Thursday, September 16, 2010

ஏசுவும் கிறிஸ்துவும்...

நான் சின்ன வயதிலிருந்து, அதாவது அரை நூற்றாண்டுக்கு மேலாய் நம்பிய கதை!

இதுவும் புனைவு தான், ஆனாலும் எதற்காக, எப்படி, என்பதில் தான் நயம், நாகரிகம். தமிழ்ப் பதிவுலகில் புனைவுகள் எல்லாமே வன்மம், வக்கிரம் என்றான பின்... இன்னும் புனைவு என்பதன் அற்புதத்தின்மீது நம்பிக்கையோடு இந்தப் பதிவு.

இது புதிய கதை அல்ல, பழைய கதையின் புதிய கோணம். என்னைப் பொறுத்தவரை இதில் அனர்த்தம்-ஆபாசம் இல்லை, ஆனாலும் சிலருக்கு அப்படித் தோன்றலாம்.

புராணங்கள் எல்லாமே புனைவுதான், ஓர் அரசியல் ஆதாயத்திற்காக அவற்றை சரித்திரப் பதிவுகளாகச் சிலர் சொன்னாலும். ராமன் பாலம் கட்டியதும், யேசு உயிர்த்தெழுந்ததும், திரும்பத்திரும்பச் சொல்லி நம்பவைக்கப்பட்ட கதைகள் என்றாலும் அவை அந்தந்த காலத்தின் பதிவுகளல்ல, பின்னாளில் கொஞ்சம் கற்பனையும் இன்னும் கொஞ்சம் பக்தியும் மிகுந்த மனங்களின் வியப்பின், மரியாதையின் வெளிப்பாடுகள்தான். மரியாதையுடனும் மரியாதை வரவழைக்கவும் சொல்லப்பட்டவையே புராணப் புனைவுகள். ஒரு காலத்தில் கிரேக்க கடவுள்களின் கதைகள் கூடத்தான் நம்பப்பட்டன, நம்புவதற்காகச் சொல்லப்பட்டன.

இப்பதிவு கடவுள் நம்பிக்கை குறித்து அல்ல, ஒரு புனைவின் வீச்சு குறித்து.

இடையில் பல மாதங்கள் விட்டுப் போயிருந்த வாசிப்பு, மீண்டும் ஆரம்பித்தது இந்த புத்தகத்துடன்தான். வெகுநாள் கழித்து நண்பருடன் நேரம் செலவிடும்போது வரும் கூடுதல் மகிழ்ச்சியில் தான் இந்த நூலை ரசித்தேனா என்று பரிசீலிக்க ஒரு மாதம் இடைவெளி கொடுத்து மீண்டும் பக்கங்களைப் புரட்டினால் இன்னும் அதே நல்ல நூல் படித்தவுடன் வரும் இதமான மனநிலை வந்ததால் இங்கே இந்தப் பகிர்வு.


Phillip Pullman எழுதிய The good man Jesus and the scoundrel Christ என்பதே நான் ரசித்த புனைவு. பாவம் Pullman, புத்தகத்தின் பின்னட்டை முழுக்க இது ஒரு கதை என்று பெரிய எழுத்துக்களில் போட வேண்டியிருக்கிறது. ஏசுவின் கதை தான், ஆனால் கிருத்துவம் கூறும் கதையல்ல.
இந்த நூலில், மேரிக்குப் பிறப்பது இரட்டைக் குழந்தைகள்- ஒன்று ஏசு இன்னொன்று கிறிஸ்து. ஏசு அறிவாளி, மக்கள் மத்தியில் பிரபலம், கிறிஸ்து ஏசுவை எட்ட நின்று அன்பும் வியப்புமாய் பார்க்கின்ற சகோதரன்.
இன்னும் வளர்ந்து ஏசு மக்கள் மத்தியில் பேசி இன்னும் பிரபலமாகும் போது, ஒருவன் கிறிஸ்துவிடம் வந்து ஏசுவின் கதையை எழுதச் சொல்கிறான். ஆரம்பத்தில் ஏசு செய்வதையும் பேசுவதையும் அப்படியே எழுதி வரும் கிறிஸ்து நாட்பட நாட்பட தன் கற்பனையும் சேர்த்துக் கொள்கிறான். எங்கேயும் ஏசுவை அவன் விட்டுக்கொடுக்கவும் இல்லை.

பசியோடிருக்கும் ஒருவனுக்கு ஏசு தன்னிடம் இருந்த ரொட்டியைப் பிய்த்துக் கொடுத்ததும் கூடியிருந்தவர்கள் எல்லாரும் தங்களிடம் இருந்த ரொட்டியை அடுத்தவருக்குப் பிய்த்துக் கொடுக்க, ஒரு பெருங்கூட்டமே பசியாறுகிறது. இதை கிறிஸ்து எழுதும் போது, ஒரு ரொட்டித் துண்டைப் பிய்த்துக் கொடுத்து எல்லார் பசியையும் ஏசு போக்கியதாக எழுதுவான். உண்மை இல்லை பொய் உரையிலாமையால்!

இறுதியில் ஏசுவின் சடலம் இருக்கும் குகையிலிருந்து வெளிவந்து ஏசு உயிர்த்தெழுந்ததாக ஒரு சிறிய நாடகம் ஆடுவான். செய்தி கதையாகி, கதை புராணமாகிறது. ஏசு கிறிஸ்துவாக ஒரு மதம் தோன்றி அது நிறுவனம் ஆகிறது.

இவ்வளவுதான் கதை.

இதற்கு உண்மையாகவோ காசுக்காகவோ அரசியல் ஆதாயத்திற்காகவோ உலகில் எந்தக் கிளர்ச்சியும் நடந்து விடவில்லை. ஓவியம் கேலிச்சித்திரம் ஆகியற்றிற்கெல்லாம் துள்ளியெழுந்து போர்க்குரல் எழுப்பும் கூட்டம் போல எதுவும் திரண்டுவிடவில்லை. Pullman உயிருக்கு மிரட்டல் இல்லை. கிருத்துவர்கள் நல்லவர்கள், யாரையும் சகித்துக் கொள்வார்கள், ஒரு கன்னத்து அடிக்கு அடுத்த கன்னத்தைக் காட்டுவார்கள் என்று இல்லை. சமீபத்தில் ஜோன்ஸ் எனும் மூர்க்க மூட விளம்பர மோகி இதைக் காட்டி விட்டான்.

இங்கே எதிர்ப்பு வருமாறு அவதூறு மிகுந்து எழுதப்படவில்லை. வெறுப்புக்குப் பதில் ரசிப்பும், சிந்திக்க மிதமான ஒரு தூண்டுதலுமே இந்நூல் ஏற்படுத்துகிறது. நாகரிகம், நயம், நேர்மையான சிந்தனை கற்பனையோடு கலந்தால் வரக்கூடிய ஓர் அற்புதமான புனைவு இது.

ஆரம்பத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இந்நூலின் கடைசி நாற்பது பக்கங்கள் அற்புதம். ஆன்ம விசாரணை, ஆத்திக நிறுவனமாதல் குறித்த கேள்விகளோடு புத்தகம் மூடிய பின்னும் மனம் யோசிப்பதே இந்நூலின் வெற்றி.


ஏசு செய்யும் சுய பரிசீலனையும், கடவுளிடம் கேட்கும் கேள்விகளும் வியக்குமளவு நயமாகவும் செறிவாகவும் எழுதப்பட்டுள்ளன. இதில் உள்ளவை குறித்து விரிவாகப் பின்னொருநாள் பார்க்கலாம். இப்போதைக்கு இது ஒரு நூல் அறிமுகம் மட்டுமே. அத்துடன் புனைவின் மேன்மை குறித்த ஒரு பெருமூச்சு மட்டுமே.

சில விமர்சனங்கள்-

Pro Jesus
http://www.gospeloutreach.net/jesus.html

Pro Book
http://bit.ly/cteiSh

Good Reviews
http://bit.ly/9w9THO
http://bit.ly/9b4xCE

பிலிப் புல்மன்

40 comments:

  1. இதற்கு முதலில் வைக்க நினைத்த பெயர்- இதுவும் புனைவு தான்!
    ஆனால் புனைவுக்கு என்று அலையும் சிலருக்குத் தீனி போடக் கூடாதே என்று தான் பெயர் மாற்றம்.

    ReplyDelete
  2. அறிமுகத்துக்கு மிக்க நன்றி டாக்டர்.

    //வெகுநாள் கழித்து நண்பருடன் நேரம் செலவிடும்போது வரும் கூடுதல் மகிழ்ச்சியில் தான் இந்த நூலை ரசித்தேனா என்று பரிசீலிக்க ஒரு மாதம் இடைவெளி கொடுத்து மீண்டும் பக்கங்களைப் புரட்டினால் இன்னும் அதே நல்ல நூல் படித்தவுடன் வரும் இதமான மனநிலை வந்ததால் இங்கே இந்தப் பகிர்வு.// இதெல்லாம் ரொம்ப ஓவர். படித்தவுடன் பகிர்ந்தால் என்னவாம்? :)

    அது சரி, Holy blood holy grail என்று ஒரு நூல் உண்டே. அதைப் படித்திருக்கிறீர்களா? அது புனைவா investigative journalism a?

    ReplyDelete
  3. அது நக்கீரன் மாதிரி புனைவு, வலைப்பதிவர்கள் இன்னும் அங்கே வரவில்லை!!

    ReplyDelete
  4. வணக்கம் ருத்ரன்
    மிக மிக அழகான புனைவு,
    நிச்சயம் இந்த நூலை படிக்க வேண்டும் எனும் ஆவலை ஏற்ப்படுத்தி விட்டீர்கள்

    நன்றி

    ReplyDelete
  5. நூலறிமுகத்துக்க் நன்றிகள் ஐயா...!

    ReplyDelete
  6. புத்தக அறிமுகத்திற்கு நன்றி. அதிலும் புனைவு குறித்த விளக்கம் மிக அருமை. உடனே படிக்க வேண்டும் என்று ஆவலை தூண்டும் வண்ணம் இருந்தது.

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு...

    ReplyDelete
  8. வணக்கம் ருத்ரன் சார்..
    நல்லதொரு புனைவு.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. இயேசு சம்பந்தமாக சில புத்தகங்கள் நான் வாசித்திருக்கிறேன் . இயேசு பற்றிய அறிமுகம் da vinci code, வழியாக தான் எனக்கு வந்தது பின்னர் தொடர் வாசிப்பாக jesus lived in india வாசித்தேன் (இவை இரண்டுமே மிகை புனைவாக பட்டது ),ஜெயமோகன் அவர்களின் சிலுவையின் பெயரால் (இதில் விவாத தொனியில்இருப்பதால் சற்றே புரிதல் கூடியது ) போன்றவை ஆகும் ,நிச்சயமாக இந்த புத்தகத்தையும் வாசிக்க முயல்கிறேன் ருத்ரன் சார் .இயேசு என்னும் அன்பென்ற வடிவானவரை நேசிக்க இதுவும் ஒரு திறப்பாக இருக்கும் .

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு ஐயா

    ரசித்து படித்தேன்

    ReplyDelete
  11. arimukathirku nandri.padikka muyarchi seigindren.

    ReplyDelete
  12. நல்ல புனைவுதான் , . கிண்டல்களுடன் எதிர் கேள்விகள் கேட்ட்க விடாமல் நிறையவே லாஜிக்கோடு ஒத்துபோகிறது. இவை கதையல்ல உண்மையில் நடந்தது என்று கூறினாலும் சிறிது யோசனையோடு மிக நிச்சையமாக நம்பமுடியும் .

    ReplyDelete
  13. அறிமுகத்துக்கு நன்றி!

    ReplyDelete
  14. ருத்ரன்சாப், புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டு பண்ணிவிட்டீர்கள்!

    நீங்கள் ஜெயகாந்தனின் பரம விசிறி என்று நினைவு. என் புதிய ப்ளாக் பக்கம் (http://siliconshelf.wordpress.com/category/jeyakanthan/) வந்து பாருங்களேன்!

    ReplyDelete
  15. புனைவின் கூறுகளைப் பற்றி அறிய கொடுத்த முகப்புரை இந்த காலக் கட்டத்திற்கு மிகவும் தேவையான ஒன்று.

    அப்படியே புத்தக அறிமுகத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  16. வணக்கம் ஐயா. நல்ல பகிர்வுங்க. நன்றிங்க.

    ReplyDelete
  17. My previous comment is missing; don't know did go through or not...

    ReplyDelete
  18. புனைவு என்பது மனதிற்கு இதமானது, அறிவு ஏற்காவிட்டாலும்.
    24 சுவிசேஷத்தில் 4 ல் மட்டுமே குறிப்பிட படும் மேரியின் கன்னித்தாய் விஷயம் உண்மை என்று படும் மக்களுக்கு மாத்யு 6 : 3 ல் கூறப்படும் இயேசுவின் சகோதரர், சகோதரிகள் புனைவாக தெரியலாம்.

    நல்ல பதிவு.

    ReplyDelete
  19. ருத்ரன் சார்,
    உங்களுடைய பல பேட்டிகளை பார்த்திருக்கிறேன் & படித்திருக்கிறேன். உங்களின் பதிவு அருமை. இருப்பினும் சிலர் செய்யும் தவற்றிக்காக ஒரு இனத்தையே குறை கூறுவது சரியென்று எனக்கு படவில்லை. அதுவும் தாங்கள். அவர்கள் செய்தது சரியென்று சொல்லவில்லை. முற்றிலும் தவறுதான். இருப்பினும் தங்களுடன் தொடர்பு கிடைத்ததிற்கு நன்றி.

    ReplyDelete
  20. //அது நக்கீரன் மாதிரி புனைவு,//
    :) :)

    ReplyDelete
  21. நல்ல அறிமுகம் டாக்டர். ஆனால், அந்த கிறிஸ்து கேரெக்டரை ஃபிலிப் புல்மேன், செயின்ட் பாலை(st.paul) மனதில் வைத்து எழுதியிருப்பாரோ என்று ஒரு சின்ன சந்தேகம். சர்ச்சைக்குள்ளாக வேண்டும் என்றாலே இங்கத்து எழுத்தாளர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் பேர்தான் நினைவில் வருதோன்னு ஆகிப் போச்சு!

    ReplyDelete
  22. //இங்கே எதிர்ப்பு வருமாறு அவதூறு மிகுந்து எழுதப்படவில்லை. வெறுப்புக்குப் பதில் ரசிப்பும், சிந்திக்க மிதமான ஒரு தூண்டுதலுமே இந்நூல் ஏற்படுத்துகிறது.//

    ஆச்சர்யம்தான்...

    சிறந்த அனுபவத்தை ஏற்படுத்தும் புத்தகமாக ஊகிக்க முடிகிறது. நல்லதொரு நூலறிமுகம்... நன்றி சார்!

    -
    DREAMER

    ReplyDelete
  23. அமெரிக்காவில் மட்டுமல்ல ஐரோப்பா முழுவதிலுமே இயேசு கிறிஸ்துவைப் பற்றிய பலவிதமான புத்தகங்கள் வெளியாகி அதற்க்கான சர்ச்சைகளும் தீவிரமடைவது சகஜம், சில எழுத்தாளர்கள் தங்களை பிரபலப்படுத்தும் நோக்கிலும் சில எழுத்தாளர்கள் உலகளாவிய ரசிகர்களை கவர்ந்திழுக்கவும் இப்படிப்பட்ட புத்தகங்களை எழுதுவதாகவும் கூறப்படுகிறது, எப்படியானாலும் யேசுவைப்பற்றி அறியாதவர்களும் அறிந்து கொள்ளும் வாய்ப்புகளை இவர்கள் ஏற்ப்படுத்தி கொடுப்பதில் மகிழ்ச்சியே, 'தேடுங்கள் கண்டடைவீர்கள்'

    ReplyDelete
  24. //புராணங்கள் எல்லாமே புனைவுதான்,//

    கடவுள் நம்பிக்கை கொண்டுள்ள போதும், இதை நீங்கள் சொல்லியிருப்பது உங்கள் திறந்த சிந்தனையைக் காட்டுகிறது.

    ReplyDelete
  25. Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு

    http://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html

    (doctore forward this link to persons you know who write in blogger)

    ReplyDelete
  26. நல்ல பதிவு.

    Nikos Kazantzakis எழுதிய “The Last Temptation of Christ” ஐ நினைவு படுத்துகிறது.
    ஆந்த புத்தகம் பல ஆண்டுகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
    அதிலும் ஏசுவை மனிதனாக வடித்து ஆண்மவிசரனைக்கு முக்கியத்துவம் கொடுத்து படைக்கப்பட்டது.
    பின் அது ஒரு நல்ல திரைப்படமாகவும் வெளிவந்தது. நிச்சயம் படித்திருப்பிர்கள்.

    ReplyDelete
  27. ஆன்ம விசாரணை, ஆத்திக நிறுவனமாதல் குறித்த கேள்விகளோடு புத்தகம் மூடிய பின்னும் மனம் யோசிப்பதே இந்நூலின் வெற்றி.//

    வித்யாசமான பகிர்வு.. ருத்ரன்.,,

    ReplyDelete
  28. மஹாத்மா காந்தியின் ஒரு கூற்று..

    "I am more Christian than most Christians."

    இதன் பின்னால் இருக்கும் அரசியல் எனக்கு தெரியாது. ஆனால் அன்றைய சூழலில் பல கிருத்தவர்கள் கடனே என்று ஜெபம் செய்வதும் மத விதிகளை பின்பற்றுவதும் அதிகம் இருந்தது என்று மட்டும் புரிகிறது.

    ReplyDelete
  29. கிராம தேவதைகள் கதையிலும் இப்படி நிகழ்கிறது. பொன்னர் சங்கர் கதையில் படுகளம் பகுதியை குறிப்பாக சொல்லலாம்.

    ReplyDelete
  30. காலை வேளயில் நல்ல ஒரு புத்தகம் வாசித்த அனுபவம் திருப்தி நரி நண்பரே இதே போல் படிப்புகளை வாசிக்க தயாராக உளேன்

    ReplyDelete
  31. //வெகுநாள் கழித்து நண்பருடன் நேரம் செலவிடும்போது வரும் கூடுதல் மகிழ்ச்சியில் தான் இந்த நூலை ரசித்தேனா என்று பரிசீலிக்க ஒரு மாதம் இடைவெளி கொடுத்து மீண்டும் பக்கங்களைப் புரட்டினால் இன்னும் அதே நல்ல நூல் படித்தவுடன் வரும் இதமான மனநிலை வந்ததால் இங்கே இந்தப் பகிர்வு.//
    புத்தக அறிமுகத்துடன் உங்கள் மன ஓட்டத்தயும் கலந்து பகிர்ந்தீர்.. நன்றி..

    ReplyDelete
  32. அறிய விஷயம்..அருமையான புத்தகம் படித்த உணர்வு
    மிக்க நன்றி

    ReplyDelete
  33. நல்ல பகிர்வு சார். வாங்கி படித்து விடுகிறேன்.

    ReplyDelete
  34. நேற்றுதான் இப்பதிவைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இன்று பார்த்தாச்சு! நன்றாக அறிமுகம் கொடுத்துள்ளீர்கள்.

    நீங்க இந்த பதிவு பார்த்தாச்சா?!

    ReplyDelete
  35. எழுத்துக்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. better change the background colour

    ReplyDelete
  36. இரண்டாம் பகுதி: http://dharumi.blogspot.com/2010/10/448-good-man-jesus-and-scoundrel-christ.html

    ReplyDelete