Showing posts with label rudhran. Show all posts
Showing posts with label rudhran. Show all posts

Thursday, May 12, 2011

மௌனத்தின் பேரிரைச்சல்


மௌனத்தின் பேரிரைச்சல்.. தோன்றிய போதே சங்கிலியாய் எண்ணங்களை இழுத்துச் சென்ற சொற்றொடர்.

கவிதையல்ல இது, கவலை; 
முரண்வாதம், முரட்டுவாதமல்ல. 
இது யோசித்த நேரம் வந்தது, 
யோசிக்க வைக்கும் என்றே எழுதப்படுகிறது. இது பொய்யுமல்லாத உண்மையுமல்லாத புதிர்நிலை. 
புரிதலுக்கான குழப்பம், புரியும் அந்த ஒரு கணத்தின் முன்னிருக்கும் இறுக்கமான தயக்கம்.  முதலில் எது மௌனம், எது இரைச்சல்? 

எது எதுவரை மௌனம் அல்லது இரைச்சல்?

அரசியல், ஆன்மிகம், கலை, இலக்கியம் என்றெல்லாம் பேசிக்க்கொண்டிருப்பது பேரிரைச்சலோ என்று ஒரு நெருடல் வந்து விட்ட்து. வெட்டிப்பேச்செல்லாம் கூச்சலே என்று மனம் முடிவு செய்கிறது. பலனின்றிப் பேசுவதும் பேரிரைச்சல் போடுவதும் ஒன்று என்பதை ஏற்கும் மனம், மௌனத்தின் பேரிரைச்சலை மட்டும் சந்தேகிக்கிறது. வார்த்தை ஜாலமாக வரவில்லை இந்த எண்ணக்கோலம். 

மௌனமும் மனமும் ஒன்றியிருத்தல் சாத்தியமா? 
சப்தமே இல்லாததா அல்லது சிந்தனையே இல்லாததா மௌனம்? சொல்லில்லாமல் சிந்தனை இருக்க முடியுமா? வெளிவராத வார்த்தைகள் மனத்துள்ளேயே கரைந்து விடுமா? அந்த வார்த்தைகளுக்கெல்லாமும் அர்த்தங்கள் உண்டா?
எது மௌனம்? அப்படி ஒன்று நிஜமாகவே உண்டா? மௌனம் என்பதே கற்பனை உருவாக்கிய வார்த்தை மட்டுமா? நிசப்தமல்ல மௌனம் எனும்போது மௌனத்திற்கும் ஒரு சப்தம், ஒரு ஸ்ருதி, ஒரு ஜதி உண்டா? அப்படி ஒன்றிருந்தால் அந்த மந்திர அதிர்வுக்குப் பெயர் வைப்பதே அதைக் களங்கப்படுத்தி விடாதா?

மௌனம் தன்னுடன் தான் தொடர்பு கொள்வதை நிறுத்திக்கொள்ளும் போது மட்டுமே சாத்தியம் என்று தோன்றுகிறது. பிறருடன் தொடர்பு கொள்ளும்போது பயன்படுத்தப்படும் மௌனம் ஒரு சாகசமாகவே தோன்றுகிறது. என்னிடமே நான் பிரயோகிக்கும் மௌனம் வெட்கத்திலிருந்து தப்பிக்க ஒரு தந்திரமாகவே தெரிகிறது.
மௌனத்தை உணராமல், வரையறுக்கவும் விவரிக்கவும் தேவைப்படும் வார்த்தைகளே பேரிரைச்சலாய்த் தெரிகிறது.





Tuesday, October 26, 2010

நாத்திகமும் சுயமரியாதையும்


இது முதல் பகுதி அடுத்த பகுதி எழுதும் அவசியம் வரும்வரை.


நாத்திகமும் சுயமரியாதையும், நானும் என்றே இந்தத் தலைப்பு இருந்திருக்க வேண்டும். ஒரு நண்பரின் திருமணத்திற்குச் சென்று வாழ்த்திவிட்டு வந்தால், நான் மணமக்களை மட்டுமே பார்ப்பேன்- அங்கிருக்கும் புரோகிதனை அல்ல. தெரிந்தவர் தென்பட்டால் பேசுவேன். நண்பர்களுடன் சிரிப்பேன். என்னை எதிரியாக நினைத்துச் செயல்பட்டவர்களைத் தவிர்ப்பேன்- அச்சத்தினால் அல்ல, நாகரிகத்தினால். எதிர் கருத்து உள்ளவர்களுடனும் அம்மாதிரி நேரங்களில் விவாதம் தவிர்ப்பேன், அச்சத்தினால் அல்ல, நாகரிகத்தினால்.

நாகரிகம் தான் சுயமரியாதை- எனக்கு.

எனக்கு என் சுயமரியாதை மீது தீவிரமான ஈடுபாடு உண்டு. சுயமரியாதை என்பது உண்மை. அது இல்லாதவன் நடமாடினாலும் பிணம்தான். தன்னைத்தானே வெளிப்படுத்திகொள்வதுதான் சுயத்தின் மீது ஒருவனுக்கு இருக்கும் மரியாதை. நாகரிகத்திற்காகத் தன் விருப்பிற்கு மாறாக நடித்தாலும் அது சுயமரியாதை ஆகாது. இதை இப்போதைக்கு ஒப்புக்கொண்டே மேலும் எழுதத்துணிகிறேன்.
எது சுயம்? அது எப்போதிலிருந்து, எது வரை?
என் முகமும் விலாசமும் எல்லார்க்கும் தெரிவது போல என் அகமும் விகாரமும் தெரிவதில்லை- வெளிப்படுத்தாதலால். அப்படியெனில் எது சுயம்- இருப்பதா, இல்லை இருப்பதாய்க் காட்டுவதா? அதைப் பேணும் பொருட்டே சுயம் தனக்குத்தானே மதிப்பளித்துக்கொள்கிறது. (வள்ளலாருடன் எனக்கு உறவு வேண்டும்.)

சுயத்தை சமரசம் செய்து கொள்ளலாமா? செய்துகொண்டால் சௌகரியமாகக் கூட இருக்கலாம். சுகமாக இருக்க முடியாது. சௌகரியமும் சுகமும் ஒன்றா?

இது சமூகம். இங்கே என்னைத்தவிரவும் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒத்திசைவதே வாழ்க்கை. இது தான் கற்பிக்கப்பட்ட ஒன்று. இது தான் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கும் அடிப்படை விதி. இதை மாற்றுவதா இல்லை மாறுவதா என்பதே சுயமரியாதையின் அடிப்படைக் கேள்வி- எனக்கு.அந்தந்தநேரத்துகேற்ப என்பது சிக்கலான ஒன்று. அந்தந்த நேரங்கள் யாவும் ஒன்றாய் அமைவதில்லை. அப்படியென்றால் எந்த நேரத்தில் எது நான்?

என் கருத்தைத் திணிக்காமல், பிறர் மகிழ்ச்சியைக் கெடுக்காமல், ஆதிக்கம் காட்டாமல், லாபத்திற்காகவென்று மட்டும் செயல்படாமல், அன்பாக நடிக்காமல்,பண்பை மறக்காமல் செயல் படுவதே நான். முழுதாய்ச் சிரிப்பவனும், முழுதாய் ஆத்திரப்படுபவனுமே நான்.
எனக்கு உபநிஷத்களும் வேதமும் தெரியும்  ஆச்சாரியனாக நடிக்குமளவு- நான் பிராமணனை துவேஷிப்பதில்லை- பார்ப்பனர்களை மட்டுமே- இது புரியாவிட்டால் நாத்திகமும் சுயமரியாதையும் ஒன்றாகவே தெரியும்.    இன்னும் பின்.....