Monday, July 14, 2014

ஜூலை பதினான்கு


இதே நாள், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், முதன் முதலாய், ஒரு டாக்டராய் என் க்ளினிக்கில் உட்கார்ந்தேன். அன்று என்னுடன் என் நண்பனும் அவன் மனைவியும் துணைக்கு வந்தார்கள். உள்ளே உட்கார்ந்து என்ன செய்வது என்றே தெரியாமல், செய்ய எதுவும் இல்லாமல் உட்கார்ந்து வெட்டியாய் ஏதேதோ பெசிக்கொண்டிருந்தோம்.
ஒரு மணி நேரம் போனபின், இன்னும் பத்து நிமிஷம் பார்க்கலாம் யாரும் வராவிட்டால் போய்விடலாம் என்று முடிவெடுத்தபோது ஒருவர் உள்ளே வந்தார்.
“நீங்க தான் டாக்டரா?”
“ஆமாங்க”
“ஆணி கீறிடுச்சு, செப்டிக் ஊசி போட்டுடுங்க”
“எங்கே அடிபட்டுச்சு, காட்டுங்க..”
“ட்ரெஸ்ஸிங் எல்லாம் வேணாங்க, ஆய்ண்ட்மெண்ட் நானே போட்டுட்டேன், ஊசி மட்டும் போடுங்க”
“ சரி, வாங்கிட்டு வாங்க” என்று டிடி எழுதிக்கொடுக்க, “ உங்க பேர் என்ன்ங்க?” என்றால்,
“தெரியாதாங்க? நான் தான் அன்வர் பாய். தோ எதித்தாப்பல நம்ம கடைதான்” என்று சொல்லி விட்டு, ஊசி வாங்கி வந்து நான் போட்ட பின், “பரவாயில்ல, வலிக்காம போட்டீங்க” என்று சொல்லி விட்டு எழுந்தார்.
ஃபீஸ் எப்படி கேட்பது, எவ்வளவு கேட்பது என்று புரியாமல் நான் பேசாமல், ஒரு மய்யமான முறுவலுடன் நிற்க, “காசு எடுத்துட்டு வரலே, கடைக்குப் போய் பையன் கிட்ட குடுத்துஅனுப்புறேன்” என்று சொல்லி விட்டுப் போனார்.
ஐந்து நிமிடத்தில் ஒரு பையன் வந்து “பாய் தரச் சொன்னார்” என்று இரண்டு ரூபாய் கொடுத்தான்- என் முதல் மருத்துவ வருமானம்.

முப்பத்தைந்தாண்டுகள் ஓடி விட்டன. எத்தனையோ பேர் ஃபீஸ் கொடுத்திருக்கிறார்கள், எத்தனையோ பேர் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள், எத்தனையோ பேரிடம் வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் அன்வர் பாய் எனக்கு ’ஸ்பெஷல் பேஷண்ட்’. எப்போது வந்தாலும், காத்திருக்கும் கூட்ட்த்தைப் பார்த்து, “நம்ம கை ராசிங்க, க்ளினிக் நல்லா போகுது” என்று பெருமைப்படுவார்.
சில ஆண்டுகளில், பொது மருத்துவ சிகிச்சை பார்ப்பதை நிறுத்திவிட்டு, மனநல மருத்துவம் மட்டுமே நான் பார்த்துக்கொண்டிருந்தாலும், “வயிறு சரியில்லே, மாத்திரை எழுதிக்கொடுங்க, ஜெலுஸில் வேலக்காவலே” என்று வந்து நிற்பார்.
சில ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்து விட்டார்.

மனநல மருத்துவம் மட்டுமே பார்க்க ஆரம்பித்த 1988லிருந்து இன்றைய தேதிவரை நான் பார்த்தவர்களின் எண்ணிக்கை, 25,925.  ஆனாலும் என் ‘அன்வர் பாய்’ தான் இன்று நினைவுக்கு வருகிறார்.


லட்சக்கணக்கில் பணம் கட்டி, கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாய் பொதுவாய் மருத்துவர்கள் மீது பலர் காழ்ப்பில் இருக்கிறார்களே, அவர்களுக்குத் தெரியாது இப்படி கொஞ்சமாய் காசு வாங்கியும் சிகிச்சை தரும் மருத்துவர்களும் உண்டு என்று. அவர்களுக்குத் தெரியாது என்னைப்போல் படித்து மதிப்பெண் வாங்கி அரசு மருத்துவக் கல்லூரியில் குறைந்த செலவில் படித்து ஆயிரக்கணக்கில் வெளிவருபவர்கள் தான் அதிகம் என்று. அவர்களுக்குத் தெரியாது, சிலரின் கேவலமான வியாபாரத்தனத்தை மீறி நேர்மையும் நெறியும் பிறழாத மருத்துவர்கள் இன்றும் உண்டென்று.

Thursday, July 10, 2014

என் மாரிஸ்மைனர்.

.அம்பை தன் கார் கதை சொன்னவுடன் என் கார் கதை சொல்ல ரொம்பவும் மனம் துள்ளியது, கான மயிலாட மாதிரி

எல்லா ஏழைகளுக்கும் போலவே எனக்கும் கார் வாங்கி ஒட்டும் ஆசை இருந்த்து. பள்ளியில் என் வகுப்புத்தோழனின் அப்பா நான் பஸ்ஸுக்கு நிற்கையில் என்னையும் தன் காரில் ஏற்றிச் சென்ற அந்த இளம் வயதில் தான் அந்த ஆசை வந்திருக்க வேண்டும். அப்போது என் வயது பத்திருக்கலாம். விஸ்வநாதன்ராமமூர்த்தி காலம்.

அப்புறம் இருக்கும் சொல்ப வசதியும் போய், வீட்டுள் நுழைந்தால் அடுப்பில் விறகிருக்கிறதா என்று பார்த்த பின்னர்,” நான் ஹாஸ்டல் போறேன்என்று பொத்தாம் பொதுவாய் எல்லார்க்குமாய் சொல்லி விட்டுப் போன காலத்திலும், பதின் வயதுகளின் முடிவிலும், கார் கனவு கிடையாது, அன்றாட காசு பற்றியே கனவும் நினைவும்
அப்புறம் நானும் ஒரு டாக்டராகி, என்னிடமும் நிறைய நோயாளிகள் வந்த போது, நான் வாடகைக்கு இருந்த வீட்டுக்காரர், திடீரென்று ஒரு கார் கொண்டு வந்தார். அதை முன்னாள் விற்று விற்றவரிடமே திரும்பி வாங்கியிருந்தார்.
அப்போதெல்லாம் வாடகை கொடுப்பதே ப்ரதான சிந்தனை என்பதால் அந்த அழகான காரை தொட்டுப்பார்ப்பதோடு சரி.அப்புறம், அதற்கப்புறம்..பணமும் திமிரும் சேர்ந்த பின். அதே காரை அவரிடமிருந்து வாங்கினேன். அது என் மாரிஸ் மைனர்.

கார் வாங்கியபின் தான் ட்ரைவிங் ஸ்கூல் சென்றேன். அந்த கார் சொகுசும் இல்லை, சுலபமும் இல்லை, அதில் பல மீட்டர்கள் எதையும் காட்டுவதில்லைநின்று விட்டால் தான் பெட்ரோல் இல்லை என்றே தெரியும்ஆனாலும் அது எனக்குப் பிடிக்கும்.

அதனுடனான இன்றைய சுவாரஸ்யமும் அன்றைய இம்சையுமான அனுபவங்கள் ஏராளம். ஒரு முறை, ஸ்டியரிங் சுற்றவில்லை, கோபமாய் இழுத்த்தில் கையோடு வந்து விட்ட்து. தள்ளி ஓரம் சேர்ப்பதற்குள் வியர்வை, வெட்கம், வெறுப்பு எல்லாமும் கூடிப்போனது.
இன்னொரு முறை ஹைவேயில் முன்விளக்கு எரியவில்லை, முன்னால் போகும் வண்டியைப் பின்தொடர்ந்து ஓட்ட வேண்டியிருந்தது. இன்னொரு முறை, மேம்பாலத்தில் இறங்கும்போது ப்ரேக் வேலை செய்யவில்லை, ந்யுட்ரலில் இறங்கி, ஓரம் கட்டி ஸ்விச் ஆஃப் செய்ய வேண்டியிருந்தது.

இன்னும் என்னென்னவோ இம்சைகள் மீறி என்னென்னவோ சுக .நினைவுகளும் அந்த கார் தந்திருக்கிறது. என் பல வெற்றிகளில் என்னுடன் அந்த கார் பயணித்திருக்கிறது.

எதற்காக அந்த கார்? மாருதி வந்து விட்ட காலத்தில்? நிச்சயமாய் அழகான செல்லமான கார் என்பதால் மட்டுமல்ல. கல்லூரி காலத்தில், வெவ்வேறு வண்ண உடை இல்லாததால், எப்போதும் வெள்ளை சட்டையே போடுவதாய் காட்டிக்கொண்ட தாழ்வு மனப்பான்மையின் தற்காப்பின் இன்னொரு வடிவாகவும் இருந்திருக்கலாம்.
ஆனாலும்………………
இன்று நல்ல சௌகரியமான கார் ஓட்டினாலும்


முக்கிய முன்னாள் காதலியின் நினைவு போல முற்றாய் மங்கி மண்ணுள் புதையாமல், கண்ணுக்குத் தென்படாத இடத்தில், துருப்பிடித்து, இன்னும் தன்னை அழித்துக் கொள்ளாமல் இருக்கிறதுஎன் வீட்டின் பின்புற ஓரத்தில் என் மாரிஸ்மைனர்.