Sunday, January 3, 2010

மனமும் இலக்கியமும்- முதல் பகுதி


ஒருவாரம் தினமும் எழுதத்தூண்டி அதற்கான பயிற்சியாக எழுத ஆரம்பித்தது இன்று ஒரு பழக்கமாக ஆகிவிட்டது. நன்றிகள் தமிழ்மணத்திற்கு.
நேற்று மாலை புத்தக விழாவில் பேசியபோது பல விஷயங்கள் பேச வேண்டும் என்றுதான் போனேன். என்னவோ பேச இயலவில்லை, காரணங்களும் தேவையில்லை. நேற்று பேச நினைத்ததை இன்று பதிவாக ஆக்குகிறேன்.


 மனமும் இலக்கியமும் 
மனதார வெளிவராத மனத்துள் புகாத எந்த எழுத்தும் இலக்கியமல்ல, எனக்கு.
என்னைப் பொறுத்தவரை உள் புகுவதும் வெளிவருவதிலும் ஏற்படுத்தும் பாதிப்பைப் பதிவு செய்வதே இலக்கியம். இப்படி ஒரு சிக்கலான வரையறையுடன் மனவியலும் இலக்கியமும் எனும் தலைப்பில் பேசலாம் என்றுதான் பேச ஒப்புக்கொண்டேன்.
மனம் இலக்கியத்தின் ரசனையை வளர்த்துக்கொள்வது அதன் வளர்ச்சியைப் பொருத்தே அமைகிறது. குழந்தைகள் அதிசயங்களில் ஈர்க்கப்படுவதில் ஆரம்பிக்கிறது இலக்கியப் பரிச்சயம். Fantasy எனும் அதிசயக் கதைகளில் சிங்கம் ஆடும் யானை சிரிக்கும் குரங்கு பேசும்.. குழந்தை வளரும் போது தேவைப்படும் இந்த அதிசயங்களின் விவரிப்புகள் பின்னாளில் தேவைப்படுவதில்லை. அதே குழந்தை அடுத்து அதிசயத்தின் நீட்சியாக அதிமனிதனின் கதைகளை நாடும். ஸ்பைடர்மென் சூப்பர்மேன்  போன்ற அதிமனிதர்கள் அந்தக் குழந்தையின் பிரமிப்புக்கு ஏற்ப இயல்பிலிருந்து பெரிதாக அமைந்து, அசாத்தியமான காரியங்களை மிகச் சாதாரணமாகச் செய்வார்கள். குழந்தைக்கு இந்த கற்பனை பிடிக்கிறது. நிஜத்தின் கோணங்கள் இன்னும் சரியாக அமையாத வயதில் இந்த ஈர்ப்பு சரிதான், ஆனால் பெரியவர்களும் இத்தகைய விஷயங்களில் ஈடுபாடும் ஆர்வமும் காட்டுவது என்? குழந்தைகள் வளர்ந்த மனிதர்களிடம் அதிசயத்தக்க ஆற்றல் இருப்பதை நம்புகிறார்கள், தாமும் வளர்ந்து அப்படி ஆகிவிடுவோம் என்று. பெரியவர்கள் தாங்கள் தொலைத்த குழந்தை மனத்தை அந்த்க் கொஞ்ச நேரமாவது மீண்டும் அனுபவிக்கும் ஆசையால் இவற்றை நேசிக்கிறார்கள். வளர்ந்த பிறகு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் புதிதாய் பெரிதாய் சாதிக்கலாம் எனும் நப்பாசையின் ஒருவித வெளிப்பாடுதான் தான் வளர்ந்து தொலைத்துவிட்ட குழந்தை நிலையை மீட்க முயல்வது. இதற்கு இவ்வகை அதிமனிதர்களின் அதிசயக் கதைகள் உதவுகின்றன.
குழந்தை சற்று வளர்ந்தவுடன் ஆவலோடு படிப்பது தங்களைப்போன்ற குழந்தைகளின் சாதனைக் கதைகளை. எனக்கு அப்படித்தான் enid blyton மீது படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. இன்று இளஞ்சிறுவர்கள் என்ன கதைகள் படிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அடுத்து, வீரம், காதல், அறிவு என்று ஏதாவது ஒரு கோணத்தில் நாயகத்தன்மையுள்ள பாத்திரங்களின் கதைகளை மனம் விரும்பும். பதின் வயதுகளின் இயல்பான மனோமாற்றங்களால் காதலும் வீரமும் கொஞ்ச காலத்திக்கு நல்ல கதைக்களன்களாக தெரியும். பதின்வயதுகளின் இறுதியில் இது மாறும். சமூகம் குறித்தும் எழுதப்படும் கதைகளின்பால் கவனம் செல்லும். இங்கேதான் இலக்கியம் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பிக்கும்.சுஜாதாவா ரமணிசந்திரனா என்பது மெல்ல இன்னும் ஆழமான விஷயங்களை நோக்கி ஈர்க்கப்படும். கதை சொல்லாமல் வாழ்க்கை பற்றி விவாதிக்கும் இலக்கியங்களின் அறிமுகம் இந்த வயதில் ஏற்பட்டால், 25 வயதுக்குள் ரசனையின் தன்மை ஒரு திசைநோக்கிப்பயணிக்கத் துவங்கும். 

இது எல்லாருக்கும் ஏற்படுவதில்லை. இலக்கிய அறிமுகம் யதேச்சையாக நடப்பதில்லை. அதற்குரிய படிக்கும் வழக்கமும், பலரது பழக்கமும் இருந்தால்தான் புத்தகங்கள் பரிந்துரைக்கப்படும், மனதால் தேர்ந்தெடுக்கப்படும்.
25 வயது என்பது ஒரு முக்கிய கட்டம். அதுவரை மாணவனாக இருந்துவிடலாம். படித்து முடித்துவிட்டும் சரியான வேலை கிடைக்கவில்லை என்று சும்மா இருந்துவிடலாம். அதன் பிறகு, சூழல் கேட்கிறதோ இல்லையோ, மனம் தன்னைத்தானே ஏளனம் செய்துகொள்ளும். வலிக்கும்.இந்தக் கட்டத்தில் ஒருவன் (ஒருவளாகவும் இருக்கலாம், வசதிக்காக ஆண்பால்), தன் பாதையைத் தேர்ந்தெடுக்கும் நிர்ப்பந்தத்தை காலம் உருவாகும். எல்லாரும் சொல்லும் இயல்பு வாழ்க்கை என்று செல்வம் தேடுவதா, அதற்கான சமாதானங்களைச் செய்துகொள்வதா இல்லை தான் மனத்தின் இயல்பான நாட்டத்தின்பால் கவனம் செலுத்தி சுயநேர்மைக்கும் சுயநியாயத்திற்கும் முதலிடம் கொடுத்து வசதிகள் கிடைக்கச் சாத்தியங்கள் குறைந்த வருங்காலத்தைத் தேர்ந்தெடுப்பதா என்று ஒரு முடிவெடுத்தல் அவசியமாகி விடும். மற்றவர் ஆசைபடும்படியல்ல என் ஆசைக்கேற்பவே என் வாழ்க்கை என்றுதான் மனம் இயல்பாகத் தீர்மானிக்கும். 

இதன் அடுத்த கட்டத்தில், தன் முடிவு எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்றானால் வாழ்க்கை கேள்விகளின்றி தொடரும். மாறாக தான் தேர்ந்தெடுத்த சுயநியாயத்தின் பாதையில் செல்லும் போது, சமூக ஏளனம், கண்டனம் இவை மீறி தன் வயதொத்தவர்களின் வாழ்வின் வசதிகள் மனத்துள் ஒரு நெருடலை உருவாக்கும்.
சமூகம் அங்கீகரித்த வெற்றியா தன் மனமும் தன்மானமும் நிர்ணயித்துக்கொண்ட வெற்றியா எனும் தேர்வைப் பொறுத்தே இலக்கியத்தேடலும் அமையும். இந்தக் கட்டத்தில் இலக்கியம் ஒரு நிரந்தரத்துணையாக நாளும் கூட இருக்கலாம் அல்லது அவசியம் நேரும்போதோ அரிப்பு எடுக்கும் போதோ எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும் விஷயமாகவும் ஆகலாம். இந்தக் கட்டதில் இலக்கியம் எது என்பதையும் மனம் அனிச்சையாகத் தேர்வு செய்யும். யோசிக்க வைக்கும் நூல்களை விட பொழுது போக்க உதவும் நூல்களையே மனம் தன் தற்காப்பிற்காகத்தேடும். இந்த இடத்தில் மேலுக்கு ஆழம் போல் ஒப்பனையிட்டுக்கொண்ட புத்தகங்கள் ஒரு நாகரீக நிர்ப்பந்தமாகவோ, ஒரு நாடகத்திற்கான அவசியமாகவோ கைகளில் கிடக்கும்.
நீளம் கருதி, இதன் மீதி நாளை எழுதுகிறேன்.

12 comments:

Dr.Rudhran said...

ஒருவாரம் எழுத வைத்த தமிழ்மணத்திற்கும், என் எழுத்துகளைப் படித்து எனக்கு ஆக்கப்பூர்வமான கருத்துகளைச் சொன்னவர்களுக்கும், ஊக்கப்படுத்தவே பாராட்டியவர்களுக்கும், மனமார்ந்த நன்றி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இந்த பதிவினைப்பார்த்தவுடன் எனக்கு
ஞாபகம் வருகிறது. மிகச் சிறிய வயதிலேயே
ஜெயகாந்தனைப் படித்து விட்டேன். அதன்
பாதிப்பு ரொம்ப நாட்கள் இருந்தது,எனக்கு!

Anandi said...

developemental psychology in a nutshell :-), thank you for this blog dr.

Thekkikattan|தெகா said...

ம்ம்ம்... ஒரு படிப்பாளியின் தன்மையை காலமும், சில சமூக நிர்பந்தங்களும் கூட நிர்ணயிக்கின்றன என்பதாக புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ்மண நட்சத்திர வாரத்தில் மேலும் அதிகமான பதிவுகளை கொடுத்தமைக்கு ஒரு சிறப்பு நன்றி.

na.jothi said...

நன்றி டாக்டர்
இந்த நட்சத்திர பதிவின் மூலம் அரிதான சில விஷயங்கள் தெரிய நேர்ந்தது

மணிகண்டன் said...

In the last week, we are blessed to read fantastic posts from you doctor. Thanks for writing often.

Thenammai Lakshmanan said...

//என்னைப் பொறுத்தவரை உள் புகுவதும் வெளிவருவதிலும் ஏற்படுத்தும் பாதிப்பைப் பதிவு செய்வதே இலக்கியம்.//

thank u doctor
i take this words as an answer for my previous question

அரங்கப்பெருமாள் said...

நல்லப் பதிவு. அடுத்தப் பாகத்திற்கு காத்திருக்கிறேன்.

baskar said...

என்னை நான் படிக்கவும் மெலும் எப்படி நான் பயனிக்க வேன்டும் என வழிகாட்டி இந்த பதிவுக்கு நன்ரிகல் ஆயிரம்.மிக சிரந்த வழிகாட்டி

Prabu M said...
This comment has been removed by the author.
butterfly Surya said...

புத்தக கண்காட்சியில் உங்கள் உரையை கேட்க முடியவில்லையே என்று ஏங்கியிருந்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி டாக்டர்.

நீங்கள் பேசுவது போலவே உணர்ந்தேன்.

அருமை.

நொந்தகுமாரன் said...

புத்தக விழாவில் கலந்து கொள்ள முடியாத வருத்தத்தை களைகிறது உங்கள் பதிவு.

Post a Comment