Saturday, December 12, 2009

கொஞ்ச‌ம் நிதானமாக யோசித்தால்..


அடையாள‌ங்களும் அங்கீகாரங்களும் தான் என்னை எனக்குக் காட்டுகின்றன.அவற்றிலும் எனக்கு விருப்பமானவைகளே நான் தேர்வு செய்பவைகளாகவும் ஆகிவிடுகின்றன.
தோல்விகள் இல்லாத வாழ்க்கை கிடையாது,அதே போல் தோல்வியிலிருந்து மீளாதவர் என்றும் யாரும் கிடையாது. இங்கே நான் சந்தித்த தோல்விகள் சிலவற்றைப் பரிசீலிக்க முயல்கிறேன்.முதலில் தோல்வி என்பது என்ன?
விரும்பியதை அடையாவிட்டால் அந்த முயற்சி தோல்வியா? விருப்பம் ய‌தார்த்தத்தை மீறிய கனவின் வெளிப்பாடாக இருந்தால்,தோல்வி எது, எங்கே?
பல இளைஞர்கள் இப்போதெல்லாம் என்னிடம் பேசும்போது, கலாம் போல் முன்னேறி வாழ்வில் இந்தியாவின் தலைமைப் பதவியைக்கூட அடைவோம் என்று ஆர்வத்துடன், நம்பிக்கையுடன் உறுதியாகக் கூறுகிறார்கள். உழைக்கும் திடத்தையும் நம்பிக்கையையும் கலாம் உயர்பதவி அடைந்ததால் இளைய தலைமுறை அடைகிறது என்பது நன்றாகத்தான் இருக்கிறது. உற்றுப்பார்க்கும் வரை.
கலாமும் எழுத்தாளர் சுஜாதாவும் ஒன்றாகப் படித்தவர்களாம். கலாமுக்குப் பதிலாக சுஜாதா அந்த அரசுத்துறையில் பணிசேர்ந்திருந்தால், அவரும் ஓய்வு பெறுமுன் அதே தலைமை விஞ்ஞானியாகத்தான் இருந்திருப்பார்.ஆனால், அப்போது சுஜாதாவை யாராவது ஜனாதிபதி ஆக்கியிருப்பார்களா? அந்த நேரத்தில் இந்துமதவெறி என்பதைக் குறைத்து, மாற்றிக்காட்ட பிஜேபி அரசுக்கு ஒரு முஸ்லிம் தேவைப்பட்டார். அணுவிஞ்ஞானி என்ற கூடுதல் பெயர் கலாமிற்கு இருந்ததால், அவரால் ஜனாதிபதியாக முடிந்தது. அவ்வள‌வு தான்.
இதை உழைப்பின் வெற்றி என்று எல்லாரும் நினைக்கலாம், உழைக்க ஒரு தூண்டுகோலாக மட்டுமே இது பயன்பட்டால் நிச்சயமாக இது பாராட்டி, ஊக்கி வளர்க்கப்பட வேண்டியதுதான்.. 
அரசுத்துறை ஒன்றில் படிப்படியாகப் பதவி உயர்வு பெறுவதற்கு வெறும் கல்வித்தகுதியோ வயதோ வேலைசெய்த அனுபவமோ போதாது, சாமர்த்தியமும் வேண்டும். அது இல்லாவிட்டால், கலாம் என்ன, புத்தரே வேலையில் இருந்தாலும் பதவி உயர்வு கிடைத்துவிடாது! இந்த சாமர்த்தியம் தான் சமத்து என்று பாராட்டப்படும் குணம். இது இருந்தால் ஜாதி,மதம் என்னும் பிற 'தகுதிகள்'  கூடுதலாகப்பயன்படும். இது தான் நிஜம்.
இது சாமர்த்தியமாக அரசுப்பணியில் படிப்படியாக உயர்ந்த கலாமுக்கு நிச்சயம் தெரிந்திருக்கவேண்டும். ஆனால் அவர் பேசும்போது எல்லா இளைஞர்களையும் கனவு காணச்சொல்கிறார்; அவர்களும் கண்டுகொண்டே இருக்கிறார்கள்.
கனவுகள் உதவும், அவை கனவுகள் தான் என்று நினைவில் வைத்துக்கொள்ளும் வரை. கனவு என்பது ஒரு பகல்நேரப் பொழுதுபோக்கா, மூளையின் இயல்பான இயக்கத்தின் வெளிப்பாடா, முட்டாள்தனமான கற்பனையா என்பதைப் பொருத்தே அது பயன் தரும்.
கனவு காண்பது சுகம், அதுகவிதை எழுத உதவும், காரியமாற்ற உதவுமா? கனவு என்பது ஒரு வருங்காலத்தின் வரைபடமாக இருந்தாலும் அதை உயிர்பெற்றெழ வைக்க உழைப்பு தேவை. அது இல்லாமல் ஒரு தலைமுறை வெறும் வீம்பிற்கு வராத கனவுகளையெல்லாம் தலையணைகளில் தேடுவது தான் வருத்தமான விஷயம்.
'நாயே பேயே நீயெல்லாம் கலாம் பற்றி எழுதுவதா? ' என்று அநாதரவான அநாமதேயங்கள் என்னைக் குதற முய‌ல‌ப்போகின்றன என்று தெரிந்துதான் இதை எழுதுகிறேன்.  கலாம் பற்றியென்ன கடவுள் பற்றி கூட யார் வேண்டுமானாலும் எழுதத்தான் இணையம்!
கலாம் எனக்குக்கிடைத்த ஒரு சௌகரியமான உதாரணம், அவ்வளவு தான்; மற்றபடி அவர் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வெறுப்பும் இல்லை. பதவி விரும்பாத பண்பிருந்தும் இன்னொரு பதவிநீடிப்புக்கு அவர் ஆசைப்பட்டதோ,கையெழுத்து போடமுடியாது என்று முறைத்துக்கொண்டு பிறகு கையெழுத்திட்டதோ,'கவிதை' எழுதியதோ, வீணை மீட்டியதோ எதுவும் எனக்கு வெறுப்பேற்றும் அளவுக்கு முக்கியமாகப் படவில்லை. அவரால் சில இளைஞர்கள் வெட்டிக் கனவில் வீணாகிறார்கள் என்பதே என் வருத்தம். 
நல்லெண்ணத்துடன் தான் சொல்லியிருப்பார், விரைவில் நாம் உலகின் முதலிடத்தை அடைவோம் என்று. 
ஆனால் அவரது நல்லெண்ணத்தை  நம்பித்தான் வெடித்ததா வெடிக்கவில்லையா என்று தெரியாத ஓர் அணுகுண்டு நாம் வைத்திருக்கிறோம். எனக்கு அணுகுண்டு பற்றியும் அக்கறையில்லை என்றே வைத்துக்கொள்வோம். என் அக்கறை எல்லாமே இளைஞர்களின் ஆதர்சங்கள் பற்றியும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும் ஊடக விளம்பரங்களைப் பற்றியும் தான்.
ரொம்பநாளாயிற்று கண்ணதாசன் வரிகளைச் சொல்லி
'விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு
நிரந்தரமாகாது,
விளக்கிருந்தாலும் எண்ணையில்லாமல்
வெளிச்சம் கிடைக்காது"
எது விளக்கு எது வெளிச்சம், என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் என்று விட்டுவிடமுடியாது. தேடவேண்டும். அப்படித்தேடித்தேடி அலைந்து உண்மையின் ஒருபக்கத்தையாவது கண்டவர்கள் அதை மட்டுமாவது சொல்லிக்கொண்டிருக்கவேண்டும், இல்லாவிட்டால், மாயைகளே வாழ்வின் இலக்குகளாகி விடும்.
ஆதர்சங்கள் காலம் கடந்தபின் மட்டுமே கானலென்று தெரியும். நான் பல ஆதர்சங்களின் பின்தடத்தில் சென்று காலவிரயம் செய்தவன்..

17 comments:

குப்பன்.யாஹூ said...

nice post.

we can quote write about kalaam, nothing wrong in that.

uthamanarayanan said...

'samathu' - is it not violence against the people with whom you work? One who compromises this is the one who achieves, right or wrong?

"உழவன்" "Uzhavan" said...

//அவரால் சில இளைஞர்கள் வெட்டிக் கனவில் வீணாகிறார்கள் என்பதே என் வருத்தம். //
 
நீங்கள் கானும் வெட்டிக் கனவிற்கு கலாம் எப்படிப் பொறுப்பாவார்?? இதில் வெட்டி என்ற வார்த்தையையே நீங்கள்தான் பயன்படுத்திக் கொண்டீர்கள்.
கலாமே தெளிவாகச் சொல்லியிருக்கிறார். உன்னை எது தூங்கவிடாமல் செய்கிறதோ அது தான் கனவு; அதைப்பற்றிக் கனவு காண் என்று.

Thekkikattan|தெகா said...

//கலாமும் எழுத்தாளர் சுஜாதாவும் ஒன்றாகப் படித்தவர்களாம்.//

ஒன்றாக ஒரே கல்லூரியில், வகுப்பில் படித்திருந்தாலும் நட்பு அந்தளவிற்கு சிறந்திருந்தாக தெரியவில்லையே. நல்ல பெரியளவில் பேசும் இடத்தில் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்திருந்த போதும். மஹான்கள் கூட இப்படியா?

//அந்த நேரத்தில் இந்துமதவெறி என்பதைக் குறைத்து, மாற்றிக்காட்ட பிஜேபி அரசுக்கு ஒரு முஸ்லிம் தேவைப்பட்டார். அணுவிஞ்ஞானி என்ற கூடுதல் பெயர் கலாமிற்கு இருந்ததால், அவரால் ஜனாதிபதியாக முடிந்தது. அவ்வள‌வு தான்.//

இப்பொழுது இதனை என்னால் ஏன் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், காலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் என்னுடைய ஒரு நண்பர் இது போன்றே கூறும் பொழுது அவரின் மீது எனக்கு மிகவும் வெறுப்பாக இருந்தது :)) .

//'நாயே பேயே நீயெல்லாம் கலாம் பற்றி எழுதுவதா? ' என்று அநாதரவான அநாமதேயங்கள் என்னைக் குதற முய‌ல‌ப்போகின்றன என்று தெரிந்துதான் இதை எழுதுகிறேன். கலாம் பற்றியென்ன கடவுள் பற்றி கூட யார் வேண்டுமானாலும் எழுதத்தான் இணையம்!//

இப்ப புரியுதா ஏன் வலைப்பூ பிடிக்குதுன்னு :)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

{ஆதர்சங்கள் காலம் கடந்தபின் மட்டுமே கானலென்று தெரியும். நான் பல ஆதர்சங்களின் பின்தடத்தில் சென்று காலவிரயம் செய்தவன்..}

இந்த அனுபவங்களை நேரடியாக இல்லாவிட்டாலும் கோடிட்டு விவரித்தால் கூட பல அனுபவங்களின் அறிவு பலருக்கு கிடைக்குமே?

Anonymous said...

He does not ask students to just dream, he inspires them to think and act. He does not tell them that you should use dirty tricks to come up in life. He too had his share of failures and disappointments and he had written about them.
He is active and is willing to interact with students and teach them. He does not sit in ivory tower. He travels, interacts, writes and engages himself. He may not have all answers to all questions. He has no problem in working with people of different faiths and is someone who is proud of heritage of India.

Kalam does not spread hatred . Your comrades in Ma.Ka.Ika and you are spreading hatred. Perhaps that is why you dont like him.

Anonymous said...

ஆதர்சங்கள் காலம் கடந்தபின் மட்டுமே கானலென்று தெரியும். நான் பல ஆதர்சங்களின் பின்தடத்தில் சென்று காலவிரயம் செய்தவன்

Perhaps you were too naive.Perhaps you were too emotional in your understanding.Perhaps you had some psychological problems and thought that those ideal persons/heroes would solve them for you. Abdul Kalam is not suggesting to youth that they should worship him as a hero or as an ideal person. He is trying to inspire them and kindle their interest in science and apply their skills for nation's development. He is not suggesting them to seek greener pastures elsewhere and settle abroad. Reading too much of romantic literature and authors like La.Saa.Raa, T.Janakiraman might have harmed your thinking and led you astray :). Dont worry, Kalam is too pragmatic to suggest romantic thinking as a solution.Perhaps you should read Kalam leaving behind your ideological baggage and preconceived notions.Physican heal thyself is equally applicable to you.

Anonymous said...

Avvalavum appattamana unmaikal.niyaayamana kavalai..inayathil mattume varum intha seidhikal eppothu acheri..achu ulagathukkum sonthamaaka pokiratho?
VASANTHAN..YAHOO..TN1

Chitra said...

எது விளக்கு எது வெளிச்சம், என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் என்று விட்டுவிடமுடியாது. தேடவேண்டும். அப்படித்தேடித்தேடி அலைந்து உண்மையின் ஒருபக்கத்தையாவது கண்டவர்கள் அதை மட்டுமாவது சொல்லிக்கொண்டிருக்கவேண்டும், இல்லாவிட்டால், மாயைகளே வாழ்வின் இலக்குகளாகி விடும். ........... என்ன அழுத்தமான வார்த்தைகள்!

செல்வநாயகி said...

டாக்டர் ருத்ரன்,

உங்களை ஒரு பிரபலமான மனநல மருத்துவராக ஊடகங்கள் மூலம் அறிந்திருக்கிறேன். ஆனாலும் உங்கள் எழுத்துக்களை அவ்வளவாக வாசித்ததில்லை அல்லது கண்டபோதும் அப்போதைய ஆர்வம் வேறு சிலவற்றில் பற்றிக்கொண்டிருந்ததால் உங்களைக் கடந்து விலகியிருக்கிறேன். இதெல்லாம் அனேகமாக என் கல்லூரிக் காலமாக இருக்கலாமென நினைக்கிறேன்.

இணையம் மூலம் உங்கள் எழுத்துக்களை "என்னதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்" என வாசிக்க ஆரம்பித்து இப்போது விடாது தொடர வைக்கிறது. இந்தப் பின்னூட்டம் குறிப்பாக இந்தப் பதிவுக்கென்று இடவில்லை, பொதுவாக உங்கள் எழுத்துக்களின் மீதே இடுகின்றேன்.

சாதி, மதம், பெண், சிறுபான்மை எனச் சமூக வெளிகளில் பல வடிவங்களுக்குள் புதைந்து கிடக்கும் சிறுமைகளில் இருந்து புற விடுதலையை நோக்கிக் குரல் எழுப்பும் பலரைப் பார்க்கிறோம். அது அவசியமானதுதான். அக விடுதலையைத் தரிசிக்க விரும்பும் ஒருவனுக்குப் புறவிடுதலை நோக்கிய புரிதல்களும், பயணமும் இன்னும் கொஞ்சம் இலகுவாகச் சாத்தியப் படலாம். அப்படியானதொரு அகவிடுதலைத் தூண்டல்களை நேர்மையாகவும், அக்கறையோடும் முன்வைக்கிறீர்கள். அகத்தைச் சாமியார்களுக்கும், இன்னபிற மோசடி விளம்பர மாயைகளுக்கும் கொடுத்துவிட்டு உண்மையான சுதந்திர உணர்வை, அதுதரும் ஆனந்தத்தை எப்படி அனுபவிப்பது? இதைக் கணக்கில்கொண்டு பார்த்தால் நம் அடிமைத்தனங்களின் கண்ணிகள் எங்கெங்கெல்லாமோ ஒளிந்து கிடப்பது புரியும்.

நன்றி நீங்கள் தொடர்ந்து எழுதுவதற்கு.

Chittoor Murugesan said...

டாக்டர் ருத்ரன் அவர்களே,
கலாம் எல்லாம் ச்சும்மா க்ரோட்டன்ஸ் மாதிரி, இன்னம் சொல்லப்போனா வாசப்படில கட்டற பிளாஸ்டிக் மாவிலை தோரணம் மாதிரி ஏற்கெனவே நான் கிழிச்சு வாங்கி கட்டிக்கிட்டேன். இப்போ நீங்க . நோ ப்ராப்ளம் . தூள் கிளப்புங்க‌

//அவரால் சில இளைஞர்கள் வெட்டிக் கனவில் வீணாகிறார்கள் என்பதே என் வருத்தம். //

I agree with you. I am to write a post on his 2020 .Trash

மீன்துள்ளியான் said...

//ஆதர்சங்கள் காலம் கடந்தபின் மட்டுமே கானலென்று தெரியும். நான் பல ஆதர்சங்களின் பின்தடத்தில் சென்று காலவிரயம் செய்தவன்..//

நீங்கள் சொல்லுவது உண்மை டாக்டர் ...
நீங்கள் மட்டும் அல்ல ஓவ்வொரு மனிதனும் ஆதர்சங்களின் பின்னால் சென்று காலவிரயம் செய்பவர்கள் தான் ..
அப்படி செய்து தெளிந்தவர்கள்தான் முழுமை அடைய முடியும் என்பது என் எண்ணம்
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

Anonymous said...

Bravo Doctor..

Pesapporulai pesa thunintheergal...

I have a request to you..

Why dont you write about the 'rasiga manobhaavam' of our youths? I think all the so called icons are trading on our rasiga manobhaavam..

I have problem in commenting in your blog... I cannot copy past comments. Kindly look into it.

Regards

Anonymous said...

பேசாப் பொருளை பேசத் துணிந்தீர்கள்!

இப்படி ஆதர்சங்களின் பின்னே போகும் ஒரு நிலை நமது ரசிக மனோபாவத்திலிருந்து எழுகிறது என்றே நினைக்கிறேன்.. வேறெந்த நாடுகளிலும்
இப்படி ரசிகர் மன்றம் எனும் பெயரில் ரஜினி ரசிகன் Vs கமல் ரசிகன்.. இன்னும் நிறைய வடிவங்களில் எதிர் எதிர் நிலைகளில் நின்று
வெட்டி அரட்டைகளில் ஈடுபட்டு மனத்தாங்கள்களை ஏற்படுத்திக் கொள்வதில்லை..

எனது ஒரு வேண்டுகோள் -

நீங்கள் நம் இளைஞர்களின் ரசிக மனோபாவம் பற்றி எழுத வேண்டும் - அதன் சமூக பொருளாதார அடித்தளம்.. அது ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் ஏற்படுத்தும் சிந்தனா ரீதியிலான பாதிப்பு.. இப்படி விரிவாக.. மேலும் உங்கள் சொந்த அனுபவத்தில் நீங்கள் அப்படியான
மனோபாவம் கொண்டிருந்தீர்கள் என்றால், அதை எப்படி உணர்ந்து கடந்து வந்தீர்கள் போன்றவற்றையும் எழுதுங்களேன். பொதுவில் நமது Iconகள் எல்லாம் இப்படியான ரசிகமனோபாவங்களின் மேல் தான் சவாரி செய்கிறார்கள் என்பது எனது கருத்து.
இப்படி சென்சிடிவான விஷயங்களை அச்சு ஊடகங்களைக் காட்டிலும் வலைப்பூக்களில் தான் சுதந்திரமாக எழுத முடியும்

Ok.. This is what I thought of writing before.. i wrote this in a notepad and couldnt able to copy in to the comment box... So, I wrote the previous comment.. This is the actual comment.

Chittoor Murugesan said...

//தனி மாநிலம் குறித்து அந்தந்த மாநில மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை செய்வது நல்லது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கருத்து தெரிவித்தார்.//
Ref: http://arunmozhionline.blogspot.com/2009/12/blog-post_14.html

இது குறித்த தங்கள் கருத்தை அறிய ஆவல்

THENIATOZ said...

very nice

dr.raghavan said...

great thoughts sir

Post a Comment