Tuesday, May 17, 2011

காதலிக்கக் கற்றுக்கொண்டேயிருக்க..


அவள் அப்படியொன்றும் அழகில்லை  என்று சொல்வதல்ல,  
அவளுக்கு யாரும் நிகரில்லை என்பதே காதல். 
வீம்புக்கும் வறட்டுப் பிடிவாதத்திற்குமாய் வெளியே அறிவிக்கப்படுவதில்லை காதல், 
அது, 
உள்ளே நிழல்கூட இல்லாமல் நிரப்ப, ஒருகணத்தில் பிறக்கும் பேரொளி.

காதலின் ஒரு கோணம் தான் பக்தி. கோணம் ஒரு கோணலான பார்வைதான், அழகாகத் தெரிந்தாலும். 
முழுதாய் பார்க்க, ‘அதுகையிலிருக்க வேண்டும், சுழற்றிப்பார்க்க, அல்லது எனக்குக் கால்களில் வலு வேண்டும் சுற்றி வந்து பார்க்க.. பக்தியில் இந்தச் சலுகை கிடையாது. பார்த்த விழி பார்த்தபடி பூத்துக்கிடக்க வேண்டும். உண்மையான காதலில் ‘அதுகையிருக்கும், அனைத்துக் கோணத்திலும் அழகாக இருக்கும், அந்த அழகு நிரந்தரமாகவும் இருக்கும். இது utopian அல்ல.

அழகு மாறுமா? அழகின் இலக்கணம் நிச்சயமாய் மாறும். அப்படி காலத்திற்கேற்ப தன்னையமைத்துக் கொண்டால்தான் அது அழகு. அது நிர்ப்பந்தமல்ல, இயல்பான பரிணாமம். கனவுகளின் வரைபடங்களுக்கும் நிஜத்தின் கட்டிடங்களுக்கும் இருக்கும் ஆழமான பிடித்தமே காதல், அதனால் தான் அது கவிதைகளையும் கனவுகளின் பொய்களையும் உள்ளடக்கி வைத்துக் கொள்கிறது.
படிப்படியாய் இறங்கிவரும் படிமமாய்க் காதலைப் பார்த்தால், பக்திக்கு அடுத்த படியில் ரசனை! ரசனையின் நாயகம் தெய்வநிகர்தான், பகுத்த்றிவாளனுக்கும். உயர்வானதை, உண்மையானதை ரசிப்பவன்,  சாதாரணமானதை, மலிவானதை, காலப்போக்கில் காணாமல் போவதை ரசிப்பவன் பொதுபுத்தி மீறி புரட்சிகரமாகத் தென்படும் பிம்பங்களை ரசிப்பவனை விடக் கீழானவனா? எனக்கு சின்ன வயதில் ஜெயிக்கும் கட்சி பிடிக்கும், இப்போது தோற்பவர் கோணத்தைப் புரிந்து கொள்வது பிடிக்கும், நான் யாரை/ எதை ரசிக்கிறேன்? எல்லாரையும் போல நான் வெற்றியைத் தான் ரசிக்கிறேன், அதே நேரம் எதிரியின் தோல்வியை ருசிக்கிறேன் –மிருகத்தன்மையுடன் அல்ல, மானுட இயல்புடன்.

ரசனை காதலாகுமா? ரசிக்க முடியாததன் மீது காதல் வருமா? ஒரு கணம் வருவதா  காலந்தோறும் வளர்வதா காதல்? ரசனை வளருமா? சமூக அங்கீகாரம் கூட இல்லாமல் முழுமையாய் ஒரு ரசனை காதல் போலாகுமா? ஆகுமாம்! Romantic புதைகுழியில் மூழ்கடித்தவர்களின் முன்னோடி முழக்கம் இது!!_இங்கேயும் இது 60களின் அநாவசிய அடுக்குமொழிக் கலப்புடன்தான் வெளிப்படுகிறது.

நம்பிக்கையின்  projection தான் காதல், பக்தி, ரசனை!  தன்விருப்பை ஒரு பொதுவிதியாக்கும் மனோதற்காப்புதான் காதல், பக்தி, ரசனை.
சாய் செத்தாலும், ஜெ ஜெயித்தாலும் நாளை இன்னொரு தேவரூபம் வானின்று வந்து வாழ வைக்கும் எனும் நம்பிக்கையும், நப்பாசையுமே பக்தி, ரசனை, காதல்.

நான் வாழ்வை ரசிக்கிறேன், நாளையை நம்புகிறேன், என்னிடமே எனக்கென்று பக்தியுடன் பணிகிறேன்... இதை வெளியேயும் சொல்கிறேன்,நான் சரியாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு இல்லாததால்!



8 comments:

பனித்துளி சங்கர் said...

ரசிக்கத் தெரிந்த ஒவ்வொரு உயிருக்கும் காதலிக்கத் தெரியும் என்பதை மீண்டும் நேர்த்தியாக சொல்லியிருக்கும் விதம் சிறப்பு

Chitra said...

well-written, Dr. :-)

karthik vaigai said...

எவ்வாறு வந்தால் அது காதல் ஆகும் ?
காதல்

காதால் ஆகி வந்தாலொழிய மற்றொன்று காதலாகாது .
அதாவது
ஒருவன் பேசி பேசி ,அவள் கேட்டு கேட்டு ,இவள் பேசி பேசி அவன் கேட்டு கேட்டு வருவதே
மெய்யான காதலாக இருக்க முடியும் .அவ்வாறு தான் அது வரவும் வேண்டும் !
அவ்வாறு வரும் வுனர்வுகளுக்கு அதித வலிமை உண்டு.அது காலத்தால் அழியாதது.
இது ஒழிய மற்றொன்று இருவருக்கிடையே வந்தால் அதற்கு பெயர் காதல் என
கூறக்கூடாது ,
காதால் ஆகி வருவதனாலேயே அது காதல் எனப்படுகிறது.

rangarajan said...

Thanthai Periaar ...Hmmmm Did he love a woman? Did he love any living thing? Because he did not have Bakhthi, he could not have had love for others..Am I right??

மதுரை சரவணன் said...

//நான் வாழ்வை ரசிக்கிறேன், நாளையை நம்புகிறேன், என்னிடமே எனக்கென்று பக்தியுடன் பணிகிறேன்... இதை வெளியேயும் சொல்கிறேன்,நான் சரியாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு இல்லாததால்!///


வாழ்வு ரசிக்க கற்றுக் கொள்ளாதவன் தோல்வியுறுவான்..பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

மயிலாடுதுறை சிவா said...

நான் வாழ்வை ரசிக்கிறேன், நாளையை நம்புகிறேன், என்னிடமே எனக்கென்று பக்தியுடன் பணிகிறேன்... இதை வெளியேயும் சொல்கிறேன்,நான் சரியாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு இல்லாததால்!

சூப்பர்....

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Deepa said...

//அழகு மாறுமா? அழகின் இலக்கணம் நிச்சயமாய் மாறும். அப்படி காலத்திற்கேற்ப தன்னையமைத்துக் கொண்டால்தான் அது அழகு. அது நிர்ப்பந்தமல்ல, இயல்பான பரிணாமம். கனவுகளின் வரைபடங்களுக்கும் நிஜத்தின் கட்டிடங்களுக்கும் இருக்கும் ஆழமான பிடித்தமே காதல், அதனால் தான் அது கவிதைகளையும் கனவுகளின் பொய்களையும் உள்ளடக்கி வைத்துக் கொள்கிறது// Too good!

M. Md. Hushain said...

நம் மீது நாம் கொள்ளும் காதல் தவிர மற்றவை எல்லாம் உண்மையற்றது. அடிப்படையில் பிறர் மீது கொள்ளும் காதல், விருப்பு, வெறுப்பு, பக்தி எல்லாம் நம்மை நாமே உணர, காதலிக்க நம்மை அறியாமல் நாம் எடுக்கும் முயற்சிகள்.

Post a Comment