Saturday, November 12, 2011

நெட்டி முறிப்பு


வெட்டி முடிக்க வேலையில்லாமல் நெட்டி முறிப்பது போல சில நேரம் எண்ணங்கள்...
இது போல....

mind bargains for dreams when eyelids beg for sleep

தூங்க இரக்கும் விழிகளிடம்  கனவு வேண்டும் என்று பேரம் பேசுகிறது மனம்.




மொழிக்கேற்ப விரிந்து சுருங்கும் வார்த்தைகளில் எண்ணங்கள் கேலிச் சித்திரமாய் நிஜங்களைக் கோடிடுகின்றன.

பொய்கள் சுலபமாக கவிதைகளாகின்றன..... 


இதை ஒரு கவிதையாகவும் ஆக்கிக்கொள்ளலாம்....
நான் ஆக்கவும் இல்லை, அள்ளிப்படைக்கவும் இல்லை...
இது சும்மா, ஒரு சோம்பலின் நெட்டி முறிப்பு  

இன்னும் பேரம் படியவில்லை என்பதால் எழுத்தின் சப்தம்

Thursday, October 6, 2011

சும்மா நூறு வார்த்தைகள்..



ஏதுமிலா வெறுமையின் பின், வெறுமையின் வெற்றிடங்கள் அறிமுகமானபின், கோர்த்த வார்த்தைகள் சிதறியபின், படித்தவையும் அனுபவித்தவையும் முரண்மீறி ஒன்றானபின்..முன்னிகழ்வுக்கும் பின்விளைவுக்கும் இடையே ZEN என்று எதை வேண்டுமானாலும் எழுத (தானே தனக்குத் தந்துகொண்ட சலுகையில்) தோன்றியது- zen என்பது, என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்பதல்ல, எழுதுவதில் எல்லாமும் அடங்க ஆரம்பித்து, எழுதுவதும் அடங்குவதே.

சூன்யத்தின் ப்ரம்மாண்டத்தில் தொலைவதல்ல சூட்சுமம், ஐக்கியமாவதே சூட்சுமம். இதற்கென சூத்திரங்களோ சாத்திரங்களோ இல்லை, இருக்காது..இது கண நேர வாழ்வு.

இது குறித்து வாதம் வீம்பு, விவாதம் கல்வி, மௌனம் புரிதல். இதன் மௌனம் நிர்ப்பந்தம் அல்ல, இயல்பான நிகழ்வு. இது மொழிகளுக்கப்பால் என்றாலும் வார்த்தைகள் மொழி சார்ந்தவை என்பதால்-
No leaves swerve
No dust rises
Looking through the glass doors of the closed windows
The still warmth of succinct existence
Switches on its own breeze to
Sustain existence


Friday, September 9, 2011

சும்மா கொஞ்சம் பின்னோக்கி..


அழுதது நினைவிருக்கிறது.
எதற்காக என்பது நினைவில்லை என்றாலும் அப்படி நான் அழுததாய் நினைவுக்கு வேறெதுவும் வரவில்லை. அதற்கு முன்னும் கூட அழுதிருப்பேன். அப்புறமும் அழுதிருப்பேன். ஆனால் அந்த அழுகை அப்படி இருந்தது. பொது இடத்தில், தெரியாதவர்கள் முன், விக்கி, விம்மி, கண்கள் பொங்கி, வாய் பொத்தி, சத்தமில்லாமல் உடல் குலுங்கி...
அழுகை என்றாலே எனக்கு அந்த அனுபவத்தின் உணர்வுதான் தோன்றுகிறது.


அது 1970களின் முற்பாதி என்று நினைக்கிறேன். அந்த இடம் நினைவிருக்கிறது –வடபழனி முருகன் கோவில். சன்னதிக்கு நேரே கம்பிகளின் முடிவில், உண்டியலுக்கு முன்னால் ஒரு சின்ன இடம் -அங்கிருந்து முருகன் கொஞ்சம் out of focusஆகத் தெரிந்ததாய் இப்போது நினைவில் ஒரு பழுப்பு பிம்பம். அவ்வப்போது தாடி வளர்த்து மழித்துக் கொண்டிருந்த காலம். அழும்போது தாடி இருந்ததா என்றும் நினைவில்லை. சோகத்துக்கும் என் தாடிக்கும் எப்போதும் தொடர்பு இருந்ததில்லை. அந்த அழுகை...அது ஏன் இன்று நினைவுக்கு வரவேண்டும்?

காலை, வெகுநாள் கழித்து என் நண்பன் பாலாசிங் வந்திருந்தான். பழங்கதைகள் அசைபோட்டுக் கொண்டிருந்தோம். நிகழ்ந்த அன்று நெருடிய, கோபமூட்டிய, வெறுப்படைய வைத்த பல நிகழ்ச்சிகள் இன்று நினைவூட்டிக்கொண்டு பேசும் போது சிரிக்கவே வைத்தன. கோபம், வெட்கம் என்று அன்று அனுபவித்திருக்கக் கூடிய அனைத்துமே இன்று நகைச்சுவையாகத் தெரிகின்றன. சில துரோகங்களைத் தவிர்த்து, பழைய நினைவுகள் எதுவுமே நெருடவில்லை. அப்போது திடீரென்று அவனிடம், “இதெல்லாம் சரி பாலா, நாம எப்பவாவது ரொம்ப வருத்தப்பட்டிருக்கோமா?என்று கேட்க, “ ஞாபகம் இல்லையே... சீரியஸா நாம் எதுக்கும் வருத்தப்படலேன்னு நினைக்கிறேன்... வருத்தப்பட நமக்கு எங்கே டைம் இருந்துச்சு?என்றான். அப்படி என்ன முக்கியமான வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தோம் என்று பட்டியலிடப் பார்த்தோம். நாடகம், ஆவணப்படம் என்பவையெல்லாம் அத்தனை வருடங்களை ஆக்கிரமிக்கவில்லை. வேறென்ன செய்து கொண்டிருந்தோம்? அவன் திரைப்படங்களில் நடிக்க முயன்று கொண்டிருந்தான், நான் மருத்துவம் மூலம் சம்பாதிக்க முயன்று கொண்டிருந்தேன்.இரவெல்லாம் பாட்டு கேட்டு, இலக்கியம் பேசி, நண்பர்கள் சூழ அரட்டையுடன் அடுத்த காரியத்திற்கான கனவுகளுக்கு வரைபடம் போட்டுக் கொண்டிருந்தோம். மதுவும் புகையும் எங்களை ஊக்கவுமில்லை, தாக்கவுமில்லை. வசதிகள் குறைவான அந்தக் காலத்தில் வருத்தப்பட நேரமும் இல்லை. இப்போது? சௌகரியமாக வாழ்க்கை அமைந்தபின், அன்றைய சிரமங்கள் புன்னகையை வரவழைக்கின்றன.

அவன் போனபின் எதற்காகவாவது அழும் அளவு வருத்தப்பட்டிருக்கிறேனா என்று யோசித்தால் எதுவும் நினைவுக்கு வரவில்லை. மனதுக்கு நெருக்கமானவர்கள் மரணத்திற்கெல்லாம் நான் அழுததில்லை, தோல்விகளுக்கும் அழுததில்லை. இன்னும் கொஞ்சம் யோசித்தால், வெட்கப்பட்டு அழுதிருக்கிறேன் – அதுவும் கொஞ்சமாக! அடக்க முடியாத அழுகை வந்திருக்கிறதா என்று நினைவுகளில் தேடும்போதுதான் 1970களின் வடபழனி அழுகை நினைவுக்கு வருகிறது. இப்போது எழுதும்போது கூட எதற்காக என்று தெரியவில்லை –அந்த காலகட்டத்தில் அழவேண்டிய அளவுக்கு அடிபட்டதெல்லாம் நினைவுக்கு வருகிறது. வாழ்வில் விழுந்த ஒவ்வோர் அடியும் அடுத்த அடியின் முன் மிகச் சாதாரணமாகியிருந்த காலம் அது.

அழுகை சுகம்தான், நிச்சயமாக வலிக்கும் மனதுக்கு ஒரு நல்ல ஆறுதல்தான். ஆனால் நான் சுகப்பட அழுத ஞாபகமும் இல்லை. சில அற்புதமான பாடல்களைக் கேட்கும் போது கண்கள் கலங்குவது இப்போதும் உண்டு, ஆனல் வருத்தம் தவிர்க்கவும் வலி குறைக்கவும் அழுவது இல்லை.

அன்று என்ன நடந்தது என்பது நினைவுக்கு வரவே இல்லை. அழுத அந்த நேரம் முன்பின் தெரியாத சிலர் ஆறுதல் கூறியது நினைவுக்கு வருகிறது. “என்னப்பா கஷ்டம்?என்று சிலர் கேட்டிருக்கக் கூடும், நினைவில்லை. ஆனால் முருகன் கேட்டதாய் நினவில்லை. அவன் கேட்க வேண்டுமா என்ன? அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே! அன்றைய அழுகை முருகனிடம் முறையிட்டதாகவும் தோன்றவில்லை, அதன் பின்னும் பல தோல்விகளை அனுபவித்திருக்கிறேன். அந்த அழுகைக்குப் பின் அடுத்த முறை கோவிலுக்குப் போனதும் சில வருடங்கள் கழித்துத்தான் என்று தோன்றுகிறது. அப்புறம் கோவிலுக்குப் போனதெல்லாம் ரசிக்கவும் சுகிக்கவுமே... முறையிட என்று எங்கேயும் போனதேயில்லை.

அப்புறம் அப்படி அழவில்லை. அன்று அழுதது தோல்வியால் இருந்திருக்காது, பெரும் வெட்கமாகவே இருந்திருக்கும். அப்படி எதற்கு வெட்கப்பட்டேனோ நினைவில்லை, அதற்கப்புறம் அப்படி வெட்கப்படும் அளவு வாழ்வில் எதுவும் நிகழவில்லை.
தோல்வியினால் வெட்கம் வராது. தன்னைப் பற்றிய கணிப்பை மீறி தானே தடுமாறும் போதும், தான் செய்ததும் செய்யத் தவறியதும் தன்னையே பரிகசிக்கும் போதும் பழிக்கும் போதுமே வெட்கம் வரும். வெட்கினால் அழுகை நிச்சயம் வரும். நான் அழுவதில்லை/ அழ மறந்துவிட்டேன்.

Monday, August 8, 2011

இன்னும் என்னவெல்லாம் செய்யலாம்?


இன்னும் என்னவெல்லாம் செய்யலாம்? என்பதில் தொக்கியிருப்பது என்னவெல்லாம் செய்ய முயன்றாய் என்பதே.

சும்மா ஒரு பட்டியலிட்டுப் பார்க்கிறேன், சிலவற்றை விட்டிருக்கலாமே தவிர எவற்றையும் சும்மா சேர்த்துக் கொள்ளாத ஒரு பட்டியல், 1986ல் ஆரம்பம். 25 வருடங்கள். அதில் கடந்த பத்தாண்டுகள் எதுவும் செய்யாமல்! 

ஆனாலும் மீண்டும் ஏதாவது செய்யத்தான் வேண்டும் என்று ஓர் உந்துதல் இரண்டு நாட்களுக்கு முன் வந்த்து – காரணம் ஆகஸ்ட் ஆறு என்பது எனக்கு ஒரு சாதாரண நாளாகாது. 2000த்தாண்டில், ஏர்வாடி தர்காவில் உயிரோடு தீக்குச் சிலர் இரையாகிய நாள். அரசியல் நாடகமாகவோ, அடுத்தவர் கவனம் ஈர்க்கவோ அவர்கள் தீக்கு இரையாகவில்லை. சட்ட்த்தின் நோக்கில் அது கொலையாகாதிருக்கலாம் என்றாலும் அலட்சியம், அறியாமை, அக்கறையின்மை உயிர்களைக்கொல்லும் என்று எனக்கு (பிறர்க்கும்?) உணர்த்திய நாள். அன்று இறந்தவர்கள் மனநோயாளிகள். தங்கள் சுயநினைவின்றி, சுயவிருப்பின்றி, ‘சொந்தக்காரர்களால்அந்த தர்காவில் அடைக்கப்பட்டு, ஓட முடியாமல் கால்களில் சங்கிலிகள் பிணைக்கப்பட்டு பரிதாபமாக ஒரு தீ விபத்தில் செத்தவர்கள். அவர்களில் ஒருவரையாவது நான் பார்த்திருக்கக்கூடும் 1986ல்.



1986, மனநல மருத்துவனாக வாழ்க்கை ஆரம்பித்த ஆண்டில், மனநோய்களில் மிகவும் தீவிரமான ஸ்கிஸோஃப்ரீனியா (மனச்சிதைவு), குறித்து நண்பர்கள், பாலாசிங்குடனும், ரவூஃபுடனும் ஒரு சுருள் ஃபில்ம் வாங்கி, 35 ஸ்லைட்கள் எடுத்து, அவற்றை ஒருங்கிணைத்து, திரையில் காட்டும்போது ஒலிக்க உரை ஒலிப்பதிவு செய்ததுதான் முதல் முயற்சி. அடுத்த ஆண்டு ‘இனிஎன்று ஒரு நாடகம். அப்புறம் தொடர்ந்து ஆவணப்படங்கள்,ஓவிய கண்காட்சிகள், ஒலி/ஒளி உரைகள் என்று முத்தாய்ப்பாக 1988 ஈடிபஸ் தமிழில் நாடகம்! அந்நேரம் என்னுடன் வைத்தியநாதன், மீனாட்சிசுந்தரம், சாமி-செல்வராஜ் என்று நாடக்க்குழுவிலும் நிஜவாழ்விலும் பங்கேற்ற நண்பர்கள்...இடையில் வேலூர்-வட ஆற்காடு மாவட்ட கிராமங்களில் மாதந்தோறும் விழிப்புணர்வு முகாமகள்...பின்னர் 1990 ஆண்டு GUSH –ப்ரவாகம் என்று பெயரிட்ட அமைப்பின் மூலம் நாடகங்கள், சிகிச்சைப்பட்டறைகள், உரைகள்...பிறகு சொந்தமாய் ஒரு மருத்துவமனை! (இலவசமாய்ப் பலருக்கு அங்கே சிகிச்சை அளித்ததால் கடன், அதை மறக்க ஓவியங்கள் மூல பணம் சம்பாதித்தல்,  அதற்காகவே பழைய நினைவுகளால் பழைய படம் -1993). 1995- 1997 வாரந்தோறும் மனநல விழிப்புணர்வுக்கான தொலைகாட்சி நிகழ்ச்சி, இரண்டு ஆவணப்படங்கள்...பிறகு ஓய்வெனும் பெயரில் ஒரு தொய்வு.

2000ம் ஆண்டு ஏர்வாடி கொடுமை. சங்கிலியால் பிணைக்கப்பட்ட மனநோயாளிகள் தப்பிக்க முடியாமல் தீக்கிரையானார்கள் – அதே ஏர்வாடிக்கு 1986 போயிருந்தேன், சங்கிலியால் பிணைக்கப்படும் மூட நம்பிக்கை குறித்து ஆவணப்படம் எடுத்து பதிவு செய்ய. அந்நேரம் உலக அளவில் உன்னதமான புகைப்படக்கலைஞர் ரகுராய் என்னுடன் வந்தார். இருவரும் படம் எடுக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் சிலர் தடுத்தார்கள், எதிர்த்தார்கள், வெளியேற்றினார்கள். அதுவரை மூடநம்பிக்கை குறித்த எதிர்ப்பாக மட்டுமே சென்ற எனக்கு அதிலுள்ள வியாபாரக் கேவலமும் புரிந்தது. எடுத்த படங்களை எனக்குத் தெரிந்த மட்டுமல்ல, அறிமுகமாகாத ஊடகவியலாளர்களிடமும் கொடுத்தேன் ஒருவரும் சீண்டவில்லை.

பதினான்காண்டுகளுக்குப் பின், தீவிபத்து நடந்தவுடன் முன்னம் நான் அண்டிய ஊடகக்காரர்களில் இருவர் அதே படங்களைக் கேட்டபோது நான் தரவில்லை. எந்த வியாபாரத்துக்கும் நான் உடந்தையாக்க்கூடாது என்ற தீர்மானத்தால்.
ஆனால் இந்த ஆண்டு (2011), ஒரு சமூகத்தொண்டுநிறுவனத்தின் சார்பாக தோழி பொற்கொடி கேட்டுக்கொண்டவுடன் ஏர்வாடி 11ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்  ஓவியம் தீட்ட. கலந்து கொண்டதன் முக்கிய காரணம் நண்பர் மருது வரைவதைப் பார்க்கத்தான் என்றாலும் ஏர்வாடி தாக்கமும் முக்கியம். பல ஆண்டுகள் கழித்து பலர் முன்னிலையில் படம் வரைந்தேன். இது படம் வரைந்த பெருமை பற்றிய பதிவு அல்ல.

இன்னும் செய்ய வேண்டியது ஏராளம் என்று உரைத்தது; அது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறை செய்யட்டுமே எனும் சாய்வு நாற்காலி மனப்பான்மையும் தவறென்று புரிந்தது. அடுத்தவர்களால் முடியாதென்பதால் அல்ல, என்னால் இன்னும் முடியும் என்பதால்.

என்னால் என்ன முடியும்? பேச, எழுத, படம் வரைய, நாடகம் நடத்த, ஆவணப்படம் உருவாக்க இன்னும் முடியும். ஆனால் ஒரு மெழுகுவத்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்த முடியாது.

ஒழுகும் மெழுகு விரல் தொடுமுன்பே அடுத்து எங்கே போகலாம் எனும் நினைப்புள்ளோருடன் இணைய முடியாது. இன்னும் என்னவெல்லாமோ செய்யலாம், பொய்யில்லாமல் பொய் எதிர்த்து.


Monday, August 1, 2011

சும்மா யோசித்த கதை!

கதைசொல்லி சொன்ன முதல் கதையின் மூலம் எது? ஆதிக்கும் மூலம் என்று பரம்பொருளைப் புரியா பொருளாக்கிய கலாச்சாரத்தில், கேள்விகளுக்கு விடை தேடிய காலத்துக்குப் பின் கேட்பது அநாகரிகமாகவும் அபச்சாரமாகவும் ஆக்கிக் கொண்டவர்கள் சொன்னதும் கேட்டுக்கொண்டதும் வெறும் கதைகள்தானா?

கதாகலாச்சாரத்தின் காலப்பின்னோட்டத்தில், யேசுவும், பின்னாளில் ராமக்ருஷ்ணரும் கதை சொல்லி அதன்வழி கருத்தும் சொன்னதன் முன்னமேயே பஞ்சதந்திர கதைகளும் இருந்தன..யீஸாப் கதைகளும் இருந்தன…ஆனால் இவை எப்படி வந்தன?  யேசு ஒரு தச்சுவேலை செய்தவர், ராமக்ருஷ்ணர் படிப்பறிவில்லாதவர், இருவரும் கதை சொல்லி அதன் மூலம் கருத்தும் சொல்லிக்கொடுக்க முயன்றவர்கள். இவர்களிருவருக்கும் முன்னமேயே இந்த யுத்தியைப் பயன்படுத்தி கதை சொல்லி தன் கருத்தைப் பரப்பியவர் புத்தர். அவர் கல்வியறிவும் இருந்தவர், அதைவிடவும், ‘ராஜா வீட்டுப் பிள்ளை’, அவருக்கு கதைகள் சொல்லவே சிலர் நியமிக்கப்பட்டிருக்கக்கூடும். குழந்தை தூங்கும்வரை கதை சொல்லிக்கிடந்தவர் கதைகளை எங்கிருந்து கற்றார்? அந்த காலத்தில் பஞ்சதந்திரக்கதைகள் கேட்டுச் சொன்னதாக வைத்துக்கொண்டாலும், அவற்றை உருவாக்கியவர் எங்கிருந்து எடுத்தாண்டார்? இதிகாசத்தின் இடைச்செருகல்களாக உருவாக்கப்பட்டவற்றுக்கெல்லாம் ஆதி எது? அதற்கான அவசியம் ஏன்? அதன் இன்றைய பரிணாமம் என்ன?

கதை என்பதற்கு கற்பனையோடு நிஜத்தின் களமும் வேண்டும், அதனாலேயே ஆதிகாலத்துக் கதைகள் காடுகளில், மிருகங்களிடையே நிகழ்ந்தன. இயற்கை பார்த்து வியப்பும் அச்சமும் கொண்டவரின் சுயசமாதானமாகவே உருவகிக்கப்பட்ட கடவுள்களைப் போலவே, ஆசைகளின் வெளிப்பாடுகளாக விலங்குகள் மனிதர்களைப் போல நடந்து கொண்டதாகவும், அவை ஒரு நெறிக்குட்பட்டு இயங்கியதாகவும் கதைகள் சொல்லப்பட்டிருக்கலாம். இது அன்றைய அனுமானம் குறித்த இன்றைய அனுமானம்தான்! அனுமான்ங்கள் அனைத்துமே ஆசையின் விஸ்தீரணங்கள்தான். இப்படி இருக்குமோ என்பதைவிடவும் இப்படித்தான் இருந்திருக்கும் என்று ஆரம்பித்து, பின்னர் தன் தவறினைத் தானே திருத்திக்கொண்ட காலத்தில், தேவையும்பட்டிருக்காது; ஆனால் இன்று திறந்தமனத்துடன் அணுகுவதாகச் சொல்லிக் கொண்டாலும், மனம் முழுக்கத் திறக்காமல் சில வசதியான ஜன்னல்கள் மட்டுமே திறந்து வைக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

Dr.Rudhran, dramatherapy 1992
மீண்டும் கதை பற்றி கதை பேசுவோம்! கதையின் பயன் என்னவாக இருக்கிறது என்பது இப்போது எல்லார்க்கும் தெரியும் என்பதால்தான் செய்திகள் கூட நம்பகத்தன்மை இழந்து கொண்டிருக்கின்றன. கதையும் செய்தியும் இழைத்து ஒரு சுவையான நுகர்பொருளாகியது எனும் கதை சொல்வதும் இன்று ராமன் பாலமும் அணிலுமாக நீதிமன்றத்திலெல்லாம் ஆதாரமாக வைக்கப்படுகிறது.
கதைக்கு முதல் பயன் கவனம் ஈர்த்து, அந்நேரம் கவலை, குறுகுறுப்பு ஆகியவற்றைக் குறைத்தல். ஆனால் ஆதிகாலத்தில் கதைகள் நெறி புகட்டுவதாய் உருவான அரசியல் அவசியமாகவும் ஆரம்பமாகியிருக்கலாம்.

இன்று உருவான, உருவாக்க சிலர் முயலும் கதைகள் குறித்துப் பின்னர் பரிசீலிப்போம். இப்போதைக்கு, கதை என்பதைப் பற்றி எனக்கு சொல்லிக்கொடுங்கள், கதை சொல்லிப்பாருங்கள் அதன் சுவாரஸ்யம், சிரம்ம் இரண்டுமே புரிபடும்போது, கதைசொல்லிகள் அந்தக் கதைகளின் ஆதிகர்த்தாக்கள் பற்றியும் யோசித்துப் பாருங்கள்.

Tuesday, June 7, 2011

சேது நினைவாக..



என் நண்பன் செத்துவிட்டான் எனும் செய்தி வந்தவுடன் நான் இடிந்து ஒடிந்து  விடவில்லை, அழவில்லை, ஆர்ப்பரிக்கவில்லை. அவன் வீட்டு முகவரி மட்டுமே இன்னொரு நன்பனிடம் விசாரித்தேன். சாவுக்குப் போய் வந்தேன். இது நேற்று காலை.


பின்னர் நடந்தது, தினசரி யதார்த்த யந்திரத்தனம். இரவு அவன் ஞாபகம் வந்தது. அவனைப் பற்றி என் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தேன்....

அவன் பெயர் சேதுராமன். நாங்கள் இருவரும் சென்னை ஸெய்ண்ட்மேரீஸ் ஆங்கிலோயிந்தியப் பள்ளியில் ஒரே வகுப்பு மாவர்கள் -1965 முதல்! பள்ளிப் படிப்புக்குப் பின், இருவரும் வெவ்வேறு கல்லூரி, வெவ்வேறு துறை. எப்போதாவது ஒரு பஸ் ஸ்டாண்டில், ட்ரைவின்னில்... என்று சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் எங்களுக்குள் தூரம் வராத ‘என்னடாதான்.
இருவருக்கும் வேறு தொழில், வேறு வாழ்க்கை. நாங்கள் ஒருவரை ஒருவர் தத்தம் திருமணத்திற்குக்கூட அழைக்கவில்லை. ஆனாலும் இருவருக்கும் தெரிந்தவர்களைப் பார்த்தால் ‘அவன் எப்படி இருக்கான்?என்று கேட்காமல் இருந்ததில்லை.


நான் டாக்டராகவும், அவன் ஒரு மருந்துக் கம்பெனியின் மேலாளராகவும் இருக்கும் போதுதான் பல நாள் கழித்துச் சந்தித்தோம். அவன் விற்க வேண்டிய மருந்தை, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுதும் மருத்துவர்கள் பரிந்துரைத்துக் கொண்டிருந்த காலம்.. “இதை ஏன் என் கிட்ட ப்ரமோட் பண்றே?”  என்று நான் கேட்டதற்கு அவன் சொன்ன பதில், “ச்சே..ப்ரமோட் பண்ண வரலேடா, சும்மா உன்னைப் பார்க்க வந்தேன்..
அதன் பிறகு அவ்வப்போது சந்தித்தோம், சிரித்தோம், பழங்கதை பேசினோம், சொந்தக்கதைகள் புலம்பினோம். தொடர்பு திடீரென்று ஆரம்பித்தமாதிரியே திடீரென்று காணாமல் போனது.
 
மனநல நிபுணத்துவ மேற்படிப்பு மாணவனாய் நான், திமிருடனோ தன்மானத்துடனோ ஒரு வாத்தியாரை அடிக்கப் போனதால், இரண்டு முறை ஃபெய்ல்! அப்போது அவன் ஒரு மருந்து கம்பெனியின் முக்கிய பொறுப்பில் இருந்தான், தற்செயலாகச் சந்தித்தோம். “இந்த மாதிரி எக்ஸாம் எல்லாம் வெட்டிடா..என்றேன். அப்போதுதான் தேர்வு முடித்து நான் வீட்டுக்கு வந்திருந்தேன். அவன் பதில் சொல்லாமல் போனான். ஒரு மணி நேரத்தில் அவனிடமிருந்து ஒரு தொலைபேச்சு- “டேய் நீ பாஸாய்ட்டே”...”உனக்கு எப்படிடா தெரியும்?”…  “உன் எக்ஸாமினர் சொன்னாங்கடா”.   “ம்” என்று கூடச் சொல்லாமல் பேச்சை நான் வெட்டிய அரை மணி நேரத்தில் நேரில் வந்தான்.
அவன் மருந்துக் கம்பெனியின் முக்கிய பொறுப்பாளன் என்பதால் சென்னைக்கு வரும் வெளியூர் மருத்துவர்களைக் கவனித்துக் கொள்ளவேண்டியது தொழில் நிர்ப்பந்தம். நான் தேர்வுக்கு முன்னமேயே அவனிடம் சொல்லியிருந்தால் அந்தப் பேராசிரியையிடம் சிபாரிசு செய்திருக்கலாம். அவனுக்குத் தெரிந்ததே நான் தேர்வை முடித்தபின்!  தன் உத்தியோக நிலை உதவியுடன் அந்தம்மாவை “என் ஃப்ரெண்ட் இன்னைக்கு எக்ஸாம் வந்திருக்கான்...ரிஸல்ட் என்ன மேடம்”  என்று கேட்டதாகவும், அதற்கு அவர் “அவனை ஏம்ப்பா யாருக்கும் பிடிக்கலே, ஃபெய்ல் ஆக்கச் சொல்றாங்க? “ என்று கேட்டதாகவும் சொன்னான்.
அன்று ஏப்ரல் பதினெட்டு! மனநல மருத்துவனாய் ஆன நாள் என்று இப்போது சொல்லிக்கொண்டாலும், அன்று தான் மியாண்டாட் ஷர்மாவின் கடைசிப் பந்தில் ஸிக்ஸர் அடித்தது! ஓராண்டு கழித்து அதே பேராசிரியை தலைமையில் தான் தேசிய மனநல மருத்துவக் கருத்தரங்கில் நாடக உத்திகளைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தும் ஆய்வைச் சமர்ப்பித்தேன், அது வேறு கதை.
அதன் பின்... அவ்வப்போது பார்ப்போம், பேசுவோம் சிரிப்போம்... விடை பெறுவோம். அவன் என்னென்னவோ வியாபாரங்கள் முயன்றான், என்னிடம் எதையும் விற்க முயலவில்லை. என் நண்பனிடம் அவன் தம்பி வேலைக்குச் சேர்ந்தான் என்பதைத் தவிர அவனுக்கு நான் எதுவும் செய்ததில்லை... சாவுக்கு ஒரு மாலை கூட எடுத்துப் போகவில்லை.
என் நண்பன் செத்துவிட்டான் எனும் செய்தி வந்தவுடன் நான் இடிந்து ஒடிந்து  விடவில்லை, அழவில்லை, ஆர்ப்பரிக்கவில்லை. சாவுக்குப் போய் வந்தேன். பல மாதங்களுக்குப்பின் குளிர்பெட்டியில் பிணமாய்த்தான் அவனைப் பார்த்தேன். தூங்குவது போலத் தெரிந்தது,  அவன் தூங்கும் போது நான் அருகிருந்ததில்லை...ஆனாலும் அந்த்த் தூக்கம், துக்கம் குறைக்க என்று புரிந்தது, நெருக்கத்திற்கு அருகிருக்க வேண்டிய அவசியமில்லை என்று மீண்டும் எனக்குப் புரிந்தது.

Thursday, May 19, 2011

மாறும் ரசனை....



மீசையும் கொஞ்சமாய் தாடியும் வளர்த்து, தோளில் ஒரு ஜோல்னா பையுடன் ருஷ்ய-ஃப்ரென்ச் எழுத்தாளர்களை மட்டுமே படிப்பதாய் ஒரு பாவ்லா/ பாவனை காட்டிக் கொண்டிருந்த வயதுகளில் எனக்கு எம்ஜியார் பிடிக்கவில்லை – நடிகராக மட்டுமல்ல, அரசியல் தலைவராகவும். 

அது ஒரு சிக்கலான வயதின் கட்டம். ஸ்ரீதர் தானே நல்ல இயக்குநர் என்று மனம் கேள்வி எழுப்பினாலும் பாலசந்தரைப் பற்றிப் பேச வைத்த வயதுகளின் காலம். 
சிவாஜியின் மிகையையும் சகித்துக் கொண்ட காலம், டிஎம்எஸ் குறைந்து கொண்டிருந்த காலம், சார்மினார் தினமும் மூன்று பாக்கெட் ஆன காலம். 

ஆனால் அப்புறம் எனக்கு எம்ஜியார் பிடித்தது...ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, ஐந்திலிருந்து பத்து வயது வரை பிடித்த அளவுக்கு. நான் படிக்க வீட்டிலிருந்த சின்ன மேஜையின் மேல் எம்ஜியார் படம் மாட்டி வைத்திருந்தவன் நான். எம்ஜியார்  ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,பிடிக்கும்என்று மட்டுமே பதில் தெரிந்திருந்த அறுபதுகளின் முற்பகுதி அது. எழுபதுகளில் அறிவுஜீவித்வ ஒப்பனை. பிறகு ஒவ்வொரு வேடமாய் மாறி நடிப்பு மட்டுமல்ல நாடகங்களும் சலித்தபின், என் ரசனை எளிமையான நேர்மையான ஒன்றாய் மாறியிருக்கிறது (என்று இப்போது கருதுகிறேன்).

இப்போதெல்லாம் எனக்கு எம்ஜியார் பாடல்களைக் கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடித்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கூட இதை நான் இப்படி வெளிப்பையாகச் சொல்லாமல் டிஎம்எஸ்க்காக, கண்ணதாசனுக்காக, விஸ்வநாதனுக்காக என்றெல்லாம் என்னிடமேயும் காரணம் சொல்லித்தான் எம்ஜியார் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் சொல்லிக்கொண்டிருந்த காரணங்களுக்காகக் கேட்கலாம் பார்க்க முடியாது, பார்ப்பது எம்ஜியாருக்காகத்தான்!

பதின்வயதுகளுக்கு முன் ஏனென்று தெரியாமல் எனக்குப் பிடித்த எம்ஜியார் முகம், ஐம்பதுகளின் பிற்பகுதியில் அடிக்கடி தொலைகாட்சியில் தென்பட்டதாலோ மீண்டும் பிடித்திருக்கிறது. என் வயதில் எம்ஜியார் ஆடிய ஆட்டங்கள் என்னுள் வியப்பை மேலிட வைக்கின்றன.. ஒரு வேளை அது வயிற்றெரிச்சலோ என்றும் யோசிக்க விருப்பமில்லை1

இப்போது ஏன், எது பிடிக்கிறது? “தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும்என்ற டூயட்டானாலும், “உன்னையறிந்தால்..எனும் ஸோலோவானாலும், எம்ஜியாருக்கென்று ஒரு பாணி புரிகிறது. பல் தெரியச் சிரித்துக்கொண்டே பாடுவதாய் வாயசைப்பதும், க்ளோஸப் காட்சிகளில் காமெரா நோக்கி உற்றுப்பார்த்து, கண்கள் குறுக்கிச் சிரிப்பதும்  அந்த நேரத்து ஸென் ZEN. அப்போது டிஎம்எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் மட்டுமல்ல, உடன் ஒலிக்கும் சுசீலா குரலும் உடன் நடிக்கும் நாயகியின் முகமும்கூட மனத்துள் வந்து விடாது. முழுமையாய் அந்தக் கணத்தை ஆக்ரமிப்பதே எம்ஜியாரின் சாகசம்.

எம்ஜியாருக்கு நடிப்பு வராது, சும்மா கதாநாயகியாக இளம் வயதுப் பெண்களை வைத்து ஒப்பேற்றினார், அழத்தெரியாது, வெவ்வேறு பாத்திரங்களிலும் வெவ்வேறு ஒப்பனைகளிலும் தோன்ற மாட்டார், தன் வயதைக் காட்டும்படி காட்சி வைக்க மாட்டார் என்றெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தவன்தான், இன்று புரிகிறது எம்ஜியாரின் வெற்றி எது, எப்படியென்று.

கண்களை நேரே பார்க்கவும், அப்போது மனத்திலும் முகத்திலும் இருக்கும் புன்னகையை விழியிலும் கொண்டு வந்ததுமே அவரது வெற்றி. இதைத் திட்டமிட்டுச் செய்திருந்தாலும் அது ப்ரம்மாண்டம்தான்!

அறிவாளிக்கு எம்ஜியார் பிடிக்காது எனும் அடிப்படையில்லா ஒன்றினாலேயே முகவின் முரசொலியை தினமும் படித்தவன் நான். இன்று, கருணாநிதியைச் சகிக்க முடியாமல் (அதற்காக ஜெவைப் பாராட்டவும் முடியாமல்) எம்ஜியாரை ரசிக்கிறேனா என்றும் யோசித்து விட்டேன். 
ஒன்று பிடிக்காததால் இன்னொன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை அல்ல இது, ஒன்று பிடித்திருக்கிறது என்றால் அதை வெளிப்படையாய்ச் சப்தமாய் அறிவிக்கும் நேர்மை இது. வயதும் வசதியும் தரும் சௌகரியம்.

ரசனைக்கெல்லாம் காரணம் தேடி, அதைச் சொல்லித்திரிய வேண்டிய நிலை கஷ்டம்தான் ஆனால் இன்னும் முப்பதாண்டுகள் கழித்து, இன்று ரஜினி என்ன வெங்காயம், நடிப்பும் இல்லை ஒன்றும் இல்லை, வெறும் ஃப்லூக் என்று சொல்லிக்கொண்டிருப்போருக்கு, ஒரு சின்ன ரெஃபெரென்ஸ் போலத்தான் இதை எழுதுகிறேன்.

ரசனை மாறும் ஆனால் அதை நியாயப்படுத்துவதில் நியாயம் இருக்காது. 
நாம் செய்வன/ சொல்வன எல்லாமுமா, எல்லாம் மட்டுமா நியாயம்!






Tuesday, May 17, 2011

காதலிக்கக் கற்றுக்கொண்டேயிருக்க..


அவள் அப்படியொன்றும் அழகில்லை  என்று சொல்வதல்ல,  
அவளுக்கு யாரும் நிகரில்லை என்பதே காதல். 
வீம்புக்கும் வறட்டுப் பிடிவாதத்திற்குமாய் வெளியே அறிவிக்கப்படுவதில்லை காதல், 
அது, 
உள்ளே நிழல்கூட இல்லாமல் நிரப்ப, ஒருகணத்தில் பிறக்கும் பேரொளி.

காதலின் ஒரு கோணம் தான் பக்தி. கோணம் ஒரு கோணலான பார்வைதான், அழகாகத் தெரிந்தாலும். 
முழுதாய் பார்க்க, ‘அதுகையிலிருக்க வேண்டும், சுழற்றிப்பார்க்க, அல்லது எனக்குக் கால்களில் வலு வேண்டும் சுற்றி வந்து பார்க்க.. பக்தியில் இந்தச் சலுகை கிடையாது. பார்த்த விழி பார்த்தபடி பூத்துக்கிடக்க வேண்டும். உண்மையான காதலில் ‘அதுகையிருக்கும், அனைத்துக் கோணத்திலும் அழகாக இருக்கும், அந்த அழகு நிரந்தரமாகவும் இருக்கும். இது utopian அல்ல.

அழகு மாறுமா? அழகின் இலக்கணம் நிச்சயமாய் மாறும். அப்படி காலத்திற்கேற்ப தன்னையமைத்துக் கொண்டால்தான் அது அழகு. அது நிர்ப்பந்தமல்ல, இயல்பான பரிணாமம். கனவுகளின் வரைபடங்களுக்கும் நிஜத்தின் கட்டிடங்களுக்கும் இருக்கும் ஆழமான பிடித்தமே காதல், அதனால் தான் அது கவிதைகளையும் கனவுகளின் பொய்களையும் உள்ளடக்கி வைத்துக் கொள்கிறது.
படிப்படியாய் இறங்கிவரும் படிமமாய்க் காதலைப் பார்த்தால், பக்திக்கு அடுத்த படியில் ரசனை! ரசனையின் நாயகம் தெய்வநிகர்தான், பகுத்த்றிவாளனுக்கும். உயர்வானதை, உண்மையானதை ரசிப்பவன்,  சாதாரணமானதை, மலிவானதை, காலப்போக்கில் காணாமல் போவதை ரசிப்பவன் பொதுபுத்தி மீறி புரட்சிகரமாகத் தென்படும் பிம்பங்களை ரசிப்பவனை விடக் கீழானவனா? எனக்கு சின்ன வயதில் ஜெயிக்கும் கட்சி பிடிக்கும், இப்போது தோற்பவர் கோணத்தைப் புரிந்து கொள்வது பிடிக்கும், நான் யாரை/ எதை ரசிக்கிறேன்? எல்லாரையும் போல நான் வெற்றியைத் தான் ரசிக்கிறேன், அதே நேரம் எதிரியின் தோல்வியை ருசிக்கிறேன் –மிருகத்தன்மையுடன் அல்ல, மானுட இயல்புடன்.

ரசனை காதலாகுமா? ரசிக்க முடியாததன் மீது காதல் வருமா? ஒரு கணம் வருவதா  காலந்தோறும் வளர்வதா காதல்? ரசனை வளருமா? சமூக அங்கீகாரம் கூட இல்லாமல் முழுமையாய் ஒரு ரசனை காதல் போலாகுமா? ஆகுமாம்! Romantic புதைகுழியில் மூழ்கடித்தவர்களின் முன்னோடி முழக்கம் இது!!_இங்கேயும் இது 60களின் அநாவசிய அடுக்குமொழிக் கலப்புடன்தான் வெளிப்படுகிறது.

நம்பிக்கையின்  projection தான் காதல், பக்தி, ரசனை!  தன்விருப்பை ஒரு பொதுவிதியாக்கும் மனோதற்காப்புதான் காதல், பக்தி, ரசனை.
சாய் செத்தாலும், ஜெ ஜெயித்தாலும் நாளை இன்னொரு தேவரூபம் வானின்று வந்து வாழ வைக்கும் எனும் நம்பிக்கையும், நப்பாசையுமே பக்தி, ரசனை, காதல்.

நான் வாழ்வை ரசிக்கிறேன், நாளையை நம்புகிறேன், என்னிடமே எனக்கென்று பக்தியுடன் பணிகிறேன்... இதை வெளியேயும் சொல்கிறேன்,நான் சரியாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு இல்லாததால்!



Thursday, May 12, 2011

மௌனத்தின் பேரிரைச்சல்


மௌனத்தின் பேரிரைச்சல்.. தோன்றிய போதே சங்கிலியாய் எண்ணங்களை இழுத்துச் சென்ற சொற்றொடர்.

கவிதையல்ல இது, கவலை; 
முரண்வாதம், முரட்டுவாதமல்ல. 
இது யோசித்த நேரம் வந்தது, 
யோசிக்க வைக்கும் என்றே எழுதப்படுகிறது. இது பொய்யுமல்லாத உண்மையுமல்லாத புதிர்நிலை. 
புரிதலுக்கான குழப்பம், புரியும் அந்த ஒரு கணத்தின் முன்னிருக்கும் இறுக்கமான தயக்கம்.  முதலில் எது மௌனம், எது இரைச்சல்? 

எது எதுவரை மௌனம் அல்லது இரைச்சல்?

அரசியல், ஆன்மிகம், கலை, இலக்கியம் என்றெல்லாம் பேசிக்க்கொண்டிருப்பது பேரிரைச்சலோ என்று ஒரு நெருடல் வந்து விட்ட்து. வெட்டிப்பேச்செல்லாம் கூச்சலே என்று மனம் முடிவு செய்கிறது. பலனின்றிப் பேசுவதும் பேரிரைச்சல் போடுவதும் ஒன்று என்பதை ஏற்கும் மனம், மௌனத்தின் பேரிரைச்சலை மட்டும் சந்தேகிக்கிறது. வார்த்தை ஜாலமாக வரவில்லை இந்த எண்ணக்கோலம். 

மௌனமும் மனமும் ஒன்றியிருத்தல் சாத்தியமா? 
சப்தமே இல்லாததா அல்லது சிந்தனையே இல்லாததா மௌனம்? சொல்லில்லாமல் சிந்தனை இருக்க முடியுமா? வெளிவராத வார்த்தைகள் மனத்துள்ளேயே கரைந்து விடுமா? அந்த வார்த்தைகளுக்கெல்லாமும் அர்த்தங்கள் உண்டா?
எது மௌனம்? அப்படி ஒன்று நிஜமாகவே உண்டா? மௌனம் என்பதே கற்பனை உருவாக்கிய வார்த்தை மட்டுமா? நிசப்தமல்ல மௌனம் எனும்போது மௌனத்திற்கும் ஒரு சப்தம், ஒரு ஸ்ருதி, ஒரு ஜதி உண்டா? அப்படி ஒன்றிருந்தால் அந்த மந்திர அதிர்வுக்குப் பெயர் வைப்பதே அதைக் களங்கப்படுத்தி விடாதா?

மௌனம் தன்னுடன் தான் தொடர்பு கொள்வதை நிறுத்திக்கொள்ளும் போது மட்டுமே சாத்தியம் என்று தோன்றுகிறது. பிறருடன் தொடர்பு கொள்ளும்போது பயன்படுத்தப்படும் மௌனம் ஒரு சாகசமாகவே தோன்றுகிறது. என்னிடமே நான் பிரயோகிக்கும் மௌனம் வெட்கத்திலிருந்து தப்பிக்க ஒரு தந்திரமாகவே தெரிகிறது.
மௌனத்தை உணராமல், வரையறுக்கவும் விவரிக்கவும் தேவைப்படும் வார்த்தைகளே பேரிரைச்சலாய்த் தெரிகிறது.





Monday, May 2, 2011

மெழுகுவத்தி இல்லாத நான்..


செத்து விட்டான் அசுரன், 
இனி பட்டாசு கொளுத்துவோம். 
கெட்டவன் சாவைக்கொண்டாடுவது நம் பாரம்பரியம், கலாச்சாரம். 

செத்தவன் பற்றி எதுவும் தவறாகப் பேசக்கூடாது
என்பது அந்நிய கலாச்சாரத் தொற்று. ஹிரண்யன், ராவணன்..என்று எத்தனை கெட்டவர்களின் கெட்ட எண்ணங்களையும் செயல்களைம் நம் புராணங்களில் பட்டியலிட்டிருக்கிறோம்! ஒரு கெட்டவன் செத்ததை வைத்து உலகமுழுதும் எவ்வளவு பட்டாசு கொளுத்துகிறோம். 
அப்புறம் இன்னொரு விஷயம்... செத்தவன் என்ன மாமனா மச்சானா, எனக்கு வேண்டியவனா, நான் கும்பிடும் சாமியா நம்பிடும் சாமியாரா..கொளுத்துவோம் பட்டாஸ்...பறையடிப்போர்க்கு மட்டுமா சாவைக் கொண்டாடத் தெரியும்? ‘நம்ம எதிரி செத்தானே’  என்று கொண்டாடுவோம். ‘நம்மஎன்பது எது என்று நமக்கா தெரியாது? ‘நம்மாளுக்கு எதிரி நம்ம எதிரி’.  ‘நம்மாளு யாரு?’...”நம்பள மாதிரி இருக்குறவன் இல்ல நாம ஆகணும்ன்ற மாதிரி இருக்குறவன் தான் நம்மாளு”.  நவீனோபதேசத்தின்படி, பின்லேடன் பிணமானதைக் கொண்டாடுவோம்.


நேற்று என் நன்பனின் இல்லத்திருமண கலைநிகழ்ச்சியில் ஒரு தொகுப்பாளி ‘தமிங்கிலிஷில் இந்தியா சுதந்திரம் அடைந்த தேதி எது என்று கேட்டாள். ச்சீஎன்று தோன்றிய அதே நேரம் ஐயோ என்றும் தோன்றியது...அவள் கேட்டது குட்டீஸ்களிடம் என்றாலும் அதுவரை சில ‘க்வஸ்டீன்ஸ்க்கு ‘ஆன்ஸர்சொல்லிக்கொடுத்த எந்த ‘ஆண்ட்டியும் அங்கே வாய் திறக்கவில்லை...எனக்கு திக்திக் அதிகமாயிற்று..நல்ல வேளை ஜூலை நாலுன்னு எதுவும் சொல்லலியேஎன்று கொஞ்சம் சப்தமாய் முணுமுணுத்தால் ‘ஓஎன்று ஒரு குரல் கேட்டது...வெறுப்புடன் அல்ல, ‘சே..மிஸ் பண்ணிட்டோமேஎனும் தொனியில். ரொம்ப ரொம்ப நெருக்கமான நண்பனின் வீட்டு விசேஷம்..வள் என்று நான் விழுந்தால் சம்பந்திகள் என்ன நினைப்பார்களோ..என்றே நான் சும்மா இருந்தேன். நம்ம வீட்டு விசேஷம்..சிலதெல்லாம் கண்டுக்காம இருக்கணும்”  எனும் இன்றைய இருத்தலியலின் இயல்பிலக்கணத்திற்கொப்ப சும்மாயிருந்து விட்டு அடுத்த ஆட்ட்த்திற்குக் கைதட்டினேன்.

வெட்கத்தைத் துடைத்தெறிந்து அடுத்த வேலை பார்க்கும் நடுத்தர (அன்றைக்குச் சொல்லப்பட்ட நாலாந்தர) மனப்பான்மையுடன் நான் இன்று காலை எழுந்து காணாமல் போன முதலமைச்சர் பற்றியும், கடைசியில் வெற்றிவாகை சூடிய தோனி பற்றியும் படித்து விட்டு, என் அற்பவாதத்தால் எனக்கு அவசியமானவற்றைச் சேகரிக்க உழைத்து விட்டு வந்தால்..ஆஹா..இணையம் ஆர்ப்பரிக்கிறது.பின்லேடன் செத்தானாம், அப்பாடாவாம், ஸபாஷாம்!!! செத்தவனைப் பற்றி பேசலாமோ? பேசலாமே...ஏன்னா அவன் நம்மவன் இல்லையே!!!! என்று எத்தனை ஆர்ப்பரிப்புகள்!

அடடா !!!!! நம்மவன் நடத்தை பற்றிப்பேசக் கூடாது, அது அநாகரிகம், அடுத்தவன் வீட்டுப் பாடையை விமர்சிக்கலாம் அது நம் விவேகம்!!! இது தெரியாமல் நான்.. வழக்கமாக சாவு என்றாலும் சமூகவிழிப்புணர்வு என்றாலும் கொளுத்தப்படும் மெழுகுவத்தி தேடினால்...

யேசு செத்தாலும் பிறந்தாலும், உயிர்ப்பலி நிகழ்ந்தாலும் ஊழல் எதிர்த்தாலும் ஏற்றப்பட வேண்டியதாகி விட்ட மெழுகுவத்தி என்னிடம் இல்லை. ஒரு சாவுக்கு அனுதாபம் தெரிவிக்காத கல்மனம் எனக்கு வந்து விட்ட்தாய்ச் சொல்லப்பட்ட போதிலும், சரித்திரப் புகழ் லஞ்சவொழிப்புப் புரட்சியில் பங்கேற்காத பாவி என்று தூற்றப்பட்டபோதிலும், ஸாஸ்த்ர-ஸம்ப்ரதாயத்திற்காகக்கூட ஒரு மெழுகுவத்தி வாங்குவதாயில்லை நான். என்னைப் பொருத்தவரை என் மெழுகுவத்தி ஓளி மட்டுமே தரும், இருள் கூட்டாது.
அப்படியொரு மெழுகுவத்தி இன்னும் கிடைக்கவில்லை.

Sunday, April 24, 2011

அனுதாபங்கள் பாபா பக்தர்களுக்கு



உடைந்து போயிருப்பார்கள் பாவம். கடைசி நம்பிக்கையான உயிர்த்தெழுதல் நடக்கவில்லை, ஒரு விசை ஒரு வினாடியில் இயக்கத்தை நிறுத்திவிட்டது.

மற்றவர் சோகத்தில் ஆரவாரிக்கும் அநாகரிகம் எனக்கு இல்லை என்றாலும், இவர்களது கண்ணீரில் என் கண்கள் கலங்கவில்லை. ஆனாலும் இன்று புட்டபத்தி சாய்பாபா பக்தர்களுக்கு என் அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்... இன்றைய மனிதனின் மரணத்திற்காக அல்ல, இதுவரைக்கும் மூடர்களாக இருந்த மக்களின் அறிவு மயக்கத்திற்காக.

பொதுவாக நம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் எல்லாம் ஓர் இழவு விழுந்தவுடன் அழுதுவிட்டு, பிணத்தை ஒழித்துவிட்டு, மூன்றாம், பத்தாம், பதினாறாம் நாளில் விருந்து தின்றுவிட்டு, அடுத்த வேலை பார்க்கப்போவதுதான். வசதியைப் பொருத்து ஓராண்டுக்குப் பின் ஒரு நினைவுநாள் கொண்டாட்டம் பத்திரிகை விளம்பரம்..
ஆனால் எவ்வளவு நெருக்கமானவரின் மரணத்துக்குப்பின்னும், எவரும் வாழ்க்கையை வாழாது விடுவதில்லை. மரணமும் யதார்த்தம் என்று மனத்தின் மூலையில் அறிவு சொல்லிக்கொண்டிருப்பதால். 
அறிவே பழுதாகும்போது மனம் சிதிலமடையும், உடையும், திசைதெரியாமல் தடுமாறும். இதனால்தான் பாபா பக்தர்களிடம் எனக்கு அனுதாபம் அதிகமாகிறது.

வித்தைகாட்டி மயக்கியவனை வித்தகன் என்று கூடச்சொல்லலாம், இறைவன் என்று சொல்ல ஆரம்பித்தால்? காசு வாங்கிக்கொண்டு யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் புகழ்ந்து திரியலாம், ஆனால் காசு கொடுத்து ஒருவனை கடவுள் என்று கூப்பாடு போட்டால்? இங்கேதான் அறிவின் மயக்கம். இங்கேதான் ஆபத்தும்.


எந்த அளவிற்கு தன்னம்பிக்கையிழந்து, தோல்வி வரும் என்ற பயத்தில், நம்மால் முடியாததை இவனாவது செய்வானா என்ற எதிர்பார்ப்பில் இவன்பின் இத்தனை சாதாரண மக்கள் அலைந்திருக்கிறார்கள்! இவன்மூலம் காரியம் சாதிக்கும் தொடர்புகளை விருத்தி செய்துகொள்ள வந்த வியாபாரிகள், இவனது பக்தகோடிகளையும் கவர்வதற்காக வந்து கொஞ்சிய அரசியல்வாதிகளை விட்டுவிட்டாலும், இவன்பின் நின்று நம்பிக்கிடந்தவர்கள் கோடிக்கணக்கானவர்கள். அவர்கள் மீதுதான் என் அனுதாபம். 
அவர்களெல்லாம் பாவம் தைரியம் இழந்தவர்கள், தடுமாறுபவர்கள் வாழ்க்கையில் உழைப்பும் முனைப்புமே வெற்றியைத்தரும் என்பது தெரியாதவர்கள், தன் காலில் நிற்கும் வலிமை இல்லாமல் தூண் தேடியவர்கள்! 
அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறேன்.



தெய்வமே உயிரை இயந்திரங்களில் தொங்கவைத்திருந்த்து என்ற போதும் அந்த தெய்வத்திடம் தன்னையே உயிர்ப்பித்துகொள்ளும் சக்தி இருந்தது என்று நம்பி ஏமாந்தவர்களின் சோகத்திற்கு என்ன ஆறுதல் கூறுவது. அவர்கள் அழட்டும். கண்ணீர் விடட்டும். நம்பி ஏமாறுவதும் மனித இயல்புதான். ஆனால் துக்கத்தின் அளவு நீளமில்லை, extended grief  கூட ஆறுமாதத்திற்கு மேல் தீவிரமாய் இருக்காது. அவர்கள் மீண்டு விடுவார்கள், மரணத்தினை ஏற்று அதையும் தாண்டி வாழ்க்கையை வாழ்வார்கள். ஆனால்....
இதே பக்தர்களில் இரு பிரிவினர் உருவாக வாய்ப்புள்ளது. சிலர் செத்தால் என்ன சாமி அருவமாய் வந்து கூட இருக்கும் எனும் பிரமையில் வாழ்வைத் தொடர்வார்கள். பிறர், சரி இந்த ஒரு தெய்வம் செத்துப்போனாலும் இன்னும் புது தெய்வங்கள் இருக்கும் என்று தேடுவார்கள் –அவர்களுக்காக மீதி இருப்பவற்றுள் ஒன்று வசீகரிக்கும் அல்லது புதிதாய் ஒன்று முளைத்து கடைவிரிக்கும். இவர்களுக்கு இத்துடனாவது இந்த மடமையை விடலாமே என்று மட்டும் தோன்றாது.

இது நுகர்வு கலாச்சாரத்தின் காலகட்டம். ஒரு பொருள் காலாவதியானால் இன்னொன்று உருவாக்கி, விளம்பரப்படுத்தி விற்கப்படும். அதே பொருள்தானே, அப்போதே அது பயன்படவில்லையே என்று நிராகரிக்காமல் புதிய வடிவ-விளம்பரத்தில் விற்கப்படும் அதே வெட்டியானதை வாங்க இன்னும் மக்கள் முண்டியடிப்பார்கள். இவர்களுக்காக அனுதாபம் தெரிவிப்பதைத்தவிர்த்து நான் என்ன செய்ய முடியும்?வரிசையில் நிற்பார்கள், இந்த வரிசையில் செத்தபாபா பக்தர்கள் முன்வரிசைக்கு முண்டியடிப்பார்கள், அவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து விட்டு வேறென்ன என்னால் செய்ய முடியும்?


Tuesday, February 8, 2011

சாய்ந்தாடி சாய்ந்தாடி..


சாய்ந்து ஆடும்நாற்காலியில் ஓய்ந்த தருணங்கள் பற்பல எண்ணங்களைப் ப்ரசவிக்கும், வளர்க்கும், விரட்டி விடும் அல்லது இறுகப் பற்றிக்கொள்ளும். அதில் சில கவிதைகளும் ஆகியிருக்கலாம், சில கவிதைகளாகவே பிறந்திருக்கலாம்...

காணாமல் போன எண்ணங்கள் எல்லாமும் காகிதங்களில் தகனமாயிருந்தால் ஒரு காடு கூட மிஞ்சியிருக்காது. தகனம்? எழுத்தே அக்னிப்ரவேசம் தானே..தன்னைத் தன் கண்ணுக்கே முதலில் நிரூபித்துக்கொள்ள.

என்ன எழுத வந்தேன் எனும் ப்ரக்ஞையில்லாமல் எழுதிக்கொண்டிருப்பது மனவோடையாகாது, அது பிறழ்பதிவாகவும் கூடும். ஆனாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன். எனக்காகவே என்று சொல்லிக்கொண்டே பிறருக்காக- ஏமாறவோ ஏமாற்றவோ அல்லாமலேயே இருத்தலை நினைவூட்டும் ஒரு முயற்சியாக.

இது சுயதம்பட்டமாகவும் ஒலிக்கலாம். தம்பட்டமோ ட்ரம்பெட்(trumpet)டோ இருந்தால்தான் ஒலிக்கும். இல்லாத கருவி கற்பனையில் இசைத்தாலும் கைதட்டல் வாங்காது. கைதட்டலை எதிர்பார்த்தே வாழ்க்கை.  
அம்மா கண்ணாலேயே கைதட்டவே குழந்தையின் குறும்பு, கடவுள் கைதட்டவே முனிவரின் தவம். இடையே கைதட்டல்களுக்கெல்லாம் நாகரிக அடையாளங்களை ஒட்டுவது சமூக அவசியம், சுயசௌகரியம்.

இதையெல்லாம் இப்போது ஏன் எழுதுகிறேன்? நினைப்பதால்! ஏன் நினைக்கிறேன்? நேரம் இருப்பதால்! நேரம் நிறைய ஒரு நாளில் மீதமிருந்தால் வருவது சோம்பல் மட்டுமல்ல, திமிர் கூடத்தான். 
நான் திமிருடன் இருக்கலாமா? யாருக்கு வேண்டுமானாலும் திமிர் இருக்கலாம்! காட்டிக்கொண்டால்தான் அது தவறாகத்தெரியும் திமிர், காட்டாமல் உள்பதுக்கி வெளிநடித்தால் அது நயமான கர்வம்! வித்யாகர்வம் கூட தன்வீட்டுக்குள்ளேயே சாதகம் செய்வதில் வராது, ஒரு சபையில்- அரங்கில்- கைதட்டலில்தான் வரும். எனக்கென்ன கர்வம்? எனக்கென்ன திமிர்?

பணபலமோ பின்புலமோ இல்லாமல் சாதித்தேன் என்பது நான் கொண்டுள்ள திமிர். இதை வெளிச்சொன்னால்தான் திமிர்! என்ன சாதித்தேன் என்று சிந்தித்து ஆய்ந்து அளந்து வரும் விடையைக் கூட வெளிச்சொன்னால்தான் திமிர். வெளியிடாத கர்வம் ஒரு சமூக ஒப்பனைதான். 
கர்வமோ திமிரோ வருமளவு என்ன சாதித்தாய் என்று என்னையே நான் கேட்க முயன்றபோது கிடைத்தாற்போல் தோன்றியது இதுதான்..- பயிற்சி இல்லாமல் படம் வரைந்து பணம் சம்பாதித்தேன், பெருமுயற்சி இல்லாமல் எழுதி புத்தகங்கள் விற்கவைத்தேன், 
கேவலம் என்று என் சமூகம் கருதியதை அறிவியல் கொண்டு அணுகினால் வேறு என்று விளக்கினேன், மனநோய் என்பதை மனநலம் என ஆக்கிவைத்தேன், 
விலை போகாதிருந்திருக்கிறேன், யாரையும் விலைக்கு வாங்கவும் நினைக்காமல் இருக்கிறேன்.. இதற்கெல்லாம் எனக்கு ஒரு கர்வம் வரலாம் என்றே என் மனம் அனுமதிக்கிறது. என் மனமே ஒன்றை அனுமதித்தபின் உங்கள் ஒப்புதலுக்காகக் காத்திருப்பது ஒரு சமூக நாடகம்தான்!

என்னவெல்லாம் செய்தேன் எனும் இறுமாப்பு மிகுந்த பட்டியலோடு, என்ன செய்ய முடியவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று வலிய எதிலெல்லாம் தோற்றேன் என்றும் ஒரு கணக்கு மனத்துள் போட்டால், முதலிலும் முக்கியமாகவும் வருவது- காசு சம்பாதித்துச் சேர்த்து வைக்காமல் திரிந்திருக்கிறேன், அன்பு நட்பு என்றெல்லாம் எதிர்பார்த்து அடிபடும்வரை ஏமாந்து கிடந்திருக்கிறேன்,  


நன்றி பரஸ்பரம் என்றும், பாசம் நிரந்தரம் என்றும் என்னையே ஏமாற்றிக்கொண்டு வந்திருக்கிறேன்...

ஆனால் இவையெல்லாம் தெரிந்தும் வெட்கப்படாமல் இருக்கிறேன். வெட்கமோ வருத்தமோ இல்லாமல் ஒரு மாறுதலும் செயல்பாட்டில் வராது என்று தெரிந்தும் அவ்விரு உணர்ச்சிகளையும் தவிர்த்து வருகிறேன்.


வென்றேன் ஆயினும் வாகை சூடவில்லை. வாழ்கிறேன் ஆயினும் நிறைநிலை அடையவில்லை. இதன் அடிப்படையாய் அடிநாதமாய் ஓடும் எண்ணம்-காசு சம்பாதிக்கத் துப்பில்லை என்று என்னையே துப்பிக்கொள்ளாமல் நிறைய வார்த்தைகளை விரயம் செய்கிறேன்.

காசு சம்பாதிக்க முடியாததால் கைதட்டல் சம்பாதித்தேன்!
இதைப் பற்றி யோசிக்கும் பொழுதில் தோன்றியது-
குட்டி அறை
தொட்டி மீனுக்கு இடமில்லை
குளத்துக்குப் பொரி.




Saturday, January 15, 2011

உமாவுக்காக இது

உமாவுக்கு இதை எல்லாருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று ஒரு கோபம்...எனக்கு இதில் எந்தப் பயனும் இல்லை என்ற வெறுப்பு----
இந்த நாடகம் அந்த மேடையில்......யாரைத்தான் நம்புவது பேதை நெஞ்சம்?
http://umarudhran.blogspot.com/2011/01/blog-post.html

Wednesday, January 12, 2011

முடியாத ஒரு முன்னுரை


நான் எழுத்தாளன் என்று சொல்லிக்கொண்டதேயில்லை. எழுதியே வாய்க்குச் சோறும் வண்டிக்குப் பெட்ரொலும் போட்டுக்கொள்ள முடியும் என்று பீற்றிக்கொண்டவனும் இல்லை, அப்படி எந்த உத்தேசமும் இப்போதைக்கு இல்லை.

அதே நேரம், எழுத்துக்களைக்கூட்டி வார்த்தைகளாக்கி, வார்த்தைகளைக் கூட்டி வாக்கியங்களாக்கும் வித்தை மட்டுமே எழுத்தாளன் எனும் புகழுக்குத் தகுதியாவது இல்லை என்று மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்  -மற்றவர்க்கும் எனக்கும்.

நான் கம்யூனிஸ்ட் என்றும் சொல்லிக்கொண்டதில்லை. சுயசௌகரிய மயக்கத்திலிருந்து மீளாமல் அப்படிச் சொல்லிக்கொள்வதன் அபத்தம் விளக்கத் தேவையிலாத வெட்டிவாதம்.

நான் நாத்திகன் என்று சொல்லிக்கொண்டதில்லை, நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். கடவுள் நம்பிக்கையும் சாதீயத்திமிரும், பார்ப்பனீய குயுக்தியும் வேறுவேறு என்பது என் இன்றைய நம்பிக்கை. நான் நம்புவதால் நீங்களும் நம்புங்கள் என்று பிரச்சாரம் செய்தவனும் இல்லை, செய்யப்போவதும் இல்லை. கம்யூனிஸத்தைப் பிரச்சாரம் செய்யாத நான் கடவுள் நம்பிக்கையும் பிரச்சாரம் செய்வதில்லை – எனக்கு இரண்டுமே பிடிக்கிறது, இன்னும் மற்றவர் மீது திணிக்கும் அளவுக்கு இல்லை.

எனக்குப் பிடிக்கும் பிடிக்காது என்பது மீறி எனக்குச் சரியில்லை என்று தோன்றினால் அதைப் பதிவிடுவதும் என் வழக்கம். சில வேளைகளில் பதிவிடாத என் மௌனம் எனக்கே கூச்சம் தந்ததும் உண்டு. இதையெல்லாம் மீறி எனக்கென்று ஒரு சமூகப்பொறுப்பு இருப்பதாக நினைப்பவன் நான்.  வயதும் வசதியும் கூடியதால் இனி களப்பணி எனக்குச் சாத்தியமில்லை. ஆகவே இப்போதைக்கு வார்த்தைகள் மட்டுமே என் வேலை.

இந்த ஆண்டு நிறைய எழுதுவதாய் இப்போதைக்கு உத்தேசம். யாருக்குப் பயன்படுகிறதோ இல்லையோ எனக்காவது பயன்படும் எனும் (கடவுள் போன்ற) நம்பிக்கையில் –இவ்வகை நம்பிக்கை தான் கனவு என்றும் ஆசை என்றும் சொல்லப்படும்: நிறைவேறினால் பேரானந்தம், நிறைவேறும் வரையும் நிழலானந்தம்.

வாழ்க்கை பற்றிய என் புரிதலை, அனுபவங்களின் அடிப்படையில் நான் அலசித் தேர்ந்துகொண்ட சித்தாந்தங்களை, என் கோணங்களை, கோணல்களை விமர்சிப்பதாய் மட்டுமல்லாமல் விளக்கி விளக்கம் பெறுவதுமாக எழுதுவதே இன்றைய சபதம்.
அடுத்த பதிவில் நட்பு பற்றி எழுதலாம், எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. கிசுகிசுவாக அல்ல. நேர்மையாக. பூச்சிகளையும் புழுக்களையும் அடையாளம் காட்டும் நேரத்தில் தேவரூப விந்தைகளையும் வியந்து போற்றும் வண்ணமாக.
இன்ஷா அல்லாஹ்.