Monday, April 13, 2015

கடைசியாய்...

கடைசியாய்...

அவரிடமிருந்து ஓர் அழைப்பு , இரவில் ஓய்வாகிவிட்டு உறக்கத்தை எதிர்நோக்கி, வெட்டியாய் உட்கார்ந்திருந்த நேரம், மாடியிலிருந்து என் மனைவி உமா அவசரமாகக் கீழிறங்கி, “ ட்ரெஸ் போட்டுக்கோ..”, என்று சொல்லிவிட்டு கார் சாவியைக் கையிலெடுத்தாள். லுங்கியிலிருந்து பேண்ட் மாற்றியவாறே ‘எங்கே” என்றேன், “ஜேகே” என்றாள். அவரிடமிருந்து முன்பெல்லாம் அழைப்பு வரும்போது அவள் எங்கே என்றால் நான் “ஜேகே” என்பேன்.... இம்முறையும் அவரிடமிருந்து தான் அழைப்பு, அவர் குரல் மூலம் அல்ல.
அந்த வீட்டுள் நுழையும்போது பதட்டமுமில்லை, பயமும் இல்லை, சோகமும் இல்லை.. ஒரு மயானமௌனமே மனத்துள் கனத்தது. அப்போதுதான் ஐஸ் பெட்டியில் உடல் கிடத்தப்பட்டது..யாரோ ஒரு மாலை வைத்திருந்தார்கள்...மாமியிடம் கொடுத்து போடச்சொன்னார்கள்...அவர்களால் சரியாகப் போடமுடியவில்லை..நான் அந்த மாலையைச் சரிசெய்து அந்த உடலில் அமைத்தேன்..அப்புறம் அந்தப்பெட்டி மூடப்பட்டது.
திகைப்பும் தவிப்புமாய் சில நிமிடங்கள் கழித்து,, என்னென்ன செய்ய வேண்டும் என்று அவர் மகளிடமும் மருமகனிடமும்  பேசிவிட்டு வெளியே சென்றேன்..வாசலில் எஸ்.ராமகிருஷ்ணன்..
கொஞ்ச நேரத்திலேயே ஊடகக்காரர்கள். துக்கம் தாக்கி அதன் ஆரம்பம் தணியும் முன்னமேயே அவர்கள் அவசரமாய் படமெடுக்க ஆசைப்பட்டார்கள்.. “வெய்ட் பண்ணுங்க கொஞ்ச நேரம் ஆகட்டும் அப்புறம் படமெடுங்க” என்று நான் சொன்னதால் பல ஊடக்காரர்களுக்கு என் மேல் கோபம் வந்திருக்கும், அவர்கள் அதைக் காட்டவில்லை, எனக்கு அவர்களது அநாகரிக அவசரத்தின் மீதிருந்த கோபத்தை நானும் காட்டாதது போலவே.
அன்றிரவு பெசண்ட் நகர் மின்னிடுகாட்டைத் தேர்வு செய்ததில் என் பங்கும் உண்டு. பெரிய கூட்டம் வரும்..அங்கே தான் வண்டிகளை நிறுத்திவிட்டு வர வசதியாயிருக்கும் என்பதே என் எண்ணம்....
காலை முதல் மரணச்சான்றிதழ், மயானத்துக்கான ஏற்பாடுகள் முடித்துவிட்டு அங்கே போனால் நிறைய பேர் இருந்தார்கள்...கூட்டம் இல்லை.
சம்பிரதாயமாய் காமெராமுன் வருத்தம் பதிவு செய்யவும், பிரபலங்கள் பதிவு செய்யும்போது பக்கத்தில் நின்று தம்முகம் காட்டிக்கொள்ளவும் தான் பலரிடம் முனைப்பு இருந்தது...இன்றைய யதார்த்தம் என்று இதையும் ஒதுங்கி சலித்து நின்றபோது, ஒரு பிரபலம் படை சூழ வந்தார்..காலணி கழற்றாமல் அவர் அவசரமாய் உடலிருந்த அறையுள் புக பின்வந்த பரிவாரங்களும் அப்ப்டியே உள் புக,..”செருப்பையாவது கழட்டிட்டு போங்கடா” என்று கத்திவிட்டேன்.
கொஞ்ச நேரம் கழித்து உடல மயானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டது...
பெசண்ட் நகர் மின்னிடுகாட்டைத் தேர்வு செய்ததில் என் பங்கும் உண்டு. பெரிய கூட்டம் வரும்..அங்கே தான் வண்டிகளை நிறுத்திவிட்டு வர வசதியாயிருக்கும் என்பதே என் எண்ணம்.
அது பக்கத்தில் போரூரில் உள்ள சிறிய மின்தகன மேடைக்குச் சென்றிருந்தாலே போதும், அந்தக் குடும்பத்துக்காவது சௌகரியமாயிருந்திருக்கும்.

பாரதியைவிடவும், லாசராவை விடவுமாவது இவருக்குக் கூட்டம் இடுகாட்டில் இருந்தது...