத்த்துதான் நடந்து இருக்கிறது. அதற்காக மனிதகுலம் நினைப்பதை ஈடேற்ற உழைக்காமலா இருக்கிறது. சினிமா, போதை, சீரழ்ழ‍ழிவு கலாச்சாரம் நிலவும் கல்லூரியில் படிக்கும் தனது பிள்ளை இதற்கு மத்தியிலும் வீட்டு கஷ்டத்தை நினைத்து படிப்பான் என நம்பாத தந்தையும் தாயும் உள்ளனரா.. அவனுக்கு வேலை இல்லை எனத் தெரிந்தாலும் படிக்க வைக்காமல் இருக்கின்றார்களா.. தனக்கு கஞ்சி ஊற்றுவானா இல்லையா என்ற உறுதிமொழி பெற்றுக் கொண்டா அவனுக்கு கேட்ட திண்பண்டமெல்லாம் வாங்கித் தருகிறார்கள். தனக்கென்றால் ஒரு பார்வை... பொதுவுக்கென்றால் உத்தாரவாதம் என்ற பெயரில் அந்தக் கண்ணுக்கு சுண்ணாம்பு. வியப்புத்தான்

உணர்ச்சி என்பதன் கொந்தளிப்பல்ல புரட்சி ஆனால் உணர்ச்சியற்ற ஜென்மங்களால் நடத்தப்படுவதுமல்ல•.. சந்தர்ப்பவாதி கூட உணர்ச்சிவசப்படாமல் தனது காரியத்துக்காக அறிவின் தெளிவோடுதான் பயணிக்கிறான். கருணாநிதி, வைகோ, திருமா, நெடுமா என எத்தனை போரை உதாரணம் காட்ட முடியும்

? said...

நான் மணி

ருத்ரனுக்கு... ரஜினியும் ராமனும் கதாநாயகர்களாக இருக்கும் நாயக வழிபாட்டுத் தேசத்தில் தியாகம் என இன்று நாம் அழைக்கும் பகத் போன்றவர்கள்தான் கதாநாயகர்களாக அறிமுகப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். அது நடக்காத்த‍ற்கு காரணம் முதலில் அது கதாநாயகன் வழிபாடு ஆகிவிடும் என அதனை பலரும் முன் எடுக்கவில்லை. இரண்டு அவர்கள்தான் சரியானவர்கள் மீதமிருந்தவர்கள் அதற்கும் கீழே அதாவது சராசரியான பகத் போன்றோருக்கும் கீழே என்பதை புரிந்து கொண்டு அமைதிகாத்தனர், தங்களை சுயவிமர்சனம் செய்ய வைத்தனர்.

முத்துக்குமரன் இறந்த 2009 சனவரி தமிழகத்தை கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள். அதற்கு பிறகு நடந்த போராட்டங்களை கொச்ணப் மனதில் அசை போடுங்கள். வக்கீல்கள் மாணவர்கள் திரைத் துறையினர் என மக்களில் சில பிரிவினரையும் அமைப்புக்கள் பலவற்றையும் போராட தூண்டியதில் தேர்தல் அளவை விட குறைவாக என்றாலும் முத்துக்குமாருக்கும் பங்கு இருந்த்தே... அவனது இறுதி ஊர்வலத்தின் கூட்டம் அதற்கு ஒரு சாட்சி இல்லையா... சமூக நிகழ்வுகளை ஒதுக்கிப் புறந்தள்ளும் தங்களது இத்தைக இழிசெயல் மூலம் என்ன சாதிக்கப் போகின்றீர்கள்.. உங்களை குற்ற உணர்வு அதற்கு முன்னரே துரத்தி இருக்க வேண்டும்.

நாடகம், கலை இலக்கியம் போன்ற துறைகளில் உங்களைப் போல இருந்த எத்தனை அறிவுஜீவிகள் போருக்கு எதிராக குரல் கொடுத்தீர்கள். அதற்காக வீதிக்கு வந்து போராடினீர்கள். அதுகுறித்த எந்த குற்ற உணர்வுகளும் இல்லாமல் உங்களது மனதில் ஜனநாயக உணர்வை தோற்றுவிக்கும் அளவுக்கு முத்துக்குமாரின் கடிதம் இல்லை என விமர்சனம் செய்வதற்கு கொஞ்சம் நெஞ்சுறுதி வேண்டும். பாரதி மேல் எனக்கு விமர்சனம் உண்டு என்றாலும் அவனது ..படித்தவன் பாதகம் நினைத்தால்... என்ற வரிகள் ஞாபகம் வருகின்றது. உங்களோடும் பேசிக் கொண்டிருக்கிறேன்.

Dr.Rudhran said...

நான் மணி என்பவருக்கு. நான் தெருவுக்கு வந்து போராடியதாகப் பீற்றிக்கொண்டதில்லை. அப்படி புரட்சிகரமான போராட்டங்களில் தாங்கள் ஈடுபட்ட படம் அனுப்புங்களேன் இங்கே பார்ப்பவர்களாவது தெரிந்து கொள்ளட்டும் உங்கள் போராட்ட வீரத்தை.
அப்புறம், அவனது கடிதம் தான் தமிழ்நாட்டில் பலரைப் போராட வைத்தது என்றால், போராட்டங்களின் வெளிப்படையான பலன் என்னென்ன என்றும் சொல்லுங்கள், தெரிந்து கொள்கிறேன்.
நீங்கள் சொன்ன அதே பாரதிதான் வாய்ச்சொல்லில் வீரர் என்றும் சொல்லியிருக்கிறான்.

விடுதலை said...

டாகடர் சிறப்பான கட்டுரை
//சாவது என்று முடிவெடுத்தபின் அதற்கப்புறம் நீ வாழ்வதே உனக்காக இல்லையே பின் ஏன் பிறருக்காக வாழக்கூடாது//

ராகுல்ஜியின் சிந்திக்ககூடிய வரிகள்

நான் மணி நீங்கள் சரியாய் புரிந்து கொள்ளாமல் உணர்ச்சி வேகத்தில் விவாதிக்கிறீர்கள் முத்துக்குமாரனின் தற்கொலையை மேலே ராகுல்ஜியின் வார்த்தைகளோடு ஒப்பிட்டு பாருங்கள். முத்துக்குமாரின் தியாகத்தை யாரும் இங்கே கொச்சை படுத்தவில்லை ஆனால் முத்துகுமாருக்கும் தோழர் பகத்சிங், திப்புவுக்கு எவ்வளவோ வேறுபாடுகள் உள்ளன, தோழர் பகத்சிங்-திப்பு இருவரின் மரணமும் சந்தித்தே தீர வேண்டியவையாக இருந்தன, ஆனால் முத்துகுமாருக்கு அப்படியில்லை அவரே வலிய தேரந்தெடுத்த முடிவு அது என்ன காரணத்திற்காக
எடுக்கபட்டதோ அது நடக்கவில்லை, பெருமளவில் அரசியல் விழிப்புணர்ச்சி இல்லாத மக்கள் இருக்குமிடத்தில் ஒரு "மரணம்" மக்களை மாற்றும் என்பது அறியாமை தான் அதுவும் ஒரு வகையான இயலாமையின் வெளிப்பாடுதான்,
உண்மையாகவே முத்துக்குமார் மரணம் தனிநபர் சாகசமாகவே உள்ளது,

முத்துக்குமார் மரணத்தால் என்ன பயன் கிடைத்தது? சில அரசியல் அமைப்புகள்
முத்துக்குமார் நினைவு நாளை தங்களது சுயநலனுக்காக பயன்படுத்தி அதில் தங்களை பிரபல படுத்திக் கொள்கிறார்கள். இதுதான் மிச்சம்

ஒரு வேளை முத்துக்குமார் சாகாமல் ராகுல்ஜியின் இந்த வார்த்தைகளை
கடைபிடித்திருந்தால் //சாவது என்று முடிவெடுத்தபின் அதற்கப்புறம் நீ வாழ்வதே உனக்காக இல்லையே பின் ஏன் பிறருக்காக வாழக்கூடாது//
முத்துக்குமார் மக்களுக்காக களப்பணியில் இறங்கியிருந்தால் அதன் விளைவுகள் எப்படியிருந்திருக்கும் சாவதற்கே துணிந்தவன் ஒரு கொள்கைக்கு தன்னை அர்பணித்திருந்தால் அது நல்ல விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம்,

விடுதலை said...

//முத்துக்குமரன் இறந்த 2009 சனவரி தமிழகத்தை கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள். அதற்கு பிறகு நடந்த போராட்டங்களை கொச்ணப் மனதில் அசை போடுங்கள். வக்கீல்கள் மாணவர்கள் திரைத் துறையினர் என மக்களில் சில பிரிவினரையும் அமைப்புக்கள் பலவற்றையும் போராட தூண்டியதில் தேர்தல் அளவை விட குறைவாக என்றாலும் முத்துக்குமாருக்கும் பங்கு இருந்த்தே... அவனது இறுதி ஊர்வலத்தின் கூட்டம் அதற்கு ஒரு சாட்சி இல்லையா... சமூக நிகழ்வுகளை ஒதுக்கிப் புறந்தள்ளும் தங்களது இத்தைக இழிசெயல் மூலம் என்ன சாதிக்கப் போகின்றீர்கள்.. உங்களை குற்ற உணர்வு அதற்கு முன்னரே துரத்தி இருக்க வேண்டும்.//

முத்துக்குமாரின் மரணம் சில விளைவுகளை ஏற்படுத்திய உண்மை,
இதைபயன்படுத்தி கொண்டவர்களில் சில புரட்சிகர அமைப்புகளை தவிர பெரும்பாலோனோர் சமரசவாதிகள், துரோகிகள்

விடுதலை

Anonymous said...

I hope you need a psychological councelling with the help of other drs in this topic. I really shocked, When you said about "bagath singh".. how come, you cannot differenciate the ordinary people who are commiting suicide and muthukumar. If you say like this.. how you are going to give a valid explanation for the army man who are all dying for us in the pakistan border.?? can you take it as a natural death or suicide or dying for money or something else? can you please give a detail explaination doctor?Please.

Venkat

Anonymous said...

Dr Rudran, by virtue of being a doctor (psychiatrist), is duty-bound to discourage people from committing suicide. Like general doctors who are bound by Hippocratic Oath that regardless of the nature of the patient (whether he is a criminal, or an enemy thirsting to kill the doctor himself), they should attend on him and their first and foremost duty is to save the life. (In the Tamil feature film ‘Puthia Boomi’, starring M.G.Ramachandran and M.N.Nambiar, the hero is a doctor who operates upon the villain to save life, although he knows quite well that the patient is a diabolical villain !)

Here, as a psychiatrist, Dr Rudran is bound to discourage the potential suicides from committing the act, by clever manipulative counseling.

No wonder Dr Rudran's view on the subject of suicide is circumscribed by his professional ethic.

All along his post, and in his replies to comments as well, there runs a deep and adamantine childish fetish for hatred of suicides: a refusal to go deep into the psyche of such unfortunate humans and understand them humanely!

I admire people who become their profession itself inextricably. Charles Lamb wrote after thirty years of service as a clerk in a company: ‘The rot has entered my soul!”

I left many a job in my life because I could not do a few or some things as part of its ethics. Therefore, I stand admiring at Dr Rudran.

Keep going, Dr!

Anonymous said...

Dear Doctor,
I really appreciate you come forward to stop the suicide cases and i bow my head for your doctor profession which i cannot do to serve my fellow human beings....

what we ( may be few guys ... unmai tamilan, Mani and myself(venkat) are trying to say is .. there is a huge difference between other suicide attempts and muthukumar.

eventhough the poor soul failed in his attempt to stop the genocide.
I feel he is like one of the rare people who tried to turn the society towards Independence or social justice... like deelipan or mahathma ...etc..
there is a difference when an army man killing the enemy at the warfront and when he does the same at his home town for petty issues.. that is the kind of difference between muthu and other suicide cases.... I cannot explain or understand in any other way even if you are a god who is saving the souls.

Still if you feel I need councelling with you .. i will get it whenever i come to chennai.(please reply in your comment itself).

Mani donot abuse Dr .. he is giving his views .


Venkat

Anonymous said...

Dear Dr ..
One more thing , by profession you are trying to save the souls,,, sameway he tried to save thousands of souls...

Venkat.

Anonymous said...

நான் மணி

என்னை வாய்ச்சொல்லில் வீரன் எனப் புரிந்து கொண்டமைக்கு நன்றி. வீரமா அல்லது கோழையா என தியாகத்தை வகைப்படுத்த முடியாது. அந்த தியாகம் தோற்றுவிக்கும் அரசியல் உணர்வைக் கூர்மைப்படுத்த 50000 ஆயிரத்தில் ஒன்றாக இருந்த என்னுடைய புகைப்படத்தை எடுத்து வைத்து எனது போராட்ட வீரத்தை அடையாளப்படுத்தி நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படும் என அன்று எனக்குத் தெரியவில்லை. அதனை வீரம் என நான் கருதவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். கோழைத்தனம் என்றும் சொல்லவில்லை என்பதையும் மறந்திருக்க மாட்டீர்கள் எனக் கருதுகிறேன். ஆனால் ஊரறிந்த நபராக இருந்தும் மேடையில் சென்று பேசவோ அல்லது ஊர்வலத்தில் கலந்து கொண்டு மக்கள் திரள் அரங்கில் மக்களது எழுச்சியில் பங்கு கொண்டு எனது உரையை பதிவு செய்யாமல் நான் இருந்திருக்க மாட்டேன்.

ப‌லன் இருக்கும் என்ற உத்திரவாதம் தந்தால் மாத்திரம் போராடுவேன் என்று ஒரு தேர்வுக்கு கூட படிக்க முடியாது. அதற்காக படித்த்தில் இருந்தும் ஏன் தோற்றோம் என்பதில் இருந்தும் கற்றுக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லையா.. நிற்க பாரதியை பின்பற்றுபவன் நானல்ல•. ஒரு வேளை வாய்ச்சொல்லில் வீரனான பாரதியை அதனையே அவனது வாய்மூலம் சொல்வதில் முரண்பாடு உங்களுக்கு புரியவில்லையோ... காலம் கடந்து விவாத்த்தை கவனிக்க நேர்ந்த்த‍ற்கு மன்னிக்கவும்..

Anonymous said...

நான் மணி

விடுதலை... தான் சாவது என்ற முடிவை மற்றவர்கள் வாழ்வதற்காக சாவது என்ற முடிவை எடுத்த பிறகுதான் முத்துக்குமார் எடுத்து இருக்கிறான். தெளிவான அவனது மரண சாசனத்தின் அச்சிடப்பட்ட வாக்கியங்களே அதற்கு சாட்சி. இதனை ருத்ரன் மருக்க மாட்டார் எனக் கருதுகிறேன். அப்படித்தான் திப்புவுக்கும் பகத்துக்கும் நேர்ந்த்து. கட்டாயம் முத்துக்குமாருக்கு இல்லை என்பதை எதன் அடிப்படையில் சொல்கின்றீர்கள். பின்விளைவுகளா... திப்புவுக்கு பிறகு இந்திய மன்னர்கள் எல்லாம் இணைந்து பிரிட்டிஷ் கம்பெனியாரை ஓட ஓட விரட்டி விடவில்லை. பகத் தூக்கிலேறியவுடன் புரட்சிகர இயக்கங்களின் கையில் விடுதலைப் போராட்டம் வந்து விடவுமில்லை. இந்த பின் விளவுகளான பலன்களைத்தானே முத்துக்குமாருக்கும் ஒப்பிட முடியும்.. பலன்களை வைத்து மதிப்பிடுவது இலாப நட்ட கணக்கு பார்க்கும் சந்தையை தெளிவாக மதிக்கும் ஒரு ஆளும்வர்க்கமான முதலாளிகளின் பார்வை போல உள்ளது.

ஒரு தற்கொலையை அதுவும் தெளிவாக தனக்கு தெரிந்த முறையில் மக்களிடம் கொண்டு போங்கள் என்று சொன்ன மனிதனது மரணத்தை தனிமனித சாகசமாக பார்க்கின்றீர்கள். ஆனால் உங்களைப் போல எனக்கு தனிமனித வழிபாடு இன்னும் பழக்கப்படவில்லை.

ப‌கத் கூட தூக்கு மேடை ஏறாமல் அதாவது பார்லிமெண்டில் குண்டு போட்டு தனது தற்கொலையை தேடாமல், கேவலம் ஒரு காங்கிரசு பெருச்சாளிக்காக சாண்டர்சைக் கொல்லாமல் இருந்திருந்தால் கூடத்தான் ஒரு நல்ல கம்யூனிஸ்டாகவும், இந்திய அளவில் உண்மையான மார்கிசிய லெனினிய அமைப்பையும் கட்டி இன்றைய அளவில் புரட்சி கூட இந்தியாவில் நடத்தி இருக்க முடியும். பகத்தை கூட இன்று டைபி கார்ர்கள்தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதற்கு என்ன செய்ய•.

Anonymous said...

ருத்ரன் சார்,

தன்னையழித்தல் என்ற உங்களின் இந்த பதிவு சிறப்பானது. ஒரு கேள்வி. நேர்மையான பதில் தேவை.நீங்கள் உளவியல் நிபுணராய் இல்லாமல் இருந்திருந்தால், உளவியல் கல்வியை கற்காமல் இருந்திருந்தால் உங்களுக்கு இந்த பார்வை இருந்திருக்குமா? (இப்படி நான் கேட்பதினால் எனக்கு துனண‌த்தேடும் புத்தி உள்ளது என prejudice செய்ய வேண்டாம்.)

குணாமகிழ் said...

such a great thought...telling it to other readers.he taught me the toughest lesson simply...there is no need or meaning to do SUICIDE...THANKS TO MY DOCTOR

Post a Comment