Thursday 16 July 2009

ஆட்டம் முடிவதில்லை


ஆட்டம் முடிவதில்லை தில்லையில்.

இன்னும் எத்தனை காலம்? நடராஜன் ஆடட்டும், அந்த நாட்டியம் ஒரு ககனக்கலைக்கூத்தாகவே இருக்கட்டும்..

அவன் பெயர் சொல்லி கலைஞர்கள் ஆடலாம், கயவர்கள் ஆடலாமா?

அந்தணர் என்போர் அறவோர் என்பதா நிதர்சனம்?

பகுத்தறிவுப்பகலவனிடம் இரவல் வாங்கிய ஒளியில் போலியாய் மினுக்கிக்கொண்டிருக்கும் சாமான்யசாண‌க்கியனுக்கு இதெல்லாம் தெரியாதா, இல்லை இது குடும்ப விஷயமில்லை என்பதால் முக்கியமில்லையா?

சிதம்பரத்தில் ஆறுமுகசாமி என்னும் முதியவர் பக்திக்கும் முதுமைக்கும் உரித்தான முரட்டுப்பிடிவாதத்தில், கோவிலில் தேவாரம் பாட ஆசைப்பட்டார், மறுக்கப்பட்டதும் அடம் பிடித்தார். பொதுவாக கோவில்களில் இப்படி பக்தியோடு உரக்கப்பாடுவது குறித்து எனக்கு உடன்பாடில்லை. பலநேரம் சுருதி இல்லாமல் தாளம் இல்லாமல் சிலர் பாடுவதைக் கேட்கச்சகிக்காமல் மனத்துக்குள் 'கெட்ட' வார்த்தைகள் பொங்கிவருமே தவிர பக்தி பொங்காது. ஒருமுறை ஒரு சிறந்த பாடகி சன்னதியில் பாடிக்கொண்டிருந்த போது, என் மனம் கடவுளையும் அதன் பிம்பத்தையும் விட பாடகியின் மீதும் பாட்டின் மீதுமே லயித்திருந்தது. இங்கே பாட்டின் தரமல்ல ப்ரச்சினை. பாடுபவரும் (?ஜாதியால்) பாட்டும் (?மொழியால்) தான் ப்ரச்சினை. இதனாலேயே ம.க.இ.க போராடி நீதிமன்றம்வரை நின்று அவருக்கு அங்கே பாடும் உரிமை வாங்கித்தந்தது.

அவர் என்ன "வேர் இஸ் தி பார்டி டுநைட்" பாடவா ஆசைப்பட்டார்? தேவாரம் தானே (திருவாசகம் கூட இல்லையே)! இதில் தான் ஆதிக்கவெறியும் ஆணவமும் வெளிப்படுகிறது. இதுமேலோட்டமாகப் பார்த்தால் வெறும் ஜாதிக்கொழுப்பாகத்தோன்றும்;(இப்படி நினைத்துக்கொண்டு சுசாமி வேறு இதில் ஆடி முட்டைவாங்கியதையும் நினைவில்கொள்ள வேண்டும்) உண்மையில் இது பணப்பிரச்சினை. வருமானத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்னும் பதைபதைப்பும் தான் இங்கே பின்னணி.

அரசு அலுவலர் நீதிமன்ற உத்தரவுடன் மக்கள் பக்தியில் தரும் பணம் நேரடியாக நடரஜனுக்குத்தான் போகவேண்டும் என்று பொது உண்டியல் வைத்ததைக்கூட அவர்கள் எதிர்த்ததிலேயே இது புரியும்.

இந்நிலையில், இப்போது-

வினவு

Posted on July 15, 2009 at 2:52 pm

FLASH NEWS

நேற்று இரவு (14.07.09 ) சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்ற சிவனடியார் ஆறுமுகச்சாமி அங்கே வந்த பக்தர்களிடம் பணம் கேட்ட தீட்திதர்களை எதிர்த்துக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த தீட்திதப் பார்ப்பனர்கள் அந்த முதியவரை வயதானவர் என்றும் பாராமல் தாக்கியிருக்கின்றனர். காயமுற்ற சிவனடியார் தற்போது அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார். ம.க.இ.க வின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சிவனடியாரின் கனவான தமிழில் பாடுவதும், கோவிலை அரசு கையிலெடுப்பதும் நிறைவேறிய நிலையில் சிதம்பரம் தீட்சிதர்கள் அவர் மீது கொலைவெறியில் இருப்பதும் இப்போது அதை வெளிப்படையாக காட்டியிருப்பதும் அரசு அவாள்களைக் கண்டு பயப்படுவதன் விளைவே.

ஆட்டம் முடியவில்லை! நடராஜன் ருத்திரனாக இருந்திருந்தால்...?

Tuesday 14 July 2009

பேச்சின் பொருள்மீறி

பேச்சின் பொருள்மீறி பொய்கள் முன்னிற்க‌

கூச்சம் சிலநேரம் தடைபோடும்-

நீச்சம்

அடையாத வார்த்தைகளை மட்டும்தான் சில நேரம்

அடையாளம் காணும் மனம்.




அடையாளம் தெரிந்தாலும் பகிரங்கமாக்கிவிட‌

முடியாத உணர்வுகளை வார்த்தைகள்-

அடிமனத்தில்

புதைக்கின்ற வழக்கத்தால் கனவுகளில் மட்டும் தான்

பதிவாகும் கோபக்குறை.




கோபம் குறைவாக வெளியேறக் காரணமேன்

ஞாபகங்கள் பயமூட்டி வைக்கும்

சாபத்தின்

விளைவாக வாழ்க்கை தடுமாறும் என்கின்ற‌

பிழையான கற்பித்தல்தான்.




கற்பித்தவை கிடக்கட்டும்

கற்போமே..



சும்மாவும் எழுதுவது உண்டு

Thursday 9 July 2009

ஒரே ஒரு மயிர்..

377 பற்றியெல்லாம் கருத்துசொல்ல நான் சட்டநிபுணன் அல்ல, ஆனால், இது ஒரு சட்டம் குறித்த விவாதம் மட்டும் இல்லையே!

ஒத்த பாலினர் பாலுறவில் ஈடுபடுவது ஏற்புடையதா என்பதல்ல கேள்வி, அது ஒரு தண்டனைக்குரிய குற்றமா என்பதே கேள்வி, ஆனால், கேள்வி பற்றிய அக்கறையோ புரிதலோ ஒருவன் பதில் சொல்ல அவசியமான அடிப்படை என்பதே இல்லாமல், இது குறித்து பலர் பேசிவருவதாலேயே நானும் பேசத்துணிகிறேன்.

ஓரினச்சேர்க்கை மனநோய் அல்ல; அதற்காக அது இயற்கையுமல்ல. உள் ஏற்படும் ஒருசில மரபணுமாற்றங்ளும், இயல்பாகிவிட்ட ஒருசில இளமையின் கற்றல்களுமே காரணம் என்று அறிவியல் ஆய்வுகள் கூறும்போது, அதை நோய் என்றும், குற்றம் என்றும் கூறுவதோடு நிற்காமல், இதனைச் சரி செய்யத்தன்னால் முடியும் என்றும், அதைத் தான் கற்றுத்தரப்போகும் (பகிரங்கமாக இன்னும் கட்டணம் அறிவிக்காத‌ ) யோகப்பயிற்சிகளின் மூலம் 'குணப்படுத்த' (இல்லாத நோய்க்கான சிகிச்சை!)இயலும் என்றும் ராம்தேவ் எனும் ஒரு இந்து சாமியார் (கிருத்துவ,இஸ்லாமிய மற்றும் பிற மதத்தினைச்சார்ந்தவைர்களும்)விளம்பரத்துக்காகக் கூறித்திரிவதுதான் ஆபாசமாக உள்ளது.

இப்படி அறிவிக்கும்போதே குறுகித் துடிதுடித்துக்கொண்டிருக்கும் தன் இடது கண்ணையே சரிசெய்து கொள்ள முடியாத ஒரு போலி, ஆழமனத்துள் பதிந்துவிட்டதால் உருவான பாதிப்பை எப்படி சரி செய்ய முடியும்?

ஆனால் நாம் கேள்வி கேட்கத்தான் மறந்துவிட்டோமே, அதுவும் சாமியார்களைத்தான் நாம் கேட்க 'நினைப்பது' கூட இல்லையே.

தன் கண்ணில் வெளிப்படும் tics என்னும் பாதிப்பை கூட யோகாவால் சரிசெய்துகொள்ள முடியாத இந்த சாமியார்......!!!

மொழுமொழுவென்ற முகத்தோடு இருக்கும் சாமியார்களும் மனித தெய்வங்களும் முகத்தின் முடியை மழித்தோ, வழித்தோ பிடுங்கியோ எடுக்காமல் ரோமம் மறையப்போவதில்லை. எந்த பக்தனாவது சாய்பாபா சவரம் செய்துகொள்வதில்லை என்று சொல்லமுடியுமா?

ஒரு மயிரைக் கூட வளரவிடாமல் தடுக்க இவர்களின் ஆன்மிக/தெய்வீக வித்தைகளால் முடியாது...

இவர்களை நம் மக்கள் வணங்கி...நம்பி ...

வெட்கமாக மட்டுமல்ல, வேதனையாகவும் இருக்கிறது.


Thursday 25 June 2009

மகாதேவி

நான் வணங்கும் தெய்வத்தின் கையில் வில்லிருக்கும், அம்பிருக்கும். அந்த வில்லும் அம்பும் ஆவேசமாகும் ஆசையை அழிப்பதற்கான குறியீடுகளாகவே அமைந்துள்ளன..அது அநியாயமாய் வரும் மோகத்தை முறியடிக்கவே என்று புராணங்கள் கதைக்கின்றன.
பொய்யை புரட்டை எதிர்த்தே அவள் ஆயுதம் ஏந்தி இருக்கிறாள் என்றே எனக்கு நம்பப்பிடித்திருக்கிறது..அந்த மகாசக்தியின் தரிசனத்திற்காகவே காத்துக்கொண்டும் இருந்திருக்கிறேன்.
கவிஞர்கள்,ஓவியர்கள் சிற்பிகள் பலரது கற்பனையில் உருவான பிம்பத்தையே நானும் ஏற்றுக்கொன்டிருந்திருக்கிறேன். அவ்வப்போது பக்தியை மீறும் சலிப்பில் அந்த பிம்பத்தையும் சந்தேகித்திருக்கிறேன்.
இனி அப்படி ஒரு வினா உள்ளே வராது.
சக்தி எப்படியிருப்பாள் என்று ஒரு நிஜத்தின் படம் இப்போது உள்ளது..

இவள் வெறியோடு நிற்கவில்லை, வீரத்தோடு நிற்கிறாள்.


க‌யமையைக் கொல்ல நிமிர்ந்தெழுந்திருக்கிறாள்.
துப்பாக்கிகள், பெரும்படை, திமிர் எல்லாம் மிகுந்த எதிரிகளை எதிர்த்து நிற்கிறாள்.
இவள் இப்போது நான் கற்பனையில் கண்டு வந்த தெய்வத்தின் நிஜ‌ வடிவம்.
இவள் பிம்பம் அல்ல, சத்தியம்.
இவளையே இப்போது நான் வணங்குகிறேன்.
இவள் என் தெய்வம் தான்.

யாரையாவது தெய்வமாக்கிவிட்டால், அதில் ஒரு செளகரியம் உள்ளது.
"சே நானெல்லாம் சாதரண மனுஷன் தானே, இப்படி அநியாயத்தை எதிர்க்கத்தானே சாமி இருக்கு.."என்று கோழைத்தனத்திற்கு ஒப்பனை கூட்டிக்கொள்ளலாம்.
அவள் தெய்வம்- எனக்காகவும் எல்லாருக்காகவும் போரிடுவாள், நான் மனிதன்- அவளை வணங்கி வியந்து, என் வேலையைப் பார்க்கப்போய்விடுவேன். மனிதன் என்பவன் தெய்வமாகலாம், தன் வசதிகளுக்கு எந்த பங்கமும் வராதபோது. தெய்வம் மானுட உருவில் வெளிப்படும், நேர்மையின் வீரம் தேவைப்படும்போது.
இப்படியொரு பெண், அந்த வில்லையும் அம்பையும் வைத்துக்கொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக சதி செய்ததாக நாளை கைது செய்யப்படலாம், கொல்லப்படலாம்..
அப்போதும் என் பக்தி பகிரங்கமாக இருக்குமா அல்லது போலியான பகுத்தறிவோடு இந்த தேவதையை நிராகரிக்குமா தெரியவில்லை. உள்ளே மட்டும் தெய்வமாக அவள் ஒளிர்வாள்.

Wednesday 24 June 2009

கவிஞர் பற்றி இன்னுமொரு நினைவு

1972.. முதலாம் ஆண்டில், MBBS , BDS இரு பிரிவினரும் அப்போது ஒன்றாகப்பயிலும் காலம்.
ஏதோ ஒரு வகுப்பு.. நான் குறிப்பு எடுப்பதைப்போல் பாவனை செய்து கொண்டிருந்து விட்டு, அதிலும் சலிப்பு தோன்ற அந்த டைரியை மூடித் திறந்து ஆடிக்கொண்டிருந்தபோது என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாணவன் என்னிடம் பேச்சு கொடுக்க, அறிமுகம் செய்துகொள்ள ஆரம்பித்தோம்..
அவனிடம் நான் கேட்ட கேள்விகளும் அவனது பதில்களும்:
"உங்க வீடு?"
"தி.நகர்"
உங்கப்பா என்ன செய்றார்?"
"பாட்டு எழுதுவார்"
ஓ என்று என் டைரியை பிரிக்க, அதில் அந்தக் காலத்தின் என் வழக்கத்தின்படி, கண்ணதாசனின் பாடல் வரிகள்..
ஹூம் இவங்கப்பா பாட்டு எழுதுவார்னு சொல்றானே என்னன்னு சொல்றது என்று நான் யோசிக்கும்போதே அவன் சொன்னான்..
"இது எங்கப்பா எழுதினது தான்.."

அவனிடம் சில ஆண்டுகள் கழித்து,
"உங்கப்பாவை விழாவுக்கு வரச்சொல்றியா" என்றபோது அவன் சொன்னபதில்,
"இதெல்லாம் நீயே பாத்துக்கப்பா, என்னை மாட்டிவிட்டு அப்புறம் தராறு பண்ணாதே"
பல வருடங்கள் கழித்து அவனுடைய அண்ணன் மகனின் கல்யாணத்தில் பார்த்தவுடன் கட்டிக்கொண்டான். இப்படி என்னிடம் நேசம் பாராட்டுபவர்களை எல்லாம் என் மனைவிக்கு அறிமுகம், அதனால் அவள் ஆச்சரியத்தோடு பார்த்தபோது நான் சொன்னது..
"அவன் பெயர் கமால்.
இன்று பல் மருத்துவர், என்றும் நெஞ்சிற்கு இனியவர்!..தன் தந்தையால் அல்ல, தன்னால்.

இன்று கவிஞரின் நாளாம்

ஒரு நாள்
1989 புத்தகச்சந்தையில்.. இவனுகளையெல்லாம் எவன்டா கூப்பிட்டுப்பேசச்சொல்றான்? ... என்று என் நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தேன்..அங்கே யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
1997..அதே சந்தையில், நான் பேசிக்கொண்டிருந்தேன்..எவனாவது என்னைப்பற்றியும் அப்படிச்சொல்லியிருப்பான்..
அன்று நான் பேசியதில் ஒரு விஷயம்‍:
" என் புத்தகம் என்றாவது வெளியிடப்படும் என்று நினைத்தேன், அது ஜெயகாந்தனால் அல்லது கண்ணதாசனால் தான் வெளியிடப்படவேண்டும் என்றும் விரும்பியிருந்தேன்.." அந்த நூல் இராம கண்ணப்பனால் (கவிஞரின் கையானவர்) வெளியிடப்பட்டது. அப்போது ஜெகே எனக்கு அறிமுகம் இல்லை.
2009, ஜெகே நான் கேவலமாக உளறியதையும் வெளியிட வருவார்..
நல்ல வேளை கண்ணதாசனோடு நான் நெருங்கவில்லை.

என்ன சொல்ல வருகிறேன்?
செத்து வாழ்வதைவிட வாழ்ந்து சாவதைப்பற்றித்தான்..
ந‌ட்பும் நேசமும் நெறி மீறியா?
நான் அவ்வளவு பரந்த மனத்துடையவன் அல்லவே,
எனக்கு இன்னும் பொய் போர்த்திய மெய்க்ளைவிட
மெய் போர்த்திய பொய்களே விருப்பம்..'
யாருக்காகவும்
அல்ல, எனக்காகவே அழுகிறேன்.

அழுவது சுகமென்பதால் அழுகிறேன்,
அழுவது சோகமென்று கற்றுக்கொண்டதால் வருந்துகிறேன்.
இது யாருக்கான அஞ்சலி?

Friday 29 May 2009

'பதிவு' பற்றி..

பதிவெழுதுவது ஏன் என்று என்னை நானே கேட்டுக்கொண்டிருந்தகாலம் போய், இப்போது பதிவெழுதவென்றே யோசிக்கும் காலமும் வந்துவிட்டது. முந்தைய பதிவில் என் தனிப்பட்ட உணர்ச்சிப்பெருக்கினையே எழுத ஆரம்பித்து, என் தட்டச்சுப்பயிற்சியின்மையால் குறுக்கிப் பின் (இப்போதெல்லாம் அதிகமாய் விலை போகக்கூடிய சமூக உந்துதலில்) ஈழத்தையும் இணைத்துப் பதிவிட்டேன்!
ஒரு நாள் முழுவதும் பதிவை எங்கும் இணைக்காமல், சும்மா விட்டுப்பார்த்தேன்! ஓரிருவர் பார்த்தார்கள், இருவர் கருத்துக்களை வெளியிட்டார்கள்... மறுநாள், தமிலிஷ் தளத்தில் இணைத்தேன்.. நான்கு மணி நேரத்தில் அது பிரபல இடுகை ஆனது!

இனி என்ன செய்யப்போகிறேன்?
ஈழம் பற்றி இன்னும் கொஞ்சநாள் ஓடும், பிறகு கருணாநிதி கரு கொடுக்கத்தயங்காத வள்ளலாகப்போகிறார்..சீக்கிரம் ஒரு தேர்தல் வரும்..ஓ பற்றி எழுதுவோம்..எதுவுமே கிடைக்காவிட்டால் நமீதா, த்ரிஷா என்றெல்லாம் எழுதலாம்..
பதிவு எழுதுவது ஒரு செளகரியம், ஒரு சந்தோஷம்...
அதில் ஒரு அந்நியத்தன்மையோடு கூடிய அன்னியோன்யம் உள்ளது, அதில் பொய்கள் எளிது, அதில் போலித்தனம் சுலபம், மேம்போக்கான புத்திசாலித்தனம் விலைபோகும்... புதுப்புது உறவுகள் ஏற்படும், அவை பல்வேறு விதங்களில் லாபகரமாகவும் ஆகலாம்..
பதிவு என்பது என்ன?
அந்தரங்கத்தின் பகிரங்கமா? பகிரங்கமாக்கப்படுவதற்கென்றே உருவாக்கப்படும் அந்தரங்கத்தின் ஒப்பனையா?
காலம் எனக்கு விடை சொல்லத்தான் போகிறது..அதுவரை எது விடை என்று யோசிக்கலாமா
 

hit counter