Wednesday, March 17, 2010

ஸரஸ்வதீ மீண்டும் நமஸ்துப்யம்.


எனக்கு முதன்முதலாய் சொல்லிக்கொடுக்கப்பட்ட ஸ்லோகம், ஸரஸ்வதி நம்ஸ்துப்யம் என்று ஆரம்பிக்கும். ஸித்திர்பவது மேஸதா, என்று எந்த வேளையில் அன்றைய மழலைக் குரல் வேண்டியதோ, இன்றும் அருகிருக்கிறாள்.

அறியாத வயதில் அறிவு தா என்று வேண்ட வைத்த தெய்வமாகவும், பின் அறிவால் தேட முற்பட்ட தத்துவமாகவும், இன்று அறிவே தெய்வம் எனும் உணர்தலாகவும். ஒரு கட்டத்தில் அவளை அம்மா என்றே பார்த்தேன், பின்னர் அவளே என் காதலி, இன்று அவள் என் சகல பயணத்திற்கும் ஒரு சகி.
தெரியாத விஷயங்களை நான் பேசுவதில்லை, கேட்டுக் கொள்வேன். ஸரஸ்வதி பற்றிப் பேசுகிறேன். நெருக்கமாய்த் தெரியும் என்பதாலும், முழுமையாய் உணர்ந்ததாலும்.
காதலையும் காமமாக மட்டுமே உணர்பவர்களுக்கு நிர்வாணம் ஆபாசம்தான், என்று எனக்குப் புரிய வைத்ததும் சரஸ்வதிதான். என் ஸரஸ்வதி நிர்வாணமாகவும் இருப்பாள், அன்றைய கேரளா நாகரீக அடையாளமாக ஒரு புடவையும் உடுத்தி இருப்பாள், பெரியாரின் புத்தகமாகவும் தெரிவாள். எல்லாவற்றிலும் தெரியும் அவளை எவனோ வரைந்த படத்தின் அச்சிட்டப் பிரதியில் சட்டம் போட்டுக் கண்ணாடியில் நான் அடைக்க முடியாது. மூச்சு முட்டுபவர்களுக்குத்தான் ஆக்ஸிஜன் தனியாகக் கொடுக்க வேண்டும், இயல்பாய் உயிருடன் இருப்பவர்களுக்கு அல்ல.
பேச்சியம்மன் என்று அழைக்கப்படும் கிராம தேவதையும் அவள்தான், வாக் என்று ரிக்வேதம் கூறுவதும் அவளைத் தான். வேதங்களைப் படிக்காமலேயே அதன் மரபைத் தங்களுடையதாகச் சொல்லிக்கொள்பவர்களை விட, பேச்சியம்மனைக் கும்பிடும் பாமரர்களுக்கு பக்தி அதிகம். பேச்சி மட்டுமல்ல, முனியையும் மாரியையும் கும்பிடும் அவர்கள், தங்கள் சாமியை எவனாவது அவமானப்படுத்தினான் என்று நினைக்க மாட்டார்கள்.  அவர்கள் கும்பிடும் சாமி எந்த மனிதனாலும் அவமானப் படுத்தப்பட முடியாத அளவுக்கு வீர்யமானது. நம்மையே பார்த்துக் கொள்ளும் சாமி தன்னை இன்னும் சரியாகப் பார்த்துக் கொள்ளும் எனும் அவர்களது நம்பிக்கை, ஒரு முழுமையான சரணடைந்த பக்தி.
பக்தி காதல் மட்டுமல்ல முழுமையான ஓர் அர்ப்பணிப்பு. கணினி தட்டும், அதில் மேலோட்டமாய்ப் படிக்கும் மனிதர்களை விடவும் அவர்களது பக்தி இன்னும் நெருக்கமானது. அவர்களையும் கவரத்தான் கடவுள் இல்லை என்ற கோஷம், ஒருவனே தேவன் என்று மாறியது. இதெல்லாம் சரித்திரம், வலைப்பதிவு எழுத எதற்கு மெனக்கேட்டு இதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று என்னால் மேம்போக்காக மேட்டிமைத்தனத்தோடு இருக்க முடியாததால் இதை எழுதுகிறேன். யாராவது இனியாவது தெரிந்து கொள்ளட்டுமே என்று. 
நம்பிக்கையோடு அல்ல, நப்பாசையோடு.
மீண்டும் சரஸ்வதிக்கு வருகிறேன், இப்படி ஒன்றை எழுத ஆரம்பித்து வேறெங்கோ போவதும் அவளால்தான் என்று ஹிண்டு மதம் சொல்கிறது! அதனால்தான் அவள் சித்சக்தி!

ஸரஸ்வதி எப்படி இருந்தாலும் எனக்குப் பிடிக்கும். அவளது உருவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது, கங்கைகொண்ட சோழபுரத்தில் இருக்கும் ஞானசரஸ்வதி சிற்பம். . இவளைத்தான் பிரம்மவித்யாம்பிகை என்று திருவெண்காட்டில் காட்டுகிறார்கள். கூத்தனூர் கோவிலில் அவள் முகம் கொஞ்சம் மொக்கையாக இருக்கும்.

இதைவிட அழகு ஹோய்ஸாலா நர்த்தன ஸரஸ்வதி. நீல தாரா என்பதும், க்வாஞின் என்பது அவளது உருவம்தானாம். இவையெல்லாமுமே கதை கேட்டு கலைஞர்கள் வடித்த உருவங்கள். சோழ சாம்ராஜ்யத்தில் யவனர்கள் தெருவில் திரிந்தார்கள் என்றால், அன்றைய மங்கையர் திறந்த மார்போடு இருந்திருக்க முடியாது (இன்றைய கலாச்சாரக் காவலர்களும் இதையாவது ஒப்புக்கொள்ள வேண்டும்). அதனால் கடவுளை நீங்கள் தினம் பார்க்கும் மங்கையரைப்போல் உடுத்திக் காட்ட முடியாது என்று தான் சோழ காலச் சிற்பிகள், தெய்வங்களைத் திறந்த மார்போடு படைத்தார்கள். (கச்சை கட்டியதெல்லாம் பின்னர் கும்பகோணத்து நவீன சிற்பிகள் கைங்கரியம்).
இதனால்தான் என் முந்தைய ஒரு பதிவில் சரஸ்வதிக்கு ஸிலீவ்லெஸ் போட்டு வரையலாமா என்பது தவறாகிறது. (எழுதாமல் இருக்க முடியவில்லை: ஏன் இன்னும் 'கலாச்சாரம்' சரஸ்வதியை புடவையிலிருந்து ஸிலீவ்லெஸ் டாப்ஸ் வர விடாமல் தடுக்கிறது? இன்னும் எல்லாரும் அப்படி மாறவில்லை என்பதால். எல்லாரும் டாப்லெஸ் ஆகும்போது அவள் ஸிலீவ்லெஸ் ஆகலாம் போலிருக்கிறது. (நாம்தான் கலாச்சாரம் என்பதை நெறி என்பதை விட பழமை என்று நினைத்துக் கொள்பவர்களாயிற்றே!)
பிரம்மாவும் ஸரஸ்வதியும்

மேலே உள்ள படத்தை நான் பார்க்கும்போது அது அறிவும் படைப்பும் இணையும் அற்புத நிலையாகத் தோன்றுகிறது. ஒன்றில்லாமல் ஒன்று இருந்தால் இந்தச் சிற்பம் இருக்கும் கால அளவு கூட நிலைக்காது,  படைப்புக்கு அறிவு தேவையில்லை, இருந்தால் இன்னும் பிரகாசமாகும்.
ரஞ்சி-நித்தி போல் தெரிந்தால் அபச்சாரம். ஜாக்ரதை!
ஸரஸ்வதி, என்னை ஏன் வீணர்களுக்கு விளங்க வைக்க முயல்கிறாய்?அறிவின் அற்புதம் பற்றி எழுதத் தவறிவிட்டேன்.

மஹாலக்ஷ்மி செல்வம் தருவாளாம். அவளை யாரும் உதாசீனப் படுத்த முடியாதாம். அவள் எவ்வளவு முக்கியமானாலும், வைணவ ஸம்ப்ரதாயத்தில், அவளுக்கு இரண்டாம் இடம்தான். எனக்குத்தெரிந்து பத்மாவதி தாயாரைத் தவிர அவளுக்கென்று பிரத்யேகக் கோவில் கிடையாது. சென்னை பெசன்ட் நகர் கோவிலைப் பற்றிக் கூவ வேண்டாம் அது இந்தக்காலம், நீங்கள் ஒத்துக்கொள்ளாத காலம்.
 

பராசக்தி பலம் பொருந்தியவளாதலால், அவளுக்கு அவளது நாயகனுடன் சரிபங்கு. வீரமாதா மட்டுமல்ல காருண்யா. என்பதனால் அவளுக்கு அவ்வப்போது தனிக் கோவில். நாயகனோடு இருக்கும் சில கோவில்களிலும் அவளுக்கு முக்கியத்துவம் (மதுரை போல). அவளுக்கென்றே பிரத்யேக வழிபாட்டு முறையும் ஸ்தலங்களும் உண்டு( காஞ்சி போல).
 
 
இந்த மூன்று நாயகர்களில் குறைந்த மதிப்பீடு வாங்குபவன், சரஸ்வதியின் நாயகன் பிரம்மன்! அவனுக்குத் தனியாக ஒரே ஒரு கோவில் தான் இந்த ஹிந்து சாம்ராஜ்யத்தில்! ஆனால் அவனை வணங்காதவர்களும் அவளை வணங்குவார்கள். இன்று குழந்தையை வைத்திருப்பவர்களும்,  என் அனுபவத்தில் கண்ட அறிவாளிகளைப் போல், நாளை அவளை வேண்டி நிற்பார்கள்.

இதிலிருந்து எனக்குப் புரிவது, செல்வம் ஒரு நாயகனை செல்வாக்கால் வாங்கலாம், வீரம் ஒரு நாயகனை மிரட்டியாவது சம உரிமை வாங்கலாம், ஆனால் கல்விதான் நாயகியாகத் தனித்தன்மையோடு விளங்க உதவும். கல்வி, ஆழ்ந்து அறிவது, அலட்டல் இல்லாதது, தவறுகளை ஒப்புக் கொள்வது.
மீண்டும் ஸரஸ்வதீ, நமஸ்துப்யம். உன்னிடம் வரம் தா  என்று இன்னுமா கேட்பது? இதைப் படிக்கும் ஹிண்டூஸிடம் கருணை கொண்டு புரிய வை.

48 comments:

  1. //காதலையும் காமமாக மட்டுமே உணர்பவர்களுக்கு நிர்வாணம் ஆபாசம்தான், என்று எனக்குப் புரிய வைத்ததும் சரஸ்வதிதான். என் ஸரஸ்வதி நிர்வாணமாகவும் இருப்பாள், அன்றைய கேரளா நாகரீக அடையாளமாக ஒரு புடவையும் உடுத்தி இருப்பாள், பெரியாரின் புத்தகமாகவும் தெரிவாள். எல்லாவற்றிலும் தெரியும் அவளை எவனோ வரைந்த படத்தின் அச்சிட்டப் பிரதியில் சட்டம் போட்டுக் கண்ணாடியில் நான் அடைக்க முடியாது. மூச்சு முட்டுபவர்களுக்குத்தான் ஆக்ஸிஜன் தனியாகக் கொடுக்க வேண்டும், இயல்பாய் உயிருடன் இருப்பவர்களுக்கு அல்ல.//
    Wow!

    பேச்சியம்மன் என்று அழைக்கப்படும் கிராம தேவதையும் அவள்தான், வாக் என்று ரிக்வேதம் கூறுவதும் அவளைத் தான். வேதங்களைப் படிக்காமலேயே அதன் மரபைத் தங்களுடையதாகச் சொல்லிக்கொள்பவர்களை விட, பேச்சியம்மனைக் கும்பிடும் பாமரர்களுக்கு பக்தி அதிகம். பேச்சி மட்டுமல்ல, முனியையும் மாரியையும் கும்பிடும் அவர்கள், தங்கள் சாமியை எவனாவது அவமானப்படுத்தினான் என்று நினைக்க மாட்டார்கள். அவர்கள் கும்பிடும் சாமி எந்த மனிதனாலும் அவமானப் படுத்தப்பட முடியாத அளவுக்கு வீர்யமானது. நம்மையே பார்த்துக் கொள்ளும் சாமி தன்னை இன்னும் சரியாகப் பார்த்துக் கொள்ளும் எனும் அவர்களது நம்பிக்கை, ஒரு முழுமையான சரணடைந்த பக்தி. //
    Well said.

    Thanks for the beautiful pictures too.

    ReplyDelete
  2. தென்றல்தான் இனிமையாக இருக்கிறது..சூழல்களில் புயல்களும் வரத்தான் செய்கிறது.

    ReplyDelete
  3. காற்றில் சுடர் சற்று நடனமாடிபின் கடைசியில் நீண்டு எரிந்தது. அருமை :)

    //பேச்சியம்மன் என்று அழைக்கப்படும்//
    //இதிலிருந்து எனக்குப் புரிவது, செல்வம் ஒரு//
    இரு பத்தியும் மிகவும் பிடித்தது.

    ReplyDelete
  4. "சிற்ப, ஓவிய வழிபாடுகள் ஆகியவை ஆன்மீகத்தில் நுழைவதற்கு பயன்படும் முதல் படிகள். இவற்றை கடந்து விட்டால் சிற்ப, ஓவிய வழிபாடுகள் தேவை இல்லை." இதை விவேகானந்தர் நூல்களில் படித்துள்ளேன்.

    கடவுள் எங்கும் உள்ளார். மிக நுண்ணிய பொருள்களுக்கு சக்தி மிக மிக அதிகம். இதை தான் விஞ்ஞானமும் சொல்கிறது. எடுத்துக்காட்டாக நானோ துகள்கள் மிக சக்தி வாய்ந்தவை. நானோ துகள்களை பிரித்துக்கொண்டே சென்றால் வெற்றிடம் அடையலாம். மேலும் நானோ துகள்களை பிரிக்க சக்தியும் அதிகம் தேவைப்படும், அதனால் கிடைக்கும் சக்தியும் அதிகம். அந்த வெற்றிட சக்தியை அளவிட முடியாது.வெற்றிடம் சேர்ந்து தான் கண்ணில் படும் பொருளாகிறது. கடவுள் வெற்றிடத்தில் உள்ளார்-வெற்றிடம் தான் கடவுள்-வெறுமை தான் கடவுள்.

    இந்தியர்கள் மன ஆராச்சி செய்ததில் வல்லவர்கள்.இந்தியர்கள் மன ஆராச்சி செய்து மனதில் வெற்றிடம் கண்டால் இறைவனை அடையலாம் என்றும் கூறியுள்ளார்கள். ஆனால் வெள்ளையனை போல் எதையும் டாகுமென்ட் செய்யாமல் விட்டு, ரகசிய மாக்கி நித்தி, பிரேம்,....போன்ற சாமியார்களிடம் தன் வாரிசுகளை அடிமையக்கிவிட்டர்கள்.

    ReplyDelete
  5. நுணுக்கமான பதிவு. மறுபடியும் வாசிக்கத்தூண்டுகிறது. பொதுவாகவே முதிர்ச்சியில்லாத சொற்பிரயோகம் செய்பவன் நான் என்பதால் இதனை வாசிக்க சற்று கூச்சமாகவும்..!!

    ReplyDelete
  6. அன்புள்ள ருத்ரன்,

    1. நீங்கள் 'உரையாடும்' மேரி (அவளது நித்திய கன்னித்தன்மையே மொழி பெயர்ப்புத் தவறினால் அவள் சுமக்கும் கட்டாயம்) குறித்த மெல்லிய நகைச்சுவை, உங்களைப் போல மெத்த படித்த வயது முதிர்ந்த உளவியலாளருக்கு உறுத்தல் ஏற்படுத்துகிறது. அப்போது ராஜா ரவிவர்மா காலெண்டர் ஆர்ட் சரஸ்வதியையே பார்த்து வளந்த ஹிந்துவுக்கு ஹுசைனின் ஓவியம் என்ன விளைவை ஏற்படுத்தும்?

    2. ஆனால் அப்படி ஒவ்வொரு ஹிந்துவினிடமும் ஹுசைனின் கலையை கொண்டு சென்று ஹிந்துத்துவவாதிகள் அவருக்கு எதிராக வெறுப்பை கிளப்பவில்லை. அதே நேரத்தில் அவர் நிர்வாணத்தை ஒரு வெறுப்பின் வெளிப்பாடாக பிற இடங்களில் காட்டியிருப்பதை சுட்டிக்காட்டி அவருக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கிறார்கள். இங்கு பிரச்சனை நிர்வாணம் அல்ல. நிர்வாணத்தை இழிவுப்படுத்தும் ஒரு குறியீடாக ஹுசைன் உபயோகப்படுத்தியிருக்கிறாரா என்பதுதான். இதற்கான பதிலைத்தான் நீங்கள் கொடுத்திருக்க வேண்டும். மாறாக எவ்வித creativity இம் இல்லாமல் ஹுசைன் க்ளோனாக ஒரு படத்தை வரைந்து என்னையும் யாராவது கலைத்தியாகி ஆக்க மாட்டார்களா என வேண்டுகோள் விடுவது is funny and is not funny. (எல்லாரும் பாத்துக்குங்க நானும் ரவுடிதான்ங்கிற மனச்சிக்கல் உங்களுக்கு இருக்குதோன்னு தோணுது.)

    3.இதுவரை எத்தனை இடங்களில் ஹுசைன் அவர் தாக்கப்பட்டார்? அவரது ஓவியங்களில் எத்தனை அழிக்கப்பட்டன?

    4. பொதுவாகவே ஹுசைனுக்கு ஜனநாயகத்தின் மீது ஒரு ஆழ்ந்த வெறுப்பு இருக்கிறது. நெருக்கடி நிலையை உருவாக்கி இந்தியாவை உண்மையிலேயே எதேச்சதிகாரத்துக்கு அருகில் இந்திரா கொண்டு சென்ற பின்னர் மொரார்ஜியை குரங்காகவும் இந்திராவை துதி செய்தும் ஓவியங்கள் தீட்டியவர் அவர். ஹுசைன் ஹிந்து மதத்தையும் இதே தன்மையுடன் அணுகிறார் என்றே அவரது ஓவியங்களைக் காணும் போது தோன்றுகிறது. ஹுசைனின் ஓவியங்களின் ஊற்றுக்கண் அவர் ஆழ்மனதில் வெறுக்கும் ஹிந்து தேவ தேவியராக அமைந்து தொலைக்கிறார்கள். குறிப்பாக பெண் தெய்வங்கள். அவர் சார்ந்த மதத்தில் மிகவும் மோசமான தீமையாக பெண் தெய்வங்களே கருதப்பட்டார்கள். அவர் சார்ந்த மதத்தில் இறைதூதராக நம்பப்படும் நபர் அவர்கள் புனிதமாக கருதும் நகரை வென்ற போது கறுநிற பெண் தெய்வம் அழுதபடி ஓடி அழிந்ததாக நம்பிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்த பெண் தெய்வ எதிர்ப்பு இறையியலின், இறையியல் சார்ந்த வெறுப்பின், கலைவெளிப்பாடாக ஹுசைனின் ஓவியங்கள் தொடர்ந்து ஹிந்துக்களின் பெண் தெய்வங்களை காட்டுவதை ஒரு ஹிந்து கண்டால் அதனால் மனம் வெதும்பி வழக்கு தொடர்ந்தால் அதில் என்ன தவறு இருக்க முடியும்? நினைவில் கொள்ளுங்கள் இந்தியாவில் இறை நிந்தனை சட்டங்கள் எதுவும் இல்லை. ஆனால் ஹுசைன் "அடைக்கலம்" அடைந்த நாட்டின் நிலை என்ன? அங்கு இஸ்லாமியன் இஸ்லாமைத் துறந்தால் சட்டப்படி மரணத்தண்டனை. தனியார் பத்திரிகை என்றாலும் அரச குடும்பத்தினரும், அரசியல்வாதிகளும் சொந்தமாக நடத்தும் அல்-வதன் இதழோ யூத வெறுப்புச் சித்திரங்களை தீட்டுவதை ஒரு மதக்கடமையாகவே நிறைவேற்றி வருகிறது. இந்தியாவில் வழக்கைச் சந்திக்காமல் கத்தாரில் குடியுரிமை வாங்கியதில் ஹுசைன் சொல்லும் செய்தி இதுதான்: ஜனநாயகத்தில், ஜனநாயகமான ஆன்மிக மரபில் எனக்கு நம்பிக்கை இல்லை.

    சிந்தியுங்கள்.

    அன்புடன்

    அரவிந்தன் நீலகண்டன்

    ReplyDelete
  7. கலக்கல் நண்பரே !

    எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !

    ReplyDelete
  8. //அறியாத வயதில் அறிவு தா என்று வேண்ட வைத்த தெய்வமாகவும், பின் அறிவால் தேட முற்பட்ட தத்துவமாகவும், இன்று அறிவே தெய்வம் எனும் உணர்தலாகவும். ஒரு கட்டத்தில் அவளை அம்மா என்றே பார்த்தேன், பின்னர் அவளே என் காதலி, இன்று அவள் என் சகல பயணத்திற்கும் ஒரு சகி.//

    :-) இந்த பரிணமிப்பு ஒருவருக்கு நிகழாத பட்சத்தில்... அடுத்தக் கட்டமான இது....

    //...காதலையும் காமமாக மட்டுமே உணர்பவர்களுக்கு நிர்வாணம் ஆபாசம்தான், ...//

    சார்ந்த வித்தியாசப் புரிதல் நிகழ்ந்திருக்க சாத்தியமில்லை என்று அடித்தே கூறலாம்.. தன்னை இழப்பதின் (அர்ப்பணித்தல்) மூலமே காதலுக்கும் - காமத்திற்குமான அந்த மெல்லிய நூலிழை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் விசயம் எப்படி கடளவு வித்தியாசப் படுகிறது என்பதனை உணர முடியும்...

    //...நம்மையே பார்த்துக் கொள்ளும் சாமி தன்னை இன்னும் சரியாகப் பார்த்துக் கொள்ளும் எனும் அவர்களது நம்பிக்கை, ஒரு முழுமையான சரணடைந்த பக்தி...//

    இதே லைனில் உங்களின் பதிவுகளைத் தொட்டு நானும் அந்த 'ஸ்டான்ட் பாயிண்டில்' ஒரு சம்பாஷணை இணையத்தில் நிகழ்த்த நேர்ந்தது.

    பதிவிற்கும் அறிவூட்டலுக்கும் நன்றி, ருத்ரன்!

    ReplyDelete
  9. பிரம்மனும், ஸரஸ்வதியும் சிலையில் ரெண்டு பேருக்கும் பெரிய தொப்புள் இருக்கே, அப்ப அவுங்க அம்மா, அப்பா யாரு!?


    இன்னொரு சந்தேகம் சரஸ்வதி நாக்குல தான் இருப்பாங்கலாமே உண்மையா!?

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. அர்விந்த் நீலகண்டனுக்கு,

    அவன்மீது தொடரப்பட்ட வழக்கு குறித்து நான் வருத்தப்படவில்லை, அவனை உள்ளே விட மாட்டேன் என்று விடுத்த மிரட்டல் மீது தான் கோபம், அதை சமாளிக்கத் துப்பில்லாத அரசின் மீதுதான் வெறுப்பு. மேரி பற்றி உருகியதால் நான் வரைந்தவன் கையை உடைக்க வேண்டும் என்று கூறவில்லை. ரவுடி விஷயத்தில் ஒரு சின்ன விளக்கம். 'நானும்--' என்று காட்ட முயலவில்லை, 'நான்--' என்று எச்சரிக்கவே அது. சரஸ்வதிக்கு வக்காலத்து வாங்கும் ஜன்மங்கள் திரும்பத் திரும்ப, அவன் என் மேரியை, அல்லாவை வரையவில்லை என்று கேட்பது அபத்தம். கீழே மேரி என்று பெயர் போடாவிட்டால் நிர்வாணப் பெண் யாரென்று தெரியாது. அளவை அப்படிக்கூட வரைய முடியாது அவன் உருவமில்லாதவன். திரிசூலம், சுவாதி, தாமரை என்று ஏதாவது ஒன்றை வைத்து வரைவதுதான் ஓவியச் சௌகரியம்.

    உங்களுக்கு வேண்டுமென்றால் சொல்லுங்கள் அந்தப் படத்தை ஒரு பதிவுக்கான அவசரம் போல் இல்லாமல் அழகாக வரைந்து தருகிறேன்.
    இப்போதாவது
    முகவரியுடன் விவாதிக்க வந்ததற்கு வாழ்த்துக்கள். வீரம் வந்து விட்டது, இனி விவேகம் வரும்.

    தட்டச்சுப் பிழைகளுக்காக மு இட்ட பின்னூட்டத்தை அழித்தேன்.

    ReplyDelete
  12. அன்பின் ருத்ரன்

    பேச்சியம்மன் போன்ற கிராம தேவதைகளை வணங்குபவர்கள் மட்டுமல்ல மற்றும் அதிகமானோர் - சாமியப் பாத்துக்க சாமிக்குத் தெரியும் - நாம ஒண்ணும் கோபப்ப்ட வேண்டாம் என்ற கொள்கையைஅ உடையவர்கள் தான். நல்லதொரு இடுகை - நல்வாழ்த்துகள் ருத்ரன்

    ReplyDelete
  13. அன்புள்ள ருத்ரன்,
    //முகவரியுடன் விவாதிக்க வந்ததற்கு வாழ்த்துக்கள். வீரம் வந்து விட்டது, இனி விவேகம் வரும்.//

    நான் என் பெயரில் மட்டுமே உங்கள் பதிவிலும் எந்த எதிர் பதிவிலும் கமெண்ட்களை அளிக்கிறேன். இதற்கு முன்போ வெறெப்போதுமோ நான் வேறு பெயரிலோ பெயரிலியாகவோ உங்கள் பதிவுகளில் எவ்வித கமெண்டையும் அளித்ததில்லை. In fact, உங்கள் வலைப்பதிவுகளை படிப்பதை நிறுத்தியே நாட்கள் பலவாகிவிட்டன. துரதிர்ஷ்டவசமாக வேறெதையோ தேடி உங்கள் பதிவில் வந்து நின்றேன். பின்னர்தான் உங்கள் பதிவுகளை படிக்கலானேன். எனவே உங்கள் வீரம் விவேகம் இத்யாதி ஆசியுரைகள் எனக்கு தேவையில்லை.

    திரும்ப தேடிய போது இந்த பதிவு கண்ணில் பட்டது.
    // எங்கள் வீட்டுப் பெண்களின் நிர்வாணப் படங்களைப் பார்க்க விருப்பம் தெரிவித்தார்கள். இந்த மானங்கெட்ட ஜன்மங்களுக்குப் பதில் சொல்வதற்காக அப்படியொரு படம் வரைந்து வெளியிட பதிவெழுதும் நேரம் கூட ஆகாது. இன்னமும் அப்படி வேண்டுவோர் சரியான முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்புங்கள் தரவேண்டியதைத் தருகிறேன்.//
    ஓ இப்படி கேட்ட கோழைத்தனமான கும்பலில் என்னையும் சேர்த்திருக்கிறீர்கள் போலும். இல்லை ருத்ரன். எனக்கு அத்தகைய கோழைத்தனமோ அல்லது வக்கிரமோ இல்லை. அப்படி ஏதாவது ஏற்பட்டால் கட்டாயம் உங்களிடம் வருகிறேன். சிகிச்சைக்காக.

    //சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்து அசிங்கப்படுத்திவிட்டதாக ஹூஸைன் மீது இந்துத்வ வெறி எதிர்ப்பலை வீச அதை அடக்க தைரியமில்லாத அரசு மௌனம் சாதிக்கும் கேவலத்தைத் தான் எழுதினேன்.//
    //அவன்மீது தொடரப்பட்ட வழக்கு குறித்து நான் வருத்தப்படவில்லை, அவனை உள்ளே விட மாட்டேன் என்று விடுத்த மிரட்டல் மீது தான் கோபம், அதை சமாளிக்கத் துப்பில்லாத அரசின் மீதுதான் வெறுப்பு//

    அய்யா யார் மிரட்டினார்கள்? எந்த ஹிந்துத்துவ அமைப்பு மிரட்டியது? ஆர்.எஸ்.எஸ்? விஸ்வ ஹிந்து பரிஷத்? மார்ச் ஐந்து அன்று கூட விஸ்வ ஹிந்து பரிஷத் அறிக்கை "ஹுசைன் ஓடி ஒளிகிறார். இந்தியா வந்து சட்டத்தை எதிர்நோக்க வேண்டும்" என்றுதான் சொல்லியது. இந்நிலையில் கேள்வி ஹுசைன் இந்தியா வராதது சட்டத்துக்கு பயந்தா அவரது கையை உடைப்பார்கள் என அஞ்சியா என்பதாகிறது. இந்த சர்ச்சைகள் தொடங்கிய காலத்துக்கு பிறகும் பல்லாண்டுகள் ஹுசைன் இந்தியாவில்தான் இருந்தார். வரைந்தார். டிவிகளில் வரைந்தார். சினிமா படம் பண்ணினார். அதில் குரானை பயன்படுத்தி இஸ்லாமியர்கள் எச்சரிக்கை செய்ததும் மறுபேச்சில்லாமல் எடுத்தார்.அதை கேட்ட பத்திரிகையாளரிடம் "அது என்னிஷ்டம் உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ" என கடுப்பானார். ஆக, அவரது கைக்கு எவ்வித உடைத்தல் மிரட்டலும் இருக்கவில்லை. அல்லது அத்தகைய மிரட்டல்களை எவனாவது சொல்லியிருந்தாலும் அதனை அவர் பொருட்படுத்தவில்லை. அவர் மீது வழக்குகள் தொடரப்பட்ட பிறகுதான் அவர் லண்டன் பாரிஸ் என பறக்க ஆரம்பித்தார்.

    //அவன் என் மேரியை, அல்லாவை வரையவில்லை என்று கேட்பது அபத்தம். //
    அடுத்ததாக மேரியை நிர்வாணமாக வரை என நான் எந்த இடத்திலும் சொல்லவில்லை. நான் சொல்லியிருப்பது வேறு நீங்கள் அதை வழக்கம் போலவே ட்விஸ்ட் செய்கிறீர்கள். மேரியை ஒரு நகைச்சுவையுடன் விளம்பரம் விமர்சித்ததே உங்களுக்கு ஒரு சௌகரியமின்மையை ஏற்படுத்தும் போது, நிர்வாணத்தை ஒரு வெறுப்பைக் காட்டும் கலையுத்தியாக பயன்படுத்தும் ஒருவர் சரஸ்வதியை நிர்வாணமாக வரைவது சராசரி ஹிந்துவுக்கு எத்தகைய மனவுணர்வை ஏற்படுத்தும்? இதுதான் கேள்வி. இதற்கான பதிலைத் தராமல் அரசியல்வாதியின் சாமர்த்தியத்துடன் கேள்வியை திரித்திருக்கிறீர்கள். ஆனால் இன்னொன்றையும் சொல்கிறேன். மேரியை நீங்கள் நிச்சயமாக நிர்வாணமாக வரைய முடியாது. இத்தனைக்கும் மேரியின் கன்னித்தன்மை நான் சொன்னது போல மொழிப்பெயர்ப்பு தவறினால் அவள் மீது ஏற்றப்பட்ட புனைவு மட்டுமே. மேரியின் தொன்ம வேர்களோ பாலியல் வெறுப்பற்ற பண்டைய தாய் தெய்வங்களிலிருக்கின்றன.

    நீங்கள் வரைந்திருக்கும் ஓவியம் என்னை கவரவில்லை. உங்கள் பதிவைத் தேடிய போது உங்களின் சில ஓவியங்களில் இருந்த கிரியேட்டிவிட்டி நிச்சயமாக இதில் இல்லை. அவசரத் தீட்டலிலும் கோடுகளிலும் கூட கிரியேட்டிவிட்டி வெளிப்படும். ஆனால் இந்த ஓவியத்தில் நீங்கள் குருட்டுத்தனமாக ஹுசைனை ஜெராக்ஸ் செய்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  14. என் ஓவியம் குறித்த மதிப்பீட்டை நான் ஏற்கிறேன்.

    என் வாழ்த்துகள் தேவையில்லையா, சரி,திரும்ப எடுத்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  15. //என் வாழ்த்துகள் தேவையில்லையா, சரி,திரும்ப எடுத்துக் கொள்கிறேன்//

    That was more an insinuation than a wish. I have never used a pseudonym or anonymity in your blog.

    ReplyDelete
  16. துறப்பதே நிர்வாணம் ! ஆடைகளை என்று ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள்! ஆசைகளைத் துறப்பதும் நிர்வாணம் தான்! என்னைப் பொறுத்தவரை, விக்ரஹ ஆராதனை என்பது ஒரு படி..ஏணி அவ்வளவே! பரமாத்மாவுக்கு ஏது உருவம் ? ஏது நிறம்? புரிந்தவனுக்கு ஏணியும்,படியும் தேவையில்லை.எல்லாருமே, அடுத்த கட்டத்துக்குச் செல்லாமல், இங்கேயே உழன்று கொண்டு,ஆயிரத்தெட்டு பேதங்கள்! நமக்கு மட்டுமல்ல... நம் மால் உண்டாக்கிய தெய்வங்களுக்கும்!! ‘ஸால்யான்னமும்,மேஷா பூபமும்’ வெஜ் சாமிக்கு.. சுருட்டும், ஆடு வெட்டலும் நான் வெஜ் சாமிக்கு! இங்கு குருக்கள்..பட்டர்...அங்கு பூசாரி...பொருளாதாரப் பேதம் வேறு! ஏழைப் பிள்ளையார்..ராஜ கணபதி என்று !! அது சரி..கொசுவுக்கு கடவுள் யாராக இருக்க முடியும்? ஒரு பெரிய கொசுவா? அல்லது நம்மைப் போல் மனித உருக் கொண்ட தெய்வமா?

    ReplyDelete
  17. தொடர்வதர்க்காக

    ReplyDelete
  18. பதிவையும் பின்னூட்டங்களையும் படித்துவிட்டு நானும் பின்னூட்டம் போட வேண்டும் என ஏதேதோ தோன்றியது, ஒன்றே ஒன்று மட்டும் கேட்கிறேன் உங்கள் பார்வையில் “ஹிண்டு” மதம் என்பது என்ன, முடிந்தால் ஒரு பதிவு போடவும். என் பார்வையில் ”தென் கிழக்கு ஆசியாவின் பல்வேறு கலாச்சாரங்களின் கூட்டமைப்பு” அதை அன்னியர்கள் ஒருங்கினைத்து அழைத்தது”ஹிண்டு”. பல பக்கங்களில் விவாதிக்க வேண்டிய விஷயம். விரிவு அஞ்சி..........நன்றி

    ReplyDelete
  19. ராமமூர்த்தி, கொசுக்களுக்கு கடவுள் அழுக்குக் குட்டையில்தான் தெரியும்.
    வாழும் சூழலை வைத்துதான் தெய்வ வடிவம்.
    நான் நிர்ச்சலன பிரபஞ்ச வெளியாகப் பார்க்கிறேன், நீங்கள் கூவத்தில்! போலி தியாக மனப்பான்மையோடு என்னை அழுக்குப் படுத்திக் கொள்ள முடியாது.

    ReplyDelete
  20. இங்கு மெஜாரிட்டி தான் செல்லுபடியாகும்.எல்லாருமாகச் சேர்ந்து,ஒரு முட்டாள்தனத்தை தத்துவம் என்று சொன்னால் அதனை இந்த உலகம் வெகு சுலபமாக ஏற்றுக் கொண்டு விடும்!கொஞ்சம் வித்யாசமாக சிந்திக்க ஆரம்பித்தால், நிர்வாண தேசத்தில் (மறுபடியும் நிர்வாணம்!)ஆடை அணிந்தவர் போன்று இங்கு நாம் தனிமைப் பட்டு வ்டுவோம்!ஆகவே சென்சிடிவ் விஷயங்களை கண்டு கொள்ளாமல் செல்வதே உத்தமம்!!!

    ReplyDelete
  21. Anonymous has left a new comment on your post "ஸரஸ்வதீ மீண்டும் நமஸ்துப்யம்.":

    Dear Doctor,

    Just because you are a periyarist should you behave like a compulsive and arrogant son of a bitch?

    Publish this comment.

    Reject this comment.

    Moderate comments for this blog.


    Posted by Anonymous to ருத்ரனின் பார்வை at 17 March 2010 9:54 PM



    இதோ இன்னொரு முட்டாள் கோழை.
    நான் பெரியாரிஸ்ட் அல்ல என்பதை படித்தால் தெரியும். வெறி இருந்தால் படிக்க முடியாது. நாளையாவது நாய் வால் நிமிரட்டும்.

    ReplyDelete
  22. ’நிர்ச்சலன்’ என்றால் எதற்கும் சலனப்பட மாட்டீர்கள் என்று அர்த்தம் என்று நினைக்கிறேன்.பேதங்கள் கடந்தவர். பின் எதற்கு கூவம் என்றவுடன் முகம் சுளிக்கிறீர்கள்?

    ReplyDelete
  23. பேதங்களைக் கடந்து விடவில்லை, முயல்கிறேன். நான் என்ன jeyendran னா துறவி என்று சொல்லி எல்லாவற்றையும் துடைத்துப் போட்டுச் சிரிப்பதற்கு?

    ReplyDelete
  24. ருத்ரன் எதுவும் எதையும் அழுக்காக்கவோ களங்கம் ஏற்படுத்தவோ முடியாது ...


    நிஷ்-- களங்கமற்ற ஞானத்தை ..? எல்லா அறியாமையும் விலகட்டும்..

    ReplyDelete
  25. மாற்றுக் கருத்துக் காரர்கள் கூட மரியாதையுடன் விளிக்கும் போது,ருத்ரன் போன்ற ஒரு பண்பட்ட,பேதங்களைக் கடக்க முயற்சி செய்யும் ஒரு பிரபலமான மனிதரின் எண்ணங்களில் இருந்து இந்த மாதிரி வார்த்தைகள் விழுவது......
    நாம் பண்ணிய துரத்ருஷ்டம்!!பிறர் மனதை புண்படுத்த நாம் யார்? நமக்கு அந்த அதிகாரம் யார் கொடுத்தது??
    ஒரு CHEAP POPULARITY க்காக இந்த ப்ளாட்பாரத்தில் நான் எழுத வரவில்லை.என் எண்ணங்களின் தாக்கம் எப்படி இருக்கிறது என்கிற ஆசையினால் தான் வந்தேன்!மற்றபடி, மனம், வாக்கு, காயம் இவற்றினால் யார் மனத்தையும் புண் படுத்தக் கூடாது என்கிற ஜாக்ரதை உணர்வு எனக்கு உண்டு. ஏன் என்றால் என் எழுத்துக்களுக்கு நான் ஜவாப்தாரி !!

    ReplyDelete
  26. Dear Dr.Rudhran,

    I fully agree with Mr.Neelakantan's view. The question here is not on nudity but on Mr.Husain's motive behind his nude art.

    I am new to this blog and after my first visit to this blog, I thought that your views on various subjects and the reader's comment were intelectually stimulating and it would a good forum for objective discussions.

    But after going through your replies for some of the reader's comments make me think that you are a bit intolerent. Why ?

    ReplyDelete
  27. dear madhavan
    this is one of the comments i had got!
    can a tolerant answer suffice for such people.
    i cannot tolerate but i shall try to ignore.
    thank you.



    rom bala
    to dr.rudhran@gmail.com
    date Thu, Mar 18, 2010 at 09:01
    subject [ருத்ரனின் பார்வை] New comment on ஸரஸ்வதீ மீண்டும் நமஸ்துப்யம்..
    mailed-by blogger.bounces.google.com
    signed-by blogger.com

    hide details 09:01 (2 hours ago)

    bala has left a new comment on your post "ஸரஸ்வதீ மீண்டும் நமஸ்துப்யம்.":

    //அவர்கள் கும்பிடும் சாமி எந்த மனிதனாலும் அவமானப் படுத்தப்பட முடியாத அளவுக்கு வீர்யமானது. நம்மையே பார்த்துக் கொள்ளும் சாமி தன்னை இன்னும் சரியாகப் பார்த்துக் கொள்ளும் எனும் அவர்களது நம்பிக்கை, ஒரு முழுமையான சரணடைந்த பக்தி. //

    பெரிய தாடி டாக்டர் ருத்ரன் அய்யா,

    நீங்க ஏன் கொட்டை நறுக்கப்பட்ட (castrated) மாசேதுங்,ஸ்டாலின்,போல் போட்,ஜ்யோதி பாசு, போன்ற சூப்பர் கம்யூனிச சாமிகளின் நீர்வாணப் படங்களை வரைந்து தோழர்கள் வினவு கும்பலுக்கு பரிசாக கொடுக்கக் கூடாது?

    இந்த சாமிகளிடம் உண்மையான, சரணடைந்த பக்தி கொண்டுள்ள நக்சல் பசங்களுக்கு,கம்யூனிசத்தின் கொட்டை நறுக்கப்பட்டாலும் வீரியம் குறையவில்லை என்று உற்சாகம் பிறக்குமல்லவா?


    பாலா

    ReplyDelete
  28. ராமமூர்த்தி,
    கீழே உங்களை ஆதரிப்பது போல் ஒரு மறுமொழி!
    இப்படி மறைந்திருந்து சத்தம் போட்டுக்
    கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா?

    பார்த்துக் கொள்ளுங்கள்.





    date Thu, Mar 18, 2010 at 08:41
    subject [ருத்ரனின் பார்வை] New comment on ஸரஸ்வதீ மீண்டும் நமஸ்துப்யம்..
    mailed-by blogger.bounces.google.com
    signed-by blogger.com

    hide details 08:41 (2 hours ago)

    bala has left a new comment on your post "ஸரஸ்வதீ மீண்டும் நமஸ்துப்யம்.":

    //ஒரு பண்பட்ட,பேதங்களைக் கடக்க முயற்சி செய்யும் ஒரு பிரபலமான மனிதரின் எண்ணங்களில் இருந்து இந்//

    ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி அய்யா,

    என்னங்க இது.தகுதியற்ற மஞ்ச துண்டுக்கு,பேடிகளான கழக பிரியாணி குஞ்சுகள் பட்டம் கொடுத்து மகிழ்வது போல் முகஸ்துதி செய்திருக்கிறீர்கள்.அவங்களாவது பிரியாணிக்காக செய்யறாங்கன்னு வைத்துக் கொள்ளலாம்.நம்ம ருதரன் அய்யா மூஞ்சியில் தாடியைத் தவிர இழப்பதற்கு உருப்படியான சமாசாரம் ஒன்றுமில்லை.என்னவோ போங்க.

    பாலா

    ReplyDelete
  29. பாலா
    நிஜமாகவே என் பதில் வேண்டுமென்றால் மின்னஞ்சலுடனே என் மின்னஞ்சலுக்கு எழுது.
    உன் கேள்வியையும் என் பதிலையும் பதிக்கிறேன்.


    கண் தெரியாவிட்டால் உதவ-
    dr.rudhran@gmail.com

    ReplyDelete
  30. //முனியையும் மாரியையும் கும்பிடும் அவர்கள், தங்கள் சாமியை எவனாவது அவமானப்படுத்தினான் என்று நினைக்க மாட்டார்கள். அவர்கள் கும்பிடும் சாமி எந்த மனிதனாலும் அவமானப் படுத்தப்பட முடியாத அளவுக்கு வீர்யமானது. நம்மையே பார்த்துக் கொள்ளும் சாமி தன்னை இன்னும் சரியாகப் பார்த்துக் கொள்ளும் எனும் அவர்களது நம்பிக்கை,//

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மொந்தம் பழம் என்று ஒன்று உண்டு. எவ்வித ருசியும் இல்லாத ஒன்று. ஊரே பற்றி எரிந்தாலும் கண்டு கொள்ளாமல் இருக்கும் தன் காரியக்குட்டி அம்பிகளை மொந்தம் பழம் என்பார்கள். உலகமே பற்றி எரிந்தாலும் தன் வீட்டு கொல்லை பக்கம் தண்ணி வந்தால் சரி என்கிற மாதிரியான ஜன்மங்கள். அய்யா ருத்ரன் சிறிதே முற்றிப்போன மொந்தம் பழம். கன்னியாகுமரி மண்டைக்காடு முதல் திண்டுக்கல் பெருமாள் கோவில்பட்டி வரை நெய்யூர் காவு முதல் பிள்ளையார்புரம் வரை கிராம புற மக்கள் தங்கள் தாய் தெய்வங்களை அவமதிக்கும் மதமாற்ற ஆக்கிரமிப்பு எதிராக உயிரைக் கொடுத்து -நெசமாகவே உயிரைக் கொடுத்து- போராடிக்கொண்டிருக்கிறார்கள். திண்டுக்கல் பெருமாள் கோவில்பட்டியில் கிறிஸ்தவ வெறியன் மாரியம்மன் கோவில் வேப்பமரத்தை வெட்டிவிட்டான். தட்டிக் கேட்டவர்களை ஊரார் பார்க்க வெட்டிக் கொன்றிருக்கிறான். இப்பதிவையும் இதிலுள்ள வீடியோ பதிவுகளையும் பாருங்கள்: http://www.tamilhindu.com/2010/01/hindus-under-attack-in-dindigul-village/ அய்யா ருத்திரன் என்னவென்றால் "சாமி பாத்துக்கும்னு அவுங்கல்லாம் சும்மா இருப்பாங்க அதுதான் நம்பிக்கை" அப்படீன்னு கதை விடுறாரு. எனக்கென்னவோ பாரதி சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருது: "சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே..." குமரிமாவட்டத்தில் நாட்டார் வழக்காற்றியல் ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் அ.கா.பெருமாள். இவர் இந்துத்துவவாதியெல்லாம் இல்லை. இவர் தமது ஆராய்ச்சி அனுபவங்களை நூலாக எழுதியுள்ளார் (சுண்ணாம்பு கேட்ட இசக்கி - நாட்டுப்புற இயல் ஆய்வாளனின் கள அனுபவங்கள், United Writers, சென்னை) இதில் ஒரு அம்மன் பதிமத்தின் மேல் சார்த்தியிருந்த ஆடையை தொட்ட போது அங்கிருந்த கிராம மாடு மேய்க்கும் மூதாட்டி வெகுண்டெழுந்ததை பதிவு செய்திருக்கிறார். அந்த பாட்டிக்கு ருத்ரன் அய்யாவின் இலக்கண வரையறை தெரியவில்லை பாவம்.

    ReplyDelete
  31. மதிப்பிற்குரிய ஐயா ,
    நாட்டில் விவாதிக்க பல விஷயம் இருக்க உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள தெரிந்துகொள்ள பல விஷயம் இருக்க, கடவுளைபற்றிய நீண்ட சர்ச்சையும் விவாதங்களுக்கும் தள்ளி போடலாமே .

    ReplyDelete
  32. வணக்கம் Dr. முன்பே ஒரு பின்னூட்டத்தில் சொல்லியது போல உங்கள் மனவியல் புத்தகங்ககளை படித்தி என்னை பக்குவப்படுத்தி கொண்டிருப்பவன். சமீப காலாமக நீங்கள் அதிகமாக கோபப்படுவது போல தெரிகிறது. விஜய் தொலைக்காட்ச்சியில் ஒரு நீயா நானா எபிசோடில்(அமானுஷ்யம் சம்மந்தமாக என நினைவு) கலந்து கொண்டபோது கூட அதிகமாக கோபப்பட்டது(நியாயமானதானாலும்) போல தோன்றியது. தங்களின் ”அதோ அந்தப் பறவை...” நூலில் உள்ளது போன்ற நிலையில் உள்ளீர்களா? அல்லது நான் நீங்கள் இப்படித்தான்(புனித வடிவராக) இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேனா? தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

    ReplyDelete
  33. My Dear Sir,

    வீடு வரை உறவு,
    வீதி வரை மனைவி,
    காடு வரை பாலா,
    கடைசி வரை நீங்கள்!!!!
    -- கடைசி வரை நமக்குள் கருத்து மோதல்கள்!
    please take it in lighter and laughter sense.

    ReplyDelete
  34. //படைப்புக்கு அறிவு தேவையில்லை, இருந்தால் இன்னும் பிரகாசமாகும். // படைப்பின் காரணமே அறிவு, என்று ஏன் எடுத்துகொள்ளகூடாது டாக்டர்?

    ஹுசைன் மற்றும் நிர்வான ஓவியம் குறித்து ஏற்கனவே என் கருத்துக்களை கூறிவிட்டதால், நான் சமீபத்தில் படித்ததை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.
    “SOMETIMES WE MUST INTERFERE. WHEN HUMAN LIVES ARE ENDANGERED, WHEN HUMAN DIGNITY IS IN JEOPARDY, NATIONAL BORDERS AND SENSITIVITIES BECOME IRRELEVANT. WHENEVER MEN OR WOMEN ARE PERSECUTED BECAUSE OF THEIR RACE, RELIGION, OR POLITICAL VIEWS, THAT PLACE MUST - AT THAT MOMENT - BECOME THE CENTER OF THE UNIVERSE.” - Elie Wesel

    ReplyDelete
  35. மருத்துவர் அய்யா,

    ஹுசைன் விவகாரத்தில் தங்களுக்கே மனநோய் பட்டம் கட்ட பலபேர் கிளம்பியிருக்கிறார்கள்.

    I believe India has the biggest number of unreported cases of schizophrenia.

    இந்த பதிவிற்கு கிடைத்த அனானி பின்னூட்டங்கள் இதை உறுதிப்படுத்தும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  36. இந்து, சமணம், புத்தம் இம் முன்று சமயங்களும் நிர்வாணத்தை மெச்சுகின்றன. மனவிடுதலைதான் அது என்றாலும் ஒரு குறியீடாக அதை உடலில் ஏற்றிக் காண்பது/ காண்பிப்பது; அதை அப்படியே சிற்பத்தில்/ ஓவியத்தில் வடித்துக் காட்சிப் படுத்துவது பண்டுதொட்டே வழக்கிலும் இருந்து வருகிறது.

    கலை வடிவங்களை அர்த்தப்படுத்திப் பார்க்கிற மரபில்தான் நாமும் வந்தோம். ஆனால் இடையொரு காலகட்டத்தில், ‘அப்படி அர்த்தப்படுத்தக் கூடாது - அது வேலிபோடுதல்; உணர்ந்து உள்வாங்க வேண்டும் - அது வழி எல்லையற்றது,’ என்றொரு மாறுதல் வந்து சேர்ந்தது. அந்தக் காலகட்டத்தில் ஓவியராக வெளிப் பட்டவர் M. F. ஹுசைன்.

    ஹுசைன் தீற்றிய ‘துர்க்கா’ ஓவியத்தைப் பார்த்த போது, ‘வல்லமை’, ‘அச்சம்’, ‘எழுச்சி’, ‘பாய்ச்சல்’ இன்ன பல உணர்வுகள் தோன்றி எனக்குள் விரிந்தன. எனது இக் கூற்று உங்களுக்கு இட்டுக்கட்டலாகப் படலாம். போகட்டும். ஆனால் என் ஓவியப் பார்வை அப்படித்தான். அதற்கும் அப்பால் அதை அர்த்தப்படுத்த மாட்டேன். காதுக் கவசத்தை மாட்டிக்கொண்டு இசைக்குள் ஆழ்வதுபோல் ஓர் ஓவியத்தின் முன் அதன் உணர்வு பீடிக்க நின்று நிறைவேன்.

    கோடார்ட் இயக்கி உருவான ‘Breathless’ என்னும் ஒரு திரைப்படம் உண்டு. அதில் ஒரு விரட்டல் நடுவே, 1) சுடப்போகிற துமிக்கிக் குழல்வாய் திரைநடுக் காணும்; 2) சுடப்படப்போகிற ஆள் உருவம் அதே திரைநடுக் காணும். 3) சுட்டவன் வயல்வெளி இறங்கி ஓடிக்கொண்டு இருப்பான். அதாவது சுட்டது காட்டப் படவில்லை ஆனாலும் சுட்டாயிற்று. எப்படி? துமிக்கிக் குழல்வாயும் கொலைபடப் போகிற ஆளுருவமும் திரை-அலகின் ஒரே இடத்தில் அடுத்தடுத்துக் காட்டப் பட்டதால், அப்படிப் புரிந்து கொள்ளப்பட வேண்டுமாம்.

    அப்படி, ஹுசைன் தீற்றிய ‘துர்க்கா’ ஓவியத்தில், துர்க்காவின் அல்குல் (hip) பாகமும் புலியின் அல்குலும் ஒரு புள்ளியில் பொருந்திப் படுவதால், துர்க்காவும் புலியும் கலவி செய்வதாக ஹுசைன் தீட்டிவிட்டார் என்பதே குற்றச்சாட்டு. சினந்து கெடுவதா? சிரிப்பதா?

    நான் ஓவியத்தை அர்த்தப்படுத்திப் பார்க்கிறவன் இல்லை என்றாலும் தாயாப் பிள்ளையா இருக்கிறவர்கள் இப்படிப் பேசுகிறார்களே என்று அதை அர்த்தப்படுத்திக் காண முயன்றேன். ‘அவளுக்கு வாகனமான அதுவும் அவள் யோனிப் பிறப்பே’ என்றுதான் எனக்குப் பொருள்பட்டது. உடன்பிறப்புகளோடு ஒட்டி ஒழுக, இன்னும் கீழிறங்கி, கெட்ட வார்த்தையால் அர்த்தம் தேடலாம் என்றும் முயன்றேன். ‘எல்லா லிங்கமும் அப்பனவன் லிங்கமே’ என்றுதான் அப்போதும் பொருள்பட்டது. ஆனாலும் என் ரசனையை இம்மட்டுக் கீழிறக்கிய ஓட்டைப்புத்தி உடன்பிறப்புகளை என்ன செய்வது?

    ReplyDelete
  37. ஐன்ஸ்டீனும் அரசியல் தலைவர்களும் உள்ளதொரு ஹுசைனின் ஓவியம் உண்டு. அதில் ஹிட்லர், அம்மணமாக, ஒரு மண்டையோடும் கைக்கொண்டு ஊளையிடுவார். “ஹிட்லரை ஏன் அம்மணமாக வரைந்திருக்கிறீர்கள்?” என்று ஹுசைன் வினவப் பட்டாராம். “ஹிட்லரை எனக்குப் பிடிக்காது,” என்றாராம் ஹுசைன். வேறென்ன செய்ய? அந்த நால்வரில் அம்பலப் பட்டவர் அவர்தான் என்றால் ஏனை மூவர்தம் அடிப்பொடிகள் அடிக்க வருவார்களா மாட்டார்களா?

    ஹிட்லரை நிகர்த்தே சரஸ்வதி, துர்க்கா, பாரதமாதா என இவர்களும் அம்மணப் படுத்தப் பட்டிருப்பதால் இவர்களையும் ஹுசைனுக்குப் பிடிக்கவில்லை என்று தீர்ப்பு எழுதப் பட்டது. ஓவியங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அவரும் ஒடிப்போய்விட்டார்.

    அவர் எனக்கு எதிரி என்றே வைத்துக் கொள்வோம். என் அம்மையைத் துகிலுரிந்து அவர் துச்சாதனன் ஆனால், துகிலின்றி நிற்கிற என் அம்மையை நான் உதைப்பேனோ? என்றால் அந்த ஓவியங்கள் உண்மை அல்ல, உருவகப்படுத்தல்கள் என்று என் உடன்பிறப்புகளுக்குத் தெளிவாகவே தெரிந்திருக்கிறது அல்லவா?

    உருவகப்படுத்தல் என்பது கருத்தியல் சார்ந்தது. என்றிருக்க, நிர்வாணம் என்பது இந்துக்கள் இடையிலும் உள்ளதொரு கருத்துதானே? இருக்கட்டுமே, அதை இஸ்லாமிய அரபுப் பெயர் உள்ளவன் எப்படிக் கையாளலாம்? மகாவீரரின் நிர்வாணச் சிலைகளைச் செதுக்கிய சிற்பிகளுக்குச் சிப்பந்தியாகக் கூட ஓர் இந்துப் பெயர் உள்ளவன் இல்லாமலா இருந்திருப்பான்? ‘ஃபாத்திமாவை அவர் ஏன் நிர்வாணமாக வரையவில்லை?’ என்பது இன்னொரு கேள்வி. ‘ஃபாத்திமா தெய்வமும் இல்லை; அந்த அம்மையார் சார் தத்துவத்தில் நிர்வாணமும் இல்லை’ என்றால் இவர்களுக்குப் புரியாது என்பதில்லை. ஆனால் புரிவதை விளக்கி அரசியலுக்கு என்ன ஊதியம்? முனைப் பட்டால்தானே வாக்குகள் வகுபடும்? ஒருமுனைப் படுத்தப் பிரிவினை வேண்டுமே, அம்புட்டுத்தான்.

    ஹுசைன் இன்று கத்தார்க் குடிமகன் ஆகிவிட்டாராம். நல்லது. யாதும் ஊரே யாவரும் கேளிர். சென்ற இடமெல்லாம் சிறப்பு. நோபல் பரிசு வாங்கிய இன்னொரு நாட்டுக் குடிமகனை நம் பங்காளி என்கையில், இவர் கத்தார் நாட்டவர் ஆவதில் நமக்கென்ன இழுக்கு? மேலும் நம் மூளை முடுக்குக்குள் அடைபட ஒருங்காத ஓர் ஆள் என்னத்துக்கு நமக்கு?

    ReplyDelete
  38. Genesis 9:18-25
    9:18 Shem, Ham, and Japheth, the three sons of Noah, survived the Flood with their father. (Ham is the ancestor of the Canaanites.)
    9:19 From these three sons of Noah came all the people now scattered across the earth.
    9:20 After the Flood, Noah became a farmer and planted a vineyard.
    9:21 One day he became drunk on some wine he had made and lay naked in his tent.
    9:22 Ham, the father of Canaan, saw that his father was naked and went outside and told his brothers.
    9:23 Shem and Japheth took a robe, held it over their shoulders, walked backward into the tent, and covered their father's naked body. As they did this, they looked the other way so they wouldn't see him naked.
    9:24 When Noah woke up from his drunken stupor, he learned what Ham, his youngest son, had done.
    9:25 Then he cursed the descendants of Canaan, the son of Ham: "A curse on the Canaanites! May they be the lowest of servants to the descendants of Shem and Japheth."
    ஆபிரகாமிய மதங்களுக்கு, நிர்வாணமும் (குற்ற உணர்வின்மை) அதற்கு சாட்சியாக நிற்பதும் உகப்பானதில்லை. அப்படி அருளப்பட்ட நிலை ஒன்று இருந்தது; (ஆதன், அவ்வை) சாத்தான் சொற்கேட்டதால் மறுக்கப்பட்டு விட்டது.

    இயேசுவுக்கும் கூட அதுவே விதி. ஆனால், மூட்டப்படாத (தையல் இல்லாத) ஆடை அவருடையது (அதாவது ஒட்டுப் போடாத கொள்கைக்கு உரியவர்).

    திருச்செந்தூர்க் கோவில் மண்டபத்தில் கே.ஜே. யேசுதாஸ் கச்சேரி ஒன்று நிகழ்ந்தது. ஆலாபனையை நீட்டினார் நீட்டினார் பாருங்கள் நள்ளிரவுக்கும் மேல் நீட்டிவிட்டார். கூட்டம் களைந்து தேய்ந்துவிட்டது. அப்புறமாகத்தான் பாடத் தொடங்கினார். "அது ஏன் அப்படிச் செய்தீர்கள்?" என்று கேட்டதற்கு, "சங்கீத நாட்டமில்லாதவர்களை விரட்டியடிக்கத்தான்" என்றாரே பார்க்கலாம். அவர் 'ஞானம்' என்று சொல்லாமல் 'நாட்டம்' என்றது எனக்குப் பிடித்திருந்தது.

    எதற்கும் ஒரு domain இருக்கிறது. ஒரு தெலுங்கன் 'ரண்டி(வாங்க)' என்கிற சொல்லைப் பயன்படுத்தாமல் எப்படி உரையாடுவது. பரூச் நகரில் நாங்கள் தங்கி இருந்தபோது, தெலுங்கர் ஒரு டெக்னீசியன் வந்து தட்டிய கதவைத் திறந்த ஒரு பொறியாளர், "ரண்டி!" என்று வரவேற்றார். அந் நேரம் பார்த்துப் படியிறங்கிக் கொண்டிருந்த ஓர் அம்மா நின்று திரும்பி முறைத்தார். நான் உள்ளறைக்குள் ஓடி விழுந்து சிரி சிரி என்று சிரித்தேன். என்னாயிற்று என்று கேட்ட நண்பர்களுக்கு, 'ரண்டி' என்றால் குஜராத்தியில், 'விலைமகள்' என்று அர்த்தம் என்றேன்.
    சங்கடம் தவிர்க்க, தெலுங்கர்கள், குஜராத்தி, ஹிந்திப் பெண்கள் முன்னிலையில் ஆங்கிலத்தில் உரையாடிவிடலாம். ஆனால் ஒரு குஜராத்தி, தெலுங்கு தேசத்துக்குள் போய் நின்று, திரும்புகிற திக்கமெல்லாம் 'ரண்டி' , 'ரண்டி' என்று செவி புளிக்கிறதே என்று கூச்சல் போட்டால் என்ன செய்வது?
    அதைத்தான் நம் பண்பாட்டுக் காவலர்கள் செய்கிறார்கள். நம் ஞான விசாலத்தைக் குறுக்கிக்கொள்ள, நம் கலா ரசனையை இழித்துக்கொள்ள வற்புறுத்துகிறார்கள். எனக்கு வலிக்கிறது.

    ReplyDelete
  39. Good Stuff,
    i feel, i spend this minute only of the reading this content useful in this day

    ReplyDelete
  40. திருச்செந்தூர்க் கோவில் மண்டபத்தில் நாகரீக அடையாளமாக மன ஆராச்சி செய்ததில் முனியையும் மாரியையும் கும்பிடும் ஆன்மிக மரபில் எனக்கு இறைதூதராக நம்பப்படும் நபர் வெறுப்பை கிளப்பவில்லை.கேரளா புடவையும் பாமரர்களுக்கு மட்டுமல்ல

    ReplyDelete
  41. நல்ல இந்த பதிவிற்கு
    நல்வாழ்த்துக்கள் ருத்ரன்.

    பிரேம்வாசன்

    ReplyDelete
  42. டாக்டர். நல்ல பதிவு. நானும்கூட காளி பக்தனாக இருந்தவன் என்றமுறையில் பலவற்றை இப்பதிவு நினைவுட்டுவதாக உள்ளது. எங்களுர் காளியாட்டம் மிகச்சிறப்பானது என்பதுடன், சுந்தரகாளி என்கிற அந்த அழகு (சாந்தம்) அற்புதமானது. நானும் சிறுவயதில் காளியாட்டம், சிவன்கோவில் என்று வளர்ந்த காலங்களை நினைவுட்டுகிறது. என்னால் இன்று அந்த நாட்களுக்கு மட்டுமல்ல, அந்த கோவிலுக்குகூட செல்லமுடியுமா? என்று தெரியவில்லை. கேசாதிபாதம் என்பது பாதாதிகேசமாகி அதுவும் பாதியில் நின்றுவிட்டதால் வந்தகேடு. போகட்டும் இன்று “அழகிய இந்து மதம்“ என்பது “அரசியல் இந்துமதமாகி“-விட்டது, இஸ்லாம்போலவே. ”வகாபிய-இந்துத்துவ-அடிப்படைவாதம்”தான் உள்ளது. மதங்களோ அதன் கருணையோ இல்லை. மதம் மனமற்ற உலகின் மனம்” என்றார் மார்க்ஸ். அதான் மனம் இல்லை, மதங்கள் மட்டும் வாழந்து கொண்டிருக்கிறது. எல்லாம் ஆண்டவனுக்கு அல்ல அரசியலுக்குத்தான் வெளிச்சம்.

    //இந்த மூன்று நாயகர்களில் குறைந்த மதிப்பீடு வாங்குபவன், சரஸ்வதியின் நாயகன் பிரம்மன்! அவனுக்குத் தனியாக ஒரே ஒரு கோவில் தான் இந்த ‘ஹிந்து’ சாம்ராஜ்யத்தில்! ஆனால் அவனை வணங்காதவர்களும் அவளை வணங்குவார்கள். //

    நீங்கள் கும்பகோணம் பிரம்மன் கோவிலைத்தான் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். அந்த ஒருகோவில்தான் பிரம்மனுக் எனக்குத் தெரிந்தவரை. நான் பிரம்மனை ஒருகாலத்தில் வாரந்தவறாமல் வணங்கிக் கொண்டிருந்தேன். நான் பல நாட்கள் விடிகாலையில் அந்த கோவிலின் படையல்களை வாங்கி சாப்பிடவென நண்பர்கள் குழாமுடன் போயிருக்கிறேன். இப்படி பிரம்மன் கைவிடப்பட காரணம், சைவம் வைணவம் போன்று பிரம்மம் என்கிற பிரிவு உருவாகததும், பைனரியாக பார்த்து பழகிவிட்ட பார்வையுமே என்று நினைக்கிறேன்.

    “படைப்புக் கடவுள் பிரம்மன்-கல்வி-கலைக் கடவுள் சரஸ்வதி“ என்கிற இந்த இணைவின் குறியீட்டியல் என்பது எத்தகைய நுட்பமான சிந்தனையும் ஒப்புமையும் கொண்டது.

    படைத்தல் (பிரம்மன்) - கலை(சரஸ்வதி)
    காத்தல் (விஷ்னு) - செல்வம் (லஷ்மி)
    அழித்தல் (சிவன்) - வீரம் (பார்வதி)

    இந்த கடவுள் என்கிற உருவ இணைவும் அதன் அருவ அர்த்த தளங்களையும் பார்த்தால் எத்தனை நுட்பமான உருவகங்கள் இதனுள் செயல்பட்டிருக்கிறது. ஆச்சர்யமான விஷயம்தான். மனித வாழ்வின் முக்கிய 3 தேவைகளை 3 கடவுளாக உருவகப்படுத்துவது என்பது மரபின் ஒரு அற்புதமான உள்ளுரையை உருவாக்கும் முயற்சி எனலாம். வீரம் என்பது அழிவு அது கலை என்கிற படைப்பினை அழிப்பது. இன்னும் வரலாற்றில் வைத்து பார்த்தால், இன்று சொல்லப்படும் “இந்து“மதம் என்பது இந்து 2 நிலைகைளைக் கடந்து வீரம் என்கிற இறுதிநிலையை அடைந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. இன்றைய “இந்து மதம்“ என்பது அதன் ஞான மரபிலோ அல்லது “தத்துவத்திலோ“ இல்லை, “நவீனத்துவ“ பார்வையில்தான் உள்ளது. சிலர் ஞான மரபு, தத்துவம் என்று சொல்வது “நவீனத்துவத்தின்” அழிவை கொண்டது இன்றைய மதங்கள் என்பதை மறைப்பதற்கான முயற்சியே. மனிதர்கள் “நவீன“-மாகவில்லை மதங்கள் “நவீன“-மாகவிட்டன். “நவீன”- என்பது புதியது என்கிற அர்தத்தில் அல்ல. இன்றை உலகை ஆட்டிப் படைக்கும் நவீனத்தவ வாதம் என்பதைதான் இங்கு குறிக்கிறேன். கிறித்துவம் துவங்கி இஸ்லாம் வழியாக இந்து மதமும் “நவீனத்தவ“த்திற்குள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டுவிட்டது. எழுத எழுத தனிப்பதிவாகிவிடும். உங்ககளைப்பொல பின்னோட்ட அனாமதேயங்களுடன் அல்லாட முடியாது அப்புறம். விட்டுவிடுவோம்.

    உங்கள் இந்த பதிவு ஏற்படுத்திய சிவன் மற்றும் காளி மீது எனக்கிருந்த ஈர்ப்பின், இழப்பின் ஒரு வித சோகத்தைதான் இப்படி எழுதுகிறேன் என்று நினைக்கிறேன்.

    அன்புடன்
    ஜமாலன்.

    ReplyDelete
  43. http://sunmarkam.blogspot.com/2010/03/mfhussain.html

    தங்களது கருத்து பல இடங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடியதே...
    ஹுஸைன் சம்பந்தமாக எனது பார்வையை,இந்த தளத்தில் பதிந்துள்ளேன்..நேரம் வாய்க்கும்பொது,பார்வையிட்டு,தங்களது கருத்துகளை தெரிவிக்கவும்.எழுத்துலகுக்கு நான் புதியவன்,என்னை திருத்திக் கொள்ள,தங்களின் கருத்து,பயனுள்ளதாக இருக்கும்..

    ReplyDelete
  44. //நீங்கள் கும்பகோணம் பிரம்மன் கோவிலைத்தான் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். அந்த ஒருகோவில்தான் பிரம்மனுக் எனக்குத் தெரிந்தவரை//

    ஈரோடு மாவட்டம் கூடு துறையில் பிரம்மனுக்குக் கோவில் இருக்கிறது ! பால்ய ஞாபகம் .

    ReplyDelete
  45. //அப்படி, ஹுசைன் தீற்றிய ‘துர்க்கா’ ஓவியத்தில், துர்க்காவின் அல்குல் (hip) பாகமும் புலியின் அல்குலும் ஒரு புள்ளியில் பொருந்திப் படுவதால், துர்க்காவும் புலியும் கலவி செய்வதாக ஹுசைன் தீட்டிவிட்டார் என்பதே குற்றச்சாட்டு. சினந்து கெடுவதா? சிரிப்பதா? //

    இப்போது சிரிக்கலாம் ! இதை சொன்னவன் எதிர்ப்படின் சினந்து செருப்பிலும் அடிக்கலாம்

    ReplyDelete
  46. / ‘எல்லா லிங்கமும் அப்பனவன் லிங்கமே’ என்றுதான் அப்போதும் பொருள்பட்டது.//

    லிங்கமென்பது சிவனின் ஆணுறுப்பினைக் குறிப்பதுவா? நான் இத்துனை நாளும் சிவனவன் கங்கை முடிந்திட்ட சடைஎன்று பொருள் கொண்டிருந்தேன்

    ReplyDelete
  47. //ஹிட்லரை நிகர்த்தே சரஸ்வதி, துர்க்கா, பாரதமாதா என இவர்களும் அம்மணப் படுத்தப் பட்டிருப்பதால் இவர்களையும் ஹுசைனுக்குப் பிடிக்கவில்லை என்று தீர்ப்பு எழுதப் பட்டது. ஓவியங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அவரும் ஒடிப்போய்விட்டார்.// ஹிட்லர் நீங்கலான ஏனைய ஓவியங்களில் மண்டை ஓட்டினை நிகர்த்த குறியீடுகள் ஏதும் உளவா?

    அவர் எனக்கு எதிரி என்றே வைத்துக் கொள்வோம். என் அம்மையைத் துகிலுரிந்து அவர் துச்சாதனன் ஆனால், துகிலின்றி நிற்கிற என் அம்மையை நான் உதைப்பேனோ? என்றால் அந்த ஓவியங்கள் உண்மை அல்ல, உருவகப்படுத்தல்கள் என்று என் உடன்பிறப்புகளுக்குத் தெளிவாகவே தெரிந்திருக்கிறது அல்லவா?

    உருவகப்படுத்தல் என்பது கருத்தியல் சார்ந்தது. என்றிருக்க, நிர்வாணம் என்பது இந்துக்கள் இடையிலும் உள்ளதொரு கருத்துதானே? இருக்கட்டுமே, //அதை இஸ்லாமிய அரபுப் பெயர் உள்ளவன் எப்படிக் கையாளலாம்?//

    என் பெயர் இந்துத்வ தமிழ்ப் பெயர்தான் நான் அம்மணமாக இந்து மத கடவுளரை வரைந்திருந்தால் ஏற்புடையதாக இருந்திருக்கக் கூடுமோ ?

    ReplyDelete
  48. கருக்காத்த அம்மன் = கர்ப்ப ரக்ஷாம்பிகை என்பது போல... நல்லதொரு பதிவு...

    ReplyDelete