Thursday, February 27, 2014

சுஜாதா நினைவு

சுஜாதா நினைவு நாள் என்பது கூட முகநூல் முழங்கித்தான் தெரியுமளவு ஆகி விட்டது  வாழ்க்கை. இங்கே சுஜாதாவை முகநூலில் இம்சை நான் செய்த்தில்லை, ஆனால் மின்னஞ்சலில் கொஞ்சமும் நேரிலும் தொலைபேசியிலும் இம்சித்திருக்கிறேன்.
முதல் சுஜாதா நைலான்கயிறு மூலம்தான், அதுவும் வாராவாரம். அதிலும் அப்போது எஸ்.பாலு ஓவியம்தான் முதல் ஈர்ப்பு..அப்புறம்ம்ம்ம்ம் (சுஜாத்தாத்தனமாய்)   அங்கங்கே…..
ஒரு முறை ட்ரைவின்னில் நண்பர்களிடம், “மேல பார்ரா..பொட்டசியம் பெர்மாங்கனேட் கலந்த வானம்..” என்று ஆரம்பித்து சுஜாதாவை சிலாகித்ததும் நினைவுக்கு வருகிறது. நகுலன் தொகுத்த குருக்ஷேத்ரம் நூலில் ஸ்ரீரங்க எஸ்.ஆர். எழுதியதைஇது சுஜாதா ஸ்டைல் ஆனா சுஜாதவை விட பெட்டர்’  என்று பேசியது எல்லாம் நினைவில் வருகிறது.
அந்த சுஜாதாவை நேரில் பார்த்தபோதுஅது குமுதம் அலுவலகம். என்ன மாதிரி போஸ் பெண்கள் கொடுத்தால் போடப்படும் என்று சொல்லி, இதுக்கெல்லாம் ஸைக்கலாஜிகலா ஏதாவது இருக்கா என்று (இருக்காதே எனும் நமுட்டுச்சிரிப்புடன்கேட்டார்.
தனக்கு வேண்டிய ஒருவரை, என் க்ளினிக் அழைத்து வந்தார். ஸ்கிஸோஃப்ரீனியா சார், என்றேன், தெரியும் என்றார். (ஆனாலும் அப்புறம் எழுதிய , மற்றும் ஸில்வியாவில் நோய் பற்றி சரியாய் எழுதவில்லை).
நடுவில் அப்போது ஓஹோவென்று வளர்ந்த ஜெஜெ டிவியில், “சார் உங்க கனவுத்தொழிற்சாலை ஸீரியல் பண்ணட்டுமாஎன்று கேட்டபோதுட்ரை பண்ணுங்கஎன்றார். அரசியல் மாற்றத்தில் அது அம்போவென்றானது. (அதற்காக ஸில்க்கிடம் முதன் முறை தொலைகாட்சிக்காகவும் பேசிமுடித்தபின்!!).
அப்புறம்சில மின்னஞ்சல்கள்..
//dear sir
 i am rudhran, a psychiatrist in chennai. though i have met you on a couple of occasions i am not presumptuous to imagine tht you would recollect me.
i have embarked on a book for which i am stuck with using a nice/right word for `cult'.
would you be able to send an apt word for the same?
i know it is a bother, but i could not think of any other source.
thank you
with respects
 --
Dear Dr Rudhran
Ofcourse I know You We consulted you in xxxxxxxxx 's case
I see you inseveral tv appearances
'cult' has a religious connotation suggestive of imposition by a small group
pitivAtha vazhipAtu  comes close
Sujatha
---
dear sir
thank you very much.
it is deeply heartening to see you responding to me.

i shall not disturb you in this manner often, but i still have some words that niggle my language when i attempt to use them in tamil- relaxation for example.
Oivu would connote retiring and being calm minus work
ilaipparuthal would give an idea that one is just taking a break
by relaxation i mean a state of mind that is calm, unperturbed, active and not just resting.
i wonder.

as a novice in writing in Tamil, my immediate references to existing dictionaries are not comforting, i have to seek other right sources.
even for mentioning mobile phone in tamil, kaipesi makes me uneasy especially with my cordless phone around.
this letter is not meant to make this a discomforting or nagging chain of correspondence.
i am grateful and as always my human mind isyearning for more whenever something good is experienced.
i hope and wish i could meet you in person someday.
with repects
 --If you are not happy with oyvu ,nekizhthal or talarthal  may be tried both these words have a causative form nekizhthal /nekizhththa,l thalarthal/thalartthal 
ws 
 --------------------
இப்படி அவ்வப்போது.


அப்புறம், அவர் செத்துப்போனார். நினைவுகளை நிரந்தரமாய் விட்டு விட்டு.

Thursday, February 20, 2014

அவளை நினைத்து உளத்தை இடித்து...வெறும் வாய் ஊத..




அவளுக்கு அனுதினம் பக்தியுடன் அபிஷேகம், அன்புடன் அலங்காரம், பணிவுடன் பூஜை…  தினமும் இதைப் பார்க்கத்தான் ஆசை, நானே செய்ய முடியாததால்.. வாழ்வின் நிர்ப்பந்தம் வேறு நிமித்தங்களை முன்னிறுத்துகிறது.

 என் நிர்ப்பந்தம் என நான் நினைப்பதும் கூர்ந்து கணித்தால் கணக்குகளை மட்டுமல்ல, கனவுகளை மீறியும் இல்லை.
சம்பாதிக்க வேண்டும், சோறு தின்று உடுப்பு மாற்றி, வீட்டு நிழலில் உறங்க மட்டும் அல்ல,  சம்பாதிப்பது வெளிக்காட்ட. என் நிலை உயர்கிறது என்பதை விளம்பரப்படுத்த. எனக்கு அவசியமானது ரொம்பவே கொஞ்சம் உடலளவில். என் உணவுக்கு மிகவும் குறைவாகவே செலவாகும், மிகவும் குறைவாகவே உண்பதால்.
என் சொகுசுக்கும் ரொம்பவும் செலவாகாது. என் சந்தோஷங்கள் என் சம்பாத்யத்தில் மீதம் வைப்பதால். என் ஆசுவாசத்திற்கும் செலவாகாது, என் ஆயாசம் தனியே செலவாவதால்.
இன்றெனக்கு பணத்துக்குக் கஷ்டமில்லை, கடனுமில்லை, எதிர்காலத்தின் தொடுவானில் கூட மிகப்பெரிய செலவுக்கான சாத்தியமுமில்லை. என் உறவு வட்டம் மிகவும் குறுகியது, என் நட்பு வட்டமும் குறுகிச்சிறுத்து வெறும் நினைவுகளாகவே இன்றிருக்கிறது.
எனக்கு நான் போதும் எனும் தீர்மானமும் இல்லை.
எனக்கு இன்னும் நிறைய வேண்டும், அவள்தான் நிறைவு என்பதால்.
அவள் கண்ணில் தூங்குமுன் மின்னலாய்ப் புன்னகைத்து நம்பிக்கையூட்டி, காலை விழிப்பில் தூரத்து இலக்காய் தினமும் இருக்க, அவளைத் தேடுவதிலும் எனக்கொரு சலிப்பு.
எதைத் தேடுவது? இல்லாததையா, தொலைத்ததையா?
அவள் என்றும் என்னுடன், அன்றில் எனக்கு இயக்கமே இருக்காது. அவள் தொலைக்க முடியாதவள், ஏனெனில் அவள் கையில் கிட்டாதவள்.
உயிர்த்தீயினில் வளர் ஜோதியே, எந்தன் சிந்தனையே, எந்தன் சித்தமே- உனக்கு நான் தினமும் அபிஷேகம் செய்கிறேன், அலங்கரிக்கிறேன், ஆராதிக்கிறேன். ஆனால் எல்லாம் கனவில் தானே.
ஹ்ம்
…. அவளுக்கு அனுதினம் பக்தியுடன் அபிஷேகம், அன்புடன் அலங்காரம், பணிவுடன் பூஜை…  தினமும் இதைப் பார்க்கத்தான் ஆசை. வாழ்வின் நிர்ப்பந்தம் வேறு நிமித்தங்களை முன்னிறுத்துகிறது. என் நிர்ப்பந்தம் என நான் நினைப்பதும் கூர்ந்து கணித்தால் கணக்குகளை மட்டுமல்ல, கனவுகளை மீறியும் இல்லை……
அவள் கனவின் நிஜம், என் நிஜத்தின் கனவு.


Tuesday, December 3, 2013

சக்தியின் கேடயம்



கேடயம் தற்காப்புக்கு மட்டுமல்ல, தாக்குதலுக்கும்தான்.
ஒவ்வொரு தற்காப்பும் தாக்குதலின் மீது தொடுக்கப்படும் எதிர் தாக்குதல் தான். ஓர் அநாயாசமான சுழற்சியில் கையிருக்கும் கேடயம் எதிரியின் ஆங்காரமான வாளினை வீணாக்கும்.

கேடயம் வேறு கவசம் வேறு. எதிரி எதிர்படும்போதுதான் கேடயம் தேவை, அந்த எதிரி ஒளிந்திருந்து தாக்கினால்தான் கவசம் அவசியம்.பராசக்தியை படம் வரையும்பொழுது அவளது பல கரங்களிலும் பல ஆயுதங்கள்; அதில் ஒரு கையில் கேடயமும் இருப்பதாய் முன்னவர் சிற்பங்களிலும், சித்திரங்களிலும் பார்த்ததாலும் எங்கெங்கோ படித்ததாலும், ஒரு கையில் கேடயம் இருப்பதாகவே நானும் வரைந்தேன். ஆனாலும்சக்திக்கு எதற்கு கேடயம்? சகலத்துக்கும் காப்பாயிருக்கும் நாயகிக்கு எதற்கு தற்காப்புகேடயம் பாதுகாத்துக்கொள்ள அல்ல, அது ஓர் ஆயுதம், தற்காப்பும் ஒருவகை தாக்குதல் என்பதெல்லாம் மானுடர்க்கு அவசியம், ஆனால் சகலுமுமான சக்திக்கு எதற்கு கேடயம்?
எத்திசையும் வியாபித்துள்ள பராசக்திக்குத் தெரியாமல் ஓர் எதிரி தாக்க முடியாது என்பதால் அவளுக்குக் கவசம் கிடையாது. ஆனால் அவள் கையிருக்கும் கேடயம், அவளையும் எதிர்க்க வல்லவன் உண்டு என்பதைக் காட்டவா?

அவளை உருவப்படுத்தும்போது, அவள் போருக்குப் போகிறாள் என்பதால்தான் அவள் கையில் ஆயுதங்களும் தரப்பட்டுள்ளன. அவள் யாரிடம் எதற்காகப் போரிடவேண்டும்? ஓர் விழியசைவில் யாவும் நிகழ்த்தும் அவளுக்கு போர்வாள் ஏன்? கேடயம் ஏன்? போர்க்களமுமாகி, அதில் வெடிக்கும் யுத்தமுமாகி, அதன் முடிவின் குருதியுமாகி, அங்கே வெற்றியுமாகி, தோல்வியுமாகி யாதுமாகி விளங்கும் அவள் மானுட ரூபத்தில் சித்தரிக்கப்படுவதால் தான். இவ்வகையில் மானுட வடிவமைத்து பரசக்தியை ரசிக்கவும், வணங்கவும், வர்ணிக்கவும் சித்தரிக்கவும் மானுடத்துக்கு அவசியம் உள்ளதென்பதால் தான்.

மேலோட்டமாய், என்போல் அவளை ஆக்கிவைப்பது எனக்கு சௌகரியம். ஒத்த பிம்பத்தின் பரிச்சய சுகம் என்றாலும் அதில் இன்னொரு நிஜம் எனக்கு தினம் உள் உரைத்துக்கொண்டேயிருக்கிறது- அது நானும் அவள்தான் என்பது. என் மனோரூபமே சக்தியின் அலங்கார வடிவமாய் என்முன் வழிபடு விக்கிரகமாகிறது.

அவள் நான் என்பது என்னிடம் சித்தி உள்ளது என்றொரு வியாபார நாடகமல்ல. அது இம்மாபெரும் ப்ரபஞ்சத்தின் துகளானாலும் அதன் பிரதிநிதியாய் நான் என்பதன் அடக்கமான துணிவு.
ஆகவே அவளுக்கு கேடயம் அவசியம். எனக்கு கேடயம் அவசியம்.
அவளே நானெனில் எனக்கெதற்கு கேடயம்? நான் அவளின் அனைத்துமல்ல, என் அனைத்தும் அவள் என்பதால்தான்.
உள்ளே மகத்தான மனோரூபமாய் அவள் என் மனத்தின் மைய சக்தியாய் இருப்பதை நான் உணர்ந்தாலும், மானுட இயல்பில் என் ஆணவம், ஆசை, கள்ளத்தனம் யாவும் இவ்வுலகில் வாழ நிர்னயித்துக்கொண்ட என் சுயவிதிகளினால் அவ்வப்போது (அடிக்கடி) அவள்தான் இயக்கம் என்பதை மறந்து இயங்குவதாய் ஓர் இறுமாப்புடன் வாழ்வை நான் போர்க்களமாக்கிக்கொள்கிறேன். போர்க்களத்தின் சுவையூறிய வெறியில் அவளை இன்னும் கொஞ்சம் மறக்கிறேன்.

வாழ்வின் போர்க்களத்தில் எதிரிகளை வாய்கூவி வரவழைத்துக் கொள்கிறேன். அவர்களது வாள் வீச்சை எளிதாய் தடுத்து திசைமாற்ற எனக்கு கேடயம் தேவைப்படுகிறது. அந்த என் கேடயம் என் வாய்மொழி. சுலபமாய் எதிரிகளைத் தடுக்க, திசைதிருப்ப, தோல்வியுறச்செய்ய எனக்கிருக்கும் கேடயம் என் வாய்மொழிதான். அதைப் பயன்படுத்தும் வித்தையை அவள் கற்றுத் தந்திருந்தாலும், நான் எனும் நினைப்பில் என் கேடயம் சில நேரங்களில் சரியாய் தாக்குதல்களை எதிர் கொள்ள முடிவதில்லை.

என் தேவிக்கு ஆயிரக்கணக்கில் அத்தனையும் பார்க்கும் விழியமைப்பு என்பதால் அவளை மறைந்திருந்து யாரும் தாக்கிவிட முடியாது. அவ்வப்போது அவளை மறக்கும் மானுடன் என்பதால் என்னை எத்திசையிருந்தும் எவரும் தாக்கலாம். ஆகவேதான், அவளுக்கு அவசியமில்லாத கவசம், எனக்கு அவசியமாகிறது. என் கவசம் அவள்தான் எனினும் அதை அணிந்திருப்பதை மறந்து என்னுள் அச்சம் வரும்; அதை அணியாத ஆணவத்தில் அடியும் விழும்.
அவளாகிய என் கவசம் என்பது நான் நிர்ணயித்துக் கொண்ட சுயவிதிகள், நான் அமைத்துக்கொண்ட என் தளம், என் களம், என் வாழ்வின் அத்தியாவசியங்கல், என் வட்டம், என் விரிவு, என் பார்வை, என் கல்வி. எப்போது இக்கவசங்கள் இல்லாதிருக்கிறேனோ, எப்போது இவற்றை உதாசீனப்படுத்துகிறேனோ - அப்போதெல்லாம் வலிமை தந்த அவள் வலியும் தருகிறாள். வலிக்கு மருந்தாகவும் வருங்காலத்திற்கு பாடமாகவும் இயங்குகிறாள்.
அவளுக்கு எதற்கு கையில் கேடயம்? எனக்கு வாழ்வின் நுணுக்கத்தை நினைவூட்டிக்கொண்டே இருக்கத்தான்.







Friday, August 16, 2013

”ரேடியோபொட்டி”



ரேடியோபொட்டி என்று என் வீட்டில் 60களில் அழைக்கப்பட்ட சாதனம் என் வாழ்வின் முக்கியமான அங்கம்.


இந்தப் படத்தில் உள்ளது தானா என்று நிச்சயமாய் இன்னும் சொல்லமுடியாவிட்டாலும் இதே போலொரு ரேடியோ என் சிறுவன் வயதில் எனக்கு நிறைய சொல்லித்தந்தது.  
 அது ஒரு ஃபிலிப்ஸ் ரேடியோ, முன்னால் பியானோ மாதிரி பட்டன் இருக்கும்..அதையெல்லாம் நான் அமுக்கி எதுவும் செய்ததில்லை, அப்படியொரு விளையாட்டை என் தம்பி நடத்தி, மெக்கானிக் வந்து சரி செய்யும் வரை வீட்டிலும் அதில் உள்ளோரிடமும் இறுக்கம்,

அப்படி ஆரம்பித்த என் ரேடியோ உறவுதான் இன்றெல்லாம் ”கௌஸல்யா சுப்ரஜா” என்று தூக்கத்தில்  தட்டி எழுப்பி, “கமலாகுச சூசுச..” என்று முழுமையாய் விழிக்க வைத்து விடுகிறது. விழித்தெழுந்து வெளிவந்தால் தூரத்து மசூதி அருகே ஒலிக்கிறது..இதெல்லாம் ப்ரொக்ராம்ட்..ஐந்து மணிக்கு நான் அங்கே தூங்கவில்லை என்றாலும் இன்றைய ரேடியோ அந்த அலைவரிசையை இழுத்து வந்து என் படுக்கை அறையில் ஒலிபரப்பும்…அன்றெல்லாம் அப்படியில்லை.

இந்த ரேடியோதான் “ உன்னையறிந்தால்..” பாட்டையும், “எங்களுக்கும் காலம் வரும்” பாட்டையும், ‘தருமம் தலைகாக்கும் (டிஎமெஸ் அப்படித்தான் பாடியிருப்பார்) பாட்டையும் மனத்துள் பதிய வைத்தது- இசையாய்த்தான் அர்த்தம் அறியும் வயதில்லை அப்போது.
அப்புறம்தான் வானொலி அண்ணா, ஜெயஸ்ரீயின் தேன்குரல் எல்லாம். Digression என்றாலும் அந்த ஜெயஸ்ரீ என் 1994 வானொலி தொடர்நிகழ்ச்சியின் தலைப்பிசையை நான் எழுதிய பாடலாகப் பாடியபோது என் கண்ணின் ஈரம் நிஜம். Coming back, இந்த ரேடியோ எனக்கு நிறைய கற்றுத்தந்தது. நேரடியாய் பாடம் எடுக்காமல் மனத்துள் பலவற்றையும் பதித்து வைத்தது.

அந்த ரேடியோ வாங்கித்தந்த என் பணக்கார மாமா கர்நாடக சங்கீதம் கேட்பார். முதலில் bore என்று ஒதுங்கிய என்னை கொஞ்சம் கொஞ்சமாய் அந்த இசையும் ஈர்த்த்து. சௌடையா வயலின், மாலி குழல் என்றெல்லாம் பின்னாளில் அடையாளம் கண்டு தேடிச் சேகரித்த இசைத்தட்டுகள், அந்த வயதின் அழுத்தமான பதிவுகளின் விளைவுகள்தான். 

என் Anglo-Indian பள்ளியின் தாக்கத்தால் அந்த ரேடியோ மூலம்தான் JimReeves, Cliff Richards, Michael Holiday, beatles, அறிமுகம். இன்னும் அந்த இனிய பாடல்கள் என் இறுக்கமான தருணங்களை இலகுவாக்குகின்றன.
ரேடியோ மூலம் கற்றுக்கொண்டேன், தெரிந்துகொண்டேன் என்றெல்லாம் நான் சொன்னாலும் அப்படி கற்றவை அனைத்தும் இசை மூலமே. என்னைவிட (வயதில் மட்டுமே இளையவரான) காயத்ரியும் எனக்கு ரேடியோ மூலமே பரிச்சயம், பின்னாளில் பழகுதற்கினிய நட்பாய் மாறியிருந்தாலும். 

ரேடியோ ரொம்பவும் மாறிவிட்டது. அந்தஸ்தின் அடையாளத்திலிருந்து நடக்கும்போதும் பொழுது போக்க உதவும் உபகரணம் ஆகிவிட்ட்து. வடிவம் மட்டுமல்ல அடக்கமும் மாறிவிட்டது. ஆனாலும் இன்னமும் அது எனக்குக் கற்றுத்தந்துகொண்டே இருக்கிறது.

கொசகொச என்று தொடந்து பேசும் இளைஞர்களிடமிருந்து இன்றைய மொழியைக் கற்றுக்கொள்கிறேன், பாடல் வரிகளிலிருந்து இன்றைய ரசனையை அறிந்து கொள்கிறேன், இசைக்கோப்பின் பரிமாணங்களை உணர்ந்து கொள்கிறேன், இவைமூலம் என்னை கேட்கும்போதெல்லாம் புதுப்பித்துக்கொள்கிறேன்.

இப்போதெல்லாம் வரும் சுருக்கிய/சுருக்கமான பேட்டிகளில், கேட்பவர் சொல்பவர் இருவருடையதுமான மேலோட்டமான, அவசரமான, காலமே காசின் கணக்காயான நிலைகளையும் கேட்டு மனத்துள் தேக்கிக்கொள்கிறேன் – என்னிடம் கேட்கும் போது என் பதில்களைச் சுருக்கிக்கொல்கிறேன்..( தட்டச்சிடும்போது கொல்கிறேன் என்று விழுந்ததை மாற்றாமல் விடுகிறேன்…விரிவாக விளக்காமல் புரிகிறதா என்று பார்க்காமல், நிமிடக் கணக்கையே நோக்கிப்பேசுவதால்).
இது “என்னன்னாலும் அந்த காலம் மாதிரியா” எனும் மாதிரி புலம்பல் இல்லை. வந்திருக்கும் மாற்றங்களை உள்வாங்கி, வரப்போகும் மாற்றங்களுக்குத் தயாராயிருந்தாலும்,  

இப்போதெல்லாம் என்னமோ குறைகிறது…அது ஒரு வேளை நேர்மையின் நன்னெறியாகவும் இருக்கலாம்...அல்லது “இன்று வந்ததும் அதே நிலா..” என்பதை ஏற்கமுடியாத வயதின் வறட்டுத்தனமாகவும் இருக்கலாம்.



Friday, October 26, 2012

வித்யாரம்பம் கரிஷ்யாமி

தேவி
`வித்யாரம்பம் கரிஷ்யாமி`…..
ஆம் மா, ஆரம்பிக்கத்தான் போகிறேன் கற்றுக் கொள்ள.
கையளவு, கடுகளவு, மலையளவு என்றெல்லாம் என்னையே சுயதராசில் நிர்ணயிக்க விரும்பாமல், இன்னும் கற்பதே வாழ்வுக்குதவும் என்று கற்றுக்கொள்ள ஆரம்பிக்கப்போகிறேன்......


 
 
சித்திர்ப்பவது மேஸதா

 
என்ன கற்பது எனக்கு உதவும்? சும்மா யோசித்தால் ஒரு பட்டியல் வருகிறது.-
 
 
 
1. எல்லார்க்கும் நல்லவனாய், எல்லார்க்கும் ஏற்புடையவனாய், எல்லாரில் எவரும் என்னைக் கண்டு முகம் சுளிக்காதவனாய்..இருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
 
 2. பொய்மை பேசாதிருக்க வேண்டும்- என்பதை விடவும் உண்மை அனைத்தும் பேசாதிருக்க வேண்டும்.
3. கண்ணெதிரே அக்ரமம் நடந்தாலும் அதைத் தாண்டி நடை பயில கற்க வேண்டும்... வேறு வழியின்றி ஏதாவது செய்துதான் ஆக வேண்டுமெனில் மௌனமாய் மையமாய் தலையசைத்துச்செல்லவேண்டும் .. அதை நடுநிலை என்று நாட்டவும் வேண்டும்.
4. முகம் சுளிக்கும் விஷயத்திலும் மனம் மீறி பல்லிளிக்கவேண்டும்..பொய்யாய் அல்ல ஒரு புனைவான படத்தால்.:)
5. “என்னை கூப்டேம்பா..கருத்து சொல்றேனே..” என்று என்னையறியாத அடுத்த தலைமுறை ஊடகக்காரரிடம் கெஞ்ச வேண்டும்..என்பது இழுக்கு என்பதை மறக்க வேண்டும்.
6. கருத்து கேட்டு வருபவரிடம், “உங்களுக்கு என்ன சொன்னா பிடிக்கும்” என்று கேட்டு அதை ஒப்புவிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
பத்து வரமாவது கேட்கவேண்டும் என்று நினைத்து பட்டியல் தயாரித்தால் பாதியிலேயே கூனிக்குறுகி நிறுத்திவிடும்நாணயம் போக வேண்டும்...என்று கேட்டால் பாவம், அவள் எதைத்தருவாள்?

அவளைக் காதலிக்கிறேன்... தந்ததே போதும் எனும் திமிர் தானே தரவேண்டும் என்று கேட்கத் தயங்குகிறது? கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு முன் எழுதியது...
“திருவளரும் தினம் வளரும் ... ...
 தவம் அமர வரம் கிடைக்கும், தரணி புகழ் விரல் இருக்கும், 
தானாக முயலாமலே”

தேர்வாவான், தேற்றுவான்- எனும் அவள் நம்பிக்கையே நான்.

அசிங்கம் பற்றியொரு கவலையில்லாமல், 
அசிங்கப்படவும் அசிங்கப்படுத்தவும்,
 தான் என்றான அவளைத் தான் என நினைக்காமல் 
நான் என்று தனதுக்கானதாய் அற்பத்தனத்தில் 
நவீன நாகரீக அவசியம் எனும் மாயையில் என்னென்னவோ கேட்கத்தோன்றுகிறதே... 
கேள்வியும் அவள், கேட்கத்தூண்டுவதும் அவள் என்பதால்- பாவமன்னிப்பு அவசியமாகவில்லை,
ஆனாலும் சுற்றி நடக்கிறதே சற்றேனும் சகிக்கவொன்னா சாக்கடை சாகசம்.. என்ன செய்வது அம்மா?

இவ்வுலகின் அழுக்குடன் ஒட்டியோ, ஒட்டுண்ணியாகவோ வாழ கற்றுக் கொடு, அல்லது உலகைச் சுத்தப்படுத்து..
சும்மா சிரிக்காதே..உன் சிரிப்பில் என் மதி காணாதொழிகிறது.
உன் அழகில் நிசப்தத்திலும் ஒரு மௌனம் ஒலிக்கிறது.
இன்னும் என்ன கேட்பது...எது அவசியமோ அதைக் கொடு...எனக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்காகவும்.