Tuesday, May 17, 2011

காதலிக்கக் கற்றுக்கொண்டேயிருக்க..


அவள் அப்படியொன்றும் அழகில்லை  என்று சொல்வதல்ல,  
அவளுக்கு யாரும் நிகரில்லை என்பதே காதல். 
வீம்புக்கும் வறட்டுப் பிடிவாதத்திற்குமாய் வெளியே அறிவிக்கப்படுவதில்லை காதல், 
அது, 
உள்ளே நிழல்கூட இல்லாமல் நிரப்ப, ஒருகணத்தில் பிறக்கும் பேரொளி.

காதலின் ஒரு கோணம் தான் பக்தி. கோணம் ஒரு கோணலான பார்வைதான், அழகாகத் தெரிந்தாலும். 
முழுதாய் பார்க்க, ‘அதுகையிலிருக்க வேண்டும், சுழற்றிப்பார்க்க, அல்லது எனக்குக் கால்களில் வலு வேண்டும் சுற்றி வந்து பார்க்க.. பக்தியில் இந்தச் சலுகை கிடையாது. பார்த்த விழி பார்த்தபடி பூத்துக்கிடக்க வேண்டும். உண்மையான காதலில் ‘அதுகையிருக்கும், அனைத்துக் கோணத்திலும் அழகாக இருக்கும், அந்த அழகு நிரந்தரமாகவும் இருக்கும். இது utopian அல்ல.

அழகு மாறுமா? அழகின் இலக்கணம் நிச்சயமாய் மாறும். அப்படி காலத்திற்கேற்ப தன்னையமைத்துக் கொண்டால்தான் அது அழகு. அது நிர்ப்பந்தமல்ல, இயல்பான பரிணாமம். கனவுகளின் வரைபடங்களுக்கும் நிஜத்தின் கட்டிடங்களுக்கும் இருக்கும் ஆழமான பிடித்தமே காதல், அதனால் தான் அது கவிதைகளையும் கனவுகளின் பொய்களையும் உள்ளடக்கி வைத்துக் கொள்கிறது.
படிப்படியாய் இறங்கிவரும் படிமமாய்க் காதலைப் பார்த்தால், பக்திக்கு அடுத்த படியில் ரசனை! ரசனையின் நாயகம் தெய்வநிகர்தான், பகுத்த்றிவாளனுக்கும். உயர்வானதை, உண்மையானதை ரசிப்பவன்,  சாதாரணமானதை, மலிவானதை, காலப்போக்கில் காணாமல் போவதை ரசிப்பவன் பொதுபுத்தி மீறி புரட்சிகரமாகத் தென்படும் பிம்பங்களை ரசிப்பவனை விடக் கீழானவனா? எனக்கு சின்ன வயதில் ஜெயிக்கும் கட்சி பிடிக்கும், இப்போது தோற்பவர் கோணத்தைப் புரிந்து கொள்வது பிடிக்கும், நான் யாரை/ எதை ரசிக்கிறேன்? எல்லாரையும் போல நான் வெற்றியைத் தான் ரசிக்கிறேன், அதே நேரம் எதிரியின் தோல்வியை ருசிக்கிறேன் –மிருகத்தன்மையுடன் அல்ல, மானுட இயல்புடன்.

ரசனை காதலாகுமா? ரசிக்க முடியாததன் மீது காதல் வருமா? ஒரு கணம் வருவதா  காலந்தோறும் வளர்வதா காதல்? ரசனை வளருமா? சமூக அங்கீகாரம் கூட இல்லாமல் முழுமையாய் ஒரு ரசனை காதல் போலாகுமா? ஆகுமாம்! Romantic புதைகுழியில் மூழ்கடித்தவர்களின் முன்னோடி முழக்கம் இது!!_இங்கேயும் இது 60களின் அநாவசிய அடுக்குமொழிக் கலப்புடன்தான் வெளிப்படுகிறது.

நம்பிக்கையின்  projection தான் காதல், பக்தி, ரசனை!  தன்விருப்பை ஒரு பொதுவிதியாக்கும் மனோதற்காப்புதான் காதல், பக்தி, ரசனை.
சாய் செத்தாலும், ஜெ ஜெயித்தாலும் நாளை இன்னொரு தேவரூபம் வானின்று வந்து வாழ வைக்கும் எனும் நம்பிக்கையும், நப்பாசையுமே பக்தி, ரசனை, காதல்.

நான் வாழ்வை ரசிக்கிறேன், நாளையை நம்புகிறேன், என்னிடமே எனக்கென்று பக்தியுடன் பணிகிறேன்... இதை வெளியேயும் சொல்கிறேன்,நான் சரியாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு இல்லாததால்!



Thursday, May 12, 2011

மௌனத்தின் பேரிரைச்சல்


மௌனத்தின் பேரிரைச்சல்.. தோன்றிய போதே சங்கிலியாய் எண்ணங்களை இழுத்துச் சென்ற சொற்றொடர்.

கவிதையல்ல இது, கவலை; 
முரண்வாதம், முரட்டுவாதமல்ல. 
இது யோசித்த நேரம் வந்தது, 
யோசிக்க வைக்கும் என்றே எழுதப்படுகிறது. இது பொய்யுமல்லாத உண்மையுமல்லாத புதிர்நிலை. 
புரிதலுக்கான குழப்பம், புரியும் அந்த ஒரு கணத்தின் முன்னிருக்கும் இறுக்கமான தயக்கம்.  முதலில் எது மௌனம், எது இரைச்சல்? 

எது எதுவரை மௌனம் அல்லது இரைச்சல்?

அரசியல், ஆன்மிகம், கலை, இலக்கியம் என்றெல்லாம் பேசிக்க்கொண்டிருப்பது பேரிரைச்சலோ என்று ஒரு நெருடல் வந்து விட்ட்து. வெட்டிப்பேச்செல்லாம் கூச்சலே என்று மனம் முடிவு செய்கிறது. பலனின்றிப் பேசுவதும் பேரிரைச்சல் போடுவதும் ஒன்று என்பதை ஏற்கும் மனம், மௌனத்தின் பேரிரைச்சலை மட்டும் சந்தேகிக்கிறது. வார்த்தை ஜாலமாக வரவில்லை இந்த எண்ணக்கோலம். 

மௌனமும் மனமும் ஒன்றியிருத்தல் சாத்தியமா? 
சப்தமே இல்லாததா அல்லது சிந்தனையே இல்லாததா மௌனம்? சொல்லில்லாமல் சிந்தனை இருக்க முடியுமா? வெளிவராத வார்த்தைகள் மனத்துள்ளேயே கரைந்து விடுமா? அந்த வார்த்தைகளுக்கெல்லாமும் அர்த்தங்கள் உண்டா?
எது மௌனம்? அப்படி ஒன்று நிஜமாகவே உண்டா? மௌனம் என்பதே கற்பனை உருவாக்கிய வார்த்தை மட்டுமா? நிசப்தமல்ல மௌனம் எனும்போது மௌனத்திற்கும் ஒரு சப்தம், ஒரு ஸ்ருதி, ஒரு ஜதி உண்டா? அப்படி ஒன்றிருந்தால் அந்த மந்திர அதிர்வுக்குப் பெயர் வைப்பதே அதைக் களங்கப்படுத்தி விடாதா?

மௌனம் தன்னுடன் தான் தொடர்பு கொள்வதை நிறுத்திக்கொள்ளும் போது மட்டுமே சாத்தியம் என்று தோன்றுகிறது. பிறருடன் தொடர்பு கொள்ளும்போது பயன்படுத்தப்படும் மௌனம் ஒரு சாகசமாகவே தோன்றுகிறது. என்னிடமே நான் பிரயோகிக்கும் மௌனம் வெட்கத்திலிருந்து தப்பிக்க ஒரு தந்திரமாகவே தெரிகிறது.
மௌனத்தை உணராமல், வரையறுக்கவும் விவரிக்கவும் தேவைப்படும் வார்த்தைகளே பேரிரைச்சலாய்த் தெரிகிறது.





Monday, May 2, 2011

மெழுகுவத்தி இல்லாத நான்..


செத்து விட்டான் அசுரன், 
இனி பட்டாசு கொளுத்துவோம். 
கெட்டவன் சாவைக்கொண்டாடுவது நம் பாரம்பரியம், கலாச்சாரம். 

செத்தவன் பற்றி எதுவும் தவறாகப் பேசக்கூடாது
என்பது அந்நிய கலாச்சாரத் தொற்று. ஹிரண்யன், ராவணன்..என்று எத்தனை கெட்டவர்களின் கெட்ட எண்ணங்களையும் செயல்களைம் நம் புராணங்களில் பட்டியலிட்டிருக்கிறோம்! ஒரு கெட்டவன் செத்ததை வைத்து உலகமுழுதும் எவ்வளவு பட்டாசு கொளுத்துகிறோம். 
அப்புறம் இன்னொரு விஷயம்... செத்தவன் என்ன மாமனா மச்சானா, எனக்கு வேண்டியவனா, நான் கும்பிடும் சாமியா நம்பிடும் சாமியாரா..கொளுத்துவோம் பட்டாஸ்...பறையடிப்போர்க்கு மட்டுமா சாவைக் கொண்டாடத் தெரியும்? ‘நம்ம எதிரி செத்தானே’  என்று கொண்டாடுவோம். ‘நம்மஎன்பது எது என்று நமக்கா தெரியாது? ‘நம்மாளுக்கு எதிரி நம்ம எதிரி’.  ‘நம்மாளு யாரு?’...”நம்பள மாதிரி இருக்குறவன் இல்ல நாம ஆகணும்ன்ற மாதிரி இருக்குறவன் தான் நம்மாளு”.  நவீனோபதேசத்தின்படி, பின்லேடன் பிணமானதைக் கொண்டாடுவோம்.


நேற்று என் நன்பனின் இல்லத்திருமண கலைநிகழ்ச்சியில் ஒரு தொகுப்பாளி ‘தமிங்கிலிஷில் இந்தியா சுதந்திரம் அடைந்த தேதி எது என்று கேட்டாள். ச்சீஎன்று தோன்றிய அதே நேரம் ஐயோ என்றும் தோன்றியது...அவள் கேட்டது குட்டீஸ்களிடம் என்றாலும் அதுவரை சில ‘க்வஸ்டீன்ஸ்க்கு ‘ஆன்ஸர்சொல்லிக்கொடுத்த எந்த ‘ஆண்ட்டியும் அங்கே வாய் திறக்கவில்லை...எனக்கு திக்திக் அதிகமாயிற்று..நல்ல வேளை ஜூலை நாலுன்னு எதுவும் சொல்லலியேஎன்று கொஞ்சம் சப்தமாய் முணுமுணுத்தால் ‘ஓஎன்று ஒரு குரல் கேட்டது...வெறுப்புடன் அல்ல, ‘சே..மிஸ் பண்ணிட்டோமேஎனும் தொனியில். ரொம்ப ரொம்ப நெருக்கமான நண்பனின் வீட்டு விசேஷம்..வள் என்று நான் விழுந்தால் சம்பந்திகள் என்ன நினைப்பார்களோ..என்றே நான் சும்மா இருந்தேன். நம்ம வீட்டு விசேஷம்..சிலதெல்லாம் கண்டுக்காம இருக்கணும்”  எனும் இன்றைய இருத்தலியலின் இயல்பிலக்கணத்திற்கொப்ப சும்மாயிருந்து விட்டு அடுத்த ஆட்ட்த்திற்குக் கைதட்டினேன்.

வெட்கத்தைத் துடைத்தெறிந்து அடுத்த வேலை பார்க்கும் நடுத்தர (அன்றைக்குச் சொல்லப்பட்ட நாலாந்தர) மனப்பான்மையுடன் நான் இன்று காலை எழுந்து காணாமல் போன முதலமைச்சர் பற்றியும், கடைசியில் வெற்றிவாகை சூடிய தோனி பற்றியும் படித்து விட்டு, என் அற்பவாதத்தால் எனக்கு அவசியமானவற்றைச் சேகரிக்க உழைத்து விட்டு வந்தால்..ஆஹா..இணையம் ஆர்ப்பரிக்கிறது.பின்லேடன் செத்தானாம், அப்பாடாவாம், ஸபாஷாம்!!! செத்தவனைப் பற்றி பேசலாமோ? பேசலாமே...ஏன்னா அவன் நம்மவன் இல்லையே!!!! என்று எத்தனை ஆர்ப்பரிப்புகள்!

அடடா !!!!! நம்மவன் நடத்தை பற்றிப்பேசக் கூடாது, அது அநாகரிகம், அடுத்தவன் வீட்டுப் பாடையை விமர்சிக்கலாம் அது நம் விவேகம்!!! இது தெரியாமல் நான்.. வழக்கமாக சாவு என்றாலும் சமூகவிழிப்புணர்வு என்றாலும் கொளுத்தப்படும் மெழுகுவத்தி தேடினால்...

யேசு செத்தாலும் பிறந்தாலும், உயிர்ப்பலி நிகழ்ந்தாலும் ஊழல் எதிர்த்தாலும் ஏற்றப்பட வேண்டியதாகி விட்ட மெழுகுவத்தி என்னிடம் இல்லை. ஒரு சாவுக்கு அனுதாபம் தெரிவிக்காத கல்மனம் எனக்கு வந்து விட்ட்தாய்ச் சொல்லப்பட்ட போதிலும், சரித்திரப் புகழ் லஞ்சவொழிப்புப் புரட்சியில் பங்கேற்காத பாவி என்று தூற்றப்பட்டபோதிலும், ஸாஸ்த்ர-ஸம்ப்ரதாயத்திற்காகக்கூட ஒரு மெழுகுவத்தி வாங்குவதாயில்லை நான். என்னைப் பொருத்தவரை என் மெழுகுவத்தி ஓளி மட்டுமே தரும், இருள் கூட்டாது.
அப்படியொரு மெழுகுவத்தி இன்னும் கிடைக்கவில்லை.

Sunday, April 24, 2011

அனுதாபங்கள் பாபா பக்தர்களுக்கு



உடைந்து போயிருப்பார்கள் பாவம். கடைசி நம்பிக்கையான உயிர்த்தெழுதல் நடக்கவில்லை, ஒரு விசை ஒரு வினாடியில் இயக்கத்தை நிறுத்திவிட்டது.

மற்றவர் சோகத்தில் ஆரவாரிக்கும் அநாகரிகம் எனக்கு இல்லை என்றாலும், இவர்களது கண்ணீரில் என் கண்கள் கலங்கவில்லை. ஆனாலும் இன்று புட்டபத்தி சாய்பாபா பக்தர்களுக்கு என் அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்... இன்றைய மனிதனின் மரணத்திற்காக அல்ல, இதுவரைக்கும் மூடர்களாக இருந்த மக்களின் அறிவு மயக்கத்திற்காக.

பொதுவாக நம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் எல்லாம் ஓர் இழவு விழுந்தவுடன் அழுதுவிட்டு, பிணத்தை ஒழித்துவிட்டு, மூன்றாம், பத்தாம், பதினாறாம் நாளில் விருந்து தின்றுவிட்டு, அடுத்த வேலை பார்க்கப்போவதுதான். வசதியைப் பொருத்து ஓராண்டுக்குப் பின் ஒரு நினைவுநாள் கொண்டாட்டம் பத்திரிகை விளம்பரம்..
ஆனால் எவ்வளவு நெருக்கமானவரின் மரணத்துக்குப்பின்னும், எவரும் வாழ்க்கையை வாழாது விடுவதில்லை. மரணமும் யதார்த்தம் என்று மனத்தின் மூலையில் அறிவு சொல்லிக்கொண்டிருப்பதால். 
அறிவே பழுதாகும்போது மனம் சிதிலமடையும், உடையும், திசைதெரியாமல் தடுமாறும். இதனால்தான் பாபா பக்தர்களிடம் எனக்கு அனுதாபம் அதிகமாகிறது.

வித்தைகாட்டி மயக்கியவனை வித்தகன் என்று கூடச்சொல்லலாம், இறைவன் என்று சொல்ல ஆரம்பித்தால்? காசு வாங்கிக்கொண்டு யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் புகழ்ந்து திரியலாம், ஆனால் காசு கொடுத்து ஒருவனை கடவுள் என்று கூப்பாடு போட்டால்? இங்கேதான் அறிவின் மயக்கம். இங்கேதான் ஆபத்தும்.


எந்த அளவிற்கு தன்னம்பிக்கையிழந்து, தோல்வி வரும் என்ற பயத்தில், நம்மால் முடியாததை இவனாவது செய்வானா என்ற எதிர்பார்ப்பில் இவன்பின் இத்தனை சாதாரண மக்கள் அலைந்திருக்கிறார்கள்! இவன்மூலம் காரியம் சாதிக்கும் தொடர்புகளை விருத்தி செய்துகொள்ள வந்த வியாபாரிகள், இவனது பக்தகோடிகளையும் கவர்வதற்காக வந்து கொஞ்சிய அரசியல்வாதிகளை விட்டுவிட்டாலும், இவன்பின் நின்று நம்பிக்கிடந்தவர்கள் கோடிக்கணக்கானவர்கள். அவர்கள் மீதுதான் என் அனுதாபம். 
அவர்களெல்லாம் பாவம் தைரியம் இழந்தவர்கள், தடுமாறுபவர்கள் வாழ்க்கையில் உழைப்பும் முனைப்புமே வெற்றியைத்தரும் என்பது தெரியாதவர்கள், தன் காலில் நிற்கும் வலிமை இல்லாமல் தூண் தேடியவர்கள்! 
அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறேன்.



தெய்வமே உயிரை இயந்திரங்களில் தொங்கவைத்திருந்த்து என்ற போதும் அந்த தெய்வத்திடம் தன்னையே உயிர்ப்பித்துகொள்ளும் சக்தி இருந்தது என்று நம்பி ஏமாந்தவர்களின் சோகத்திற்கு என்ன ஆறுதல் கூறுவது. அவர்கள் அழட்டும். கண்ணீர் விடட்டும். நம்பி ஏமாறுவதும் மனித இயல்புதான். ஆனால் துக்கத்தின் அளவு நீளமில்லை, extended grief  கூட ஆறுமாதத்திற்கு மேல் தீவிரமாய் இருக்காது. அவர்கள் மீண்டு விடுவார்கள், மரணத்தினை ஏற்று அதையும் தாண்டி வாழ்க்கையை வாழ்வார்கள். ஆனால்....
இதே பக்தர்களில் இரு பிரிவினர் உருவாக வாய்ப்புள்ளது. சிலர் செத்தால் என்ன சாமி அருவமாய் வந்து கூட இருக்கும் எனும் பிரமையில் வாழ்வைத் தொடர்வார்கள். பிறர், சரி இந்த ஒரு தெய்வம் செத்துப்போனாலும் இன்னும் புது தெய்வங்கள் இருக்கும் என்று தேடுவார்கள் –அவர்களுக்காக மீதி இருப்பவற்றுள் ஒன்று வசீகரிக்கும் அல்லது புதிதாய் ஒன்று முளைத்து கடைவிரிக்கும். இவர்களுக்கு இத்துடனாவது இந்த மடமையை விடலாமே என்று மட்டும் தோன்றாது.

இது நுகர்வு கலாச்சாரத்தின் காலகட்டம். ஒரு பொருள் காலாவதியானால் இன்னொன்று உருவாக்கி, விளம்பரப்படுத்தி விற்கப்படும். அதே பொருள்தானே, அப்போதே அது பயன்படவில்லையே என்று நிராகரிக்காமல் புதிய வடிவ-விளம்பரத்தில் விற்கப்படும் அதே வெட்டியானதை வாங்க இன்னும் மக்கள் முண்டியடிப்பார்கள். இவர்களுக்காக அனுதாபம் தெரிவிப்பதைத்தவிர்த்து நான் என்ன செய்ய முடியும்?வரிசையில் நிற்பார்கள், இந்த வரிசையில் செத்தபாபா பக்தர்கள் முன்வரிசைக்கு முண்டியடிப்பார்கள், அவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து விட்டு வேறென்ன என்னால் செய்ய முடியும்?


Tuesday, February 8, 2011

சாய்ந்தாடி சாய்ந்தாடி..


சாய்ந்து ஆடும்நாற்காலியில் ஓய்ந்த தருணங்கள் பற்பல எண்ணங்களைப் ப்ரசவிக்கும், வளர்க்கும், விரட்டி விடும் அல்லது இறுகப் பற்றிக்கொள்ளும். அதில் சில கவிதைகளும் ஆகியிருக்கலாம், சில கவிதைகளாகவே பிறந்திருக்கலாம்...

காணாமல் போன எண்ணங்கள் எல்லாமும் காகிதங்களில் தகனமாயிருந்தால் ஒரு காடு கூட மிஞ்சியிருக்காது. தகனம்? எழுத்தே அக்னிப்ரவேசம் தானே..தன்னைத் தன் கண்ணுக்கே முதலில் நிரூபித்துக்கொள்ள.

என்ன எழுத வந்தேன் எனும் ப்ரக்ஞையில்லாமல் எழுதிக்கொண்டிருப்பது மனவோடையாகாது, அது பிறழ்பதிவாகவும் கூடும். ஆனாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன். எனக்காகவே என்று சொல்லிக்கொண்டே பிறருக்காக- ஏமாறவோ ஏமாற்றவோ அல்லாமலேயே இருத்தலை நினைவூட்டும் ஒரு முயற்சியாக.

இது சுயதம்பட்டமாகவும் ஒலிக்கலாம். தம்பட்டமோ ட்ரம்பெட்(trumpet)டோ இருந்தால்தான் ஒலிக்கும். இல்லாத கருவி கற்பனையில் இசைத்தாலும் கைதட்டல் வாங்காது. கைதட்டலை எதிர்பார்த்தே வாழ்க்கை.  
அம்மா கண்ணாலேயே கைதட்டவே குழந்தையின் குறும்பு, கடவுள் கைதட்டவே முனிவரின் தவம். இடையே கைதட்டல்களுக்கெல்லாம் நாகரிக அடையாளங்களை ஒட்டுவது சமூக அவசியம், சுயசௌகரியம்.

இதையெல்லாம் இப்போது ஏன் எழுதுகிறேன்? நினைப்பதால்! ஏன் நினைக்கிறேன்? நேரம் இருப்பதால்! நேரம் நிறைய ஒரு நாளில் மீதமிருந்தால் வருவது சோம்பல் மட்டுமல்ல, திமிர் கூடத்தான். 
நான் திமிருடன் இருக்கலாமா? யாருக்கு வேண்டுமானாலும் திமிர் இருக்கலாம்! காட்டிக்கொண்டால்தான் அது தவறாகத்தெரியும் திமிர், காட்டாமல் உள்பதுக்கி வெளிநடித்தால் அது நயமான கர்வம்! வித்யாகர்வம் கூட தன்வீட்டுக்குள்ளேயே சாதகம் செய்வதில் வராது, ஒரு சபையில்- அரங்கில்- கைதட்டலில்தான் வரும். எனக்கென்ன கர்வம்? எனக்கென்ன திமிர்?

பணபலமோ பின்புலமோ இல்லாமல் சாதித்தேன் என்பது நான் கொண்டுள்ள திமிர். இதை வெளிச்சொன்னால்தான் திமிர்! என்ன சாதித்தேன் என்று சிந்தித்து ஆய்ந்து அளந்து வரும் விடையைக் கூட வெளிச்சொன்னால்தான் திமிர். வெளியிடாத கர்வம் ஒரு சமூக ஒப்பனைதான். 
கர்வமோ திமிரோ வருமளவு என்ன சாதித்தாய் என்று என்னையே நான் கேட்க முயன்றபோது கிடைத்தாற்போல் தோன்றியது இதுதான்..- பயிற்சி இல்லாமல் படம் வரைந்து பணம் சம்பாதித்தேன், பெருமுயற்சி இல்லாமல் எழுதி புத்தகங்கள் விற்கவைத்தேன், 
கேவலம் என்று என் சமூகம் கருதியதை அறிவியல் கொண்டு அணுகினால் வேறு என்று விளக்கினேன், மனநோய் என்பதை மனநலம் என ஆக்கிவைத்தேன், 
விலை போகாதிருந்திருக்கிறேன், யாரையும் விலைக்கு வாங்கவும் நினைக்காமல் இருக்கிறேன்.. இதற்கெல்லாம் எனக்கு ஒரு கர்வம் வரலாம் என்றே என் மனம் அனுமதிக்கிறது. என் மனமே ஒன்றை அனுமதித்தபின் உங்கள் ஒப்புதலுக்காகக் காத்திருப்பது ஒரு சமூக நாடகம்தான்!

என்னவெல்லாம் செய்தேன் எனும் இறுமாப்பு மிகுந்த பட்டியலோடு, என்ன செய்ய முடியவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று வலிய எதிலெல்லாம் தோற்றேன் என்றும் ஒரு கணக்கு மனத்துள் போட்டால், முதலிலும் முக்கியமாகவும் வருவது- காசு சம்பாதித்துச் சேர்த்து வைக்காமல் திரிந்திருக்கிறேன், அன்பு நட்பு என்றெல்லாம் எதிர்பார்த்து அடிபடும்வரை ஏமாந்து கிடந்திருக்கிறேன்,  


நன்றி பரஸ்பரம் என்றும், பாசம் நிரந்தரம் என்றும் என்னையே ஏமாற்றிக்கொண்டு வந்திருக்கிறேன்...

ஆனால் இவையெல்லாம் தெரிந்தும் வெட்கப்படாமல் இருக்கிறேன். வெட்கமோ வருத்தமோ இல்லாமல் ஒரு மாறுதலும் செயல்பாட்டில் வராது என்று தெரிந்தும் அவ்விரு உணர்ச்சிகளையும் தவிர்த்து வருகிறேன்.


வென்றேன் ஆயினும் வாகை சூடவில்லை. வாழ்கிறேன் ஆயினும் நிறைநிலை அடையவில்லை. இதன் அடிப்படையாய் அடிநாதமாய் ஓடும் எண்ணம்-காசு சம்பாதிக்கத் துப்பில்லை என்று என்னையே துப்பிக்கொள்ளாமல் நிறைய வார்த்தைகளை விரயம் செய்கிறேன்.

காசு சம்பாதிக்க முடியாததால் கைதட்டல் சம்பாதித்தேன்!
இதைப் பற்றி யோசிக்கும் பொழுதில் தோன்றியது-
குட்டி அறை
தொட்டி மீனுக்கு இடமில்லை
குளத்துக்குப் பொரி.




Saturday, January 15, 2011

உமாவுக்காக இது

உமாவுக்கு இதை எல்லாருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று ஒரு கோபம்...எனக்கு இதில் எந்தப் பயனும் இல்லை என்ற வெறுப்பு----
இந்த நாடகம் அந்த மேடையில்......யாரைத்தான் நம்புவது பேதை நெஞ்சம்?
http://umarudhran.blogspot.com/2011/01/blog-post.html

Wednesday, January 12, 2011

முடியாத ஒரு முன்னுரை


நான் எழுத்தாளன் என்று சொல்லிக்கொண்டதேயில்லை. எழுதியே வாய்க்குச் சோறும் வண்டிக்குப் பெட்ரொலும் போட்டுக்கொள்ள முடியும் என்று பீற்றிக்கொண்டவனும் இல்லை, அப்படி எந்த உத்தேசமும் இப்போதைக்கு இல்லை.

அதே நேரம், எழுத்துக்களைக்கூட்டி வார்த்தைகளாக்கி, வார்த்தைகளைக் கூட்டி வாக்கியங்களாக்கும் வித்தை மட்டுமே எழுத்தாளன் எனும் புகழுக்குத் தகுதியாவது இல்லை என்று மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்  -மற்றவர்க்கும் எனக்கும்.

நான் கம்யூனிஸ்ட் என்றும் சொல்லிக்கொண்டதில்லை. சுயசௌகரிய மயக்கத்திலிருந்து மீளாமல் அப்படிச் சொல்லிக்கொள்வதன் அபத்தம் விளக்கத் தேவையிலாத வெட்டிவாதம்.

நான் நாத்திகன் என்று சொல்லிக்கொண்டதில்லை, நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். கடவுள் நம்பிக்கையும் சாதீயத்திமிரும், பார்ப்பனீய குயுக்தியும் வேறுவேறு என்பது என் இன்றைய நம்பிக்கை. நான் நம்புவதால் நீங்களும் நம்புங்கள் என்று பிரச்சாரம் செய்தவனும் இல்லை, செய்யப்போவதும் இல்லை. கம்யூனிஸத்தைப் பிரச்சாரம் செய்யாத நான் கடவுள் நம்பிக்கையும் பிரச்சாரம் செய்வதில்லை – எனக்கு இரண்டுமே பிடிக்கிறது, இன்னும் மற்றவர் மீது திணிக்கும் அளவுக்கு இல்லை.

எனக்குப் பிடிக்கும் பிடிக்காது என்பது மீறி எனக்குச் சரியில்லை என்று தோன்றினால் அதைப் பதிவிடுவதும் என் வழக்கம். சில வேளைகளில் பதிவிடாத என் மௌனம் எனக்கே கூச்சம் தந்ததும் உண்டு. இதையெல்லாம் மீறி எனக்கென்று ஒரு சமூகப்பொறுப்பு இருப்பதாக நினைப்பவன் நான்.  வயதும் வசதியும் கூடியதால் இனி களப்பணி எனக்குச் சாத்தியமில்லை. ஆகவே இப்போதைக்கு வார்த்தைகள் மட்டுமே என் வேலை.

இந்த ஆண்டு நிறைய எழுதுவதாய் இப்போதைக்கு உத்தேசம். யாருக்குப் பயன்படுகிறதோ இல்லையோ எனக்காவது பயன்படும் எனும் (கடவுள் போன்ற) நம்பிக்கையில் –இவ்வகை நம்பிக்கை தான் கனவு என்றும் ஆசை என்றும் சொல்லப்படும்: நிறைவேறினால் பேரானந்தம், நிறைவேறும் வரையும் நிழலானந்தம்.

வாழ்க்கை பற்றிய என் புரிதலை, அனுபவங்களின் அடிப்படையில் நான் அலசித் தேர்ந்துகொண்ட சித்தாந்தங்களை, என் கோணங்களை, கோணல்களை விமர்சிப்பதாய் மட்டுமல்லாமல் விளக்கி விளக்கம் பெறுவதுமாக எழுதுவதே இன்றைய சபதம்.
அடுத்த பதிவில் நட்பு பற்றி எழுதலாம், எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. கிசுகிசுவாக அல்ல. நேர்மையாக. பூச்சிகளையும் புழுக்களையும் அடையாளம் காட்டும் நேரத்தில் தேவரூப விந்தைகளையும் வியந்து போற்றும் வண்ணமாக.
இன்ஷா அல்லாஹ்.