Thursday, September 4, 2014

ஆசிரியர் தினத்துக்காக..

ஒரு வயதில், குரு தேடி அலைந்திருக்கிறேன். அவ்வப்போது, “நீ தயாரான நிலைக்கு வந்தவுடன் குரு தானாய் உன்னை வந்து ஆட்கொள்ளுவார்”, என்று எழுதப்பட்டதையெல்லாம் நம்ப விரும்பாத ஆணவத்தில், தொடர்ந்து தேடி வந்திருக்கிறேன். தெருவில் போகும்போதுகூட தாடி வைத்தவனையெல்லாம் ஓரக்கண்ணில் எடைபோட்டவாறே தேடியிருக்கிறேன்
மனத்துள் ஒரு குரு பிம்பம் உருவாக்கி, அதையே தேடி அலைந்திருக்கிறேன். அந்த பிம்பம் உருவாய் ஆனது; குரு உருவாய் மட்டுமல்ல அருவாய், மருவாய், மணியாய், ஒளியாய், கதியாய், விதியாய்..எப்படி வேண்டுமானாலும் வருவார் எனும் அருணகிரி வாக்கை நன்கு மனத்துள் இருத்திக்கொண்டிருந்தாலும், விழிபடும் குருவை வழிபட அலைந்திருக்கிறேன்.
குருவின்றி வித்தை சாத்தியமில்லை என்றே நான் படித்த சாத்திரங்கள் திட்ட வட்டமாய் சொல்லி விட்டதால், ரொம்பவும் தீவிரமாகவே அலைந்திருக்கிறேன். அப்படி அலையும் காலகட்டத்தில், கைவசம் கொஞ்சம் ஓவியம், தேவையான அளவு மருத்துவம், தேரும் அளவு எழுத்து என்னிடம் இருந்தது. பதின்வயதுகளில் அல்ல, முப்பதுகளின் மத்தியில்தான் இந்த குரு தேடல் ஆரம்பம்.
ஆன்மிகச்சந்தையில் விளம்பர வசீகரத்துடன் வழிகாட்டுவதாய் வருமானம் சேர்க்கும் வியாபாரிகளை எளிதில் அடையாளம் காண முடிந்தாலும், உள்ளே நிச்சயம் ஒரு குரு கிடைப்பார் என்றே அலைந்தேன். குரு என்பவர் என் எல்லா கேள்விகளுக்கும் விடை தருபவராக மட்டுமல்ல, அவரது நெறியின் மீது எனக்கு எவ்விதக் கேள்வியும் எழக்கூடாது என்பதே அடிப்படை தகுதியின் தேர்வாக நானே நிர்ணயித்திருந்தேன். ஒரு கட்டத்தில் எனக்கு ஓரிருவர் மீதும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது- நெருங்கிப்பார்க்கும் வரை.
 அப்படியான என் தேடல் காலத்தில், என் மருத்துவமனையில் ஒருவருக்கு மனப்பிறழ்வு என்று என்னிடம் அழைத்து வந்தார்கள். எனக்கென்னவோ உள்ளே நிஜமாக உடல் சார்ந்த நோய் இருப்பதாய்ப் பட்டது. ஓர் அனிச்சைச் செயலாய், சாயந்திரம் வாங்க, என் வாத்தியார் இருக்கார் அவர் கிட்டயும் கேட்டுடலாம் என்றேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். அந்த காலகட்டத்திலேயே என் மனநல மருத்துவத்துறையில் எனக்கென ஒரு சிறப்பிடம் மக்கள் மத்தியில் இருந்தது. மாலை அவரைப் பார்க்க அவர்களோடு நானும் போனேன்.       “என்ன டாக்டர்?” என்றார், சொன்னேன். பத்து நிமிடம் பரிசோத்து விட்டு, “யு ஆர் ரைட்..இவருக்கு…..” என்றார். கூட வந்தவர்களுக்கு ஆச்சரியம் எனக்கு இது சகஜமான விஷயம்.
இப்படித்தான் அவர்.-எப்போதும்.
சிக்கலான கேள்வியோடு நான் போய் நின்றால், எளிமையாக நிதானமாக விடையும் விளக்கமும் சொல்வார். நான் விவரித்த நிகழ்வு, அவரது மாணவனாய் மருத்துவக்கல்லூரியிலிருந்து வெளிவந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின். படிக்கும் காலத்திலேயே அப்படித்தான்.
என் மீது (நான் ஓவியனாய் எல்லா ஆசிரியர்களுக்கும், அவர் உட்பட, அந்த காலத்தில் அவசியமான ஸ்லைட் வரைந்து தந்து வந்ததால் மட்டுமல்லஅவருக்கு அன்பு இருந்தது. “லஞ்ச் முடிச்சுட்டு வார்டு வாங்க டாக்டர், கேஸ் பார்க்கலாம்என்பார். மதியம் வீட்டுக்குப் போகாமல், இது பாருங்க..இது ஏன்னு நினைக்கிறீங்க, இந்த டெஸ்ட் இப்படிப் பண்ணினா இன்னும் க்ளியரா தெரியும்என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயமாய் எனக்குச் சொல்லித்தந்தார். அது அவரிடம் நான் நேரடி மாணவனாய் இல்லாமல் வேறொரு வார்டில் இருந்தாலும்.
மருத்துவப் படிப்பு முடித்து நான் சின்னதாய் ஒரு க்ளினிக் வைத்தபோது அவரிடம் சென்றேன்..”சாயந்திரம் வாங்கஎன்றார்..பின்மாலையில் தன்னுடன் உட்கார வைத்து, அவர் எப்படி பார்க்கிறார், பரிசோதிக்கிறார், என்ன மருந்து தருகிறார் என்பதை கவனிக்க வைத்தார், அவரது க்ளினிக் நேரம் முடிந்தவுடன்அது என்ன கேஸ்என்று பார்த்தவற்றை எப்படிப் பார்ப்பது என்று ஒரு வாரம் விளக்கினார். அதன் பின், ஒரு நாளைக்கு என் க்ளினிக்கில் அவரை விடவும் கூட்டம்அவரிடம் இதைச் சொன்னவுடன், “வெரி குட், டாக்டர். அப்படியே டெவலப் பண்ணுங்கஎன்றார்.
அதன்பின், மனநல மருத்துவம் தான் என் துறை என்று நான் தீர்மானித்து அதில் மூழ்கியபோதும் அவரை அவ்வப்போது பார்க்காமல் இருந்ததில்லை. ஒவ்வொரு முறையும்இது என்ன சார், எப்படி சார்என்றுதான் போய் நிற்பேன். பதிலில்லாமல், பதிலினால் தெளிவில்லாமல் வந்ததில்லை.
அவரது மருத்துவமனையில் இருக்கும் அத்தனை பேரையும் தினமும், ஞாயிறு உட்பட மூன்று முறை பார்த்து பரிசோதித்து விடுவார். ஒரு முறை மூன்று நாட்கள் அவருக்கு வெளியே அவசர வேலை, என்னை அழைத்து இந்த மூணு நாளும் நீங்க ஹாஸ்பிடலை பார்த்துக்குங்க, என்ற போது நடுங்கினேன். நீங்க பாத்துப்பீங்கன்னு தான் உங்களை கேட்கிறேன் என்றார். எம்.பி.பி.எஸ் பாஸ் செய்ததைவிடவும் உள்ளே சிறகு விரிந்தது.
அவரிடம் தான்..மேற்சொன்ன அந்த நிகழ்வு. அன்று தான் எனக்கு ஒரு தெளிவு வந்தது. நோய் பற்றி அல்ல, என் வெற்று தேடல் பற்றி.
இதோ இவர், எல்லா கேள்விகளுக்கும் விடை தந்து, விளக்கம் தந்து, நான் உள் வாங்கினேனா என்று தெரிவு செய்து, கொஞ்சம் கொஞ்சமாய் என் மருத்துவ ஆற்றலைச் செப்பனிட்டு, அதன் தேர்ச்சியை அங்கீகரித்து.. வெளியே எந்த குரு வேறென்ன செய்து விட முடியும்?
தன் ஞானத்தை மெதுவாய் ஊட்டி விட்டு, நான் சாப்பிட்டு விட்டதை சபாஷ் என்பவரை விடவா ஒரு குரு?
அன்றிலிருந்து இவர் தான் குரு. இவரைப் போன்றோர் தான் குரு என்று தீர்மானித்தேன். ஒவ்வொரு துறையிலும் இப்படி இருப்பார்கள், அந்த துறையில் உட்புகும்போது அவர்கள் இருப்பார்கள், வழிகாட்டுவார்கள், விழி திறப்பார்கள் என்பது புரிந்தது

ஆன்மிகம் ஒரு துறையல்ல அது வாழ்வின் ஒரு பரிணாமம் ஆகவே அதற்கொரு குரு தேட அவசியமில்லை, மழை கொட்டும்போது தானாய் ஒன்று குடை விரிக்கும், குருவாய்.


என் வாழ்வின் எல்லா இன்ப துன்பங்களிலும் தன் நேரச் செலவைப் பார்க்காமல் என்னுடன் இருந்த என் குரு-, எப்போதும் என்னை டாக்டர் என்றும் வாங்க பாருங்க என்றும் விளித்து, என்னைச் சின்னவனாய்ப் பார்க்காமலேயே அவரை நான் மிகப் பெரியவராய் வியந்து மதிக்கவைத்த என் குரு- டாக்டர். வீரபத்ரன். Thank you again, sir, till I thank you again the next living moment in my life.

Wednesday, September 3, 2014

முதல் பத்து

முகநூலில் விளையாட்டாய் எல்லாரும் பத்து புத்தகங்கள் பட்டியலிடுவதைப் பார்த்து தோன்றியது இது!
ரொம்பவும் யோசித்து, என்னில் அதிர்வுகள் உண்டாக்கிய புத்தகங்களைப் பட்டியலிடும் போதுதான் என்னையும் எனக்குக் கொஞ்சம் தெரியவருகிறது. என் முதல் பத்து புத்தகங்கள் இவை. என்னுள் பாதிப்பையும் சிந்தையில் மாற்றத்தையும் உருவாக்கியவற்றின் பட்டியல் மிகவும் நீளம்.
1.மூன்றாம் வகுப்பில் முதல் மதிப்பென் வாங்கியதற்காக என் அம்மா குட்ஷெபர்ட் எதிரில் இருக்கும் கடைக்கு அழைத்துச்சென்று, என்ன வேணுமானாலும் வாங்கிக்கோ என்றதும் அங்கிருந்த Frank Baum எழுதிய the wizard of oz வாங்கிய பெருமை மட்டுமே அப்போது இருந்தது. எழுத்து கூட்டிப்பார்த்தும் படிக்க முடியாத வயதுக்கு மீறிய புத்தகம். அதை நான் முப்பதாண்டுகளுக்குப் பின் தான் படித்தேன்.
2. ஐந்தாம் வகுப்பின் விடுமுறையில் என் தாத்தாவின் அலமாரியில் இருந்த புத்தகத்தை நான் ஆசையோடு எடுத்து புரட்டுவதைப் பார்த்து, அவர், “ இதைப் படிக்க முடியுமானா எடுத்துட்டுப் போய் படி,” என்று சொல்ல, அந்தச் சவாலுக்காக நான் படித்த முதல் புத்தகம்- Erle Stanley Gardner எழுதிய Duplicate Daughter. பெரிதாய் உள்வாங்கியிருக்க முடியாது என்றாலும் முதலில் முழுதாய் பாடங்கள் தாண்டி படித்த புத்தகம் அது.
3.அதே காலகட்ட்த்தில் அதே அலமாரியிலிருந்து என் அம்மா எடுத்து வந்த, கல்கியிலிருந்து வாரந்தோறும் சேகரித்து பைண்ட் செய்யப்பட்ட ராஜாஜியின் சக்கரவர்த்தி திருமகன் தான் தமிழில் படித்த முதல் புத்தகம். அப்போது வாசிப்பை அதில் வந்திருந்த மணியம், வினு ஆகியோரின் சித்திரங்கள் மேலும் சுவை கூட்டியதும் நினைவில் இருக்கிறது.
4.எட்டாவது படிக்கும் போது, Frank Richards எழுதிய Billy Bunter , Richmal Crompton எழுதிய Williams, புத்தகங்கள், ஒரு போட்டியாய் எல்லாவற்றையும் யார் முதலில் படிப்பது என்று நண்பனுடன் பந்தயித்து படித்ததும் நினைவில் இனிய பசுமை, அதற்குள் Enid Blyton தாண்டியாயிற்று.
5.ஒன்பதாவது படிக்கும்போது, மற்றவர்கள் முன் பெரிதாய்க் காட்டிக்கொள்ள, சென்னை மத்திய நூலகத்திலிருந்து Mervyn Peake எழுதிய Titus Groan எடுத்து வந்து, எல்லோருக்கும் காட்ட பள்ளிக்கும் எடுத்துச் சென்று மதிய உணவு இடைவேளையில் புரட்டிக் கொண்டிருந்து பந்தா பண்ணினாலும், நடிப்புக்காக விரித்து வைத்திருந்த புத்தகத்தின் பக்கங்களில் கண்மேய, English மீது ஓர் ஈர்ர்பு வந்த்தது இந்த புத்தகத்தினால்தான். அப்போது அதை முழுதாய்ப் படிக்கவில்லை, பிறகு தேடிதேடி அதை முழுதாய்ப் படித்தது ஐம்பதாவது வயதில்!
6.அதே காலம், பள்ளியில் பாடமாய் வைத்திருந்த Charles Dickens எழுதிய Tale of two cities ஆரம்பவரிகள் “It was the best of times.. it was the worst of times..”எழுதுவதெனில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உள்ளே ஒரு பொறி பற்றவைத்தது.
7.பத்தாவது, பதினொன்றாவது வகுப்பில் தொடர்ந்து இரண்டாண்டுகள் தினமும் படித்தது, Shakespeareன் Midsummernight’s Dream. தினமும் Wren & Martin வைத்துக்கொண்டு, வரிக்கு வரி Midsummernight’s Dream அலசப்பட்டது. அந்த என் பள்ளியின் அந்த இரண்டாண்டுகள்தான் Englishல் எனக்கு நாட்டமும் நேர்த்தியும் உருவாக்கி வளர்த்தன. வரிவரியாய்ப் பிய்த்து காவிய வரிகளில் இலக்கணம் கற்பித்த என் ஆசிரியர்  Mathewsதான் இன்னும் படி இன்னும் எழுது என்று என்னை ஊக்குவித்தவர்.
8. அன்றைய PUCயில்தான் முதல் டாகூர். அவர் எழுதிய Gardenerதான் மொழி இவ்வளவு மிருதுவாகவும் மனதை வருடும் என்று எனக்கு உணர்த்திய புத்தகம்.
9.மருத்துவக்கல்லூரி முதலாண்டின் விடுமுறையில் முதல் தமிழ் நாவல் நா.பார்த்தசாரதியின் ஆத்மாவின் ராகங்கள், அதையடுத்து உடனே ஜெயகாந்தனின் ‘ஓ கோகிலா என்ன செய்துவிட்டாள்’…அதற்கு அடுத்த ஆண்டு லா.ச.ராவின் அபிதா.
10.அதே காலகட்டத்தில் ஒரு நண்பனின் லாட்ஜில் காத்திருக்கும்போது, அவனது ரூம் மேட் வைத்திருந்த மீராவின்  கனவுகள்+காகிதங்கள்+கற்பனைகள். அதிலிருந்து தேட கிடைத்த பொக்கிஷம் தான் ப்ருமீளின் கைப்பிடியளவு கடல்.

இந்தப் பட்டியலைத் தொடர்வது வாழ்க்கையின் பின்னோட்டமாய் அமைந்து விட்டது.

Monday, July 14, 2014

ஜூலை பதினான்கு


இதே நாள், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், முதன் முதலாய், ஒரு டாக்டராய் என் க்ளினிக்கில் உட்கார்ந்தேன். அன்று என்னுடன் என் நண்பனும் அவன் மனைவியும் துணைக்கு வந்தார்கள். உள்ளே உட்கார்ந்து என்ன செய்வது என்றே தெரியாமல், செய்ய எதுவும் இல்லாமல் உட்கார்ந்து வெட்டியாய் ஏதேதோ பெசிக்கொண்டிருந்தோம்.
ஒரு மணி நேரம் போனபின், இன்னும் பத்து நிமிஷம் பார்க்கலாம் யாரும் வராவிட்டால் போய்விடலாம் என்று முடிவெடுத்தபோது ஒருவர் உள்ளே வந்தார்.
“நீங்க தான் டாக்டரா?”
“ஆமாங்க”
“ஆணி கீறிடுச்சு, செப்டிக் ஊசி போட்டுடுங்க”
“எங்கே அடிபட்டுச்சு, காட்டுங்க..”
“ட்ரெஸ்ஸிங் எல்லாம் வேணாங்க, ஆய்ண்ட்மெண்ட் நானே போட்டுட்டேன், ஊசி மட்டும் போடுங்க”
“ சரி, வாங்கிட்டு வாங்க” என்று டிடி எழுதிக்கொடுக்க, “ உங்க பேர் என்ன்ங்க?” என்றால்,
“தெரியாதாங்க? நான் தான் அன்வர் பாய். தோ எதித்தாப்பல நம்ம கடைதான்” என்று சொல்லி விட்டு, ஊசி வாங்கி வந்து நான் போட்ட பின், “பரவாயில்ல, வலிக்காம போட்டீங்க” என்று சொல்லி விட்டு எழுந்தார்.
ஃபீஸ் எப்படி கேட்பது, எவ்வளவு கேட்பது என்று புரியாமல் நான் பேசாமல், ஒரு மய்யமான முறுவலுடன் நிற்க, “காசு எடுத்துட்டு வரலே, கடைக்குப் போய் பையன் கிட்ட குடுத்துஅனுப்புறேன்” என்று சொல்லி விட்டுப் போனார்.
ஐந்து நிமிடத்தில் ஒரு பையன் வந்து “பாய் தரச் சொன்னார்” என்று இரண்டு ரூபாய் கொடுத்தான்- என் முதல் மருத்துவ வருமானம்.

முப்பத்தைந்தாண்டுகள் ஓடி விட்டன. எத்தனையோ பேர் ஃபீஸ் கொடுத்திருக்கிறார்கள், எத்தனையோ பேர் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள், எத்தனையோ பேரிடம் வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் அன்வர் பாய் எனக்கு ’ஸ்பெஷல் பேஷண்ட்’. எப்போது வந்தாலும், காத்திருக்கும் கூட்ட்த்தைப் பார்த்து, “நம்ம கை ராசிங்க, க்ளினிக் நல்லா போகுது” என்று பெருமைப்படுவார்.
சில ஆண்டுகளில், பொது மருத்துவ சிகிச்சை பார்ப்பதை நிறுத்திவிட்டு, மனநல மருத்துவம் மட்டுமே நான் பார்த்துக்கொண்டிருந்தாலும், “வயிறு சரியில்லே, மாத்திரை எழுதிக்கொடுங்க, ஜெலுஸில் வேலக்காவலே” என்று வந்து நிற்பார்.
சில ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்து விட்டார்.

மனநல மருத்துவம் மட்டுமே பார்க்க ஆரம்பித்த 1988லிருந்து இன்றைய தேதிவரை நான் பார்த்தவர்களின் எண்ணிக்கை, 25,925.  ஆனாலும் என் ‘அன்வர் பாய்’ தான் இன்று நினைவுக்கு வருகிறார்.


லட்சக்கணக்கில் பணம் கட்டி, கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாய் பொதுவாய் மருத்துவர்கள் மீது பலர் காழ்ப்பில் இருக்கிறார்களே, அவர்களுக்குத் தெரியாது இப்படி கொஞ்சமாய் காசு வாங்கியும் சிகிச்சை தரும் மருத்துவர்களும் உண்டு என்று. அவர்களுக்குத் தெரியாது என்னைப்போல் படித்து மதிப்பெண் வாங்கி அரசு மருத்துவக் கல்லூரியில் குறைந்த செலவில் படித்து ஆயிரக்கணக்கில் வெளிவருபவர்கள் தான் அதிகம் என்று. அவர்களுக்குத் தெரியாது, சிலரின் கேவலமான வியாபாரத்தனத்தை மீறி நேர்மையும் நெறியும் பிறழாத மருத்துவர்கள் இன்றும் உண்டென்று.

Thursday, July 10, 2014

என் மாரிஸ்மைனர்.

.அம்பை தன் கார் கதை சொன்னவுடன் என் கார் கதை சொல்ல ரொம்பவும் மனம் துள்ளியது, கான மயிலாட மாதிரி

எல்லா ஏழைகளுக்கும் போலவே எனக்கும் கார் வாங்கி ஒட்டும் ஆசை இருந்த்து. பள்ளியில் என் வகுப்புத்தோழனின் அப்பா நான் பஸ்ஸுக்கு நிற்கையில் என்னையும் தன் காரில் ஏற்றிச் சென்ற அந்த இளம் வயதில் தான் அந்த ஆசை வந்திருக்க வேண்டும். அப்போது என் வயது பத்திருக்கலாம். விஸ்வநாதன்ராமமூர்த்தி காலம்.

அப்புறம் இருக்கும் சொல்ப வசதியும் போய், வீட்டுள் நுழைந்தால் அடுப்பில் விறகிருக்கிறதா என்று பார்த்த பின்னர்,” நான் ஹாஸ்டல் போறேன்என்று பொத்தாம் பொதுவாய் எல்லார்க்குமாய் சொல்லி விட்டுப் போன காலத்திலும், பதின் வயதுகளின் முடிவிலும், கார் கனவு கிடையாது, அன்றாட காசு பற்றியே கனவும் நினைவும்
அப்புறம் நானும் ஒரு டாக்டராகி, என்னிடமும் நிறைய நோயாளிகள் வந்த போது, நான் வாடகைக்கு இருந்த வீட்டுக்காரர், திடீரென்று ஒரு கார் கொண்டு வந்தார். அதை முன்னாள் விற்று விற்றவரிடமே திரும்பி வாங்கியிருந்தார்.
அப்போதெல்லாம் வாடகை கொடுப்பதே ப்ரதான சிந்தனை என்பதால் அந்த அழகான காரை தொட்டுப்பார்ப்பதோடு சரி.அப்புறம், அதற்கப்புறம்..பணமும் திமிரும் சேர்ந்த பின். அதே காரை அவரிடமிருந்து வாங்கினேன். அது என் மாரிஸ் மைனர்.

கார் வாங்கியபின் தான் ட்ரைவிங் ஸ்கூல் சென்றேன். அந்த கார் சொகுசும் இல்லை, சுலபமும் இல்லை, அதில் பல மீட்டர்கள் எதையும் காட்டுவதில்லைநின்று விட்டால் தான் பெட்ரோல் இல்லை என்றே தெரியும்ஆனாலும் அது எனக்குப் பிடிக்கும்.

அதனுடனான இன்றைய சுவாரஸ்யமும் அன்றைய இம்சையுமான அனுபவங்கள் ஏராளம். ஒரு முறை, ஸ்டியரிங் சுற்றவில்லை, கோபமாய் இழுத்த்தில் கையோடு வந்து விட்ட்து. தள்ளி ஓரம் சேர்ப்பதற்குள் வியர்வை, வெட்கம், வெறுப்பு எல்லாமும் கூடிப்போனது.
இன்னொரு முறை ஹைவேயில் முன்விளக்கு எரியவில்லை, முன்னால் போகும் வண்டியைப் பின்தொடர்ந்து ஓட்ட வேண்டியிருந்தது. இன்னொரு முறை, மேம்பாலத்தில் இறங்கும்போது ப்ரேக் வேலை செய்யவில்லை, ந்யுட்ரலில் இறங்கி, ஓரம் கட்டி ஸ்விச் ஆஃப் செய்ய வேண்டியிருந்தது.

இன்னும் என்னென்னவோ இம்சைகள் மீறி என்னென்னவோ சுக .நினைவுகளும் அந்த கார் தந்திருக்கிறது. என் பல வெற்றிகளில் என்னுடன் அந்த கார் பயணித்திருக்கிறது.

எதற்காக அந்த கார்? மாருதி வந்து விட்ட காலத்தில்? நிச்சயமாய் அழகான செல்லமான கார் என்பதால் மட்டுமல்ல. கல்லூரி காலத்தில், வெவ்வேறு வண்ண உடை இல்லாததால், எப்போதும் வெள்ளை சட்டையே போடுவதாய் காட்டிக்கொண்ட தாழ்வு மனப்பான்மையின் தற்காப்பின் இன்னொரு வடிவாகவும் இருந்திருக்கலாம்.
ஆனாலும்………………
இன்று நல்ல சௌகரியமான கார் ஓட்டினாலும்


முக்கிய முன்னாள் காதலியின் நினைவு போல முற்றாய் மங்கி மண்ணுள் புதையாமல், கண்ணுக்குத் தென்படாத இடத்தில், துருப்பிடித்து, இன்னும் தன்னை அழித்துக் கொள்ளாமல் இருக்கிறதுஎன் வீட்டின் பின்புற ஓரத்தில் என் மாரிஸ்மைனர்.