Sunday, December 27, 2009

2009 இறுதியும் 2010 ஆரம்பமும், ஒரு வாரம்!




தமிழ்மணம் நட்சத்திரப்பதிவராக ஒருவாரம் என் எழுத்துக்களைத் தேர்வு செய்தது ஓர் ஆச்சரிய ஆனந்தம். அறிவு இதைப்பொருட்படுத்தாதே என்று எச்சரித்தாலும் மனம் இந்த அங்கீகாரத்தை இன்பமானதாகவே ஏற்றுக்கொள்கிறது.அன்புடன் நன்றி.
நட்சத்திரம் என்பது ஒரு “அந்தஸ்து” என்றால் அது யதேச்சையாகக் கிடைத்தது என்றாலும் அதற்குரிய தகுதிகளை வளர்த்துக் கொள்ளவே மனம் விழைகிறது.
தமிழ்மணம் திரட்டியினர் என்னைத் தொடர்புகொண்டு டிசம்பர் 28முதல் ஒருவாரம் எழுது என்றார்கள்! ஆச்சரியமாக இருந்தது. அதற்குமுன் 20 பதிவுகளே எழுதியிருந்தேன், அதுவும் அவர்கள் கேட்கும்போது மூன்று மாதங்களுக்குமேல் எழுதவுமில்லை! அப்படியொன்றும் நிறையபேர் அடிக்கடி என் பதிவினைப் பார்த்துக்கொண்டிருக்கவுமில்லை.

ஆரம்பத்தில், என் நண்பர்களும் தோழர்களும்தான் இப்படியாவது இவன் எழுதுகிறானா என்று முயற்சிக்கிறார்களோ என்றும் சந்தேகித்தேன். அவர்கள் இல்லை என்று சொன்ன பிறகுதான் தமிழ்மணத்திற்கு ஒப்புதல் தெரிவித்தேன். ஏழுநாட்கள் தினமும் எழுதுவது நல்லது என்று தமிழ்மணம் கூறியபோது கொஞ்சம் திகைப்பும் கொஞ்சம் தயக்கமும் இருந்தது.

எனக்குத் தமிழ்தட்டச்சில் ஒரு தயக்கம் நிறைந்த மனச்சிக்கல் உண்டு. ஆங்கிலத்தில் குறிப்புகள் ஏதும் வைத்துக்கொள்ளாமல் ஒரு கட்டுரையை 1000 வார்த்தைகளை அரைமணிநேரத்தில் எழுத முடிந்த எனக்கு, ஆரம்பத்தில் 100 வார்த்தைகள் தமிழில் தட்டச்சு செய்வதற்குள் ஒருமணி நேரமாகும். இதுதான் சமயம் என்று தமிழ் தட்டச்சு பயிலவும் ஒரு சோம்பல். ஆங்கிலவழி தமிழ் தட்டச்சு மட்டுமே சாத்தியம் என்பதால் அதை வேகமாகப் பயிலவே முப்பது பதிவுகள் எழுதினேன். பழக இது உதவியது. இதற்காகவே தமிழ்மணம் நிர்வாகத்திற்கு என் மிக ஆழமான நன்றிகள் உரித்தாகும்.
ஆனாலும் என் இயல்பான அவசரம் பல அச்சுப்பிழைகளுடனே பதிவுகளை வெளியிட்டுவிடுகிறது. பிழைதிருத்தலாம் என்று திரும்பப்படித்ததால் பல எழுத்துக்கள் இடுமுன்னமேயே அழிக்கப்பட்டுள்ளன! இது மாறும் என்பது நம்பிக்கை, விருப்பம்.

இவன் இதைத்தான் எழுதுவான் எனும் எதிர்பார்ப்பு என் மனநல மருத்துவப் பின்னணியால் உருவாக்கப்பட்டிருந்ததால் அதையும் கொஞ்சமாவது மாற்றவேண்டும் என்ற எண்ணமும் தொடர்ந்து எழுத ஆரம்பிக்கும்போதெல்லாம் இருந்தது. இதனாலேயே நாடகம், இலக்கியம் என்றும் எழுதவேண்டும் என்று நினைத்தேன். முயன்றேன்.

எழுதுவது சுகம் என்று எனக்குத்தெரியும். உள்ளேயே தேங்கிவிடாமல் எண்ணங்கள் வெளியே கொட்டி மனத்தைக் கழுவிக்கொள்ள, எழுதுவது உதவும் என்பதும் என் அனுபவம். இங்கே எழுதும்போதுதான் பதிவெழுதுவது ஒரு போதை என்பதும் புரிந்தது.

புத்தகங்கள் படித்தவர்களில் பரிச்சயமில்லாதவர்கள் அநேக நேரம் கருத்து சொல்வதில்லை, பதிவுலகில் அப்படியல்ல. அறிமுகமாகாதவர்களின் கருத்துகளும் உடனடியாகக் கிடைக்கின்றன. அதன்மூலம் சிலரது அன்பும் கிடைக்கிறது, இனிய நட்பும் கிடைக்கிறது. என் எதிர் நின்று மூச்சுவிடக்கூட தைரியம் இல்லாதவர்கள் இணைய இருட்டில் ஒளிந்துகொண்டு என்னை ஏளனம் செய்வதும் ஏசுவதும் கூட ஒரு புதிய அனுபவம்!

பதிவுலகில் பகிர்வது கணினியின் பரிச்சயமும், அது கிடைக்கப்பெறும் வாய்ப்பும் உள்ளவர்களுக்கு மட்டுமே சேரும், புத்தகங்கள் இந்த வசதியில்லாதவர்களையும் சேரும். ஆகவே இங்கே பதிவெழுதுவது பின்னாளில் புத்தகங்களுக்கான வரைபடமாகவும் எனக்கு படுகிறது.
இன்ஷா அல்லாஹ்


பதிவெழுத என்னைப் பார்க்கும்போதெல்லாம் ஊக்கிய வினவு நண்பருக்கும், படித்துவிட்டு மேலும் எழுது என்று ஊக்கிய தோழர்களுக்கும், பின்னூட்டங்களின்மூலம் என் கருத்துக்களையும் சொல்லாடல்களையும் செப்பனிட்ட அன்பர்களுக்கும் மட்டுமல்ல,  
வேலன், தமிழ்நெஞ்சம் ஆகியோர் தங்கள் தளங்களில் சொல்லிக்கொடுத்த சில நுணுக்கங்களுக்கும், ப்ருனோ, வால்பையன் ஆகியோர் மின்னஞ்சல் மூலம் எனக்குக் கற்றுக்கொடுக்க முயன்றவைகளுக்கும்
புதிதாய் வேறெதுவும் இல்லாததால்
வழக்கத்தைவிட மேன்மையான  அர்த்தங்களை உள்ளடக்கிய வார்த்தையாக நன்றி.

36 comments:

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

மிக்க நன்றி ஆசிரியரே. இந்த வாரம் நட்சத்திர வாரம். படிக்க ஆவலுடன் உள்ளோம்.

கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள் மருத்துவரே !

குடுகுடுப்பை said...

வாழ்த்துகள் மருத்துவர்.

சவுக்கு said...

வாழ்த்துக்கள் தோழர். 2010ல் மருத்துவர் ருத்ரன் என்பதை விட, பதிவர் ருத்ரன் என்று தாங்கள் பரவலாக அறியப்பட வேண்டும். வாழ்த்துக்கள்.

sakthi said...

அன்புள்ள ஐயா
தங்கள் எழுத்துகள் என்றும் தொடர வேண்டும்.வாழ்த்துக்கள் ,,,,,

சுகுணாதிவாகர் said...

வாழ்த்துக்கள். ஆனால் நியாயப்படி பார்த்தால் நீங்கள் நாளைதானே பதிவிட வேண்டும். எப்படியிருந்தபோதும் வாழ்த்துக்கள்

ராஜவம்சம் said...

வாழ்த்துக்கள்

ஒரு வாரம் யார் யாரை துவைச்சி காயப்போடப்போறிங்களோ

ஆவளுடன்

குசும்பன் said...

வாழ்த்துக்கள் இந்த வாரம் ஒரு சிறப்பான வாரமாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சியே!

Ashok D said...

//எழுதுவது சுகம் என்று எனக்குத்தெரியும். உள்ளேயே தேங்கிவிடாமல் எண்ணங்கள் வெளியே கொட்டி மனத்தைக் கழுவிக்கொள்ள, எழுதுவது உதவும் என்பதும் என் அனுபவம். இங்கே எழுதும்போதுதான் பதிவெழுதுவது ஒரு போதை என்பதும் புரிந்தது//

:) வாழ்த்துகள்
(ராஜ் டீவியில் உங்களின் நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும்... அது வந்து பல வருடங்கள் கடந்த பின்னும்... )

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் நண்பரே!!!கலக்குங்க!!

அரங்கப்பெருமாள் said...

வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள்.

இந்த போதையில் இருந்து விடுபட வழி எழுதுங்களேன்:-))))

வினவு said...

நட்சத்திர வாரத்தின் ஒளியை பருக காத்திருக்கும் ஆவலுடன் வாழ்த்துக்களும், மகிழ்ச்சியுடனும்....

தமிழநம்பி said...

மருத்துவர் ஐயா,
மருத்துவராக உங்கள் பட்டறிவில் அறிந்தவற்றையும், மக்களுக்கு விழிப்பூட்டுவனவற்றையும், மூடநம்பிக்கைகளின் கேடுகளை விளக்குவனவற்றையும் நீங்கள் எழுதலாம் என்றே கருதுகிறோம்.

அவையும் சுவையாகவும் பயனுள்ளவையாகவும் அமையும்.

நன்றி.

குப்பன்.யாஹூ said...

congrats and best wishes for you to improve your writing talent

gulf-tamilan said...

வாழ்த்துகள் மருத்துவரே !

மனிதன் said...

வாழ்த்துக்கள்!தமிழ்மணம் நட்சத்திரப்பதிவராக ஒருவாரம் மேலும் உங்கள் எழுத்துப் பணியை ஊக்கப்படுத்தும் .

Ragztar said...

வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எழுதுங்க.

ஸ்வாமி ஓம்கார் said...

வாழ்த்துக்கள். புத்தாண்டு உங்களால் சிறக்கட்டும்

உண்மைத்தமிழன் said...

வாழ்த்துக்கள் மருத்துவர் ஐயா.. உங்கள் எண்ணங்களை இறக்கி வையுங்கள்..! தெரிந்து தெளிந்து கொள்கிறோம்..!

nandha said...

you are welcom

ஜோதிஜி said...

மிக சிறப்பான பதிவு. வாழ்த்துகள்.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

மனநல மருத்துவராக தொலைக்காட்சியில் மட்டும்
பார்த்த எனக்கு பதிவராக தங்களை பார்த்ததில் மிக்க மகிழ்சி வெளுத்து கட்டுக்கள் மருத்துவர் அய்யா..

குருத்து said...

நட்சத்திர வாரத்தில் உங்களிடமிருந்து பதிவுகளை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறொம்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

வாழ்த்துக்கள் சார்.. உங்கள் பணி மூலமான அறயக் கிடைத்த பலதுறை பட்ட அனுபவ அறிவுகளில் பகிர எவ்வளவோ விதயங்கள் இருக்கலாம்..

Please enchant us!

இன்னும் ஒரு கருத்து.தமிழ் எழுத தமிங்கில தட்டச்சைப் பயன்படுத்தாது தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்துவது தமிழில் எழுதும் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும் என்பது என் எண்ணம்.

NHM எழுத்துருவை முயற்சித்தால் எளிதாக தட்டச்சலாம்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அறியக் கிடைத்த என்று வாசிக்கவும்.நன்றி.

அன்புடன் அருணா said...

/எழுதுவது சுகம் என்று எனக்குத்தெரியும். உள்ளேயே தேங்கிவிடாமல் எண்ணங்கள் வெளியே கொட்டி மனத்தைக் கழுவிக்கொள்ள, எழுதுவது உதவும் என்பதும் என் அனுபவம்./
என் எண்ணமும் அதுவே!

வால்பையன் said...

என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி சார்!
முழு தகவலும் நாளை அனுப்புகிறேன்!

CS. Mohan Kumar said...

நல்ல பதிவு. தங்களின் ஆங்கில வலை பதிவு தான் வாசித்தேன். தமிழ் வலை பதிவில் இந்த வாரம் மோக்க்க நீங்கள் பதிவிடுவீர்கள் என்பது மகிழ்வாக உள்ளது.

பதிவு தரும் போதை சரியா? அதிகமானால் உள்ள ஆபத்துகள் இது பற்றி நீங்கள் கொஞ்சம் எங்களுக்கு எழுதலாம் சார்

CS. Mohan Kumar said...

எனது கமெண்ட்டில் முழுக்க என்பது "மோக்க்க" என்று பதிவாகி உள்ளது மன்னிக்க

தோழி said...

congratulations and looking forward ur posts Dr.

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்!

Anonymous said...

வாழ்த்துக்கள்,

தட்டச்சு வேகத்தை காரணம் கூறி இனியும் நீங்கள் விலகியிருக்கமுடியாது, தொடர்ந்து நீங்கள் எழுதப்போவதற்காக காத்திருக்கிறேன். அப்ப‌டியே வினவு தளத்திலும் நின்றுபோயிருக்கும் தொடரை தொடருங்கள்.

நிறைந்த மகிழ்வுடனும் தோழமையுடனும்,
செங்கொடி

Thekkikattan|தெகா said...

பதிவுப் போதையில் நிறைய கொடுங்க :). வாழ்த்துக்கள்!

amrudha said...

வாழ்த்துக்கள்.

உங்களுடைய‌ "உறவுகள்" புத்தகம் படித்திருக்கிறேன் பிடித்திருந்தது. நிங்கள் எழுத போகும் பதிவுகளை ஆர்வமுடன் எதிர்பார்கிறேன்.

சந்தனமுல்லை said...

தீபாவின் 'சிதறல்கள்' பதிவின் மூலமாகத்தான் தங்கள் பதிவு எனக்கு பரிச்சயம். நடுவில் நீண்டகால மௌனம். தொடர்ந்து இந்த பதிவை புதுப்பித்துக்கொண்டிருப்பதற்கு நன்றி!

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள்! (தாமதமான வாழ்த்துக்கும் மன்னிக்கவும், இணையம் இல்லாத நீண்ட விடுமுறைக்கு பின் பதிவு பக்கம் வந்திருக்கிறேன்!)

Post a Comment