ஒளிவட்டம் என்ன
கொண்டையாராஜூவும் அவரது சிஷ்யர்களும் வரைந்ததுதானா? ‘சாமி’ படங்களில் தலைக்குப்
பின்னால் அந்தந்த ஓவியரின் மனதுக்கேற்ற நிறத்தில் வரையப்படும் வட்டம்தானா? ஒளிவட்டம் என்பது ஒரு மரியாதையின் வெளிப்பாடு. வணக்கத்துக்குரியவர்
என்பதை மீறி வணங்கப்படவேண்டியவராக ஒருவரைக் காட்டும் முயற்சி.
ஏசுவை எடுத்துக்கொள்வோம்.
அவருக்கு ஒளிவட்டம் எதற்கு வந்தது- மரித்ததற்கா, உயிர்த்தெழுந்ததற்கா? யாருக்கு நாம் ஒளிவட்டம்
வரைகிறோம்? வீரனுக்கா, தியாகிக்கா? இன்றைய வாழ்வின் இறுக்கத்தில், வீரமும் தியாகமும்
வேறு யாராவது செய்யும்போது பாராட்ட நன்றாக இருப்பதுபோல நாமே செய்வதற்கு மனம்
முனைவதில்லை. இது பயமுமல்ல, பாதுகாப்பு உணர்வும் அல்ல. இது
வேடிக்கை பார்த்துவிட்டு வேலையைப்பார்ப்போம் எனும் தற்கால மனநிலை. அதனால்தான்
ஒளிவட்டங்களை யாரும் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்ள முயல்வதில்லை- சில அரசியல்
அநாகரிகக் கோமாளிகளைத் தவிர. அரசியல் கோமாளிகளும் அவர்களது அடிவருடிகளும்
உருவாக்குபவை ஒளிவட்டங்களும் அல்ல.
காலண்டர் கடவுள்களுக்கு வரையப்படுவது
போல இல்லாவிட்டாலும் நாம் எல்லோருமே உள்ளே ஒரு சின்ன அளவிலாவது ஒளிவட்டத்தைச் சூடிக்கொண்டிருக்கிறோம்.
இது தற்பெருமையோ திமிரோ அல்ல, தன்னை
உயர்வாக நினைத்துக்கொள்வதன் மூலம் தன் இயலாமையை மறைக்க முற்படும் மனத்தின் உத்தி, பொன்குஞ்சு பார்க்கும் காக்கைப் பார்வை. சிலநேரங்களில் இது அவசியமாகவும் ஆகி, தன்னம்பிக்கைக்கும் தைரியத்திற்கும் வழிவகுக்கிறது.
வணங்கப்பட வேண்டிய அளவுக்கு
மனம் தன்னையே விரும்பாவிட்டாலும், எப்போதுமே
மதிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இந்த மதிப்பின் ஒளிவட்டத்தைப் பெறவே மனம்
துடிக்கிறது. இது சமூகத்தை ஆட்டிவைக்கும் ஆணவம் அல்ல, சுயத்திற்கு
ஓர் அடையாளம். இந்த மிதிப்பு குறையும் போதோ அல்லது இதற்கு குந்தகம் விளையும் போதோ மனம்
பதைக்கிறது.
இந்தப் பதட்டத்தை மனவியல் anxiety என்று கூறுகிறது.
இம்மாதிரி பதட்டம் இரு வகையில் உள்ளது. ஒன்று status anxiety
அதாவது ஒரு நிகழ்வைச் சார்ந்த பதட்டம், மற்றது trait
anxiety எனும் எல்லாவற்றிற்கும் பதட்டமாகவே இருக்கும் ஒரு குணம். இதில்
status anxiety என்பதில் உள்ள status என்பதை
Allain De Botton ஒரு சுவையான நூலாக்கியுள்ளார்.
இதுதான் ஒளிவட்டத்தைத் தக்க
வைத்துக்கொள்ளும் இயல்பான முனைப்பு. தன் நிலையிலிருந்து கீழிறங்காது சமூகத்தில் இயங்க
ஒவ்வொருவரும் அறிந்தோ அனிச்சையாகவோ எடுத்துக்கொள்ளும்
முயற்சி. இந்த ஒளிவட்டம் நிஜம். இது வரையப்படாது.
பாட்டன் நூலில் இதற்கான சமூகவியல்
காரணங்களும் இலக்கிய மேற்கோள்களும் நிறைய அலசப்பட்டிருக்கும். ஒளிவட்டம் என்று நான்
இதை எடுத்துக்கொள்வது, நம் ஒளிவட்டம்
நிஜமில்லை என்று நாம் உணரும்போது நமக்கே ஏற்படும் கூச்சமும்,
எல்லாருக்கும் தெரிந்து விடுமோ என்ற பதைப்பும் ஒரு பரபரப்பை உருவாக்கி நாம் செயல்திறனையும்
பாதிக்கும் என்ற நோக்கில். ஒளி பிரகாசம் மட்டுமல்ல, இருளையும்
உள்ளடக்கியது.
யதேச்சையாகத்தான் இந்த
ஆசிரியரின் புத்தகம் ஒன்றைப்படித்தேன். யதேச்சையான நிகழ்வினால் நலம் விளைந்தால்
அதற்கு serendipity என்று ஒரு வார்த்தை சொல்லப்படும்.
இது அப்படித்தான். அந்த முதல் நூலைப் படித்துவிட்டு அவரின் பிற நூல்களைத்
தேடியபோது consolations of philosophy என்ற புத்தகத்தை வாங்க
இணைய வழியில் முயன்றபோது அந்தக் கடை தவறுதலாக அதே தலைப்புள்ள இன்னொரு நூலை அனுப்ப, Boethius என்பவரின் எழுத்தும் அறிமுகமாகியது. இந்த நூலும் படிக்க எளிதாகவும் அதே நேரம்
ஆழமானதாகவும் இருக்கும். தொடர்ந்து இவரது எல்லா நூல்களையும் படிக்க, கடைசியாகப் படித்த Architecture of Happiness ரொம்பச்
சுமார். அதிர்ஷ்டவசமாக இவரது எழுத்தின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது என்று
சொல்லும் போதே போத்யஸ் சொன்னது நினைவுக்கு வருகிறது: அதிர்ஷ்டம் என்பது ஒரு
பரத்தை. எளிதில் எதிர்பாராமல் வந்துவிடும், ஆனால் தக்க
வைத்துக்கொள்வது கடினம். சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்வது
போலவே சாதிக்க தகுதிகளைடிஎச் தக்க வைத்துக் கொள்ளவும் வேண்டும், வளர்த்துக் கொள்ளவும் வேண்டும் என்ற அர்த்தத்தில் இதைப் புரிந்து கொண்டேன்.
நன்னூலாசிரியர்களை அறிமுகப்படுத்தும்
முயற்சியில் இப்போது ஆலன் டி பாட்டன் பற்றி இங்கே எழுதியிருக்கிறேன்.