Friday 20 November 2009

வலிகளை அழகாக்கிய கவிஞர்


வலிகள் எப்போதும் கண்களில் கலங்கும்..வலிகளின் நினைவுகள் அப்படியல்ல.
இங்கே கணிணிமுன் உட்கார்ந்து மெதுவாக எழுத்துக்களைத் தட்டித்தட்டி உருவாகிக்கொண்டிருக்கும்போது, வழக்கத்தை விடவும் வேகம் குறைவாக இருக்கிறது. பிற்பகல் தபாலில் இரண்டு புத்தகங்கள் வந்தன. பிரித்துப்பார்த்து, அங்கங்கே மேய்ந்து விட்டு, இதோ என் மேஜையின்மீது தான் வைத்திருக்கிறேன். கணிணியின் திரையிலிருந்து அடிக்கடி கண்கள் அந்த புத்தகங்களை ஆசையோடு பார்க்கின்றன.
Anne Sexton ன் இரண்டு புத்தகங்கள். ஒன்று அவரது கவிதைகளின் முழுத்தொகுப்பு, மற்றது அவர் பலருக்கு எழுதிய கடிதங்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட சுயசரிதை. அவரது கவிதைகள் 36 ஆண்டுகளாகப்பரிச்சயம்.
அவை கல்லூரி நாட்கள். பகலிலேயே கல்லூரியை விட்டு கிளம்பி விடுவேன்..அமெரிக்க நூலகம், குளிரூட்டப்பட்டு இதமாக இருக்கும். அங்கே தான் Langston Hughes, Joyce Carol Oates, Sylvia Plath..ஆகியோரை முதலில் படித்தேன்.. ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தால் woodlands drive-in. மூலையாகப்பார்த்து ஒரு மேஜையில் அமர்ந்துவிட்டால் யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள். சாப்பிட எதையும் வாங்கவேண்டியதுமில்லை..மாலையில் யாராவது நண்பர்கள் வந்து காபி வாங்கிக்கொடுக்கும் வரை கவிதைகளைப்படித்துக்கொண்டிருக்கலாம். வரும் நண்பர்களிடம் பேசவும் அது உதவும்.. அந்த எழுத்துக்கள் பசியைப்போக்கின..
எவ்வளவு வீம்புடன் எழுதுவதுதான் முக்கியம் என்று முயன்றாலும் Anne Sexton மீதுதான் மனம் தாவுகிறது.
 Anne Sexton  வலிகளை அழகாக்கிய கவிஞர். இன்று பலவருடத்தேடலுக்குப்பின் அவரது புத்தகங்கள் அவரது அழகான எழுத்துகளை மட்டுமல்ல..என் இளமையை அதன் தேடலை, சந்தித்த வலிகளை சிந்தித்த விஷயங்களை..செய்துகொண்ட சபதங்களை, சகித்துகொண்ட பொய்களை, சுமந்துகொண்ட கனவுகளை..ஓர் இனிதான இதமான நினவுமீட்டலின் சுகராகமாக உருவாக்கும்போது...வலிகள் யாவும் வெறும் வார்த்தைகளாகிப்போகின்றன..
எதிரே கவிதை இருக்கும்போது, கட்டுரை எப்படி வரும்? கவித்துவ விதைகள் உள்ளே திமிறியெழக்காத்திருக்கும்போது.. கண்கள் கொஞ்சம் நீரூற்றிக் காத்திருக்கவேண்டும்

Thursday 19 November 2009

எழுதும் த‌ருணம்



பிரபாகரன் செத்தால் எழுதலாம், புவனேஸ்வரி கைதானால் எழுதலாம், சச்சின் 20வருடம் ஆடிவிட்டால், புதிதாய் ஒரு தமிழ்ப்படம் வந்தால்,பங்குச்சந்தை பற்றியோ பிரபுதேவா பற்றியோ கிசுகிசு இருந்தால் எழுதலாம்... எழுத எத்தனை விஷயங்கள் இருக்கின்றன என்பது பதிவுகளைப்பார்த்தால்தான் தெரிகிறது..
ஆனாலும் சில மாதங்கள் நான் எதுவும் எழுதவில்லை. 70வயது கிழவியை வன்முறையைத் தூண்டுபவளாகக் கைது செய்தபோதும் எழுதவில்லை, லட்ச‌க்கணக்கில் விலைவைக்கப்பட்ட காந்தி பேனா குறித்து வயிறெரிந்த பொழுதும் எழுதவில்லை.
இடையில் எழுதலாம் என்று தோன்றாமல் இல்லை. உடனடியாக எழுத்தில் மனதைக்கொட்டவேண்டும் என்ற வேகம் தான் வரவில்லை. மௌனமாக வலிக்கிறது என்று ஒரு நாடகமாடப்படும்போதுகூட மௌனமாக இருந்திருக்கிறேன்..
வலி பற்றியும், வலித்தபோதும், கோபம் பற்றியும், கோபமூட்டியவை பற்றியும்..எதைப்பற்றியும் எழுதவில்லை.
ஆனால், திடீரென்று ஒரு நாளில் மூன்று பதிவுகள்!
சமூக அக்க‌றை, தார்மீகக்கோபம்,இலக்கிய உந்துதல்..எதுவும் புதிதாய் வந்துவிடவில்லை. உள்ளிருக்கும் அற்ப ஆசை தான் காரணம்.
வினவு தளத்தில் தொடர் எழுது என்று அன்புடன் தோழர்கள் கேட்டபோதெல்லாம் எழுத இயலாமல் தவித்த நான், இப்போது நிறைய எழுதிப் பழகுகிறேன்! எல்லாம் ஒரு தமிழ்ப்பதிவுகளின் திரட்டி கேட்டுக்கொண்டதால்!!


என் எழுத்துகள் மக்களிடம் கவனம் பெறவேண்டும் என்னும் ஆவல் மிகுந்த ஆர்வம் பல ஆண்டுகளுக்குமுன்னரே அடங்கிவிட்டது. பதிவுலகம் என்னும் புதிய தளத்தில் பரபரப்பாக என்னையும் காட்டவேண்டும் என்றும் கிடையாது. ஆனாலும், ஒரு தமிழ்ப்பதிவுகளின் திரட்டி கேட்டுக்கொண்டதால் தொடர்ந்து எழுதப்பழகுகிறேன்.
ஏன்?
அங்கீகாரம் என்பதன் மீதுள்ள இயல்பான ஈர்ப்புதான்.
நண்பர்கள், தோழர்கள், தெரிந்தவர்கள், அன்புடன் நெருங்கியவர்கள்..இவர்களெல்லாம் அங்கீகரிப்பது எதிர்பார்க்கப்படும் ஒன்று. அது கிடைக்காவிட்டால்தான் அதிர்ச்சி,ஆத்திரம் எல்லாம்.
அறிமுகம் இல்லாதவர்கள் அங்கீகரித்து, புன்முறுவல் போலொரு வரவேற்பு காட்டும்போது..மனம் உடனே சிலிர்த்துக்கொள்கிறது. இது புதிதாய் ஒரு கலைபயின்று அதில் முதலாய் ஒரு படைப்பு உருவாகும்போது ஏற்படும் கண்விரிப்பு, குதூகலம்.
இதற்கெல்லாமா சந்தோஷப்படுவது? இந்த வயதிலா இப்படி சந்தோஷப்படுவது?
தங்கத்திலான அன்பளிப்புகள் தரும் மகிழ்ச்சியைவிட, அந்நேரம் அவற்றைத் தரும் கைகளில் உள்ள அன்பும், அதன் கண்களில் உள்ள புது உறவுக்கான மௌன அழைப்பும், மனத்துள் விரியும் இதமும் தான் சுகம்.
அப்படியொரு சுகானுபவத்தின் கனவுகளோடுதான் இப்போது எழுதப் பழகுகிறேன்.
என் எதிர்பார்ப்பு ஏமாற்றம் தர நேர்ந்தாலும், இந்த நேரத்தின் இனிமை நினவுகளில் இதமாக வருடிகொடுக்கும்.
என்னை  இன்னமும் ஊக்குவிக்கும் எல்லா அன்பு உள்ளங்களுக்கும் இத்தருணம் சமர்ப்பணம்.



தேவி




பகுத்தறிவு மட்டுமே வாழ்க்கையை புரிந்துகொள்ள உதவும் என்பது என் நம்பிக்கை.வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, அனுபவமும் கூட.அறிவியல் அணுகுமுறையே பகுத்தறிய உதவும் என்பதும் என் நம்பிக்கை. ஆனால்
"பேய் பிசாசு பில்லிசூன்யம் என்பனவெல்லாம் இல்லை என்று தீர்மானமாகப் பேசும் நீ...நெற்றியில் குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டு ஏன் திரிகிறாய்? உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையா?"....இது தான் சமீபமாய் நான் சந்திக்கும் நண்பர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி.
எனக்கு தெய்வ நம்பிக்கை உண்டு. என் அழகு தெய்வத்திடம் அளவு கடந்த பக்தியும் உண்டு. அவளை உண்மையாக விரும்பி, ஏற்றுக்கொண்டதன் பகிரங்கமான பிரகடன‌ம் தான் என் நெற்றியிலுள்ள குங்குமம். காதலித்தவனோடு வாழ்கிறேன் என்று பெருமிதத்தோடு சில பெண்கள் அணியும் தாலி போல, விரல் மாட்டியிருக்கும் மோதிரம் போல, மெட்டி போல. இவ்வகைச்சின்னங்கள் பொதுவாக ஆணாதிக்கச்சமுதாய நிர்ப்பந்தமாகவே பல பெண்களுக்கு அமைந்துவிட்டாலும், நான் சொல்வது, இவ்வகை அடையாளங்களை நிர்ப்பந்தமில்லாமல், ஆசையோடும், பெருமிதத்தோடும் அணிந்து கொள்ளும் சிலரைப் பற்றித்தான்.
ரகசியமாக யாருக்கும் தெரியாமல் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வீரவசனம் பேசும் போலி பகுத்தறிவாளனாக இருப்பதைவிட, நேர்மையான கடவுள் ஏற்பாளனாக இருப்பது தான் என் நெஞ்சுக்கு நிஜ நிம்மதி.
பேய் பிசாசு போன்றவை கற்பனை, ப்ரமை என்றால் கடவுள் மட்டுமென்ன சத்தியமா, நிருபிக்கப்பட்ட அறிவியல் உண்மையா? என்னும் கேள்விக்கு என் பதில்: பேய் பிசாசு போன்று கடவுள் என்பதும் கற்பனை தான். மனிதனின் உருவாக்கம் தான், நினைவாக்கம் தான். கடவுள் என்பது சுகம் தரக்கூடிய கற்பனை, பேய் என்பது பயம் தரக்கூடிய கருத்தாக்கம்.எது மனதுக்கு இதம் தரும்?
நான் ஏன் கடவுளை காதலிக்கிறேன்? இன்னும் இணையவில்லை என்பதனாலும் இருக்கலாம்..இன்னும் வளரவில்லை என்பதனாலும் இருக்கலாம்..அனால் என் பக்தி ஒரு காதல். காதல் சுகமான அனுபவம், சுகமான எதிர்பார்ப்பு. அடிப்படையில்லாவிட்டாலும் அழகான நம்பிக்கை!
என் பக்தியின் பெயர் காதல் என்பது போல் என் அனுபவத்தில் கண்ட அழகுக்கும் அமைதிக்கும் பெயர் கடவுள். வேறு வார்த்தைகள் தெரியாததால் இப்போதைக்கு இவை.
இது குறித்து இன்னும் பின்னால்...

ஆரம்பிக்கிறேன், முடிக்கமுடியாது..


என்னைப்பற்றித்தான் இது.
இதுவும் ஒரு பயிற்சிக்காக‌த்தான். கதை எழுதத்தெரியாதுஎன்பதால் இதை எழுதுகிறேன். என் அனுபவங்கள் பற்றிய என் அபிப்ராயங்களில், உங்கள் அனுபவங்கள் பிரதிபலித்தால், உங்கள் அபிப்ராயங்களூம் இனி மாறலாம். இப்படி ஒரு சமூகநல்லெண்ணத்தொடு எழுதுவதாக நான் எனக்கே கூறிக்கொண்டாலும், உண்மையில், பின்னாள் இன்னும் நிறைய எழுத இருப்பதற்கான ஒத்திகை தான் இது.
வாழ்க்கை வரலாறாகப்போகிறது என்னும் எதிர்பார்ப்பும் இறுமாப்புமே பல சுயசரிதைகளை உருவாகியிருப்பதை உணர்ந்தாலும், தன் வாழ்வை எழுதுவதை விடவும் சுலபமான கருப்பொருள் எவனுக்குமே கிடக்காது.
அவசரமாக இதை எழுதவேண்டிய காலகட்டத்தில் நானும், அவசியம் இதைப்படிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் நீங்களும்  இல்லாத நிலையில், இதை பதிவு செய்வது விநோதமாகவே இருக்கிறது. இந்தப்பதிவின் மூலம் நான் என்னை மீண்டுமொருமுறை உற்றுப்பார்த்து, அழுது,சிரித்து,பெருமை/அவமானப்பட்டு, சில பாடங்களைக்கற்றுக்கொள்வது சாத்தியம். அவை யாரேனும் ஒருவர்க்கு தங்கள் வாழ்வினை திரும்பிப்பார்த்து அலசி ஆராய உதவக்கூடும்- இது நம்பிக்கை என்பதை விடவும் ஒரு நப்பாசை.
என்னைப்பற்றிய விவரங்களை பட்டியலிட்டு, கொஞ்ச‌ம் ஜோடித்து, கொஞ்ச‌ம் பொய்சேர்த்து, இன்னும் கொஞ்சம் மிகைசேர்த்து.. ஒரு வேலை தேடி ( அல்லது இப்போதெல்லாம் நடப்பது போல் விருது வேண்டி) விண்ணப்பிக்கும் காலகட்டத்தில் என் வாழ்க்கை இல்லை. ஆகவே இதில் என்ன படித்தேன்,பணியாற்றினேன்..என்பன அவசியமில்லாததால் ஆசுவாசப்பட முடிகிறது.
எனக்கு இடப்பட்ட பெயர் ருத்ரன். சாதிமறுப்பில் முற்போக்காக இருந்த என் தாத்தா ஜோதிடரீதியாக நட்சத்திரம் பார்த்து தேர்ந்தெடுத்த பெயர் தான் இது. அதிகம் புழக்கத்தில் இல்லாத பெயராக அமைந்துவிட்டதால், புனைப்பெயர் தேடவேண்டிய வேலை எனக்கு மிச்சமாகியது.
ஓர் எழுத்தாளனாக என்னை aடையாளம் காட்டிக்கொண்டதில்லை என்றாலும் எனக்கு எழுதுவது எப்படியோ சற்றே சுலபமாக அமைந்துவிட்டது. நான் எழுத்தாளன் என்பதைவிடவும் ஓர் ஓவியனாகவே என்னைப் பார்த்துக்கொண்டும் காட்டிக்கொண்டும் வந்திருக்கிறேன். ஆனால் நான் மக்களிடையே ஒரு மனநல மருத்துவனாகவே அறியப்பட்டிருக்கிறேன். இங்கே என் மருத்துவ அனுபவங்களைத்தவிர பிற அனுபவங்களையே பதிவு செய்யப்போகிறேன்.
வலிய, எழுதவேண்டும் என்று என்னை நானே நிர்ப்பந்தப்படுத்திக்கொண்டு எழுதுவதால், இடைவெளிகள் அவசியமாகின்றன..

Tuesday 17 November 2009

ஏதோ ஒரு காரணத்திற்காக‌

சும்மாதான்..எழுதப்பழகிகொள்கிறேன்...அன்பர்கள்...மன்னிக்க‌.....
உங்கள் அன்பிற்கும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி என்னும் சாதாரண வார்த்தையைமட்டுமே கற்றுவைத்திருக்கிறேன்.

மீண்டும் எழுத மட்டுமல்ல மீண்டுமீண்டும் எழுதவே ஆவல்;
எழுதுகோல் இருந்தாலென்ன, எழுத்தல்லவா வேண்டும்!
எழுத என்ன தடை? படிக்க, படைத்த கண்களையுமீறி இன்னும் அன்புடன் சிலகண்கள் இருந்தும், எழுத என்ன தடை?

கர்வத்தை கூட தக்கவைத்துக்கொள்ள காரியங்கள் தேவை. பின்னால் எழுதலாம், அப்போதும் படிக்க எல்லாரும் காத்திருப்பார்கள் என்ற நிலை அன்று கம்பனுக்கோ இன்று ஜெயகாந்தனுக்கோ கூட இல்லை எனும்போது நிச்சயம் எழுதாமல் இருந்தது திமிரினால் இல்லை. எழுதவேண்டிய எல்லாவற்றையும் எழுதிமுடித்துவிட்டதாக ஓர் இறுமாப்பும் இல்லை.

மொழியற்ற மெளனம் சாத்தியமா என்று தெரியவில்லை; அதன் அருகே வரக்கூடியது மனச்சோர்வின் வெறுமை.
கடவுள் என்னும் கம்பீரக்குரல் செவிடர்களுக்கு மட்டுமே கேட்கட்டும்,(Anne Sexton எழுதியது போல‌) எனக்கு என்னவோ மானுட மொழியின் சப்தம் தேவைப்படுகிறது- எந்தமொழியாக இருந்தாலும்...சப்தமாக மட்டுமே இருந்தாலும்.

இருத்தலின் இயலாமை ஒரு தத்துவ விசாரணையாக இருந்தாலும், அது எல்லோர்க்கும் அவ்வப்போது அனுபவமாகவும் இருந்துவந்திருக்கிறது. அது மெளனத்தின் இடைவெளிகளை உற்றுப்பார்க்க வைக்கும் ஒரு மனநிலை. அதில் மெளனம், ஒரு பிரத்யேக பிரக்ஞை.
ஒரு அசாத்தியமான அசதி மெதுவாக மேலே படரும்போது, வலியும் சுகமாவதுபோல் மெத்தனமும் இயக்கமாகிவிடுகிறது.

சும்மாதான்..எழுதப்பழகிகொள்கிறேன்...அன்பர்கள்...மன்னிக்க‌

Thursday 16 July 2009

ஆட்டம் முடிவதில்லை


ஆட்டம் முடிவதில்லை தில்லையில்.

இன்னும் எத்தனை காலம்? நடராஜன் ஆடட்டும், அந்த நாட்டியம் ஒரு ககனக்கலைக்கூத்தாகவே இருக்கட்டும்..

அவன் பெயர் சொல்லி கலைஞர்கள் ஆடலாம், கயவர்கள் ஆடலாமா?

அந்தணர் என்போர் அறவோர் என்பதா நிதர்சனம்?

பகுத்தறிவுப்பகலவனிடம் இரவல் வாங்கிய ஒளியில் போலியாய் மினுக்கிக்கொண்டிருக்கும் சாமான்யசாண‌க்கியனுக்கு இதெல்லாம் தெரியாதா, இல்லை இது குடும்ப விஷயமில்லை என்பதால் முக்கியமில்லையா?

சிதம்பரத்தில் ஆறுமுகசாமி என்னும் முதியவர் பக்திக்கும் முதுமைக்கும் உரித்தான முரட்டுப்பிடிவாதத்தில், கோவிலில் தேவாரம் பாட ஆசைப்பட்டார், மறுக்கப்பட்டதும் அடம் பிடித்தார். பொதுவாக கோவில்களில் இப்படி பக்தியோடு உரக்கப்பாடுவது குறித்து எனக்கு உடன்பாடில்லை. பலநேரம் சுருதி இல்லாமல் தாளம் இல்லாமல் சிலர் பாடுவதைக் கேட்கச்சகிக்காமல் மனத்துக்குள் 'கெட்ட' வார்த்தைகள் பொங்கிவருமே தவிர பக்தி பொங்காது. ஒருமுறை ஒரு சிறந்த பாடகி சன்னதியில் பாடிக்கொண்டிருந்த போது, என் மனம் கடவுளையும் அதன் பிம்பத்தையும் விட பாடகியின் மீதும் பாட்டின் மீதுமே லயித்திருந்தது. இங்கே பாட்டின் தரமல்ல ப்ரச்சினை. பாடுபவரும் (?ஜாதியால்) பாட்டும் (?மொழியால்) தான் ப்ரச்சினை. இதனாலேயே ம.க.இ.க போராடி நீதிமன்றம்வரை நின்று அவருக்கு அங்கே பாடும் உரிமை வாங்கித்தந்தது.

அவர் என்ன "வேர் இஸ் தி பார்டி டுநைட்" பாடவா ஆசைப்பட்டார்? தேவாரம் தானே (திருவாசகம் கூட இல்லையே)! இதில் தான் ஆதிக்கவெறியும் ஆணவமும் வெளிப்படுகிறது. இதுமேலோட்டமாகப் பார்த்தால் வெறும் ஜாதிக்கொழுப்பாகத்தோன்றும்;(இப்படி நினைத்துக்கொண்டு சுசாமி வேறு இதில் ஆடி முட்டைவாங்கியதையும் நினைவில்கொள்ள வேண்டும்) உண்மையில் இது பணப்பிரச்சினை. வருமானத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்னும் பதைபதைப்பும் தான் இங்கே பின்னணி.

அரசு அலுவலர் நீதிமன்ற உத்தரவுடன் மக்கள் பக்தியில் தரும் பணம் நேரடியாக நடரஜனுக்குத்தான் போகவேண்டும் என்று பொது உண்டியல் வைத்ததைக்கூட அவர்கள் எதிர்த்ததிலேயே இது புரியும்.

இந்நிலையில், இப்போது-

வினவு

Posted on July 15, 2009 at 2:52 pm

FLASH NEWS

நேற்று இரவு (14.07.09 ) சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்ற சிவனடியார் ஆறுமுகச்சாமி அங்கே வந்த பக்தர்களிடம் பணம் கேட்ட தீட்திதர்களை எதிர்த்துக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த தீட்திதப் பார்ப்பனர்கள் அந்த முதியவரை வயதானவர் என்றும் பாராமல் தாக்கியிருக்கின்றனர். காயமுற்ற சிவனடியார் தற்போது அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார். ம.க.இ.க வின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சிவனடியாரின் கனவான தமிழில் பாடுவதும், கோவிலை அரசு கையிலெடுப்பதும் நிறைவேறிய நிலையில் சிதம்பரம் தீட்சிதர்கள் அவர் மீது கொலைவெறியில் இருப்பதும் இப்போது அதை வெளிப்படையாக காட்டியிருப்பதும் அரசு அவாள்களைக் கண்டு பயப்படுவதன் விளைவே.

ஆட்டம் முடியவில்லை! நடராஜன் ருத்திரனாக இருந்திருந்தால்...?

Tuesday 14 July 2009

பேச்சின் பொருள்மீறி

பேச்சின் பொருள்மீறி பொய்கள் முன்னிற்க‌

கூச்சம் சிலநேரம் தடைபோடும்-

நீச்சம்

அடையாத வார்த்தைகளை மட்டும்தான் சில நேரம்

அடையாளம் காணும் மனம்.




அடையாளம் தெரிந்தாலும் பகிரங்கமாக்கிவிட‌

முடியாத உணர்வுகளை வார்த்தைகள்-

அடிமனத்தில்

புதைக்கின்ற வழக்கத்தால் கனவுகளில் மட்டும் தான்

பதிவாகும் கோபக்குறை.




கோபம் குறைவாக வெளியேறக் காரணமேன்

ஞாபகங்கள் பயமூட்டி வைக்கும்

சாபத்தின்

விளைவாக வாழ்க்கை தடுமாறும் என்கின்ற‌

பிழையான கற்பித்தல்தான்.




கற்பித்தவை கிடக்கட்டும்

கற்போமே..



சும்மாவும் எழுதுவது உண்டு

 

hit counter