Monday, January 5, 2015

ஏ.எல்.முதலியார், குமாரதேவன், நான்

A.L.Mudaliyar- இவரை லட்சுமணசாமி முதலியார் என்று தெரிந்ததை
விடவும் ஏ.எல்.முதலியார் என்றே பலரும் அறிவர். அவரைப்பற்றி எழுத நிறைய இருந்தாலும்..இது அவரைப்பற்றி அல்ல. இது அவரது படத்தைப் பற்றி, எனக்கும் அதற்கும் உள்ள தொடர்பு பற்றி.
1972, நான் முதன்முதலில் சென்னை மருத்துவக் கல்லூரியில் கால் வைத்த ஆண்டு. எங்கள் ‘சீனியர்கள்”  எங்களுக்கு வரவேற்பு கொடுத்த இடம் தான் கல்லூரியின் பரீட்சை அரங்கு, 
அத்துடன் கல்லூரியின் பல விழாக்களும் அங்கே தான் அப்போது நிகழும்.அந்த மேடையில் நான் நிறைய பேசியிருக்கிறேன், கண்ணதாசனுக்குக் கூட அந்த மேடையில்தான் மாலை சூட்டியிருக்கிறேண்..அந்த மேடைக்குப் பின்னணி ஓவியம் வரைந்திருக்கிறேன்... 

அங்கே தேர்வுகளில் வெற்றிகளையும் தோல்விகளையும் பார்த்திருக்கிறேன்...கடைசியாக 2010ல் புதிதாய்ச் சேர்ந்த மாணவர்களுக்கு உரையாற்றியிருக்கிறேன்.
கல்லூரியின் முதலாண்டு பரீட்சையின் முடிவில், அதிசயமாய் என் அப்பா, ”எக்ஸாம் எப்படி பண்ணினே?” என்று கேட்டார், “ஓகே” என்று சொன்னபின், “ஏன் கேக்கிறே?” என்றேண்..”அங்கே ஒரு படம் இருக்குமே பார்த்தியா?” என்றார். பார்த்ததாய் நினைவில்லை.
அப்புறம் மெதுவாய்ச் சொன்னார், “ அது நான் வரைஞ்ச பெய்ண்டிங்..”
என் அப்பா ஒவியர் என்று தெரியும்..அவர் சென்னை கவின்கலைக் கல்லூரியின் ராய்சௌத்ரியின் காலத்து மாணவர். நான் விவரம் புரிந்து அவர் வரைவதை கவனிக்க ஆரம்பிக்கும் காலத்தில், அவர் சில பாடநூல்களுக்குப் படம் வரைந்து கொண்டிருந்தார். தவிரவும் அரசு மகப்பேறு மற்றும் அரசு கண் மருத்துவமனைகளில் ஓவியராகப் பணி புரிந்து வந்தார்.
கண் மருத்துவமனையில் அவரது காலத்தில், கண்ணுக்குள் அவரே ஸ்லிட்லாம்ப் வழியாகவும், ஆஃப்தல்மாஸ்கோப் வழியாகவும் பார்த்து வரைய வேண்டியிருந்தது..அப்படி ஒரு கண் பழுதான பெண்ணைக் கண்வழி பார்த்து, காதலித்து, கலப்பு மணமும் செய்துதான் என்னையும் ஈன்றார்.
அவர் வரைந்த ஓவியம் இது. அவர் சொன்ன பின் பலமுறை அதைச் சென்று பார்த்து, அதிலுள்ள குறை நிறை பற்றி அவரிடம் பேசியிருக்கிறேன். பலமுறை அங்கே காமெராவுடன் நானும் என் நண்பர்களும் இருந்திருந்தாலும், அந்தப் படத்தைப் படமெடுத்ததில்லை.
நேற்று என்னை உருவாக்கிய சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில், பழைய மாணவர் சந்திப்பு நடந்தது. இதுதான் அந்த இடத்தில் நடக்கும் எங்களது கடைசி சந்திப்பு. இனி அந்த இடம் கல்லூரியாய் இல்லாமல், கட்டிட மாற்றங்களுக்குள்ளாகப் போகிறது.  அதனால் அங்கே அந்த  exam hall சென்று கடைசியாய் அந்தப் படத்தைப் பார்த்தேன்..அதைப் படம் பிடித்தேன்.


அங்கிருந்த attendar இடம் என்னையும் படத்துடன் படம் எடுத்துத்தரச்சொன்னேன்.. நான் படத்துடன் எடுத்துக்கொண்ட படம் சரியாக வரவில்லை. Perhaps i did not deserve to be recorded alongside. 



காலம் தாழ்ந்து செய்யப்படும் எந்த அங்கீகாரமும் சரியாக இருக்காது என்று மனத்துள் கனக்கிறது.


2 comments:

நம்பள்கி said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! எனக்கும் தான்...!

நம்பள்கி said...

[[அதனால் அங்கே அந்த exam hall சென்று கடைசியாய் அந்தப் படத்தைப் பார்த்தேன்..அதைப் படம் பிடித்தேன்.]]

இது எந்த எக்ஸாம் ஹால்; இது கல்லூரியில் எங்குள்ளது? (இரண்டாவுது படம்); நானும் 1980 -வரை அங்கு தான் இருந்தேன்! இந்த இடம் (exact location) தெரியவில்லையே?

Post a Comment