நான் சின்ன வயதிலிருந்து, அதாவது அரை நூற்றாண்டுக்கு மேலாய் நம்பிய கதை!
இதுவும் புனைவு தான், ஆனாலும் எதற்காக, எப்படி, என்பதில் தான் நயம், நாகரிகம். தமிழ்ப் பதிவுலகில் புனைவுகள் எல்லாமே வன்மம், வக்கிரம் என்றான பின்... இன்னும் புனைவு என்பதன் அற்புதத்தின்மீது நம்பிக்கையோடு இந்தப் பதிவு.
இது புதிய கதை அல்ல, பழைய கதையின் புதிய கோணம். என்னைப் பொறுத்தவரை இதில் அனர்த்தம்-ஆபாசம் இல்லை, ஆனாலும் சிலருக்கு அப்படித் தோன்றலாம்.
புராணங்கள் எல்லாமே புனைவுதான், ஓர் அரசியல் ஆதாயத்திற்காக அவற்றை சரித்திரப் பதிவுகளாகச் சிலர் சொன்னாலும். ராமன் பாலம் கட்டியதும், யேசு உயிர்த்தெழுந்ததும், திரும்பத்திரும்பச் சொல்லி நம்பவைக்கப்பட்ட கதைகள் என்றாலும் அவை அந்தந்த காலத்தின் பதிவுகளல்ல, பின்னாளில் கொஞ்சம் கற்பனையும் இன்னும் கொஞ்சம் பக்தியும் மிகுந்த மனங்களின் வியப்பின், மரியாதையின் வெளிப்பாடுகள்தான். மரியாதையுடனும் மரியாதை வரவழைக்கவும் சொல்லப்பட்டவையே புராணப் புனைவுகள். ஒரு காலத்தில் கிரேக்க கடவுள்களின் கதைகள் கூடத்தான் நம்பப்பட்டன, நம்புவதற்காகச் சொல்லப்பட்டன. 
இப்பதிவு கடவுள் நம்பிக்கை குறித்து அல்ல, ஒரு புனைவின் வீச்சு குறித்து.
இடையில் பல மாதங்கள் விட்டுப் போயிருந்த வாசிப்பு, மீண்டும் ஆரம்பித்தது இந்த புத்தகத்துடன்தான். வெகுநாள் கழித்து நண்பருடன் நேரம் செலவிடும்போது வரும் கூடுதல் மகிழ்ச்சியில் தான் இந்த நூலை ரசித்தேனா என்று பரிசீலிக்க ஒரு மாதம் இடைவெளி கொடுத்து மீண்டும் பக்கங்களைப் புரட்டினால் இன்னும் அதே நல்ல நூல் படித்தவுடன் வரும் இதமான மனநிலை வந்ததால் இங்கே இந்தப் பகிர்வு.
Phillip Pullman எழுதிய The good man Jesus and the scoundrel Christ என்பதே நான் ரசித்த புனைவு. பாவம் Pullman, புத்தகத்தின் பின்னட்டை முழுக்க இது ஒரு கதை என்று பெரிய எழுத்துக்களில் போட வேண்டியிருக்கிறது. ஏசுவின் கதை தான், ஆனால் கிருத்துவம் கூறும் கதையல்ல.
இந்த நூலில், மேரிக்குப் பிறப்பது இரட்டைக் குழந்தைகள்- ஒன்று ஏசு இன்னொன்று கிறிஸ்து. ஏசு அறிவாளி, மக்கள் மத்தியில் பிரபலம், கிறிஸ்து ஏசுவை எட்ட நின்று அன்பும் வியப்புமாய் பார்க்கின்ற சகோதரன்.
இன்னும் வளர்ந்து ஏசு மக்கள் மத்தியில் பேசி இன்னும் பிரபலமாகும் போது, ஒருவன் கிறிஸ்துவிடம் வந்து ஏசுவின் கதையை எழுதச் சொல்கிறான். ஆரம்பத்தில் ஏசு செய்வதையும் பேசுவதையும் அப்படியே எழுதி வரும் கிறிஸ்து நாட்பட நாட்பட தன் கற்பனையும் சேர்த்துக் கொள்கிறான். எங்கேயும் ஏசுவை அவன் விட்டுக்கொடுக்கவும் இல்லை.
பசியோடிருக்கும் ஒருவனுக்கு ஏசு தன்னிடம் இருந்த ரொட்டியைப் பிய்த்துக் கொடுத்ததும் கூடியிருந்தவர்கள் எல்லாரும் தங்களிடம் இருந்த ரொட்டியை அடுத்தவருக்குப் பிய்த்துக் கொடுக்க, ஒரு பெருங்கூட்டமே பசியாறுகிறது. இதை கிறிஸ்து எழுதும் போது, ஒரு ரொட்டித் துண்டைப் பிய்த்துக் கொடுத்து எல்லார் பசியையும் ஏசு போக்கியதாக எழுதுவான். உண்மை இல்லை பொய் உரையிலாமையால்!
இறுதியில் ஏசுவின் சடலம் இருக்கும் குகையிலிருந்து வெளிவந்து ஏசு உயிர்த்தெழுந்ததாக ஒரு சிறிய நாடகம் ஆடுவான். செய்தி கதையாகி, கதை புராணமாகிறது. ஏசு கிறிஸ்துவாக ஒரு மதம் தோன்றி அது நிறுவனம் ஆகிறது. 
இவ்வளவுதான் கதை.
இதற்கு உண்மையாகவோ காசுக்காகவோ அரசியல் ஆதாயத்திற்காகவோ உலகில் எந்தக் கிளர்ச்சியும் நடந்து விடவில்லை. ஓவியம் கேலிச்சித்திரம் ஆகியற்றிற்கெல்லாம் துள்ளியெழுந்து போர்க்குரல் எழுப்பும் கூட்டம் போல எதுவும் திரண்டுவிடவில்லை. Pullman உயிருக்கு மிரட்டல் இல்லை. கிருத்துவர்கள் நல்லவர்கள், யாரையும் சகித்துக் கொள்வார்கள், ஒரு கன்னத்து அடிக்கு அடுத்த கன்னத்தைக் காட்டுவார்கள் என்று இல்லை. சமீபத்தில் ஜோன்ஸ் எனும் மூர்க்க மூட விளம்பர மோகி இதைக் காட்டி விட்டான். 
இங்கே எதிர்ப்பு வருமாறு அவதூறு மிகுந்து எழுதப்படவில்லை. வெறுப்புக்குப் பதில் ரசிப்பும், சிந்திக்க மிதமான ஒரு தூண்டுதலுமே இந்நூல் ஏற்படுத்துகிறது. நாகரிகம், நயம், நேர்மையான சிந்தனை கற்பனையோடு கலந்தால் வரக்கூடிய ஓர் அற்புதமான புனைவு இது.
ஆரம்பத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இந்நூலின் கடைசி நாற்பது பக்கங்கள் அற்புதம். ஆன்ம விசாரணை, ஆத்திக நிறுவனமாதல் குறித்த கேள்விகளோடு புத்தகம் மூடிய பின்னும் மனம் யோசிப்பதே இந்நூலின் வெற்றி.
ஏசு செய்யும் சுய பரிசீலனையும், கடவுளிடம் கேட்கும் கேள்விகளும் வியக்குமளவு நயமாகவும் செறிவாகவும் எழுதப்பட்டுள்ளன. இதில் உள்ளவை குறித்து விரிவாகப் பின்னொருநாள் பார்க்கலாம். இப்போதைக்கு இது ஒரு நூல் அறிமுகம் மட்டுமே. அத்துடன் புனைவின் மேன்மை குறித்த ஒரு பெருமூச்சு மட்டுமே.
சில விமர்சனங்கள்- 
Pro Jesus 
http://www.gospeloutreach.net/jesus.html
Pro Book 
http://bit.ly/cteiSh
Good Reviews
http://bit.ly/9w9THO
http://bit.ly/9b4xCE
பிலிப் புல்மன்
maladies of the mind..
10 years ago



 
 



 
 Posts
Posts
 
